அவளது உள்ளக் குமுறல் தெரியாமல்,
"குளிச்சிக்கோ மௌனா" என்று அவளிடம் சொன்னக் கௌசல்யா, மருமகளிடம் மாற்றுடையைத் தந்தார் கௌசல்யா.
"சரிங்க அத்தை" என அதை வாங்கிக் கொண்டு குளிக்கப் போனாள் மௌனா.
இவளைத் தயார் செய்து விட்டு, தங்கள் அறைக்குள் அடைந்து கொள்ள வேண்டும் என்பது கௌசல்யாவின் எண்ணமாக இருந்தது.
அதற்கு முன்பாகவே, தன் அலுவலக அறைக்குப் போய் விட்டார் திருமூர்த்தி.
மகனுடைய திருமண வேலையில், கவனம் வைத்திருந்தவருக்கு, இப்போது தான், கம்பெனி வேலைகளைப் பார்க்க நேரம் கிடைத்திருக்கிறது.
தன் உடலைச் சுத்தம் செய்து விட்டு வந்தவளிடம், பால் நிறைந்த சொம்பைத் தந்தவர், அவளை உச்சி முகர்ந்து, நெற்றி வழித்து, மஹதனின் அறைக்குள் அனுப்பினார் கௌசல்யா.
கட்டிலில் செய்யப்பட்டிருந்த அலங்காரத்தைப் பார்த்து மெலிதாகப் புன்னகைத்துக் கொண்டு இருந்த மஹதனைத், மனைவியின் வருகை அவனை நிமிர்ந்து பார்க்கச் செய்தது.
"வா மௌனா ம்மா" என்று அவளை இலகுவான குரலில் வரவேற்றான் மஹதன்.
"மஹி" என்றவளது அமைப்பிலிருந்தப் பதட்டத்தை உணர்ந்தவன்,
"ரிலாக்ஸ் டா. நாம முதல்ல ஏதாவது பேசலாமா? நீ வந்து என் பக்கத்தில் உட்காரு மௌனா" என அவனது கனிவான அழைப்பில், கணவனிடம் தஞ்சமடைந்தாள்.
கையிலிருந்த சொம்பை அதற்குரிய இடத்தில் வைத்து விட்டுக், கட்டிலில் சென்று அமர்ந்தாள் மௌனா.
அவளது கண்களைப் பார்த்த மஹதனோ," இந்த ஃபர்ஸ்ட் நைட்டை இப்போதைக்குத், தள்ளிப் போட்ருவோமா டா?" என்று அவளிடம் வினவினான்.
"எதுக்கு மஹி?" என்று குழப்பியபடி கேட்டாள் மௌனா.
"என்ன தான் நாம் லவ் பண்ணி இருந்தாலும், மீட்டிங் அதிகமாக இருந்தது இல்லை, ரெண்டு பேரும் வேலையில் தான் கான்சன்ட்ரேட் செய்தோம். ஆனால், மனசுக்குள்ளே அவ்ளோ லவ் இருந்துச்சு. அதை எக்ஸ்பிரஸ் செய்ற மாதிரி, சுவிட்சுவேஷனும் நிறைய அமையவே இல்லை. சோ, நம்மக் கல்யாணத்துக்கு அப்பறம் நடக்குற சடங்கை முடிச்சிட்டு, எங்கேயாவது ஹனிமூன் போயிட்டு வரலாம் டா" என்று யோசனை கூறினான் மஹதன்.
"ஓகே மஹி. இப்போ என்னப் பேசலாம்?" என்று கேட்டாள் மௌனா.
"நம்ம ஆஃபீஸூக்கு நீ இன்டர்வியூ அட்டெண்ட் செய்றதுக்கு முன்னாடி, உன் வாழ்க்கையில் என்னவெல்லாம் நடந்துச்சுன்னு, எல்லாத்தையும் எங்கிட்ட ஷேர் பண்ணு! அதுக்கப்புறம், நானும் உங்கிட்ட என் லைஃப் ஹிஸ்டரியைச் சொல்றேன்" என்றான் அவளது கணவன்.
"குட் ஐடியா! நான் ஆரம்பிக்கிறேன் ங்க" என்று அவனுக்கு எதிராகச் சம்மணமிட்டு உட்கார்ந்தாள் மௌனா.அவள் புறம் திரும்பி அமர்ந்தான் மஹதன்.
அவனது மனைவி பேசத் தொடங்கினாள்.
"அப்பாவோட வேலை என்னன்னு உங்களுக்குத் தெரியும். நான் ரெண்டு பேரோட செல்வமும் தான் மஹி! எனக்கு அந்தந்த வயதில் கிடைக்க வேண்டியது எல்லாமே அவங்க வாங்கித் தந்து, நல்லாப் படிக்க வச்சாங்க. நானும் எனக்குப் பிடிச்சதைப் படிச்சேன். அங்கே ஊரில், இருக்கும் போது, கோயில், கடைத்தெருவுக்கு மட்டும் தான் போவேன். வீட்டில் ரெஸ்ட்ரிக்ஷன் போட்டாங்கன்னு இல்லை, எனக்குப் போகத் தோனலை. அப்பறம் தான், படிச்சப் படிப்புக்கு வேலைப் பார்க்கனும்னு ஆசை வந்துச்சு எனக்கு.
அதான், உங்க கம்பெனியில் ஜாப்க்கு அப்ளைப் பண்ணிட்டேன் மஹி" என்று விளக்கிக் கூறினாள் மௌனா.
'ம்ம்… அகதாவைப் பத்தி?" என்று எடுத்துக் கொடுத்தான் மஹதன்.
"அவ என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட் ங்க! எனக்கு அவ ரொம்பவே சப்போர்ட்டிவ் ஆக இருப்பா. அவளோட சொந்த வாழ்க்கையைப் பத்தி, எனக்குத் தெரிஞ்சப் பிறகு இன்னும் க்ளோஸ் ஆகிட்டோம். எனக்கு ஏதாவது கஷ்டமாக இருந்தால், அவ என்னைச் சமாதானம் செய்வா, அவளுக்கு ஹஸ்பண்ட் அண்ட் மாமியாரால் பிரச்சினை வந்தால், அதை எங்கிட்ட சொல்லுவா. நான் அவளைப் பாத்துக்குவேன். இப்படி இரண்டு பேரும் ஒருத்தருக்கு ஒருத்தர், கூட இருந்து கவனிச்சுக்குவோம் மஹி" என்று அவனிடம் உரைத்தாள் மௌனா.
"ஓஹோ!" என்று மட்டும் கூறி, அவளை மேலே பேச விட்டான் மஹதன்.
"ம்ம்…! யெஸ் மஹி. அதுக்கப்புறம் நடந்தது எல்லாம் உங்களுக்குத் தெரியுமே?" என்று குறும்பாக கூறினாள் அவனது சகதர்மினி.
"முதல் நாளே நெத்தியில் பிளாஸ்திரி போட்டியே?" என்று அவளது நெற்றி வடுவை நீவிக் கொடுத்தான் கணவன்.
சிறுநகையை மட்டுமே அதற்குப் பதிலாக கொடுத்தாள் மௌனா.
அதையே கிளறிப் பேசாமல், சட்டென வேறு விஷயத்தைப் பேச வேண்டும் என, "இப்போ என்னோட டர்ன்!" என்றவன்,"பரம்பரைப் பணக்காரவங்க தான். ஆனாலும், அப்பாவும், நானும் எங்களோட தனித்தனி உழைப்பினால், கம்பெனியை டெவலப் செய்தோம். அம்மாவும் லேசுபட்ட ஆளில்லை மௌனா. அவங்க நம்மளோட கம்பெனிஸூக்காக, அவ்ளோ ஹெல்ப் பண்றாங்க. நீலகண்டன் சார் அண்ட் முக்தாவைப் பத்திச் சொல்லனுமா?" என்று மனைவியிடம் வினவினான் மஹதன்.
"ஊஹூம். வேண்டவே வேண்டாம். அவங்க கூட ஃப்ரண்ட் ஆன நாளில் இருந்து, முக்தாவைப் பத்தி அவங்களே சொல்லிட்டாங்க" என்று கூறிப் புன்னகைத்தாள் மௌனா.
"அப்போ ஓகே" என்று அவனும் சொல்லி விட, இப்படியே அவளும், அவனும் தங்களது கடந்தகால வாழ்க்கையையும், எதிர்காலத் திட்டங்களையும் பற்றிப் பேசி, அந்த இரவைக் கழித்து விட்டனர்.
"ஏங்க! வொர்க் பாத்தது போதும். நாளைக்குச் சடங்கு இருக்கு. அதையெல்லாம் பார்க்கனும். வந்து தூங்குங்க" என்று திருமூர்த்தியை அழைத்து உறங்கச் சொன்னார் கௌசல்யா.
சிவமணியையும், அன்னபூரணியையும் ஒருவாறு பேசி, அமைதியாக்கி, உறங்க வைத்திருந்தாள் அகதா.
ஒருவரின் தலையை, மற்றொருவர் தடவிக் கொடுத்துக் கொண்டே, உறங்கிப் போயிருந்தனர் மௌனாவும், மஹதனும்.
அதிகாலை, தன் மீது, படுத்திருந்த மௌனாவை எழுப்ப மனமின்றித் தட்டிக் கொடுத்து விட்டு, உறங்கினான் அவளது கணவன்.
அது அவளை உசுப்பி விட்டதைப் போல இருக்கவும், விழிகளை மெல்லத் திறந்து, தன்னுடைய அலங்காரம் மிதமாகத் தான் கலந்திருக்கிறது என்பதை அறிந்தவளுக்கு, இப்படியே கீழே போனால், அத்தை மனம் வருந்துவாரோ? என்று அவசர அவசரமாக எழுந்து குளித்து முடித்து வந்தவள்,
"மஹி! நான் கீழே போறேன். நீங்க மெதுவாக தூங்கி எழுந்து வாங்க" என்று கணவனின் தாடையைப் பற்றி எழுப்பினாள் மௌனா.
"யெஸ்! யெஸ்! நானும் எழுந்துக்கிறேன் டா. ரெண்டு பேரும் சேர்ந்து கீழே போகலாம்" என அவனும் விழித்துக் கொண்டான்.
"உங்களுக்குத் தூக்கம் வரும்ல மஹி? அதனால்…" என்றவளிடம்,
"உனக்கும் தான் வரும். நீயும், நானும் லேட் ஆகத் தான் தூங்கினோம். அப்படின்னா, உன் கூட நானும் கிளம்பி வரனும்" என்று உறுதியாக கூறி விட்டு, குளியலறைக்குள் புகுந்து கொண்டான் மஹதன்.
அவன் வந்தபின், இருவரும் தங்களது புற அழகை மேம்படுத்திக் கொண்டார்கள்.
"சரியான நேரத்துக்கு வந்துட்டீங்க!" என்று புன்னகைத்தக் கௌசல்யா, இன்னும் மௌனாவின் பெற்றோரிடம் இருந்து அழைப்பு வரவில்லை என்பதால், "இதைக் குடிங்க" என்று அவர்களுக்கானப் பானத்தைக் கொடுத்துப் பருகச் சொன்னார்.
அதற்குள்,"ஹலோ சம்பந்தி! மௌனாவையும், மாப்பிள்ளையையும் இங்கே வர வைக்கனும்" என்று தயங்கிய அன்னபூரணியிடம்,
"இதோ! கிளம்பித் தாயாராக இருக்காங்க சம்பந்தி. நாங்க வர்றோம்" என்று அவரிடம் கூறினார் கௌசல்யா.
"சரிங்க சம்பந்தி" என்று கூறி வைத்தவர், கணவனையும், அகதாவையும் எழுப்பி, மாப்பிள்ளையையும், பெண்ணையும் வரவேற்கத் தாயாராகச் சொன்னார் அன்னபூரணி.
தங்களுக்குள் தாம்பத்தியம் நிகழவில்லை என்றாலும், இருவரின் வதனமும், தேஜஸூடன் காணப்பட்டது.
"ஹாய்!" என்று அங்கே வந்தமர்ந்தார் திருமூர்த்தி.
"ஹாய் ப்பா!"
"ஹலோ அங்கிள்!"
"ஹாய்!" என்று தானும் அவர்களிடம் கூறினார் திருமூர்த்தி.
நான்கு பேரும் காரில் ஏறி, சிவமணியின் வீட்டிற்குக் கிளம்பிச் சென்றனர்.
அங்கே, மௌனாவின் பெற்றோர், அவர்களுக்கான வரவேற்புப் படலத்தைத் தயார் செய்தனர்.
மௌனா மற்றும் அவளது புகுந்த வீட்டுக்காரர்கள் அனைவரும், அவ்வீட்டின் முன்புறத்தில், காரில் வந்து இறங்கினர்.
"அம்மா! ப்பா!" எனச் சிவமணியையும், அன்னபூரணியையும் அழைத்துக் கொண்டே, உள்ளே போனாள் மௌனா.
"உடனே உள்ளே வந்துட்டியா? இரு!" என்று அவர்கள் இருவருக்கும் ஆரத்தி எடுத்து உள்ளே வரச் செய்தார் அன்னபூரணி.
அன்னையையும், தந்தையையும் பார்த்து, கண்கள் பனிக்கப் புன்னகை செய்தாள் மௌனா.
"அம்மா! கொஞ்சம் தள்ளுங்க" என்று தோழியைக் கட்டிக் கொண்டாள் அகதா.
தன் பெற்றோரை அவளுக்குத் தாரை வார்த்துக் கொடுத்து விட்டோம் என்று மருகாமல், அவளது அணைப்பில் அடங்கிப் போனாள் மௌனா.
"அவங்க நின்னுக்கிட்டே இருக்காங்கப் பாரு!" என்று சிவமணி தான், மாப்பிள்ளையையும், திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவையும் முறையாக வரவேற்றார்.
மகளின் புகுந்த வீட்டாரிடம்,"மறு வீட்டுக்கு எப்போ வரலாம் சம்பந்தி?" எனக் கேட்டார் அன்னபூரணி.
"அதுக்கு அழைக்கத் தானே வந்திருக்கோம். அடுத்த வாரத்தில், மறு வீட்டுச் சாப்பாடு போடுற சடங்கை வைக்கலாம்னு இருக்கோம் சம்பந்தி. நீங்க மூனு பேரும் உங்கப் பொண்ணு அப்பறம் மருமகன் கூட சேர்ந்து சாப்பிடனும்" என்று அவர்களைத், தங்களது வீட்டிற்கு வருமாறு, அன்புடன் அழைப்பு விடுத்தனர் மஹதனின் பெற்றோர்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக