தாங்கள் முந்தைய நாள் அறிவித்ததைப் போலவே மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்ல வேண்டி வெகு விரைவாகவே கிளம்பி விட்டிருந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
அவர்களுக்கு முதலில் காப்பியை வரவழைத்துப் பருகச் செய்து விட்டு, அதே நேரத்தில் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழியும் தங்களைத் தயார்படுத்திக் கொண்டு வந்து விடவும்,
அவர்களுக்கும் காப்பியைத் தம்ளர்களில் விநியோகம் செய்யப்பட்டது.
அதற்குப் பிறகு அனைவரும் தங்களது காலை உணவை உண்டு முடித்தனர்.
தனது சூழ் இருக்கும் வயிற்றில் பதமாக கையை வைத்துப் பிடித்துக் கொண்டுச் சாப்பாட்டு மேசையில் இருந்து எழுந்த செந்தாழைக்கு உதவி புரிந்து அவளை எழுப்பி நிற்க வைத்து விட்டு,
“நாங்கப் பரிசோதனை முடிஞ்சதும் சீக்கிரமாகவே வந்துடுவோம்”என்ற அறிவொளியிடம்,
“ஏன் எல்லா இடத்தையும் சுத்திப் பார்த்துட்டு வர வேண்டியது தானே?”என்று அவனிடம் எடுத்துரைத்தார் ராஜகுமாரி.
அதற்கு,“இல்லம்மா. இவளுக்கு வீண் அலைச்சல் எதுக்குன்னுத் தான். இப்போ ஏழாவது மாசம் முடியப் போகுதுல்ல? அதான், கொஞ்சம் கவனமாக இருக்கனும்னு நினைக்கிறோம்”என்றிருந்தான் அவரது மூத்த மகன்.
அதைக் கேட்டதுமே,”ஆமால்ல? அப்படின்னா இந்த மாசமே வளைகாப்பு வச்சிருக்கனும்! ஆனால் உங்களுக்கு இன்னும் தாலி கோர்க்கிற சடங்கையே நடத்தி முடிக்கலை! அதனால் தான் அதை எங்களால் நடத்த முடியலை!”என்று வருத்தத்துடன் மொழிய,
“அதனால் என்னம்மா? வளைகாப்பை ஒன்பதாவது மாசம் வச்சுக்கிட்டா போச்சு!”எனத் தாயிடம் சமாதானமாக கூறி விட்டு,
“என்ன அண்ணா? அண்ணி? நான் சொன்னது சரி தானே?”எனத் தன் தமையன் மற்றும் அவனது மனைவியிடம் வினவினான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். சரி தான் திரு”என்றிருந்தார்கள் அவர்கள் இருவரும்.
அதில் தாங்களும் தங்களது சஞ்சலத்தைக் கை விட்டு, விட்டனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அப்போது,“பரிசோதனைக்கான கோப்புக்களை எடுத்துக்கிட்டியா?”என்று தங்கையிடம் கேட்டிருந்தாள் பூவிழி.
“எடுத்துக்கிட்டேன் க்கா. அங்கே உங்களுக்கு பிடிச்சது ஏதாவது வேணும்ன்னா சொல்லுங்க. நாங்க வாங்கிட்டு வர்றோம்”என அவளிடம் அறிவுறுத்தினாள் செந்தாழை.
“எனக்கு எதுவும் வேண்டாம்டி. நீங்க ரெண்டு பேரும் பத்திரமாகப் போயிட்டு வந்தாலே போதும்”என்று அவளிடம் கூறவும்,
அதில் புன்னகைத்து விட்டு,”கண்டிப்பாகப் பத்திரமாகப் போயிட்டு வர்றோம்க்கா”என்று தமக்கைக்கு உறுதி அளித்து விடவும்,
“ம்ஹ்ம். சரிடி”எனத் தானும் முகிழ்நகையை முகிழ்த்தாள் பூவிழி.
“சரி. நாங்கப் போயிட்டு வர்றோம்”என்று அனைவருக்கும் பொதுவாக அறிவித்தான் அறிவொளி.
உடனே அவர்கள் இருவரையும் வாசலிற்கு வந்து காரில் ஏற்றி விட்டார்கள் அவர்களது மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
அதற்குப் பிறகு,”தாங்களும் காட்டுக்குக் கிளம்புறோம்”என்று ராஜகுமாரி மற்றும் பூவிழியிடம் விடைபெற்றுக் கொண்டுத் தங்களது காட்டிற்குச் சென்று விட்டனர் நஞ்சுண்டன் மற்றும் திருவாதிரன்.
அவர்கள் அனைவரும் சென்றப் பின்னர் தனது இளைய மருமகளைத் தன்னுடன் அமர்த்திக் கொண்டு அவளுடன் அளவளாவத் தொடங்கி விட்டார் அவளது மாமியார்.
ஆனால் அவருடன் சரிசமமாக முதல் முறையாக உட்கார்ந்து பேசுவதற்கு மிகவும் தயங்கித் தான் போயிருந்தாள் பூவிழி.
அவளது அந்த தயக்கத்தைப் புரிந்து கொண்டு,”நீ எங்கிட்ட இப்படி தயங்கித், தயங்கிப் பேசுறதுக்கான காரணம் என்னன்னு எனக்குப் புரியுது! ஏன்னா, நான் தானே உன்னையும், உந்தங்கச்சியையும் என் கூட இயல்பாகப் பேசுறதுக்கான வாய்ப்பைக் கொடுக்கவே இல்லையே? அதனால் தானே நீ எங்கிட்ட இருந்து இப்படி தள்ளி இருக்கிற? அதை விட நான் பண்ணப் பெரியத் தப்பு, உங்கம்மாவோட இறப்பு அப்போ கூட அவங்களையும், உங்க ரெண்டுப் பேரையும் ஒழுங்காக மதிச்சு நடத்தலையே? அந்தக் காரணத்துக்காகவே நீ என்னை வெறுக்கிறது சரி தான்!”என்றவரைச் சங்கடத்துடனும், கண்களில் வலியுடனும் ஏறிட்டுப் பார்த்து,
“அதையெல்லாம் இப்போ எதுக்குப் பேசிக்கிட்டு இருக்கீங்கத்தை? அதெல்லாம் எப்பவோ முடிஞ்சுப் போயிடுச்சு”என்றவளால் தனது குரலில் அத்துணை விரக்தி!
அதை அவதானித்து விட்டு,”என்ன தான் நீயும், உந்தங்கச்சியும் பெருந்தன்மையாக என்னையும், எம்புருஷனையும் மன்னிச்சுட்டாலும் கூட எங்களுக்கு நாங்க செஞ்சக் காரியத்தால் ஏற்பட்ட குற்ற உணர்வு எங்களை ரொம்பக் குத்திக் கிழிக்குது!”என்றவரின் கரத்தை ஆதூரமாகப் பிடித்துக் கொண்டாள் பூவிழி.
அவளது கையைத் தனது கரத்தால் இறுக்கிப் பிடித்துக் கொண்டு,”என்னை மன்னிச்சிரு பூவு! நான் உன்னையும், செந்தாவையும் இந்த வீட்டோட மருமகளுங்கன்னுப் பார்க்கிறதுக்கு முன்னாடி, மனுஷிகளாக் கூடப் பார்த்து, மதிக்கத் தவறிட்டேன்! என்னடா இவங்க திடீர்னு இப்படி மனசு மாறிட்டாங்களே! இது உண்மையா? இல்லை, நம்ம கிட்டே நடிக்கிறாங்களான்னுக் கூட உனக்குத் தோணலாம்! ஆனால் நான் உண்மையாகவே என்னோட தப்பை உணர்ந்து உங்கிட்ட மன்னிப்புக் கேட்டுக்கிறேன்”என்று அவளிடம் தன் தவற்றை உணர்ந்து மன்னிப்பு வேண்டிய மாமியாரை விழிகள் கசிய நோக்கி விட்டு,
“அத்தை! ஏன் இப்படியெல்லாம் பேசுறீய?”என்றிருந்தாள் அவரது இளைய மருமகள்.
உடனே,”நீ என்ன தான் பெருந்தன்மையாக இப்படி எங்கிட்ட பேசினாலும் உனக்கு உள்ளுக்குள்ளே ரொம்பவே வலிச்சு இருக்கும் தானே? அது எனக்கு நல்லாவே புரிஞ்சது! நான் தெரிஞ்சே உன்னையும், உந்தங்கச்சியை மட்டுமில்லாமல் உங்கம்மாவையும் அந்த அளவுக்குக் கீழ்த்தரமாக நடத்தி இருந்து இருக்கேன்னு நினைக்கும் போது என்னை நினைச்சா எனக்கே கோபமாகவும், அவமானமும் வருது!”என்றவரை இடைமறித்து,
“போதும்த்தை. இதை இத்தோட விட்ருவோம்! நீங்க ரொம்ப உணர்ச்சிவசப்பட்றீய!”என அவருக்கு அறிவுறுத்தினாள் பூவிழி
“பரவாயில்லை! நான் உங்கிட்ட இதை எல்லாத்தையும் இன்னைக்கே மனசைத் திறந்துப் பேசி முடிக்கனும்னு உறுதியாக இருக்கேன்! அதனால் என்னைப் பேச விடு!”என அவளிடம் தீர்க்கமாக கூறி விட்டிருந்தார் ராஜகுமாரி.
அவரது வேண்டுகோளுக்குத் தானும் ஒப்புக் கொண்டு,“சரிங்கத்தை” என்று அவருக்கு அனுமதி அளித்து விடவும்,
“ம்ஹ்ம். நாங்க எங்களோட சாதி, சனம், குடும்பக் கௌரவம்ன்னு இதையெல்லாம் யோசிச்சோமே தவிர்த்து எங்களோட பசங்க ரெண்டு பேரையும் கவனிக்கத் தவறிட்டோம்ன்றதை இப்போ நினைச்சு ரொம்பவே வருத்தப்பட்றோம்! அறிவுக் கூட, வீட்டில் இருக்கும் போது எங்கிட்ட அவனும், திருவும் பண்ணத் தப்புக்கு எங்கிட்டேயும், உன் மாமனார் கிட்டேயும் ஊரைக் கூட்டி மன்னிப்புக் கேட்கிறோம்ன்னு எங்கிட்ட சொன்னான்! அப்போ தான் எனக்குப் புரிஞ்சது அவங்க ரெண்டு பேரும் எங்ககிட்ட அப்படி மன்னிப்புக் கேட்கிற அவளுக்கு என்னத் தப்புப் பண்ணாங்க? நாங்க தானே அவங்களோட மனசுல என்ன இருக்குன்றதை தெரிஞ்சிக்காமல் விட்டுட்டோம்? ஏன்னா, நானும், உன் மாமனாரும் இந்தச் சாதி, குடும்ப கௌரவம்ன்னுப் பைத்தியம் பிடிச்சு இல்லாமல் இருந்து இருந்தால் அறிவு இப்படி எங்களுக்குத் தெரியாமல் கல்யாணம் கட்டி இருப்பானா? நாங்களும் ஒழுங்காக இருந்து இருந்தால் இந்த வீட்டோட மூத்த மருமகனோட கல்யாணம் இப்படியா நடந்து இருக்கும்? அதே மாதிரி நாங்க உங்கம்மாவையும், அக்கா, தங்கச்சி உங்களையும் ஒழுங்காக நடத்தி இருந்தால் இந்நேரம் முத்துமணியும் உயிரோட இருந்து இருப்பாங்க தானே? உனக்கும், திருவுக்கும் கூட நாங்களே கல்யாணத்தைச் செஞ்சி வச்சிருப்போம் தானே? நாங்க தான் வீட்டுக்கு மூத்தவுக! எங்கப் பசங்க ரெண்டு பேரும் தலையெடுத்துக்கிட்டு, அவனுங்களுக்குத் தோணுறதை எல்லாம் நடத்திக்கிறானுகளேன்னு எங்க ரெண்டு பேருக்கும் ஒரு பொருமல்! அது தான் எங்களை உங்க எல்லாரையும் கீழ்த்தரமாக நடத்த வச்சுருக்கு! ஆனால் இதுக்கப்புறம் நாங்க கண்டிப்பாக அந்த மாதிரி உங்களை நடத்த மாட்டோம் பூவு! என்னோட இந்த வாக்கை ஏத்துக்கிட்டு எங்க மேலே நம்பிக்கை வைப்பியா? எங்களைத் திருத்திக்க ஒரு வாய்ப்புக் கொடுப்பியா?”என்று அவளிடம் நெகிழ்ந்து போய்க் கேட்டிருந்தார் அவளது மாமியார்.
அதில் அவளது மனம் பாகாய் உருகிப் போய் விட்டது எனலாம்!
உடனே,”நான் கண்டிப்பாக உங்க மேலே நம்பிக்கை வச்சு, உங்களுக்கு வாய்ப்புக் கொடுப்பேன்த்தை! நீங்க நிறையப் பேசிட்டீங்க! அதனால் நான் உங்களுக்கு சூஸூப் போட்டுக் கொண்டு வர்றேன். அதை நீங்க கண்டிப்பாக குடிக்கனும்”என்று அவருக்கு வலியுறுத்தினாள் பூவிழி.
அதற்கு,“சரித்தா”எனத் தன் முகம் மலர ஒப்புதல் அளித்து விட்டார் ராஜகுமாரி.
உடனே எழுந்து சமையலறைக்குப் போய்ச் சிறிது நேரத்திலேயே அவருக்காகப் பழச்சாற்றைத் தயாரித்துக் கொண்டு வந்து கொடுத்துக் குடிக்கச் செய்தாள் மருமகள்.
அதைப் புருகி முடித்து விட்டு அவளுடனான உரையாடலை மீண்டும் தொடங்கி விட்டிருந்தார் ராஜகுமாரி.
இதே சமயத்தில் மருத்துவ பரிசோதனைக்காகத் நகரத்தில் இருக்கும் மருத்துவமனையை வந்தடைந்து தங்களது குழந்தையின் ஆரோக்கியம் மற்றும் அதன் அசைவுகளை எல்லாம் பார்த்து விட்டு மனம் நிறைந்து போய் விட்டார்கள் அறிவொளியும், செந்தாழையும்.
தங்களது கண்களில் ஆனந்தக் கண்ணீர் வழிய மருத்துவரைச் சந்தித்துப் பேசுவதற்காக அவரது அறைக்கு வந்திருந்தனர் அவ்விருவரும்.
“என்ன உங்க குழந்தையோட அசைவுகளைப் பார்த்து ரொம்பவே நெகிழ்ந்து போயிட்டீங்க போலவே?”என அவர்கள் இருவரின் கண்கள் கலங்கி இருப்பதைக் கவனித்து விட்டு அவர்களிடம் புன்னகையுடன் வினவினார் அந்த மருத்துவர்.
அதில் மகிழ்ந்து போய்த் தாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டுத் தங்களது விழிகளை நாசூக்காகத் துடைத்துக் கொண்டு,
“ஆமாம் டாக்டர்”என்றிருந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
“ம்ஹ்ம். உங்களுக்கு முதல் குழந்தை வேற அதனால் கண்டிப்பாக நெகிழ்ச்சியாகத் தான் இருக்கும். அப்பறம், இது ஏழாவது மாசம் தானே? வளைகாப்பு வைக்கலையா?”என அந்தத் தம்பதியிடம் கேட்டிருந்தார் மருத்துவர்.
“இல்லை டாக்டர். பத்தாவது மாசம் வளைகாப்பை நடத்தலாம்ன்னு எங்கப்பா, அம்மா சொல்லிட்டாங்க”என்று அவருக்குப் பதிலளித்தான் அறிவொளி.
அவரிடம் தங்களது வீட்டில் நடப்பவற்றை வெளிப்படையாகவும், தெளிவாகவும் கூற வேண்டிய அவசியம் இல்லை என்பதாலேயே இப்படியான பட்டும், படாமல் ஒரு பதிலைச் சொல்லி இருந்தான்.
அதே சமயம் தானும் அவர்களிடம் அந்த விஷயத்தைப் பற்றி மேலும் கிளறிக் கேட்காமல் செந்தாழைக்கான மாத்திரை, மருந்துகளை எழுதிக் கொடுத்து விட்டு அவர்கள் இருவரையும் அனுப்பி வைத்து விட்டார் அந்த மருத்துவர்.
அந்த மருத்துவமனையில் இருந்து வெளியேறியதும்,”என்ன தான் எதுவும் வாங்கிட்டு வர வேண்டாம்ன்னு பூவு அக்கா மறுத்துச் சொல்லிட்டாலும் கூட அவங்களுக்காக நாம ஏதாவது வாங்கிட்டுப் போகனும்னு எனக்குத் தோணுதுங்க! அவங்களுக்கு மட்டுமில்லாமல் நம்மளோட மத்த வீட்டு ஆளுங்களுக்கும் ஏதாவது வாங்கிட்டுப் போவலாமாங்க?”என்று தன்னுடைய கணவனிடம் இறைஞ்சிக் கேட்டுக் கொண்டாள் செந்தாழை.
“சரிம்மா. கடைத் தெருவுக்குப் போய் எல்லாருக்கும் பிடிச்சப் பொருட்களை வாங்கிட்டே வீட்டுக்குப் போவோம்”என்று அவளது வேண்டுகோளுக்கு இணங்கிக் கூறினான் அறிவொளி.
அதற்குப் பிறகு அவர்கள் இருவரும் சேர்ந்து அங்கேயிருந்த கடைகளை அலசி, ஆராயத் தொடங்கி விட்டார்கள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக