சிறிது நேரத்தில் தங்களது வீட்டை அடைந்ததும் உள்ளே சென்றனர் நஞ்சுண்டன், திருவாதிரன் மற்றும் பூவிழி.
அவர்களை வரவேற்று சாப்பாட்டு மேசைக்கு அமர வைத்தார் ராஜகுமாரி.
அப்போது தாங்களும் உணவருந்த வந்து உட்கார்ந்தனர் அறிவொளி மற்றும் செந்தாழை.
அவர்கள் அனைவருக்கும் தட்டுக்களை வைத்து அவற்றில் உணவைப் பரிமாறினார்கள் வேலையாட்கள்.
“ஆஸ்பத்திரியில் டாக்டரு என்னச் சொன்னாங்க? குழந்தையோட ஆரோக்கியம் எப்படி இருக்காம்?”எனத் தன் மூத்த மகன் மற்றும் மருமகளிடமும் வினவினார் நஞ்சுண்டன்.
உடனே,”குழந்தை ரொம்ப ஆரோக்கியமாக இருக்காம் மாமா! ஆனால் என்னைத் தான் ஓய்வு எடுக்கச் சொல்லி இருக்காங்க. அதிகமாக வேலை பார்க்கக் கூடாதுன்னுச் சொல்லி இருக்காங்க. நல்லா சத்தானதாகச் சாப்பிடச் சொல்லி இருக்காங்க!”என்று அவரிடம் விளக்கமாக கூறினாள் செந்தாழை.
அதைக் கேட்டதும்,”ம்ஹ்ம். சரித்தா. அவங்க சொன்னதை எல்லாம் தவறாமல் செய்”என்றவரோ,
“நீ உம்பொண்டாட்டிக்கு என்னத் தேவை இருந்தாலும் அதைச் செஞ்சிக் கொடு”என்று மூத்த மகனுக்கு வலியுறுத்தினார் நஞ்சுண்டன்.
அவரோ அந்தப் பேச்சு வார்த்தையை அத்துடன் முடித்துக் கொண்டாலும் அப்போதும் கூடத் தன் வாய் ஓயாமல் மருத்துவமனையில் இருந்து வெளியேறி அதற்குப் பிறகுத் தானும், கணவனும் சென்ற இடங்களைப் பற்றியும், அங்கே வாங்கிய பொருட்களைப் பற்றியும் அனைவரிடமும் கர்வமாக சொன்னவாறே தான் உணவை உண்டு கொண்டிருந்தாள் செந்தாழை.
சற்று நேரத்திற்கு முன்பு தான் இந்த விஷயங்களை எல்லாம் தன் மாமியாரிடம் வெளிப்படுத்திய தன்னுடைய கணவனை மனதிற்குள்ளேயே வறுத்து எடுத்து இருந்தவளோ, இப்போதோ,'அது தான் தாங்கள் ஊரைச் சுற்றிய விஷயங்கள் எல்லாமே மாமியாருக்கே தெரிந்து விட்டதே? அவர் மூலமாக எப்படியும் அனைவருக்கும் தெரியத் தான் போகிறது! அதனாலேயே இப்போது சங்கடம் இன்றி அனைத்தையும் மற்றக் குடும்ப உறுப்பினர்களிடம் பகிர்ந்து கொள்ளவும்,
அதையெல்லாம் வேண்டா வெறுப்பாக கேட்டுக் கொண்டிருந்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
அதே நேரத்தில் தனது மனைவியின் பேச்சை ரசித்துப் பார்த்துக் கொண்டே உணவருந்தினான் அறிவொளி.
காலையிலிருந்து காட்டில் அதீத வேலை செய்த காரணத்தினால் மிகவும் பசி எடுத்திருந்ததால் இப்போது உணவை வேகவேகமாக விழுங்கிக் கொண்டிருந்தாள் பூவிழி.
அதைக் கவனித்துக் கொண்டே தனது உணவை உண்டு கொண்டிருந்ததால் தானும் தனது பெற்றோர், தமையன் மற்றும் அவனது மனைவியின் பேச்சைக் கருத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.
அதனாலேயே இனிமேல் இந்தப் பேச்சைத் தொடர்ந்தால், தனக்குத் தான் களைப்பு உண்டாகி விடும் என்றெண்ணிக் கொண்டுத் தனது வாய்க்குப் பூட்டுப் போட்டுக் கொண்டு உணவைச் சாப்பிட்டாள் செந்தாழை.
அதை அவதானித்து விட்டு,’இப்போதாவது தன்னோட பகுமானப் பேச்சை நிப்பாட்டுனாளே!'என்ற நிம்மதியுற்றனர் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
சில நிமிடங்களுக்குப் பிறகு உணவருந்தி முடித்ததும் தத்துமது வேலையைப் பார்க்கச் சென்று விட்டார்கள்.
தங்களது காட்டிற்கு வந்து சேர்ந்திருந்த திருவாதிரனோ,”அப்பா! இன்னைக்கு முழுக்க நானே காட்டை மேற்பார்வைப் பார்த்துக்கிறேன். நீங்க அலுவலக அறையில் ஓய்வெடுங்க”என்று தனது தந்தைக்கு அறிவுறுத்தவும்,
“சரிப்பா”என்றுரைத்து விட்டு அதைச் செயல்படுத்தினார் நஞ்சுண்டன்.
அதே சமயம், அங்கேயிருந்த அனைவரையும் வேலை ஏவிக் கொண்டிருந்த முருகையனை அவருக்குத் தெரியாமலேயே அவர் தன் மனைவியிடம் அவர் எப்படி நடந்து கொள்கிறார் என்பதையும், அவளுக்கு எப்படியான வேலைகளைச் செய்யுமாறு பணிக்கிறார் என்பதையும் தனது கழுகுப் பார்வையால் கவனித்துக் கொண்டு இருந்தான் திருவாதிரன்.
அதே மாதிரி, தான் அவரைக் கண்காணிப்பதை அங்கேயிருந்த யாருக்கும் தெரியாமல் பார்த்துக் கொண்டான்.
நஞ்சுண்டனின் கட்டளைக்கு இணங்கிப் பூவிழிக்குக் கடுமையான வேலைகளைக் கொடுத்திருந்த முருகையாவோ,
இவனது வரவை அறிந்ததுமே வழக்கம் போல் வணக்கம் வைக்கவும்,
அதற்குத் தலையசைத்து விட்டு,“நீங்க அப்படி வாங்க. நான் உங்ககிட்ட கொஞ்சம் தனியாகப் பேசனும்”என்று அவரிடம் அறிவுறுத்தினான் திருவாதிரன்.
அதில் தனது அடிவயிற்றில் கலக்கம் உண்டானாலும்,”சரிங்க ஐயா”என்று அவனைப் பின் தொடர்ந்தார் முருகையா.
அவர்கள் இருவரும் அங்கேயிருந்த மரத்தின் நிழலில் நின்று கொண்டு,”யார், யாருக்கு என்னென்ன வேலைகள் கொடுத்து இருக்கீங்கன்றதை எங்கிட்ட சொல்லுங்க! இல்லைன்னா, அதைக் குறிச்சு வச்சிருக்கிற நோட்டை எடுத்துட்டு வாங்க”என்று அவருக்கு வலியுறுத்தவும்,
அதைக் கேட்டதும் விழி பிதுங்கிப் போய் விட்டவரோ அவனது ஆணையை மறுக்கும் இடத்தில் தான் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு,”நோட்டில் தான் குறிச்சி வச்சிருக்கேன் ஐயா! அது அலுவலக அறையில் தான் இருக்கு”எனத் திக்கித் திணறிக் கூற,
“அப்போ வாங்க”என்று அழுத்தமாக உரைத்தான் திருவாதிரன்.
உடனே இருவரும் இணைந்து அலுவலக அறைக்குள் நுழையவும்,
அவர்களைக் கண்டதும்,”என்னாச்சு?”எனக் கேட்டிருந்தார் நஞ்சுண்டன்.
உடனே தந்தையிடம் விஷயத்தை தெரிவித்தான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். சரி பாருங்க”என்றுரைத்து விட்டு அவர்களுக்கு எதிரில் இருந்த நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டு,
தன் மகனுக்கு அருகில் வியர்த்து வழிந்து, நடுங்கிக் கொண்டு நின்றிருந்த முருகையனிடம் எதுவும் சொல்லி அவரது பயத்தைப் போக்க முடியாமல் அவர்கள் இருவரையும் அமைதியாக கவனிக்கத் தொடங்கி விட்டார் நஞ்சுண்டன்.
முருகையன் சொன்ன குறிப்பேட்டை எடுத்து அதில் காட்டில் வேலை செய்யும் வேலையாட்களுக்கு அன்றைய தினம் என்னென்ன வேலைகள் கொடுக்கப்பட்டுள்ளது என்பதை எதேச்சையாகப் பார்ப்பதைப் போல் வெளியே காட்டிக் கொண்டு, அந்தக் குறிப்பேட்டில் தன் மனைவிக்குக் கொடுக்கப்பட்டிருந்த வேலைகளை எல்லாம் மற்ற இருவருக்கும் தெரியாமல் ஆராய்ந்து பார்க்கவும்,
அதில் மற்றப் பெண்களை விடப் பூவிழிக்கு அதிகமான வேலைகள் கொடுக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அவனது கண்கள் கோபத்தில் சிவந்து போயிற்று.
அதை மற்ற இருவரும் கவனிக்காமல் மறைத்துக் கொண்டுக் குறிப்பேட்டை மூடி வைத்து விட்டு,”எல்லாம் சரியாக இருக்கு”என்று முருகையனிடம் கூறி விட்டுத், தான் உட்கார்ந்திருந்த நாற்காலியில் இருந்து எழுந்து காட்டை மேற்பார்வையிடும் பணியை மீண்டும் தொடர்ந்தான் திருவாதிரன்.
அவன் சென்றதும்,”என்ன ஐயா? சின்ன ஐயா இப்படி சொல்லிட்டுப் போறாரு? அப்படின்னா நான் அவரோட பொஞ்சாதிக்கு எவ்வளவு வேலை வேணும்னாலும் கொடுக்கலாம்னு மறைமுகமாகச் சொல்லிட்டுப் போறாரா என்ன?”என்று நஞ்சுண்டனிடம் வினவினார் முருகையன்.
“அப்படியும் இருக்கலாம்”என மகன் தங்களை மறைமுகமாக ஊக்குவிக்கிறானோ என்றச் சந்தேகம் எழுந்தது.
ஆனாலும்,”அவன் என்ன தான் அப்படி சொன்னாலும் அவனுக்குத் தெரியாமலேயே எல்லாம் நடக்கனும் முருகையா! ஏன்னா, எம்மவன் ரொம்பப் புத்திசாலி! அதனால் நாம செய்றதை எல்லாம் அவன் கண்டுபிடிக்காத மாதிரி செய்யி!”என்று அவருக்கு அழுத்தமாக அறிவுறுத்தினார் நஞ்சுண்டன்.
இதே சமயம் வெளியே வந்து அங்கு வேலை செய்து கொண்டிருக்கும் பூவிழியைக் கடுமையாக முறைத்துப் பார்த்தான் திருவாதிரன்.
இவ்வளவு வேலைகளையும் இவள் ஒரு ஆளாகச் செய்தாலும் கூடத் தன்னிடம் ஒரு வார்த்தைக் கூட இதைப் பற்றிச் சொல்லாமல் விட்டிருக்கிறாளே என்ற ஆதங்கமும் அவள் மீது உண்டானது.
அவளுக்கு இப்படி அதிக வேலைகள் கொடுத்து அவளது உடலில் இருக்கும் சக்திகள் அனைத்தையும் உறிஞ்சி எடுக்கும் அந்த மேற்பார்வையாளரைப் பற்றித் தன்னிடம் முதலிலேயே சொல்லி இருந்தால், தான் அவரை உண்டு, இல்லைன்னுச் செய்திருப்பேனே! ஆனால் எதையும் கூறாமல் முருகையன் ஒதுக்கித் தந்திருந்த பணிகளை எல்லாம் ஒரு இயந்திர மனிதியைப் போல் கண்ணுங், கருத்துமாகச் செய்து கொண்டிருப்பவளிடம் பேசிப் பார்த்தாலும் பயன் கிடைக்கப் போவதில்லை திருவாதிரனுக்கு!
அதனால் இந்த விஷயத்தை தனது பாணியில் கையாள முடிவெடுத்து விட்டிருந்தான்.
அதேபோல் அன்றிரவும் தனது அருகில் தன்னை மறந்து உறங்கிக் கொண்டு இருக்கும் பூவிழியின் நெற்றியில் மென்மையாக முத்தமிட்டு,
“காட்டில் அந்த முருகையன் உனக்கு எவ்வளவு வேலை கொடுத்தாலும் அதையெல்லாம் மறுக்காமல் செஞ்சிட்டு இருக்கிறியே! நீயெல்லாம் மனுஷியா? இல்லைன்னா எந்திரமா? முதல்ல அவனைக் கவனிச்சிட்டு அதுக்கப்புறம் உன்னைப் பார்த்துக்கிறேன்!”என அவளது முகத்தைப் பார்த்து அழுத்தமாக முணுமுணுத்து விட்டுத் தானும் உறங்கிப் போனான் திருவாதிரன்.
அதே சமயம்,”ஏங்க மாமா! நான் இன்னைக்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கேன் தெரியுமா?”என்ற மனைவியிடம்,
“நானும் தான்ம்மா”எனக் கூறி அவளது வயிற்றில் மென்மையாக முத்தமிட்டிருந்தான் அறிவொளி.
உடனே தனது முகத்தைச் சுருக்கிக் கொண்டு,”நான் இன்னைக்கு நாம ரெண்டு பேரும் மட்டும் ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு அப்படியே அங்கே இருக்கிற இடங்களை எல்லாம் சுத்திப் பார்த்ததில் சந்தோஷமாக இருக்கேன்னுச் சொன்னேன்ங்க. ஆனால் நீங்க நம்மக் குழந்தை வந்ததும் நானஅ என்னச் சொல்றேன்றதையே புரிஞ்சிக்கலை! அப்படித் தானே?”என அவனிடம் கோபித்துக் கொண்டாள் செந்தாழை.
அதில் உருகிப் போய்,”ஏய்! நானும் அதை தான் சொன்னேன்ம்மா!”என்று அவளிடம் சொல்லிச் சமாதானம் செய்ய முயற்சிக்க,
அவளோ,”ம்ஹூம்! நீங்க எனக்காக ஒன்னும் பொய் சொல்ல வேண்டாம் மாமா! நாம ஆஸ்பத்திரிக்குப் போயிட்டு வந்ததில் இருந்து உங்களுக்கு நம்மக் குழந்தை மேலே மட்டும் தான் பாசம் இருக்கு! ஏன் மேலே இருந்த பாசம் எல்லாம் போயிடுச்சு மாமா”என்று அவனிடம் குறைபட்டுக் கொண்டாள் மனைவி.
“அச்சோ! ஏன் செந்தாவுக்கு ஏன் இப்படியெல்லாம் யோசனை வருது? நீ நல்லாத் தானேம்மா இருந்த? உனக்குத் திடீர்னு என்னாச்சு? ஏன் இந்த மாதிரி எல்லாம் பேசுற?”என்று அவளைத் தனது தோளில் சாய்த்துக் கொண்டுக் கேட்டிருந்தான் அறிவொளி.
“பின்னே என்னங்க மாமா? உங்களுக்கு என் மேலே பாசம் இருந்திருந்தால் நீங்க எனக்குத் தானே முதல் முக்கியத்துவம் கொடுக்கனும்? அதை விட்டுட்டு நம்மக் குழந்தையை மட்டும் கொஞ்சுறீங்களே! அது நியாயமா?”என வெகுளியாக கேட்பதைப் போல் அவனது மனதில் தனக்கான முதல் இடத்தை தக்க வைத்துக் கொள்வதற்கான வேலையில் இறங்கினாள் செந்தாழை.
“அப்படியெல்லாம் எதுவும் இல்லம்மா. என்ன தான், எனக்கு நம்மக் குழந்தை முக்கியமாக இருந்தாலும் நான் முதல் முன்னுரிமை உனக்கு மட்டும் தான் கொடுப்பேன் செந்தா! நாம இன்னைக்கு ரொம்ப நேரம் வெளியே அலைஞ்சிட்டோம். அதனால் இப்போ படுத்துத் தூங்கலாம்!”என்று அவளைச் சமாதானப்படுத்தி நித்திரை கொள்ள வைத்து தானும் அவளை அணைத்துக் கொண்டுப் படுத்து விடவும்,
அடுத்த நாள் தனது விசுவாசமான வேலையாட்களைத் தனியாகச் சந்தித்து,”அந்த முருகையனோட ஒவ்வொரு அசைவையும் யாருக்கும் தெரியாமல் கண்காணிங்க! அதுவும் அவர் நான் இல்லாதப்போ காட்டில் யார், யாருக்கு என்னென்ன வேலைகள் தர்றார்? எல்லார்கிட்டேயும் எப்படி நடந்துக்கிறார்? எம்பொண்டாட்டி கிட்டே எப்படி பேசுறார்? அவகிட்டே எப்படி நடந்துக்கிறார்ன்றதை எல்லாம் தெரிஞ்சிக்கிட்டு எனக்குத் தினமும் தகவல் சொல்லுங்க!”என அவர்களுக்கு அறிவுறுத்தி அனுப்பி வைத்தான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக