அன்றைய அதிகாலையில் தனது இரண்டு மருமகள்களுக்கும் புதுப்புடவைகள் மற்றும் நகைகளைக் கொடுத்து விட்டு,
“இதையெல்லாம் போட்டுக்கோங்க! இன்னைக்கு விருந்தில் நீங்க ரெண்டு பேரும் ஜம்முன்னு இருக்கனும். சரியா? ஒரு சிறுக்கியும் நாக்கு மேலே பல்லைப் போட்டு நம்மளைக் கேவலமாகப் பேசிறக் கூடாது!”என்று அவ்விருவருக்கும் எச்சரிக்கை விடுத்து விட்டுச் செல்லவும்,
உடனே தத்தமது அறைகளுக்குள் நுழைந்து விட்டார்கள் பூவிழி மற்றும் செந்தாழை.
தன் மனைவியின் கரத்தில் இருந்த புடவை மற்றும் நகைகளைக் கண்டு விட்டு அவளைக் கேள்வியாகப் பார்க்கவும்,
“அத்தைக் கொடுத்து விட்டாங்க. இதையெல்லாம் தான் விருந்துக்குப் போடனுமாம்”என அவனிடம் தெரிவித்தாள் பூவிழி.
“ஓஹ் சரி. அப்போ இதே நிறத்தில் எங்கிட்ட ஒரு புது சட்டை இருக்கு. நான் அதைப் போட்டுக்கிறேன்”என்று கூறி விட்டு அவளைப் பார்த்துக் கண்ணடித்தான் திருவாதிரன்.
அதில் தனது கன்னங்கள் சிவக்க,”சரிங்க”என்றுரைத்து விட்டு அவனுடன் சேர்ந்து தானும் தயாராகத் தொடங்கி விடவும்,
ஆனால் தனது வயிற்றை மீறித் தனது குழந்தையின் இருப்புத் தெரிவதை அங்கேயிருந்த நிலைக் கண்ணாடியில் சோகமாகப் பார்த்துக் கொண்டு இருந்தாள் செந்தாழை.
அவளது பின்னாலிருந்து அவளை மென்மையாக அணைத்துக் கொண்டு,”என்னாச்சும்மா? ஏன் உன் முகம் ரொம்ப சுணங்கிப் போயிருக்கு?”எனக் கேட்டிருந்தான் அறிவொளி.
“இப்போ எனக்கு வயிறு நல்லா தெரிய ஆரம்பிச்சுருச்சுல்ல மாமா? அப்போ நான் சேலைக் கட்டி ஊர் மக்கா எல்லாருக்கும் முன்னுக்க வந்தால் அவங்க எல்லாம் நமக்குக் குழந்தை பிறக்கப் போறதைச் சுளுவாக கண்டுபிடிச்சு நம்மளைக் கண்டபடி பேசுவாக தானே? அதை நினைச்சுத் தான் எனக்கு ரொம்ப வருத்தமாக இருக்கு மாமா”என்று அவனுக்குக் கம்மிய குரலில் பதிலளித்தாள் செந்தாழை.
அதைக் கேட்டுக் அவளைக் கனிவுடன் பார்த்து,”ம்ஹ்ம். அதுக்கு என்னம்மா பண்ண முடியும்? நம்மளைப் பத்தி நமக்குத் தெரியும் தானே? நாம என்னத் தவறான முறையிலேயா இந்தக் குழந்தையைப் பெத்துக்கப் போறோம்? முறையாக காதலிச்சுக், கல்யாணம் செஞ்சித் தானே குழந்தைப் பெத்துக்கப் போறோம்! அப்படி இருக்கும் போது நீ எதுக்கு அவங்க பேசுறதைப் பத்தி எல்லாம் கவலைப்பட்டுட்டு இருக்கிற? யாரு என்னப் பேசினாலும் அதைக் காதில் வாங்கிக்காதே! இப்போ கிளம்ப ஆரம்பி”என்று மனைவிக்குச் சமாதான வார்த்தைகளை உதிர்த்து அவளைத் தயாராகி வருமாறு அறிவுறுத்தி விட்டுத் தானும் கிளம்ப ஆரம்பிக்க,
அதற்குப் பின்னர் இரண்டு ஜோடிகளும் தங்களுக்குக் கொடுத்த நேரத்திற்கு உள்ளாகவே தயாராகி விட்டிருந்தார்கள்.
அதேபோல் அவர்களுக்குக் கொஞ்சமும் குறையாமல் தாங்கள் இருவரும் தங்களை நேர்த்தியாகத் தயார்படுத்திக் கொண்டு வந்தனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அப்போது தனது மனைவியின் அலங்காரத்தைக் கண்டு விழி விரித்துப் போய்,”இந்த விருந்து மட்டும் நடக்காமல் இருந்திருந்தால் இந்த அழகை எல்லாம் கடைசி வரைக்கும் எங்கிட்ட காட்டாமலேயே மறைச்சு வச்சிருந்து இருப்ப தானே?”என்று அவளிடம் குறைபட்டுக் கொண்டே பூவிழியின் இடையை அழுத்தமாக கிள்ளினான் திருவாதிரன்.
அதில் அவளோ,”ஸ்ஸ்! ஏங்க”என்று அவனைப் பொய்க் கோபத்துடன் முறைத்து விட்டுத் தனது வலித்த இடையைத் தடவிக் கொடுத்துக் கொண்டாள்.
உடனே அவளைத் தனது கரம் பற்றி இழுக்க அந்த எதிர்பாராத தாக்குதலில் தடுமாறி அவனது நெஞ்சில் மோதி விட்டிருந்தாள் பூவிழி.
அதை தனக்குச் சாதகமாக எடுத்துக் கொண்டு அவளது கன்னத்தில் அழுத்தமாக இதழைப் பதித்தான் திருவாதிரன்.
அதில் அவனைக் கண்கள் சொருகப் பார்த்தவளோ,”உங்களுக்கு இந்த நிறம் ரொம்ப அழகாகப் பொருந்தி இருக்கு!”என்று கணவனின் சட்டைப் பித்தானைத் திருகிக் கொண்டே அவனிடம் ரசனையாக மொழிய,
“ஓஹோ!”என்றவனோ,
அவளது இதழ்களைச் சிறை பிடித்துக் கொள்ள,
அதில் தானும் தனது ஒத்திசைவு அளிக்கும் விதமாக அவனது பின்னங்கழுத்தை தன் கரத்தால் அழுந்தப் பற்றிக் கொண்டாள் பூவிழி.
அவளது இசைவு இன்னும் தைரியத்தை அளிக்கவும்,
தனது இதழ்களை மெல்ல அவளது கழுத்திற்குக் கொண்டு வந்து அவ்விடத்தை முத்தங்களால் அர்ச்சிக்கலானான் திருவாதிரன்.
ஆனால் தாங்கள் இருவரும் வெகு நேரமாகத் தங்களது அறையை விட்டு வெளியே செல்லவில்லை என்பது புத்தியில் உறைக்க,
உடனே தனது கணவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டு,
“மிச்சத்தை ராவில் பார்த்துக்கலாம்ங்க. இப்போ கீழே போகலாமா?”என்றவளை வியப்புடன் ஏறிட்டான் கணவன்.
அதில் தனது இதழைக் கடித்துக் கொண்டு அவனைப் பார்த்து வெட்கத்தில் நெளிந்தாள் பூவிழி.
“ராவு வரைக்கும் என்னால் சும்மா இருக்க முடியுமான்னுத் தெரியலையே”எனப் பெருமூச்செறிந்தான் திருவாதிரன்.
அதற்குப் பிறகுத் தங்களது உடைகளைச் சரி செய்து விட்டுக் கூடத்தை அடைந்தார்கள் இருவரும்.
அவர்களது உடைகளின் நிற ஒற்றுமைகளையும், அவர்களின் முகங்கள் இரண்டும் பளபளப்பாக ஜொலிப்பதையும் கண்டு கொண்டனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அதே சமயம் தங்களது அறையிலிருந்து வெளிப்பட்டார்கள் அறிவொளியும், செந்தாழையும்.
அவர்களும் கூடத் திருவாதிரன் மற்றும் பூவிழியிடம் தெரிந்த மாற்றங்களைக் கவனித்து விட்டு ஆச்சரியம் அடைந்து போயினர் எனலாம்!
“என்னக்கா ரெண்டு பேரும் சொல்லி வச்சா மாதிரி ஓரே நிறத்தில் துணியை உடுத்தி இருக்கீங்களே? உன் புடவை நிறத்தைப் பார்த்துட்டுக் கொழுந்தனார் கடையில் போய்ச் சட்டையை வாங்கிட்டு வந்துட்டாரா?”எனத் தமக்கையிடம் பொறாமையுடன் கேட்டிருந்தாள் செந்தாழை.
அதில் மென்மையாகப் புன்னகைத்து விட்டு,”ம்ஹூம். இல்லைடி. இவர் கிட்ட ஏற்கனவே இந்தச் சட்டை இருந்துச்சு. இது என் புடவை நிறத்துக்குத் தோதாக இருக்கவும் அதையே உடுத்திக்கிட்டாரு”என்று அவளுக்குப் பதிலளித்தாள் பூவிழி.
உடனே,”நான் கடைக்குப் போய் எல்லாம் வாங்கலை. அதுவாகவே எங்களுக்கு அமைஞ்சிருச்சு!”என்று வேண்டுமென்றே அவளை இன்னும் பொறாமையில் பொங்கச் செய்யும் வகையில் அவளிடம் கூறினான் திருவாதிரன்.
“ஓஹ். அப்படியா விஷயம்?”என்றவளுக்கோ உள்ளம் கொதித்தது.
அதே நேரத்தில்,’இந்த யோசனை நமக்கு வராமல் போச்சே!’என மனதிற்குள் நொந்து கொண்டான் அறிவொளி.
ஆனால் இவர்களின் பேச்சுக்களைக் கேட்டுக் கொண்டிருந்த நஞ்சுண்டனும், ராஜகுமாரியும் தங்களுக்குள் நமுட்டுச் சிரிப்பைப் பரிமாறிக் கொண்டார்கள்.
சில நிமிடங்களிலேயே தனது முகத்தை இயல்பாக வைத்துக் கொண்டு,”விருந்து எப்போ ஆரம்பிக்கிறதா உத்தேசம் மாமா?”என்றிருந்தாள் செந்தாழை.
“ஆளுங்க எல்லாம் எப்பவோ வந்து சமைக்க ஆரம்பிச்சிட்டாங்கத்தா! இப்போ முக்கால்வாசி சமையல் முடிஞ்சு இருக்கும். அதனால் இன்னும் கால் மணி நேரத்தில் விருந்து சாப்பாடு தயாராகிடும்”என அவளிடம் தெரிவித்தார் நஞ்சுண்டன்.
“சரிங்க மாமா”எனக் கூறி விட்டு,
“எனக்குப் பசிக்குது. இப்போ ஒரு சூஸூ மட்டும் குடிச்சிக்கவா அத்தை?”என்று தன் மாமியாரிடம் அனுமதி வேண்ட,
“சரித்தா. நான் மாதுளை சூஸைப் போட்டுக் கொண்டு வரச் சொல்றேன்”என்றவரோ அங்கேயிருந்த வேலையாளிடம் அதைச் சொல்லி அனுப்பி வைத்தார் ராஜகுமாரி.
“நாம விருந்து நடக்கிற இடத்தைப் பார்த்துட்டு வருவோம். வா”எனத் தன் மனைவியிடம் கூறி அவளைத் தன்னுடன் அழைத்துக் கொண்டு அங்கேயிருந்து அகன்றான் திருவாதிரன்.
அதில் அறிவொளி மற்றும் செந்தாழையின் வயிற்றெரிச்சல் அதிகமாகி விடவும்,
அதை அணைக்கும் நோக்கத்துடன்,”எனக்கும் பசிக்குது. இரண்டு சூஸூகளைப் போட்டுச் சீக்கிரம் எடுத்தாரச் சொல்லுங்கம்மா”என்று தாயிடம் எரிச்சலுடன் அறிவுறுத்தினான் அறிவொளி.
அதில் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டு,”சரிடா”என்றுரைத்து விட்டு
மகன் கேட்டதைச் செய்து கொடுக்கச் சொல்லி வேலையாளுக்கு உத்தரவிட்டார் ராஜகுமாரி.
அதே வேளையில் தனது மனைவியுடன் விருந்திற்கானச் சமையல் வேலை நடக்கும் இடத்தை அடைந்து,”என்னென்ன சாப்பாடு எல்லாம் தயாராகி இருக்கு?”என அவர்களிடம் விசாரணை நடத்தினான் திருவாதிரன்.
அதற்கு அவர்களும் பவ்யமாகப் பதில் அளிக்கத் தொடங்கி விட,
தங்களது விருந்திற்காகச் செய்யப்பட்டு இருந்த அலங்காரங்களை எல்லாம் பார்த்தப் பூவிழியின் கண்களில் இருந்து கண்ணீர் உற்பத்தியாகி விட்டிருந்தது.
அதைக் கவனித்து விட்டு அவளிடம் விரைந்து சென்று,”என்னாச்சும்மா? விறகுப் புகையால் கண்ணு எரியுதா?”என அவளிடம் அக்கறையாக வினவினான் திருவாதிரன்.
“இல்லங்க. எனக்கு எங்க ஆத்தாவோட ஞாபகம் வந்துடுச்சு”என்று தொண்டைக் கமறப் பதிலளித்தாள் மனைவி.
அவளது அந்தப் பேச்சு அவனையும் வெகுவாகப் பாதித்து விடவும்,
“ம்ஹ்ம். உனக்குத் தாய்க்குத் தாயாக இருப்பேன்னு நான் சொல்ல மாட்டேன்! ஏன்னா, தாயோட இடத்தை யாராலும் நிரப்ப முடியாது! ஆனால் அவங்களுக்கு அடுத்தபடியாக நான் உன்னை நல்லா பார்த்துப்பேன்னு உனக்கு வாக்குத் தர்றேன்”என்றவனை நன்றிப் பெருக்குடன் பார்த்தாள் பூவிழி.
அதே சமயம் வீட்டிற்குள் இருந்த அறிவொளியும், செந்தாழையும் தங்களுக்குக் கொடுக்கப்பட்டு இருந்த பழசசாறுகளைப் பருகிக் கொண்டு இருந்தார்கள்.
“இன்னும் கொஞ்ச நேரத்தில் ஆளுங்க வர ஆரம்பிச்சுடுவாங்க. நாங்க ரெண்டு பேரும் விருந்து நடக்கிற இடத்துக்குப் போய் அவங்களை வரவேற்கிறோம்! நீங்கப் பொறுமையாக வந்தால் போதும்”என அவர்கள் இருவரிடமும் அறிவுறுத்தி விட்டு விருந்திற்காகப் பந்தல் போடப்பட்டு இருந்த இடத்திற்கு வந்தனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அதேபோல், தங்களது இளைய மகன் மற்றும் மருமகளை அங்கே வந்து சேருமாறு ஆளனுப்பி வரவழைத்து அவர்களையும் வரவேற்கும் இடத்தில் நிறுத்தி வைத்தார்கள் பெரியவர்கள் இருவரும்.
சிறிது நேரத்திலேயே அந்த விருந்திற்கு அழைத்திருந்த உறவினர்கள் ஒவ்வொருவராக வரத் தொடங்கவும் அவர்களிடம் சிரித்துப் பேசி அவர்களுக்கான இடத்தைக் காட்டி அமர வைக்கும் வேலையில் இறங்கினர்.
அப்போது அங்கே தாங்களும் வருகை தந்திருந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
அங்கே வாயிலிற்கு முன்னால் நின்று அனைவரையும் வரவேற்றுக் கொண்டிருந்த நஞ்சுண்டன், ராஜகுமாரி மற்றும் திருவாதிரன், பூவிழியைக் கண்டதுமே,
அவர்கள் நால்வரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும், தாங்கள் மட்டும் அவர்களிடத்தில் இருந்து தனித்துக் காணப்படுவதாகவும் எண்ணிக் கொண்டு அவர்களை ஆற்றாமையுடன் பார்த்து விட்டு அவர்களிடம் சென்றார்கள் இருவரும்.
இவர்களது வருகையை அறிந்தவுடன்,”வந்துட்டீயளா!”என்ற ராஜகுமாரியோ,
“இங்கே நின்னா செந்தாவுக்குக் களைப்பு வந்துடும். அதனால் அப்படி ஓரமாக ஒரு நாற்காலியில் உட்கார வச்சிட்டு எங்க கூட வந்து நில்லு அறிவு! இங்கே ஆள் பத்தலை!”என்று மூத்த மகனுக்கு வலியுறுத்தினார்.
அதைக் கேட்டு மேலும் அதிர்ந்து போய் விட்டாள் செந்தாழை.
ஆனாலும் அவரது வார்த்தைகளில் இருந்த நிதர்சனத்தைப் புரிந்து கொண்டுக் கணவனின் உதவியுடன் அங்கேயிருந்த நாற்காலியில் அமர்ந்து விட,
அவளிடம்,”நான் சாப்பிட்ற நேரத்தில் உங்கிட்ட வந்து சேர்ந்துடுவேன்ம்மா”என அவளிடம் ஆறுதலாக கூறி விட்டுத் தன் மற்றக் குடும்ப உறுப்பினர்களுடன் சென்று சேர்ந்து நின்று கொண்டான் அறிவொளி.
அதைப் பார்க்கையில், தான் மட்டும் அவர்களிடம் இருந்து தனித்து தெரிவதான மாயையை உருவாக்கிக் கொண்டு மனதளவில் நொடிந்து, சோர்ந்து போய் அமைதியாக உட்கார்ந்து விட்டிருந்தாள் செந்தாழை.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக