அவர்கள் அவ்விடம் விட்டுச் சென்றதும், தங்களது திருமணத்தைப் பற்றிய அறிவிப்பைக் கொடுக்க, வந்து அமர்ந்தனர் கிஷானும், முக்தாவும்.
அனைவருக்கும் வணக்கம் வைத்தவர்கள் பேச ஆரம்பிக்கும் முன்னர்,"உங்க கல்யாணமும் கூடிய விரைவில், நடக்கப் போகுது, அதைப் பத்தி சொல்லுங்க சார்" என்றான் ஒரு பத்திரிக்கையாளன்.
"யெஸ்!" என்று இருவரும் புன்னகைத்தனர்.
"முக்தா மேடம்!" என ஆரம்பித்தவரின் மீது கவனம் பதித்தாள்.
அவளை விடவும் கூரியப் பார்வையைக் கொண்டு இருந்தான் கிஷான்.
"ம்ம்… சொல்லுங்க சார்" என்று பதில் சொல்லத் தயாரானாள் முக்தா.
"நீங்களும், மிஸஸ்.மௌனா மேடமும் ஃப்ரண்ட்ஸ்ஸா?" என்று எடுத்தவுடனேயே இப்படியான கேள்வியை முன் வைத்தான்.
"ஆமாம். அதான் அவங்களே சொல்லிட்டாங்களே!" என்று சிரித்தாள்.
"ஆனால், அதுக்கு முன்னாடி, அவங்களைத் தாக்கினதுக்காக, உங்களை ஜெயிலுக்கு அனுப்பி வச்சாங்களே! அதைப் பத்தி சொல்லுங்க" என்று முக்தாவின் வாயைக் கிளறினார்கள்.
அந்தக் கேள்வியில், கோபத்தில் தன் கை முஷ்டியை மடக்கிக் கொண்டான் கிஷான்.
"யூ ஆர் கரெக்ட்! நான் அவங்ககிட்ட பிரச்சினை பண்ணேன். அவங்களை ஹர்ட் செய்தேன். அதனால், மிஸஸ்.மௌனா என்னைக் கம்ப்ளைனட் கொடுத்து ஜெயிலுக்குள்ளே அடைச்சாங்க" என்று சாதாரணமாக கூறினாள் முக்தா.
"இவங்க ஏன் இதையெல்லாம் சொல்லிட்டு இருக்காங்க?" என்று கணவனிடம் கேட்டாள் மௌனா.
"இதை சொல்லிட்டால், இனிமேல் இந்தக் கேள்வி எல்லாம் மறுபடியும் வராதுல்ல? அதான்" என்று அவளுக்கு விளக்கினான் மஹதன்.
அதற்கிடையில்,"எதனால் அப்படி பண்ணாங்கன்னு விளக்கமாகச் சொல்ல முடியுமா?" என்று வினவினார்கள்.
"நீங்க அவங்ககிட்ட கேட்டீங்களே? கல்யாணத்தில் ஸ்டேட்டஸ் பிரச்சனை வரலையான்னு, அது தான், என்னை அப்படி நடந்துக்க வச்சது! நான் மட்டுமே இந்த உலகத்தில் அதிசயப் பிறவியாக வந்து பிறந்திருக்கேன், எனக்குத் தான் எல்லாமே பெஸ்ட் ஆக கிடைக்கும்னு பேராசைப்பட்டேன். அதுக்குக் கிடைச்சத் தண்டனை தான் அந்தப் போலீஸ் கம்ப்ளைன்ட்!" என்று அலுங்காமல் உண்மையைக் கூறினாள் முக்தா.
"இதில் பெஸ்ட்ன்னு நீங்க சொன்னது, மஹதன் சாரைத் தான? ஏன்னா, நீங்க அவரைத் தான் காதலிச்சதாகவும், கல்யாணம் செய்துக்கப் போறதாகவும் உறுதியாக இருந்தீங்களாம்! அதுக்குக் குறுக்காக, மௌனா மேடம் வந்ததால் தான், உங்களை அரெஸ்ட் பண்ணாங்களாம்!" என்று அவள் காவல் நிலையத்திற்குச் சென்று வந்த நிகழ்வை, நினைவுபடுத்திக் கேட்டு, முக்தாவிடமிருந்து, அதன் உள்ளடக்கத்தைத் தெரிந்து கொள்ள முயற்சித்தனர்.
"ஆமாம்" என்றவளது ஒற்றை வார்த்தையில், அவ்விடமே அமைதி அடைந்து விட்டது.
அருகிலிருந்த கிஷான் கூட, இன்னும் இறுக்கம் தளராமல் அப்படியே இருந்தான்.
"அப்போ அவர் எனக்குப் பெஸ்ட்ன்னு நினைச்சேன். ஆனால், அவருக்கு என் மேல் லவ் இல்லவே இல்லை. ஒரு ஃபேமிலி ஃப்ரண்ட் ஆகத் தான் பார்த்தார்! நான் தான், அவரை லவ் பண்றேன்னு நினைச்சிட்டு சுத்தினேன். அதுவும் என்னோட தப்பு தான்! ஆனால், மஹதனோ, எனக்குப் புரிய வைக்க முயற்சி செய்தார், அதுக்கப்புறம் தான், எனக்கும் புத்தின்னு ஒன்னு இருக்கிறது ஞாபகம் வந்துச்சு! அப்பறம் எல்லாத்தையும் சரி செய்ய, டிரை பண்ணி, அதில் கொஞ்சம் சக்ஸஸூம் கிடைச்சிருச்சு!" என்று நேரானப் பார்வையுடன் கூறியவளை மெச்சிக் கொண்டான் கிஷான்.
அவன் மட்டுமில்லாமல், முக்தாவின் தந்தையான நீலகண்டனும் மகளின் சாமர்த்தியத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தார்.
"அதுக்கப்புறம் எப்படி கிஷானை லவ் பண்ணீங்க?" என்ற கேள்வியும் உடனே வந்தது.
"ஏன் மஹதன் எனக்கு 'நோ' சொன்னதும், உலகமே நின்னுருச்சா என்ன? எனக்கு லவ் வரவே கூடாதுன்னு ஏதாவது இருக்கா என்ன?" என்று கேட்டு விட்டுக் கிஷானைப் பார்த்தாள் முக்தா.
"இல்லை மேடம்" என்று அசடு வழியக் கூறினார் அந்த நிருபர்.
"உடனே, நான் கிஷானை லவ் பண்ணலை ங்க! அவரோட அப்ரோச் அண்ட் கேரக்டரைப் பார்த்து, புரிஞ்சிக்கிட்ட அப்பறம் தான், நானும் என் சம்மதத்தை சொன்னேன். இவர் எனக்கு லைஃப் பார்ட்னர் ஆக கிடைச்சதுக்கு ரொம்பவே சந்தோஷப்பட்றேன்!" என்று கூறி, தனது நேசம் வழியும் விழிகளுடன் தன்னவனைக் கண்டாள் முக்தா.
"ஆமாம். நான் தான், முக்தாவுக்குப் புரபோஸ் செய்தேன். முதல்ல அவங்களுக்கு என் மேல இன்ட்ரெஸ்ட் இல்லை. என்னால் அவங்களை ஃபோர்ஸ் பண்ணவும் முடியாது. இடையில், அவங்க வெளிநாட்டுக்கு வேலைக்குப் போயிட்டாங்க. அப்பவும் நான் வெயிட் பண்ணேன். அங்கேயிருந்து வந்ததும், என்னோட காதலை உணர்ந்து, முக்தாவும் என்னை விரும்பினாங்க!" என்று கூறி முடித்தான் கிஷான்.
"முக்தா மேடம் முன்னாடியே இன்னொருத்தர், அதுவும் உங்களோட க்ளோஸ் ஃப்ரண்டையே லவ் பண்ணியிருந்தாங்க! இப்போ நீங்க புரபோஸ் செய்யவும், ஓகோ சொல்லிட்டாங்கன்னு உங்களுக்கு எதுவும் உறுத்தலையா சார்?" என்று முக்தா எளிதில் உணர்ச்சி வசப்படக் கூடிய வினாவை எழுப்பி விட்டு, அவனைப் பரிகாசம் செய்த திருப்தியில், தோரணையாக அமர்ந்திருந்தான் ஒரு பத்திரிக்கையாளன்.
"எத்தனை தடவை சொல்றது சார்! அப்படி ஒரு விஷயம் நடந்ததாகவே நாங்க ஞாபகம் வச்சுக்கலை.அதான், இப்படி ஒரே ஃபேமிலியாக இருக்கோம்" என்று அழுத்திக் கூறினான் கிஷான்.
"ப்ச்! இத்தோட பிரஸ் மீட்டை முடிச்சிக்கலாம்" என்று வெறுப்புடன் கூறினார் சித்ரலேகா.
தனது மகன் மற்றும் வருங்கால மருமகளின் முந்தைய காலக் கதை, இப்போது மீடியாவின் முன்பும், மக்களின் முன்னிலையிலும், கடை பரப்பி வைத்துக் கொண்டு இருப்பது அவருக்கும் எரிச்சலாக இருந்தது.
"இருங்க சம்பந்தியம்மா.கிஷானும், முக்தாவும் சுவிட்சுவேஷனை சூப்பரா ஹேண்டில் செய்றாங்க" என்றார் நீலகண்டன்.
"ஆமாம் லேகா ம்மா" என்று மனைவியை அமைதியாக இருக்கச் சொன்னார் காஞ்சியப்பன்.
"நீங்க இதையே கேட்டுட்டு இருக்கீங்க. ஆனால், எங்களோட காதலை உறுதி செய்து, கல்யாணப் பந்தத்தில் இணையப் போறோம்ன்றதை, உங்களுக்கும், மக்களுக்கும், எங்களோட ஃப்ரண்ட்ஸூக்கும் இன்ஃபார்ம் பண்ணத் தான், மீடியாவுக்கு முன்னாடி வந்துருக்கோம். இப்போ அதைச் சொல்லியாச்சு. இனி, எங்களோட எங்கேட்ஜ்மெண்ட் அண்ட் மேரேஜ் நடக்கும் போது, லைவ் அப்டேட்ஸ் வந்துரும். தாங்க்ஸ் ஃபார் கம்மிங்!" எனத் தங்களது இரு கரம் கூப்பி நன்றி தெரிவித்தனர் முக்தா மற்றும் கிஷான்.
"நீ எந்த இடத்திலேயும் உடைஞ்சு போகலை டா ம்மா!" என்று மகளை உச்சி முகர்ந்து அணைத்துக் கொண்டார் நீலகண்டன்.
தனது தந்தைக்குத் தலைகுனிவைக் கொண்டு வரவில்லை என்ற நிம்மதியுடன் அவ்வணைப்பில் அடங்கி விட்டவள்,
ஆனாலும், கிஷானுடைய வீட்டாருக்கு இழிவைத் தந்து விட்டோமோ? என்ற பரிதவிப்பில், அவர்களை நிமிர்ந்து பார்த்தாள் முக்தா.
"டக்கு டக்குன்னு நீ சொன்னப் பதிலைக் கேட்டு எங்களுக்குப் புல்லரிச்சுப் போச்சுடா ம்மா!" என்று அவளைப் பாராட்டினார் சித்ரலேகா.
அதற்குப் பிறகு தான், அவர்களிடம் முகம் காட்டினாள் முக்தா.
"வெல் டன் முகி!" என்று மஹதனும், மௌனாவும் அவளுக்கானப் பாராட்டைத் தெரிவித்தனர்.
"அதுக்கெல்லாம் காரணம், நீங்க எல்லாரும் தான்!" என்று மனதாரக் கூறினாள்.
அந்தக் கோலாகலத்தில், தானும் இணைந்து கொண்டு, தன் காதலியைக் கொண்டாடித் தீர்த்தான் கிஷான்.
இன்றுடன், தங்களுடைய, மற்றும் மஹதன் & மௌனாவுடைய, கடந்த கால வாழ்க்கையும், அதில் நிகழ்ந்த கசப்புகளையும், பத்திரிக்கையாளர்களும், மற்றவர்களும் மறந்து விட வேண்டுமென்று வேண்டிக் கொண்டார்கள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக