அவரது இந்த வார்த்தைகள் இன்னும் தைரியம் அளிக்கவும் பூவிழியை எவ்வளவு வேண்டும் என்றாலும் கொடுமைப்படுத்தலாம் என்ற தைரியம் உருவானது முருகையனுக்கு.
அதனாலேயே அந்த நாள் முழுவதும் பூவிழியைக் கவனிக்கத் தொடங்கி விட்டார்.
அதேபோல் எப்பொழுதும் போலவே அவளுக்கு அளவுக்கதிகமான வேலைகளைக் கொடுத்து அவளைப் படுத்தி எடுத்து விட்டிருந்தார்.
அன்றைய இரவு நேரத்தில் தனது குளியலை முடித்துக் கொண்டுக் கட்டிலில் வந்து அமர்ந்த மனைவியிடம்,
“எங்கிட்ட ஏதாவது சொல்லனுமா விழி?”என்று அழுத்தமாக வினவினான் திருவாதிரன்.
அப்பொழுதும் கூட,”இல்லங்க”என்றவளிடம்,
“உனக்குத் தூக்கம் வருது. அதனால் தூங்கப் போற! அப்படித் தானே?”என்றிருந்தான்.
“ம்ஹ்ம்” எனப் பதிலளித்தாள் பூவிழி.
“நீயா விஷயத்தைச் சொல்ற வரைக்கும் நானாக உங்கிட்ட எதையும் கேட்கப் போவதில்லை! ஆனால் எனக்கு உன்னை ரொம்ப பிடிச்சிருக்கு! எனக்கு உங்கிட்ட புருஷனாக உரிமை எடுத்துக்கனும்னு ரொம்ப ஆசையாக இருக்கு! ஆனால் உன் விருப்பம் இல்லாமல் என்னால் அதையெல்லாம் யோசிச்சுக் கூடப் பார்க்க முடியலை! அதனாலேயே சீக்கிரம் உனக்கு இருக்கிற பிரச்சினையை சரி பண்ணிட்டு உனக்கு என் மேல் காதல் வர்றதுக்கான முயற்சியை எடுக்கிறேன்!”என்று உறுதியாக உரைத்து இருந்தான் திருவாதிரன்.
“அதெல்லாம்…”என்று ஆரம்பித்த பெண்ணவளிடம்,
“அம்மா தாயே! உங்க கடமை உணர்ச்சிக்கு ஒரு அளவே இல்லையா? அப்படியெல்லாம் கடமைக்கு என் பொண்டாட்டி கூட ஒன்னு சேரனும்னு எனக்கு விருப்பம் கிடையாது! ஆனால் நீ இவ்வளவு சொல்வதால் எனக்கு எதுவும் செய்யாமல் இருக்கவும் முடியலை! அதனால்…”என்றவனோ,
மனைவியின் கரத்தைப் பிடித்து இழுத்து அவளது இதழ்களைத் தன் இதழ்களால் கொய்து விடவும்,
அதை சற்றும் எதிர்பாராமல் அவனது சட்டையை நடுக்கத்துடன் பற்றிக் கொண்டாள் பூவிழி.
உடனே சட்டென்று அவளது இதழையும், அவளையும் தன்னில் இருந்து பிரித்தெடுத்து விட அவளோ அதற்குக் காரணம் என்னவென்று தெரியாமல் விழிக்க,
“இப்போ என்னோட சட்டையைப் பிடிச்சி இருந்தியே? அதை விட இன்னும் இறுக்கிப் பிடிச்சுக்கோ விழி! அப்போ தான் நான் உன் கூட எப்பவும் இருப்பேன்ற நம்பிக்கை உனக்கு எப்பவுமே இருக்கும்!”என்று அவளிடம் அழுத்தமாக மொழிந்து விட்டு மீண்டும் அவளது இதழில் தன் இதழைப் பதித்து விட,
இப்போது தன்னவன் கேட்டுக் கொண்டவாறே அனிச்சையாக அவனது சட்டையை இன்னுமின்னும் இறுக்கிப் பிடித்துக் கொண்டாள் பூவிழி.
அதில் அவனுக்குமே உடல் முழுவதும் மின்சாரம் பாய்ந்ததைப் போலாகி விடவும்,
அவளது இதழ் தேனைப் பருகுவதை நிறுத்தும் வேலையை மறந்து விட்டிருந்தான் திருவாதிரன்.
சிறிது நேரத்திற்குப் பின் தன் மனைவி மூச்சிற்காகத் தவிப்பதைப் புரிந்து கொண்டு அவளை விட்டு விலக,
உடனே அவனிடம்,”நான் கறுப்பாக இருக்கேன்! அப்படி இருக்கும் போது உங்களுக்கு எப்படி என் மேல் இந்தளவுக்குக் காதல் வந்துச்சு? ஒருவேளை இது காதல் இல்லாமல் வேற ஏதாவது உணர்வா என்ன?”என்றவளைக் கண்களில் கனல் கக்கப் பார்த்து விட்டு,
“ஏன் இப்படி பூசி, மொழுகி கேட்கிற? உங்களுக்கு என் உடம்பு மேலே தானே ஆசைன்னுப் பட்டுன்னு எம்மூஞ்சியில் அடிச்சா மாதிரி கேட்க வேண்டியது தானேடி?”என்று கேட்டு விட்டு அவளைக் கோபமாக முறைத்தான் திருவாதிரன்.
அதில் தனது முகம் சுருங்க, அழுகையை இதழ்களுக்குள்ளேயே அடக்கிக் கொண்டு அவனை மிகவும் வலி நிறைந்த பார்வையுடன் நோக்கினாள் பூவிழி.
“என்ன விட்டால் ஓவராகப் பேசுற? என் கண்ணுக்கு நீ கருப்பாகத் தெரியலைடி! ஒரு சதையும், ரத்தமும் உள்ள மனுஷி மாதிரியும், தனக்காகத், தான் மட்டும் தான் இருக்கோம், அதனால், தனக்குத் தேவையானதை, தான் தான் செஞ்சிக்கனும்னு தன்னம்பிக்கையோடவும், கண்ணியமாகவும் தான் தெரியுற! ஆனால், உனக்கு நான் எப்படிப்பட்டவனாகத் தெரியுறேன்னு இப்போ நீ சொன்ன வார்த்தைகளை வச்சுத் தெரிஞ்சிக்கிட்டேன்! ரொம்ப நன்றி!”என்று அவளிடம் தனது ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்து விட்டு அவளுக்கு முதுகு காட்டிப் படுத்து விட்டான் கணவன்.
ஆனால் அவனது முதுகை வெறித்துக் கொண்டே இருந்த பூவிழிக்கு உறக்கம் தொலைதூரத்திற்குச் சென்று விட்டிருந்தது.
அதனாலேயே காலையில் தாமதமாக எழுந்து தயாராகி வந்தவளை வரவேற்றது என்னவோ ராஜகுமாரியின் குற்றம் சாட்டும் பார்வை தான்!
அதேபோல்,”வர, வர மாமியார் கழுதை போல ஆனாளாம்ன்ற மாதிரி எவ்வளவு தாமசமா எழுந்து வர்றாள் பாருங்க!”என அவளது காதுபடவே தன் கணவரிடம் சொல்லிச் சலித்துக் கொண்டார்.
அதில், தான் நின்றிருந்த இடத்தில் இருந்து அசையவில்லை பூவிழி.
ஆனால் அவளுக்குப் பின்னாலிருந்து,”இன்னைக்கு ஒருநாள் தாமசமாக எழுந்தால் வானம் இடிஞ்சு விழுந்துடாது! வந்து சாப்பிடு. வேலைக்குக் கிளம்பனும்ல?”என அவளிடம் எள்ளலாக கேட்டு விட்டுச் சாப்பாட்டு மேசைக்கு வந்தமர்ந்தான் திருவாதிரன்.
ஆனால் அவனது பேச்சுத் தனது மனதில் சுருக்கென்று தைத்து விட்டதால்,
“எனக்குப் பசிக்கலைங்க. நீங்களும், மாமாவும் சாப்பிட்டுட்டு வர்ற வரைக்கும் நான் காத்திருக்கேன்”என்று நாற்காலியில் அமர்ந்து கொள்ளாமல் தரையில் உட்கார்ந்து கொண்டாள் பூவிழி.
அப்போது அங்கே வந்த அறிவொளியும், செந்தாழையும் இந்தக் காட்சியை அலட்சியத்துடன் நோக்கி விட்டுச் சாப்பிட அமர்ந்தார்கள்.
சிறிது நேரத்திலேயே அனைவரும் சாப்பிட்டு முடித்து விட்டதும்,”நீ சாப்பிடலையா அக்கா?”எனத் தமக்கையிடம் வினவினாள் செந்தாழை.
“ம்ஹூம். பசிக்கலை”என்றிருந்தாள் பூவிழி.
“எதையாவது வயித்துல போட்டுட்டுப் போய் வேலையைப் பாருக்கா! இல்லைன்னா அங்கே போய் மயக்கம் போட்டு விழுந்து தான் கெடப்ப”என்று அவளுக்கு அறிவுறுத்தினாள் இளையவள்.
“அதெல்லாம் நான் சமாளிச்சுக்குவேன்”என்றவளிடம்,
“நான் சொல்வதை சொல்லிட்டேன். அப்பறம் உன் இஷ்டம்”என்று விட்டேற்றியாக உரைத்து விட்டாள் செந்தாழை.
ஆனால் அவளை ஒரு தடவைக் கூட உணவருந்துமாறு அறிவுறுத்தவில்லை அவளது மணாளன்.
அதிலேயே மனம் சோர்ந்து போய் விட்டவளுக்கோ சுற்றி நடக்கும் வேறெதுவும் கருத்தில் பதியவில்லை!
“நாம சாப்பிட்டாச்சுல்லப்பா? அப்பறம் என்ன? கிளம்பலாம்”என்றத் திருவாதிரனைப் பூவிழியைத் தவிர மற்ற அனைவருமே ஆச்சரியமாக நோக்கினர்.
ஆனால் அவர்களது பார்வைகளைத் துச்சம் செய்து விட்டு,”நாங்கப் போயிட்டு வர்றோம்”என்று பொதுவாக உரைத்து விட்டு வீட்டிலிருந்து வெளியேற, தானும் வேக நடையைப் போட்டு அவனுடன் சேர்ந்து நடந்தார் அவனது தந்தை.
ஆனால் காலைக் காப்பியை மட்டும் குடித்து இருந்ததால் காலியான வயிற்றுடன் தானும் வீட்டின் வாசலைக் கடந்து சென்று ஜீப்பில் ஏறி அவர்கள் இருவருடன் இணைந்து காட்டிற்குப் பயணமானாள் பூவிழி.
அப்பொழுதும் கூட அவளைக் கண்டு கொள்ளாமல் இருந்த மகனைக் கண்டு யோசனையில் லயித்துப் போனார் நஞ்சுண்டன்.
ஆனால் இறுகிய முகத்துடன் தன் மனைவியின மீதிருந்த கடுப்பைக் காட்டும் விதமாகத் தான் ஓட்டிக் கொண்டிருந்த வாகனத்தை மிகவும் வேகமாக இயக்கினான் திருவாதிரன்.
அதில் தனக்கு வயிற்றைப் பிரட்டிக் கொண்டு வரவும்,”ஏங்க! கொஞ்சம் மெதுவாகப் போங்க! எனக்கு வயித்தை என்னமோ பண்ணுது!”என அவனிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டாள் பூவிழி.
அதற்கு,”ம்ஹ்ம்”என்று மட்டும் கூறி விட்டு வண்டியைச் சீரான வேகத்தில் செலுத்தி தங்களது காட்டினுள் கொண்டு வந்து நிறுத்தினான்.
உடனே அதிலிருந்து இறங்கியதுமே தலை சுற்றத் தொடங்கினாலும் கூடத் தன்னைச் சமநிலைப்படுத்திக் கொண்டு முருகையனிடம் சென்று தனக்கான வேலை என்னவென்று கேட்டு விட்டு அதைச் செய்யத் தொடங்கி விட்டாள் பூவிழி.
அவளை ஆயாசமாகப் பார்த்து விட்டுத் தந்தையை அழைத்துக் கொண்டு அலுவலக அறைக்குள் நுழைந்தான் திருவாதிரன்.
“ஏன் திரு! உனக்கும், மருமவளுக்கும் இடையில் ஏதாவது மனஸ்தாபமா?”என்று அவனிடம் இலேசாக நூல் பிடித்துக் கேட்டார் நஞ்சுண்டன்.
ஆனால் அவரது புத்திரனோ அவரை விடப் புத்திக்கூர்மை உடையவன் ஆயிற்றே?
அதனாலேயே,”அதெல்லாம் ஒன்னும் இல்லப்பா. அவளுக்குத் தான் இங்கே இருக்கப் பிடிக்கலையே? அதனால் தான், சாப்பிட்றதுக்கும், தூங்குறதுக்கும் சண்டித்தனம் பண்றாள். அதான், கொஞ்ச நாள் விட்டுப் பிடிக்கலாம்னு நினைச்சு அவளை அவப் போக்கில் விட்டு வச்சிருக்கேன்!”என்றுரைத்து விட்டான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும், நஞ்சுண்டனின் முகம் சுணங்கிப் போய் விட்டது.
“ஓஹோ சரி”எனச் சொல்லி விடவும்,
வேலையாள் ஒருவனை அழைத்து தன் வீட்டிலிருந்து ஒரு ஆள் உண்ணும் அளவிற்கு உணவைப் பாத்திரத்தில் போட்டுத் தருமாறு கேட்டு வாங்கி வரச் சொல்லி அனுப்பி வைத்தான் திருவாதிரன்.
அதில் அவனுக்குத் தன் மனையாளுடன் மீது எந்த வித மனக்கிலேசமும் இல்லை என்பதை ஊர்ஜிதப்படுத்திக் கொண்டார் நஞ்சுண்டன்.
அதே நேரத்தில்,”என்ன இவங்க ரெண்டு பேரும் என்னைக்கும் இல்லாமல் இன்னைக்கு இப்படி விநோதமாக நடந்துக்கிறாக! என்னத்தைச் சங்கதி? உங்களுக்கு ஏதாச்சும் தெரியுமா?”என்று தன் மாமியாரிடம் வினவினாள் செந்தாழை.
“யாருக்குத் தெரியும்! அதுக ரெண்டும் கூடத்துக்கு வரும் போதே மூஞ்சியை உர்ருன்னுத் தான் வச்சிட்டு வந்துச்சுக! உங்கக்கா காப்பித் தண்ணியை மட்டும் தான் குடிச்சிட்டுப் போயிருக்கா! எப்போ மயங்கி விழப் போறாளோ தெரியலை!”என்று கூறி அவளிடம் நொடித்துக் கொண்டார் ராஜகுமாரி.
“அவங்க ரெண்டு பேருக்கு இடையிலே ஏதாவது பிரச்சினை ஆகி இருக்குமோ?”என்றவளிடம்,
“அதையெல்லாம் நீங்க ரெண்டு பேரும் ஏன் யோசிக்கிறீங்க? அவங்களுக்குள்ளே என்னமோ நடந்துட்டுப் போவுது! நீங்க சும்மா இருங்க!”எனத் தன் மனைவிக்கும், தாய்க்கும் அறிவுரை வழங்கினான் அறிவொளி.
உடனே,”அதுவுஞ் சரி தான்டா! என்னோட கால் வலிக்குத் தடவுற மருந்தை அறையிலேயே வச்சிட்டு வந்துட்டேன்! நீ போய் அதை எடுத்துட்டு வர்றியா?”என்று அவனிடம் வேண்டிக் கேட்டார் ராஜகுமாரி.
“இதோ போய் எடுத்துட்டு வர்றேன்ம்மா”என்றவனோ உடனே எழுந்து சென்று அவரது அறையை நோக்கிப் போய் விட,
“இனிமேல் இவனை வச்சிட்டு நாம இதையெல்லாம் பேசக் கூடாது செந்தா! அப்பறம் எரிச்சல் வந்து நம்மளைக் கத்தி விட்டாலும் விட்ருவியான்!”என்று மருமகளுக்கு அறிவுறுத்தினார் மாமியார்.
“சரிங்கத்தை”என்று தானும் அதற்கு கூறியதற்கு ஒப்புக் கொண்டாள் செந்தாழை.
அப்போது வீட்டிற்கு வந்து அவன் சொல்லி விட்டதை அவர்கள் இருவரிடமும் தெரிவித்து விட்டுக் காத்திருந்தான் திருவாதிரன் அனுப்பி வைத்த வேலையாள்.
அதைக் கேட்டவுடன் மாமியாரும், மருமகளும் தங்களை ஒருவரையொருவர் புருவத்தை உயர்த்திப் பார்த்துக் கொண்டனர்.
அதே சமயம் தன் அன்னையின் மருந்தை எடுத்துக் கொண்டு அங்கே பிரசன்னமான அறிவொளியிடமும் தனது வரவிற்கான காரணத்தை உரைத்தான் அந்த வேலையாள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக