முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காவியம் 20

 


அந்தக் கல்லூரியில் சேர்ந்தது முதல், தனது படிப்பில் கவனம் வைத்துக் கொண்டது மட்டுமில்லாமல் தனக்கான நட்புப் பட்டாளத்தையும் உருவாக்கிக் கொண்டாள் ஆரவி. 


அதேபோல், அவளது துறையில் படித்துக் கொண்டிருக்கும் அனைத்து சீனியர்களிடமும் தோழமை பாராட்டவும் தொடங்கி விட்டாள். 


அதில் என்ன தான், தான் நெருங்கிப் பழக நினைத்தாலும் தாமரை இலைத் தண்ணீர் போலத் தன்னிடம் ஒட்டாமல் பழகிய தன்னுடைய சீனியர் பிரஹாசினியைக் கண்டு முகம் சுருங்கியவளோ, 


“அவங்க மட்டும் ஏன் எல்லார் கூடவும் ஃப்ரீயாகப் பேசவே மாட்றாங்க?” என சீனியர்களிடம் கேட்க, 


“அவளோட சுபாவமே அப்படித் தான். அவ்வளவு சீக்கிரத்தில் யார் கூடவும் பேசிட மாட்டா” என்று அனைவரும் ஒரே பதிலை அவளிடம் தெரிவித்தார்கள். 


அதில் அவளது மனம் சமாதானம் அடையாததால், பிரஹாசினியிடம் நேரடியாகவே அந்தக் கேள்வியைக் கேட்டாள் ஆரவி. 


அதற்கு அவளோ,”இது தான் என்னோட சுபாவம் டா. இதை என்னால் மாத்திக்கவே முடியலை” என்ற பதிலையே கூறினாள். 


அதைக் கேட்ட பின்னர், பிரஹாசினியின் மேல் மெல்லிய வெறுப்புத் தோன்றத் தொடங்கிற்று. 


அதை அவளின் முகத்திற்கு நேராக காட்டாமல் மறைத்துக் கொண்ட ஆரவியோ, எப்போது பார்த்தாலும் சீனியர்களுடனேயே சுற்றிக் கொண்டு இருப்பவள், பிரஹாசினியைத் தவிர மற்றவர்களுடன் நெருங்கிப் பழகலானாள்.


அதைக் கண்டு கூடப் பிரஹாசினிக்கு ஆரவியின் மீது எந்த துவேஷமும் எழவில்லை. அவள் தன் போக்கில் இருந்து கொண்டாள். அவளுக்கு என்று வகுப்பறையில் வினோதாவும், விடுதியில் அனிகாவும், சௌமியாவும் அவளுடன் நட்பாக இருந்ததால் ஆரவியின் துவேஷத்தைப் பிரஹாசினி கண்டு கொள்ளவில்லை. 


அவளும் தனது சக ஜூனியர் மாணவிகளில் ஒருவள் என்ற கண்ணோட்டத்தில் அவளைப் பார்க்க நேரிடும் போதெல்லாம் ஒரு புன்னகையுடன் அவளைக் கடந்து விடுவாள். 


இதேபோல், ஒவ்வொரு முறையும் தன்னைப் பிரஹாசினி அவமதிப்பதைக் கண்டுத் தானும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவளை மறைமுகமாக கிண்டல், கேலி செய்து  திருப்தி அடைந்து கொள்வாள் ஆரவி. 


ஆனால், அவள் தன் மேல் இப்படியானதொரு தவறான அபிப்பிராயத்தைக் கொண்டிருக்கிறாள் என்பதை அறியாமல் படிப்பில் கவனத்தைச் செலுத்திக் கொண்டு இருந்தாள் பிரஹாசினி. 


அதே சமயத்தில், இவற்றையெல்லாம் தன்னுடைய வீட்டாரிடமும் அவ்வப்போது பகிர்ந்து கொள்ளத் ஆரம்பித்து இருந்தாள் ஆரவி.


அதை முதலில் தன் தங்கையின் கல்லூரியில் நிகழும் இயல்பான கதையாக மட்டுமே தன் பெற்றோருடன் சேர்ந்து கேட்டுக் கொண்டு இருந்தான் திவ்யன். 


ஆனால் அவளது சந்தோஷம் நிறைந்த அந்தப் பேச்சில், சில நேரங்களில் தோன்றும் பொருமலைக் கேட்க நேர்ந்தது அவனுக்கு. 


அதில் அந்த முகம் தெரியாத பிரஹாசினி என்னும் பெண்ணின் மீது தன்னுடைய தங்கை கொண்டிருக்கும் வெறுப்பை அவதானிக்கத் தொடங்கியவன், 


அதை,“அந்தப் பொண்ணு உன்னை என்ன தான் பண்ணாங்க ஆரு? அவங்க மேலே ஏன் உனக்கு இவ்வளவு வெறுப்பு?”என்று அவளிடம் கேட்கவும் செய்தான் திவ்யன். 


“பின்னே என்ன அண்ணா! அங்கே இருக்கிற எல்லா சீனியர்ஸூம் எங்கிட்ட நல்லா பேசுறாங்க, பழகுறாங்க! அப்படியிருக்கும் போது அவங்க மட்டும் எங்கிட்ட முகம் கொடுத்துப் பேசாமல், எதிலேயும் கலந்துக்காமல் இருந்தால் எனக்கும் கோபம் வரும் தானே அண்ணா?” என்று அவனிடமே நியாயம் கேட்டாள் ஆரவி. 


“அதுக்கு என்னப் பண்றதும்மா? அந்தப் பொண்ணோட சுபாவமே அது தான்னு அவங்களும், அவங்களோட ஃப்ரண்ட்ஸூம் தெளிவாகச் சொல்லிட்டாங்களே? அப்பறமும் நீ அவங்களை இப்படி பேசுறதும், அவங்க மேலே தேவையில்லாத கோபத்தை வளர்த்துக்கிறதும் எந்த விதத்தில் நியாயமாகும்?” என்று அவளுக்குப் புத்திக் கூறினான் அவளது தமையன். 


“நீங்க சொல்றதும் ஓகே தான் அண்ணா. ஆனால் அவங்க பண்றது கொஞ்சம் ஓவராகத் தான் இருக்கு” என்று அவனிடம் மேலும் வாதாடவும், 


சோமசுந்தரி,“நீங்க ரெண்டு பேரும் வாதம் பண்ணது போதும். சாப்பிட வாங்க” என அவர்களை உணவுண்ண அழைக்கவும், அந்தப் பேச்சை அத்துடன் விட்டு விட்டனர் அண்ணனும், தங்கையும். 


இப்படியே நாட்கள் சென்று கொண்டிருக்கப், பிரஹாசினியைப் பற்றிய ஆரவியின் எதிர்மறையான அபிப்பிராயங்கள் மேலும் மேலும் கூடிக் கொண்டே தான் இருந்தது தவிர, குறைந்தபாடில்லை. 


ஆனால், இதில் விசித்திரமான விஷயம் என்னவென்றால், குடும்பம் முழுவதும் ஒன்றாக அமர்ந்து தான், தத்தமது கல்லூரி மற்றும் வேலையில் நிகழும் விஷயங்களைக் கலந்துரையாடுவார்கள். 


அதனாலேயே, ஆரவியின் கல்லூரியில் நடக்கும் அனைத்து நிகழ்வுகளும் அவளது வீட்டாருக்குத் தெரிந்து விடும். அப்படியானால், அதில் திவ்யனும் அடக்கம் தானே? 


அப்படியிருக்க, அவனுக்கு அந்தப் பிரஹாசினியின் மீது அவனுக்கு முதலில் தோன்றியது பரிதாபம் தான்! 


அவள் மேல் தன்னுடைய தங்கை மட்டுமின்றி, அவளுடன் படித்துக் கொண்டிருக்கும் வேறு சிலரும் கூட, அவளை இப்படித் தானே எண்ணியிருப்பர் என்று பிரஹாசினியின் மீது பரிவு தோன்றியது திவ்யனுக்கு. 


இங்கு ஒருவனுக்குத் தன் மேல் பரிதாபம் மற்றும் பரிவு தோன்றியது, அது கூடிய விரைவில் காதலாக மாறப் போகிறது என்பதையெல்லாம் அறியாமல், தமிழ்ப் புத்தாண்டின்  காரணமாக விடுதி மாணவ, மாணவிகளுக்கு மட்டும் கல்லூரியில் ஒரு வாரம் விடுப்பு அளித்திருந்ததால் அந்த நாட்களைக் கழிப்பதற்காகத் தன்னுடைய வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்தாள் பிரஹாசினி. 


அவளை அப்போது தான், பேருந்து நிலையத்திலிருந்து அழைத்து வந்திருந்தான் நீரஜ். 


அவள் கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து, வெள்ளிக்கிழமை மாலையில் கிளம்பி வீட்டிற்கு வந்து விடுவாள். அதன் பிறகு, இரண்டு நாட்கள் விடுமுறையைக் கழித்து விட்டு ஞாயிற்றுக்கிழமை மாலையில் விடுதிக்குத் திரும்பி விடுவது அவளது வழக்கம். 


இப்படி எப்போதாவது தான், ஒரு வாரம், பத்து நாட்கள் என்று விடுமுறை கிடைக்கும் போது இங்கே வந்து சீராடி விட்டுப் போவாள் பிரஹாசினி. 


அந்த நாட்களில் எல்லாம் அவளது வீட்டினருக்கு ஆனந்தமாக இருக்கும்.


அதேவேளையில், அவர்களது உறவினர்கள் தவறாமல் படையெடுத்துப் பிரஹாசினியின் வாயைக் கிளற முயற்சிப்பார்கள்.


அவளோ அதற்குப் பிடி கொடுக்காமல் சாமர்த்தியமாக நழுவி விடுவாள். 


இப்போதும் கூட, அவளது ரமணி அத்தை தான், அவர்கள் வீட்டிற்கு வந்திருந்தார். 


அவர் தனது குடும்பத்தைத் தன்னுடன் கூட்டிக் கொண்டு வராமல் தனித்து வந்து இருக்கவே, அவரிடம் பிரஹாசினியால் சகஜமாகப் பேச முடிந்தது. 


ஆனால், அவரது பேச்சு எங்குச் சுற்றினாலும் கடைசியில் வந்து முடிவது என்னவோ, அவருடைய மகன்களைப் பற்றியதாகத் தான் இருந்தது. 


ஏனென்றால், அவரின் அண்ணன் மகன் நீரஜ்ஜின் பொறுப்பான சுபாவத்தைக் கண்டுப் பொறாமை கொண்டவரோ, தன் மகன்களின் புகழைப் பாடத் தொடங்கி விட்டார் ரமணி. 


அதற்கு இன்னொரு காரணமும் உண்டு, கல்லூரியில் சேர்ந்ததில் இருந்து பிரஹாசினியின் தோற்றம் மற்றும் அவளது நடவடிக்கைகள் அவரை வெகுவாக ஈர்த்தது எனலாம். 


அதனாலேயே அவளைத் தன் மகன்களில் ஒருவனுக்குத் திருமணம் செய்து வைக்கும் எண்ணத்தைத் தனக்குள் வளர்த்துக் கொள்ள ஆரம்பித்தார் ரமணி. 


ஆனால், அதை உறுதியானதொரு முடிவாக வைத்திருக்கவில்லை அவர். 


ஏனெனில், என்ன தான், தன்னுடைய அண்ணன் விருச்சிகன், பிரஹாசினியைத் தன் சொந்த மகளாக வளர்த்தாலும் கூட, அவள் அவரது தம்பி மகள் தானே? அப்படியிருக்க, பிரஹாசினியின்  திருமணத்தின் போது, அவளுக்கு வரதட்சணையைக் கொடுப்பாரா? என்பது சந்தேகமாக இருந்தது. அதனால், அவளை ஒரு ஆப்ஷனாக வைத்துக் கொண்டவரோ, 


இனி வரும் காலங்களில், என்ன வேண்டுமென்றாலும் நிகழலாம், அப்போது விருச்சிகனின் சொத்தும், பிரஹாசினியின் வனப்பும் அதிகரித்து இருந்தால் அவளைத் தன் வருங்கால மருமகளாக்கிக் கொள்ளலாம் என்ற ஆசையைத் தனக்குள் மறைத்து வைத்துக் கொண்டு நடமாடத் தொடங்கினார் ரமணி. 


ஆனால், இதை அறியாத விருச்சிகன், உமாராணி, நீரஜ் மற்றும் பிரஹாசினியோ, அவரது இயல்பான குணமே இது தான் என்று தப்புக் கணக்குப் போட்டுக் கொண்டுப் பின்னாளில் அவரால் எழப் போகும் சங்கடத்தை இப்போது உணரத் தவறினர். 


“என்ன ஹாஸ்டலில் இருந்து வந்தப் பெண்ணுக்கு வாய்க்கு ருசியாக எதுவும் சமைச்சுப் போடலையா அண்ணி? பிள்ளை, அங்கே நல்லா சாப்பிடாது போலவே? ரொம்பவே சுனங்கிப் போய் இருக்கிறாள்!” என்று உமாராணியிடம் வினவினார் ரமணி. 


“அவளுக்குப் பிடிச்ச சாப்பாட்டைத் தான் சமைச்சேன்ம்மா. அவளும் நல்லாவே சாப்பிட்டாள்” என அவருக்குத் தெரிவித்தார்.


“அப்படியா அண்ணி? அதை எனக்கும் பரிமாறுங்களேன், நானும் ருசி பார்க்கிறேன்” என்றவரை ஆயாசத்துடன் பார்த்தான் நீரஜ். 


அவனுக்கும் பண்டிகையின் காரணமாக விடுப்பு அளிக்கப்பட்டு இருந்தது. அதனால், அவனுமே ரமணியின் தொந்தரவுகளைச் சகித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் ஆளாகி இருந்தான். 


அவனுக்கும், அவனது அன்னை மற்றும் தங்கைக்கும் மட்டும் தான், ரமணியின் குணம் எரிச்சலை உண்டாக்கி இருந்தது. ஆனால், விருச்சிகனோ எப்போதும் போல இருந்தார். அவருக்குத் தன் ஒன்று விட்டத் தங்கை உறவான ரமணியின் நடவடிக்கைகள் எதுவும் எதிர்மறையாகத் தோன்றவில்லை. 


அதெல்லாம் தெரிவதற்கு அவர் தன் வீட்டில் முழு நாளும் இருந்தால் தானே? விருச்சிகன் தான், நாள் முழுவதும் தங்களது துணிக்கடையில் தானே வாசம் செய்வார். இரவு வேளையில் மட்டும் தான் வீட்டிற்கு வருவார். அதுவே ரமணிக்கு இன்னும் வசதியாகப் போயிற்று. 


அவளது விடுப்பு முடியும் வரையிலும் அங்கே தங்கியிருந்து அனைவரையும் வேலை ஏவித், தனக்குப் பிடித்த உணவைகளைச் சமைக்க வைத்துச் சாப்பிட்டு விட்டே சென்றார் ரமணி.


“இதுக்குப் பிரஹா ஊருக்கு வராமல் ஹாஸ்டலில் நிம்மதியாக இருந்து இருந்திருக்கலாம்!” என்று கூறித் தங்கைக்காக வருந்தினான் நீரஜ். 


“ரமணி இங்கே வர்றதை நம்மளால் தடுக்கவே முடியாதுடா. அவ உங்க அப்பாவோட மூளையைப் பாசத்தால் கட்டிப் போட்டு வச்சிருக்கிறாள்! அதனால், அவர் அவளை எதுவுமே சொல்ல மாட்டார். நாம தான் இதுக்கு ஏதாவது ஒரு வழியைக் கண்டுபிடிக்கனும்” என்று மகனிடம் கூறி நொந்து கொண்டார் உமாராணி. 


“ப்ச்! போங்கம்மா” என்றவனுக்கும் கோபம் கரையைக் கடப்பதைப் பார்த்து,


“அவங்க தான் கிளம்பிப் போயாச்சே? அப்பறம் என்ன? விடுங்கண்ணா” எனத் தமையனைச் சமாதானம் செய்தாள் பிரஹாசினி. 


“அடுத்த லீவுக்கும் வந்து நின்னா என்னப் பண்ணுவ?” என்றான் நீரஜ். 


“அதை அப்போ பார்த்துக்கலாம். இன்னும் என் லீவ் முடியலை. என்னை எங்கேயாவது சுத்திப் பார்க்கக் கூட்டிட்டுப் போவீங்கன்னு நினைச்சேன்” என்றாள் பொய்க் கோபத்துடன். 


“சாரிம்மா. நாளைக்கே போகலாம். எந்த இடம்ன்னு நீயே சொல்லு” என்று அவளுக்கு உறுதி அளிக்கவும், 


“அப்போ ஓகேண்ணா. நான் இன்னைக்கு நைட் யோசிச்சு சொல்றேன்” என்றவளைப் புன்னகையுடன் ஏறிட்டனர் அவளது பெரியம்மாவும், தமையனும். 


தங்கைக்குக் கொடுத்த வாக்கை அடுத்த நாளே நிறைவேற்றி வைக்கும் நோக்கில் அவளுக்குப் பிடித்த இடங்களுக்கு எல்லாம் அழைத்துச் சென்று வந்தான் நீரஜ்.


                         - தொடரும் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - எபிலாக்

  தாங்கள் விரும்பியபடியே தங்களுடைய தேன்நிலவிற்காக வந்திருந்த நாட்டில், தங்களுக்காகப் பிரத்தியேகமாக புக் செய்திருந்த அறையில் ஒருவர் அணைப்பில் மற்றொருவர் கட்டுண்டுக் கிடந்தனர் மஹதன் மற்றும் மௌனா. அறைக்குள் நுழைந்த மறு கணமே கூடலுக்கு வித்திடாமல், தன்னுடைய அணைப்பின் மூலம் தன்னவளை ஆசுவாசமாக்கிக் கொண்டிருந்தான் அவளது கணவன். “என்னங்க…” என்று ஹஸ்கி வாய்ஸில் தன் மணாளனை அழைத்தாள் மௌனா. “ம்ஹ்ம். சொல்லும்மா” என்றவனுடைய குரலில் இருந்த தாபத்தை உணர்ந்த அவனது மனைவியோ, “எனக்கு நாம இவ்வளவு தள்ளி இருக்கிறது பிடிக்கவே இல்லை ங்க” என்று அவனை மையலுடன் பார்த்தாள் மௌனா. அதைக் கேட்டுக் குழம்பிய அவளது கணவனோ,”தள்ளி இருக்கியா? எனக்குப் புரியலை ம்மா. நானும் உன் கூடத் தானே இருக்கேன்?” என்றான் மஹதன். “ஆமாம். ஆனால், ரொம்ப தள்ளி இருக்கீங்களே?” என்றதற்கு, “அப்படியா சொல்ற? நான் உன்னை எவ்வளவு இறுக்கமாக கட்டிப் பிடிச்சிட்டு இருக்கேன்னுப் பாரு!” என்று அவளுக்குச் சுட்டிக் காட்டி விளக்கினான். அதைக் கேட்டுச் சினுங்கியவளோ,”எனக்கு இந்த நெருக்கமும், இறுக்கமும் பத்தாது. நான் இன்னுமின்னும் உங்களுக்குள்ளே அமிழ்ந்துப் போகனும். உங...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (இறுதி அத்தியாயம் பாகம் இரண்டு)

  பேருந்தின் ஓட்டுநர் வந்து இருக்கையில் அமர்ந்து வண்டியை இயக்க ஆயத்தமாகவும்,”டிரைவர் வந்தாச்சு. பார்த்துப் போயிட்டு வாங்க” என்று சிவமணி, அன்னபூரணி மற்றும் அகதாவிடம் கூறி விட்டு, இருவருக்கும் பிரியாவிடை கொடுத்து விட்டு கீழிறங்கினர் மஹதனும், மௌனாவும். அதுவரைக்கும், விழியை விட்டு இறங்கி வராத கண்ணீர், அவர்களை வழியனுப்பி விட்டுக் காரினுள் ஏறி அமர்ந்த அடுத்த நொடி, கன்னத்தை நனைத்து விட்டது மௌனாவிற்கு. “என்னங்க!” எனத் தன்னவனிடம் சரணடைந்து விட்டாள். அவளது மனநிலையை அறிந்த மஹதனோ, ஒன்றும் பேசாமல், மனைவியைக் குழந்தையாகப் பாவித்து, அவளுக்கு ஆறுதல் கூறினான். “இவ்வளவு சொல்லியும் நீ பிரேக் ஆகலாமா?” என்று மௌனாவிடம் கேட்டவாறே, சமாதானப்படுத்தியவன், அவளது அழுகையின் ஒலி குறைந்ததும், தன் செல்பேசியில் அன்னைக்கு அழைத்து, மௌனாவைப் பற்றிக் கூறினான் மஹதன். “அவளோட மைண்ட்செட் எனக்கும் புரியுது. வீட்டுக்குக் கூட்டிட்டு வா” என்று கூறி வைத்த அவனுடைய அன்னை, முக்தா மற்றும் கிஷானை அவர்களது வீட்டிற்கு வரச் சொல்லிக் கேட்டுக் கொண்டார் கௌசல்யா. தன் சட்டையை நனைத்து விட்டு, மீண்டும் அழுகையில் மூழ்க இருந்த மனைவியிடம்,”அம்மா...

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...