அவளிடம் இவ்வாறு பேசிய செந்தாழையை வாயைப் பிளந்து கொண்டு வியப்பாகப் பார்த்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அப்போது அங்கே வந்து சேர்ந்த தன் கணவனைக் கண்டதும்,”நானும் போய் என்னைச் சுத்தப்படுத்திட்டு வர்றேன்”என அனைவருக்கும் பொதுவான அறிவிப்பைக் கொடுத்து விட்டு அங்கேயிருந்து அகன்று விட்டாள் பூவிழி.
அவள் வரும் வரைக்கும் காத்திருந்தனர் மற்றக் குடும்ப உறுப்பினர்கள்.
சிறிது நேரம் கழித்து அங்கே பிரசன்னம் ஆகி,
“எங்ககிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்களே? அது என்னன்னு இப்போதாவது சொல்லுவீங்களா?”எனத் தனது தமையன் மற்றும் அவனது மனைவியிடம் கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதில் அவனைத் தயக்கத்துடன் நோக்கி,”அது வந்து…! உம்பொண்டாட்டி கொஞ்ச நாளைக்கு வீட்டில் இருந்து என் பொண்டாட்டிக் கூட நேரத்தைச் செலவழிக்க முடியுமா? இவ இவளோட அம்மாவையும், அக்காவையும் ரொம்பத் தேட்றா! நம்ம அத்தை இப்போ உயிரோட இல்லை. அதனால் தன்னோட அக்கா கூட நேரத்தைச் செலவழிக்க ஆசைப்பட்றாள்! அது தான்…”என்று அவனிடம் ஒருவாறு விஷயத்தைச் சொல்லி முடித்து விட்டிருந்தான் அறிவொளி.
அதைக் கேட்டுப் பெரியவர்கள் இருவருக்கும் அதிர்ச்சியில் விழிகள் வந்து வெளியே தெறித்து விடுவதைப் போன்றதொரு உணர்வு உண்டானது!
“என்னங்க நடக்குது இங்கே?”எனத் தன் கணவரிடம் முணுமுணுத்தார் ராஜகுமாரி.
“அது தான் எனக்கும் ஒன்னும் புரியலைம்மா. இவங்களுக்குத் திடீர்னு எப்படி இந்த மாதிரியான ஆசை வந்துச்சுன்றதுக்கான காரணம் என்னன்னுத் தெரியலையே!”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
ஆனால் அறிவொளியின் வேண்டுகோளைக் கேட்டு விட்டு அவர்களைக் கூர்மையானப் பார்வையால் துளைத்து எடுத்தார்கள் திருவாதிரனும், பூவிழியும்.
அதேபோல் தனது அவர்களது பார்வையை எதிர் கொள்ள நேர்ந்த செந்தாழையுமே அவர்கள் இருவரையும் கெஞ்சலாகப் பார்க்க,
“இப்படியே நாலு பேரும் ஒருத்தரை ஒருத்தர் பார்த்துக்கிட்டே இருந்தால் என்ன அர்த்தம்? அடுத்த சோலியைப் பார்க்க வேண்டாமா? அதனால் சட்டுப்புட்டுன்னு இதுக்கு ஒரு முடிவை எடுங்க”என்று சிறியவர்கள் நால்வருக்கும் வலியுறுத்தினார் ராஜகுமாரி.
அந்தச் சமயத்தில் அவர்களுக்கான காப்பித் தம்ளர்களும் விநியோகிக்கப்பட்டு விடவும் அதை அவர்கள் பருகத் தொடங்கி விட்டார்கள்.
“என்ன நாங்க கேட்டுக்கிட்டதுக்கு நீங்க எதுவுமே சொல்லாமல் இருக்கீங்க?”என்று திருவாதிரன் மற்றும் பூவிழியிடம் வினவினான் அறிவொளி.
அவனைப் பின்பற்றி,”இந்தச் சமயத்தில் எனக்கு நம்ம அம்மா கூட இருக்கனும்னு ரொம்ப ஏக்கமாக இருக்கு! ஆனால் அவங்க இப்போ உயிரோட இல்லை! எனக்கு நீ மட்டும் தான் இருக்க! அதனால் தான், நான் உங்கிட்ட கெஞ்சிக் கேட்டுக்கிறேன்! எனக்குக் குழந்தைப் பிறக்கிற வரைக்குமாவது நீ என் கூட இருந்து, பேசுக்கா! நான் உனக்கு ஒரு வாக்குத் தர்றேன்! நீ என் கூட இருக்கிற வரைக்கும் நான் உன்னை எந்த வேலையும் ஏவ மாட்டேன்! உன்னை வார்த்தையாலே கஷ்டப்படுத்தவே மாட்டேன்! அதே மாதிரி, நீ என் கையைப் பிடிச்சு விடு! காலை அமுக்கி விடுன்னு எல்லாம் சொல்லவே மாட்டேன்! நீ என் கூட இருந்தால் மட்டும் போதும்க்கா!”எனத் தன் தமக்கையிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் செந்தாழை.
தனது தங்கைத் தன்னிடம் இவ்வாறு வேண்டிக் கேட்டுக் கொண்டு இருந்தாலும் கூடத், தான் தனது முகத்தில் எந்தவிதப் பாவனைகளையும் வெளிப்படுத்தாமல் நிர்மலமான முகத்துடன் அவளைப் பார்த்து,
“நான் இதுக்கு முடியாதுன்னு சொன்னால் என்னப் பண்ணுவ?”என அவளிடம் வினவி இருந்தாள் பூவிழி.
அதில் தங்களது முகங்கள் சுருங்க அவளை ஏறிட்டார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை.
“இது இப்போதைக்கு முடியாது போலவே!”என்று சத்தமாகவே நொடித்துக் கொண்டார் ராஜகுமாரி.
“இதோ இப்போ முடிஞ்சிடும்த்தை”என்று அவரிடம் தெரிவித்து விட்டு,
“இதைப் பத்தின உங்களோட கருத்து என்னங்க?”எனத் தன் கணவனிடம் கேட்டாள் பூவிழி.
உடனே யோசிக்காமல்,”அவங்களுக்கு உன்னோட சம்மதம் தான் வேணும்மா. இதில் எனக்கு எந்த தனிப்பட்ட கருத்தும் இல்லை! இதில் நீ என்ன முடிவு எடுத்தாலும் அதில் எனக்கும் சம்மதம் தான்! மத்தபடி, நான் என்னோட தனிப்பட்டக் கருத்தை உனக்குள்ளே விதைக்க மாட்டேன்!”என்று அவளிடம் தீர்க்கமாக கூறியிருந்தான் திருவாதிரன்.
அதில் திருப்தியுற்று,”நான் உங்களோட வேண்டுகோளுக்குச் சம்மதிக்கிறேன்! ஆனால் என்னால் ஒருநாள் முழுசும் எந்தங்கச்சிக் கூட இருக்க முடியாது! அதனால் காலையில் காட்டுக்குப் போயிட்டு மத்தியானச் சாப்பாட்டு நேரத்தில் வீட்டுக்கு வந்துட்றேன்”என்று தன் தங்கை மற்றும் அவளது கணவனிடம் தனது சம்மதத்தை தெரிவித்து விட,
அதைக் கேட்டதும் தங்களது முகம் மலர,”அதுவே எங்களுக்குப் போதும்! ரொம்ப நன்றி!”என அவளிடம் மனதார நன்றிச் சொன்னார்கள் அறிவொளி மற்றும் செந்தாழை.
“ம்ஹ்ம். பரவாயில்லை. நான் நாளையில் இருந்து இதைச் செயலாக்குறேன்”என்றவளோ,
அடுத்த நிமிடமே தனது விழிகளைப் பெரிதாக்கிக் கொண்டு,”அச்சோ! இப்போ தானே எனக்கு ஒரு விஷயம் ஞாபகம் வருது!”என்று தன் முகத்தில் கலக்கத்தை வெளிப்படுத்திக் கூறினாள் பூவிழி.
அதில் மற்றவர்களோ அவளைக் குழப்பத்துடன் நோக்கவும்,
“எதைப் பத்தி ஞாபகம் வருது?”எனத் தன் மனைவியிடம் வினவினான் திருவாதிரன்.
“நாம்பாட்டுக்கு இவுகளுக்கு இப்படி வாக்குக் கொடுத்துட்டேன்! ஆனால் பாதி நாளில் மட்டும் வேலைக்கு வந்து போறதைப் பத்தி என் முதலாளிங்க கிட்டே சொன்னால் அவங்க இதுக்கு ஒப்புதல் அளிப்பாகளான்னுத் தெரியலையே! அதை நினைச்சா தானுங்க எனக்கு ஜரொம்பக் கலக்கமாக இருக்கு”என்று அவனிடம் மொழிந்து விட்டுத் தன் இதழ்களில் குறும்புப் புன்னகையைத் தவழ விட்டாள் பூவிழி.
அதைக் கேட்டதும் அறிவொளி மற்றும் செந்தாழைக்குப் பக்கென்று சிரிப்பு வந்து விட்டது என்றால், அவளைக் கொலைவெறியுடன் முறைத்துப் பார்த்து,”அதான் விஷயத்தைப் பேசி முடிச்சாச்சுல்ல? இனிமேலும் இப்படி எங்களால் உட்கார்ந்து வெட்டிக் கதைப் பேசிட்டு இருக்க முடியாது! நாங்கப் போய் எங்க சோலியைப் பார்க்கிறோம்”என்று அங்கேயிருந்து நகர்ந்து விட்டிருந்தனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அவர்கள் சென்றதும்,“ஏனுங்க! நான் இப்போ பேசினதுக்கு நீங்க எதுவுமே சொல்லலையே? நான் அரை நாள் வேலைக்கு வர்றதுக்கு எனக்கு அனுமதி கிடைக்குமா?”என்று தன் கணவனிடம் மீண்டும் கேட்கவும்,
அதில் அவளைப் பொய்யாக முறைத்து விட்டு,”காலங்கார்த்தாலேயே ஆரம்பிச்சுட்டியா? இனிமேல் இன்னைக்கு முழுசும் இதை வச்சு என்னிய ஒரு வழிப் பண்ணிடுவ! ஒழுங்காகப் போய்க் குளிச்சிக் கிளம்பு. நான் இன்னைக்காவது நேரத்துக்குக் காட்டுக்கு வரனும்னு நினைக்கிறேன்”என்று அவளுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்து தானும் தயாராகச் சென்றான் திருவாதிரன்.
இவர்களது இந்தப் பிணைப்பைக் கண்டு மனம் மகிழ்ந்து அதை தங்களது புன்னகையில் வெளிப்படுத்திக் கொண்டனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
சிறிது நேரம் கழிந்ததும் அனைவரும் தயாராகி வந்து தங்களது உணவையும் உண்டு முடித்து விட்டிருந்தார்கள்.
ராஜகுமாரி, அறிவொளி மற்றும் செந்தாழையிடமும் விடைபெற்றுக் கொண்டு ஜீப்பில் ஏறித் தங்களது காட்டை நோக்கிப் பயணமானார்கள் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி.
சில நேரப் பயணத்திற்குப் பிறகு காட்டிற்கு வந்து சேர்ந்து விட்டதும் தனது மனைவிக்கான வேலைகளைத் தானே வழக்கம் போல் பிரித்துக் கொடுத்து விட்டு,
“நான் இப்போ வெளியே போயிட்டு மதியத்துக்கு மேலே அப்பாவை நம்மளோட வயலுக்கு அனுப்பி வைக்கிறேன். அந்த நேரத்தில் நீ அந்தச் சாமந்தி, வாடாமல்லி ரெண்டு பேரையும் நம்ம அலுவலக அறைக்குக் கூட்டிட்டு வா”என்று அவளிடம் அறிவுறுத்தினான் திருவாதிரன்.
அதற்குத் தானும்“சரிங்க”என மொழிந்து விட்டிருந்தாள் பூவிழி.
உடனே தனது தந்தையிடம் சென்று,”நான் நம்ம வயலுக்குப் போயிட்டு மத்தியச் சாப்பாட்டுக்கு வர்றேன்ப்பா. இன்னைக்கு மட்டும் நீங்க நம்ம வீட்டுக்குப் போய்ச் சாப்பிடுங்க. எனக்கும், எம்பொஞ்சாதிக்கும் சாப்பாட்டைக் கட்டிக் கொடுத்து விடச் சொல்லிருங்க”என்றவனை ஆராய்ச்சியாகப் பார்த்தாலும் கூட அவனிடம் மறு கேள்வியைக் கேட்கத் துணிவின்றி,
“சரி திரு. நீ போயிட்டு வா. நான் இங்கே பார்த்துக்கிறேன்”என அவனுக்கு விடைகொடுத்து அனுப்பி வைத்து விட்டார் நஞ்சுண்டன்.
அங்கேயிருந்து ஜீப்பில் ஏறியவனோ தானே அதை இயக்கிப் புழுதியைக் கிளப்பிக் கொண்டு அவன் சென்று சேர்ந்த இடம் முருகையன், சடையன் மற்றும் விருமனை அடைத்து வைத்திருக்கும் கிடங்கிற்குத் தான்!
அவனுக்கு முன்னதாகவே அவ்விடத்திற்கு வந்து சேர்ந்து இருந்தார்கள் அவனது ஐந்து விசுவாசிகள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக