உடனே அவர்களை நெருங்கி முதலில் முருகையனின் கரத்தைப் பிடித்தான் திருவாதிரன்.
அதில் அவரோ மிரண்டு போய்,”ஐயா! வேண்டாமுங்க! நான் இந்த ஊரை விட்டே ஓடிப் போயிட்றேனுங்க! என் வயசைப் பார்த்தாவது என்னை விட்ருங்க!”என்று அவனிடம் கதறத் தொடங்கி விடவும்,
“அந்தப் பொண்ணுங்க கிட்டே எல்லாம் தப்பாக, வரைமுறை இல்லாமல் நடந்துக்கிறப்போ இதையெல்லாம் யோசிச்சுப் பார்த்தியாடா? அதுவும் இல்லாமல் யாராக இருந்தாலும் அவங்களோட வயசுக்கு எல்லாம் மரியாதைக் கொடுக்க முடியாது! நடத்தைக்குத் தான் மரியாதை! உன்னோட மோசமான நடத்தையால் எத்தனைப் பொண்ணுங்க மன உளைச்சல் அடைஞ்சி இருப்பாங்க? அதுக்காகவே உனக்கு இந்தத் தண்டனைத் தேவை தான்!”என்று அவரிடம் கூறியவனோ,
யாரும் சற்றும் எதிர்பார்க்காத நேரத்தில் அவருடைய கரத்தைப் பிடித்து முறுக்கி, உடைத்து விட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் தனது தொண்டை வலிக்கக் கத்திக் கூப்பாடு போடத் தொடங்கிய முருகையனின் வாயைத் துணியால் மூடி அடக்கினார்கள் அங்கேயிருந்த திருவாதிரனின் விசுவாசிகள்.
அவனது இந்த அதிரடியானச் செயலைக் கண்டதுமே தங்களது உடல் முழுவதும் நடுநடுங்க, அடுத்தது தாங்கள் தான் என்பதை அறிந்து பயத்தில் கால்கள் வெடவெடக்க, அதிர்ச்சியில் கத்தக் கூட வராமல் அவனைப் பார்த்திருந்தனர் சடையன் மற்றும் விருமன்.
தனது கை உடைந்து விட்டதால் எழுந்த உயிர் போகும் வலியால் விழிகளில் இருந்து கண்ணீர் வழிந்தோடத் தன்னை விட்டு விடுமாறு திருவாதிரனைக் கெஞ்சும் பார்வைப் பார்த்தார் முருகையன்.
ஆனால் அவனோ அதைக் கண்டு கொள்ளாமல் தனது கண்கள் கோவைப்பழ நிறத்தில் சிவக்க அவரை இன்னும் கொடூரமாக முறைத்துக் கொண்டே அவரது மற்றொரு கரத்தையும் உடைத்து விட்டிருந்தான்.
அந்த உடைபட்ட சத்தத்தைக் கேட்டு மற்ற இருவரும் மயக்கமே அடைந்து போயிருந்தார்கள்.
அதைக் கவனித்து விட்டு,“ஐயா! இவனுங்க ரெண்டு பேரும் மயக்கம் போட்டுட்டானுவ!”என்று தனது முதலாளியிடம் தெரிவித்தான் சீலன்.
உடனே,“அவனுங்களைத் தெளிய வச்சு அடிச்சிட்டே இருங்க! இந்த முருகையனைக் கவனிச்சுட்டு இவனுங்களைப் பார்த்துக்கிறேன்! அதனால் இப்போதைக்கு இவனுங்களை எதுவும் செய்யப போவதில்லை! சரியா?”என்று தன் ஆட்களிடம் கட்டளையிட்டான் திருவாதிரன்.
“சரிங்க ஐயா”என்றவர்களிடம்,
“இந்த ஆளுக்கு எந்தச் சிகிச்சையும் தராமல் இப்படியே விடுங்க. எப்போ சாகுறானோ அப்போ சாகட்டும்! அதே மாதிரி இந்த ஆளால் காட்டில் வேலைச் செய்ற எந்தப் பொண்ணுக்காவது பாலியல் சீண்டல் நடந்து இருக்கான்னு இன்னும் நல்லா தெளிவாகத் தெரிஞ்சிக்கிட்டதுக்கு அப்பறமாக மேற்கொண்டு என்னப் பண்ணலாம்னுச் சொல்றேன்! இவனுகளையும் அப்பப்போ தெளிய வச்சு அடிங்க! சாப்பாடு எல்லாம் கொடுக்க வேண்டாம்! பட்டினியால் செத்தாலும் சாவட்டும்ன்னு விட்ருங்க!”என்று அவர்கள் ஐவருக்கும் உத்தரவுகளைக் கொடுத்து விட்டு மீண்டும் தனது காட்டை வந்தடைந்து அலுவலக வேலைகளைப் பார்க்கலானான்.
அதே சமயத்தில், இங்கு வீட்டிலோ தன்னுடைய அறை மெத்தையில் தனது தமக்கையை உட்கார வைத்து அவளது மடியில் தலை சாய்த்து ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருந்தாள் செந்தாழை.
அவளது சிகையை ஆதூரமாக கோதிக் கொடுத்துக் கொண்டே,
“மசக்கை ரொம்பப் போட்டுப் படுத்துதாம்மா?”எனத் தங்கையிடம் அக்கறையுடன் கேட்டாள் பூவிழி.
“ம்ஹூம். இல்லக்கா. எனக்கு நம்ம அம்மாவோட ஞாபகம் வருது! என் மனசு அவங்களை ரொம்பத் தேடுது!”எனத் தன் கணவனிடம் கூறியதை அப்படியே அவளிடம் ஒப்புவித்து முடித்திருந்தாள் செந்தாழை.
அதைக் கேட்டதும் இத்தனை நாட்களாக அவள் மீதிருந்த வெறுப்பு, சங்கடம் அனைத்தையும் துறந்து விட்டு அவளது கன்னத்தை வருடிக் கொடுத்து,”நம்ம அம்மா நம்மக் கூடத் தான் இருக்காங்கம்மா! யாரு கண்டால் உன் வயித்துல இப்போ வளந்துட்டு இருக்கிறது நம்ம அம்மாவாக கூட இருக்கலாம்”என்றவளை நிமிர்ந்து நோக்கி,
“நீ உண்மையாகவா சொல்றக்கா?”என அவளிடம் பூரிப்புடன் வினவ,
“ம்ஹ்ம். ஆமா செந்தா! ஆனால் நான் ஒரு அனுமானமாகத் தான் சொல்றேன். அதுக்காக நீ இந்தக் குழந்தை தான் பொறக்கும்னு நினைச்சுட்டு இருக்கக் கூடாது! எந்தக் குழந்தைப் பிறந்தாலும் அதை மனசார ஏத்துக்கனும். சரியா?”என்று தங்கைக்கு அறிவுரை வழங்கினாள் பூவிழி.
“சரிக்கா. நீ சந்தோஷமாக இருக்கியா? உனக்கு இங்கே ஏதாவது சௌகரியமாக இருக்கா? அவுகளோட தம்பி உன்னை நல்லா பார்த்துக்கிறார் தானே? எனக்கு வெளியே இருந்து பார்க்கும் போது அவர் உன்னை நல்லா கவனிச்சுக்கிறா மாதிரித் தான் தெரியுது! ஆனாலும் நீ உன் மனசில் இருக்கிறதை நீயே வாயாலே சொல்லு! எதுவாக இருந்தாலும் எங்கிட்ட பகிர்ந்துக்கோ”என்றவளிடம்,
“என் செல்லத் தங்கச்சி இப்படியெல்லாம் விசாரிக்கிற அளவுக்கு வளந்துட்டாளே!”என்று கூறிப் புன்னகைக்க,
அதில் வெட்கம் கொண்டு,”ப்ச்! அக்கா!”என அவளிடம் சினுங்கினாள் செந்தாழை.
“சரி, சரி. நான் ரொம்பச் சந்தோஷமாக இருக்கேன். எனக்கு இங்கே எல்லாமே சௌகரியமாக இருக்கு! எம்புருஷன் என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிறாருடி!”என்று தன் வாயாலேயே அவளுக்கு வாக்குமூலம் அளித்து விட்டிருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டதுமே,“அப்படியா? இதைக் கேட்டதுக்கு அப்பறமாகத் தான் எனக்கு நிம்மதியாக இருக்குக்கா! நான் உன்னையும், அம்மாவைப் பத்தியும் யோசிக்காமலேயே விட்டுட்டேன்ல! நான் உங்க ரெண்டு பேர் கிட்டேயும் ரொம்பச் சுயநலமாக நடந்துக்கிட்டேன்ல? நம்ம அம்மாவோட சாவை நினைச்சுக் கூட வருந்தாமல் என்னோட கர்ப்பத்தைப் பத்தி யோசிச்சிட்டு இருந்துட்டேன்லக்கா? அதே மாதிரி நம்ம அம்மா இறந்ததுக்கு அப்பறம் உன்னைப் பத்திக் கொஞ்சம் கூட யோசிச்சுப் பார்க்காமல் என்னைப் பத்தி மட்டுமே யோசிச்சு, என்னோட வசதியைப் பத்தி மட்டுமே கவலைப்பட்டு உன்னைக் கண்டுக்காமல் விட்டதால் தானே நீ இந்த வீட்டை விட்டுப் போகனும்னு நினைச்ச? அப்போ கூட நான் உன்னை இந்த வீட்டில் ஒரு வேலைக்காரியாக இருக்கச் சொல்லித் தானே சொன்னேன்! அதே மாதிரி, அவுகளோட தம்பி உன்னை அவரைக் கல்யாணம் செய்துக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்தின அப்போ கூட நான் உனக்காக நிற்காமல் இருந்துட்டேனே! அவர் நல்லவராக இருக்கப் போய் நீ இப்போ நல்லா இருக்கிற! இதுவே கொழுந்தனார் குணக்கேடாக இருந்து இருந்தால் உன் வாழ்க்கையே அழிஞ்சுப் போயிருக்குமே! நல்ல வேளை அப்படி எதுவும் நடக்கலை! நம்ம அம்மாவோட ஆசீர்வாதத்தால் தான் நமக்கு இந்த மாதிரியான நல்ல வாழ்க்கை அமைஞ்சி இருக்கு! நான் உங்கிட்ட அப்படி நடந்துக்கிட்ட எல்லாத்துக்குமே என்னை மன்னிச்சிருக்கா”என்று தன்னிடம் தொண்டைக் கமற மன்னிப்புக் கேட்டத் தங்கையிடம்,
“நீ எங்கிட்ட அடி வாங்கப் போற செந்தா! என்னப் பெரியப் பேச்செல்லாம் பேசிட்டு இருக்கிற! அதுவும் நீ மாசமாக இருக்கிற இந்த நேரத்தில் இதையெல்லாம் பேசனும்னு அவசியமா என்ன? இரத்த அழுத்தம் வந்துடப் போகுதும்மா! முதல்ல எழுந்து உட்காரு”என்றப் பூவிழியோ,
தங்கையை எழுப்பி அவளுக்குத் தண்ணீரைக் கொடுத்துக் குடிக்க வைத்தாள்.
அதை வாங்கிப் பருகி விட்டு,”நீ என்னை மன்னிச்சிட்ட தானே க்கா?”என்று சிறு குழந்தையைப் போல் தமக்கையிடம் பாவமாக கேட்டிருந்தாள் செந்தாழை.
உடனே அவளது தலையை மெல்லத் தட்டி,”நான் உன்னை மன்னிச்சிட்டேன்! போதுமா டி?”என்று அவளுக்கு உறுதி அளித்தாள் பூவிழி.
“நன்றிக்கா”என்றதுமே அவளைப் பொய்யாக முறைத்துப் பார்த்தாள் தமக்கை.
அப்போது அந்த அறைக் கதவைத் தட்டும் சத்தம் கேட்கவும்,
“யாரு?”என்றிருந்தாள் செந்தாழை.
“நான் தான்ம்மா”என்ற அறிவொளியின் குரலைக் கேட்டதுமே,
“உள்ளே வாங்க மாமா”எனக் கணவனுக்கு அனுமதியைக் கொடுத்தாள்.
உடனே அறைக் கதவைத் திறந்து கொண்டு உள்ளே வந்தவனோ,
“மதியச் சாப்பாட்டுக்கு அப்பாவும், திருவும் வருவாகள்ல? நான் அப்போ அவுக கூடக் காட்டுக்குப் போகலாம்னு இருக்கேன். அதைச் சொல்லத் தான் வந்தேன்”என அவர்களிடம் அறிவித்தான் அறிவொளி.
“சரிங்க”என்றவளோ,
“நீங்கப் போய் அத்தைக் கூடப் பேசிட்டு இருங்க. அவுக மட்டும் கூடத்தில் தனியாக இருப்பாகல்ல? நாங்க மதியச் சாப்பாட்டுக்கு வந்துட்றோம்”என்றுரைத்துக் கணவனை அனுப்பி வைத்து விட்டாள் செந்தாழை.
“நீ சொல்லு. உனக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை எப்படி போகுது? எல்லாம் சௌகரியமாக இருக்குதா? டாக்டரு மேடம் என்னச் சொன்னாவ? குழந்தை எப்படி இருக்குதாம்?”என்று தங்கையிடம் அவளது கர்ப்பத்தைப் பற்றியும், குழந்தையின் ஆரோக்கியத்தைப் பற்றியும் கேள்விகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளத் தொடங்கினாள் பூவிழி.
அதே சமயம் தன்னுடைய தாயிடம்,”இன்னைல இருந்து நானும் அவுக கூடக் காட்டுக்குப் போய்ச் சோலியைப் பார்க்கலாம்னு இருக்கேன்ம்மா”எனத் தெரிவித்தான் அறிவொளி.
அதைக் கேட்டதும் அவனது அன்னையான ராஜகுமாரிக்கு மகிழ்ச்சி தான் உண்டானது!
ஏனென்றால் தனது மூத்த மகனும் தங்களது நிலபுலன்களைப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பது தானே அவர் மற்றும் அவரது கணவருக்கும் இருந்த நீண்ட வருடங்களான ஆசை ஆயிற்றே!
அதனாலேயே,”ரொம்பச் சந்தோஷம்டா! நீயும் இனிமேல் அவங்க கூடச் சேர்ந்து தொழிலைக் கத்துக்கோ!”என மகனுக்கு அறிவுறுத்தினார் ராஜகுமாரி.
“சரிங்கம்மா. நாங்க மூனு பேரும் காட்டுக்குப் போனதுக்கு அப்பறம் நீங்களும், உங்க ரெண்டு மருமகள்களும் இங்கே சந்தோஷமாக இருப்பீக போலவே!”என்று அவரிடம் புன்னகையுடன் கேட்டிருந்தான் அறிவொளி.
உடனே,”க்கும்! நாங்க மூனு பேரும் சந்தோஷமாக இருப்போம்ன்னு நீ நம்புற! அப்படித் தானே?”என்று கேட்டு விட்டு அவனை ஆதங்கத்துடன் முறைத்தார் அவனது தாய்.
“அம்மா! இனிமேலும் இப்படியே அவங்க ரெண்டு பேரையும் வெறுத்துக்கிட்டே இருந்தீங்கன்னா உங்களுக்குத் தான் நிம்மதிப் பறிப் போகும்! அப்படி நடந்தால் நம்மக் குடும்பமும் நிம்மதியை இழந்துடும்! அதெல்லாம் நடக்கனும்னு தான் நீங்க ஆசைப்பட்றீங்களா? அப்படி ஏதாவது நடந்தால் இந்த வீடே நரகம் ஆகிடும்மா! இப்போ என்ன? நானும், திருவும் உங்ககிட்ட சம்மதம் கேட்காமல் கல்யாணம் செய்துக்கிட்டோம்ன்னு தானே உங்களுக்கு மனக் கவலையாக இருக்கு? நாங்க வேணும்னா ஊரைக் கூட்டி வச்சு உங்க காலிலும், அப்பாவோட காலிலும் விழுந்து மன்னிப்புக் கேட்கவா? அப்போதாவது உங்களுக்கு எங்க ரெண்டு பேர் மேலேயும் இருக்கிற வருத்தமும், கோபமும் மறையும்ல?”என்றவனின் தலையில் வலிக்கக் குட்டி விட்டு,
“நீயும், உந்தம்பியும் நல்லா வெவரமாகப் பேசுறீங்கடா! உங்கப் பேச்சிலேயே எல்லாரையும் சமாதானம் செஞ்சிட்றீங்க!”என அவனிடம் சலித்துக் கொண்டார் ராஜகுமாரி.
அதில் தன் முகம் மலர,”அப்படின்னா நீங்க எங்க நாலு பேரையும் மன்னிச்சுட்டீங்க தானே?”என்று கேட்டிருந்தான் அறிவொளி.
“ஆமாம். இதை வேற என் வாயைத் தொறந்து சொன்னால் தான் ஆச்சா? போடா போய் வேற வேலை இருந்தால் பாரு!” என்றுரைத்து விட்டவரைச் சந்தோஷத்துடன் கட்டிக் கொண்டுத் தனது நன்றியை அவருக்குத் தெரிவிக்கத் தானும் மகனை அணைத்து உச்சி முகர்ந்து விடுவித்தார் ராஜகுமாரி.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக