"உன்னையும், உன் பேரன்ட்ஸையும் என்னோட மேரேஜூக்கு இன்வைட் பண்றேன். தவறாமல் கலந்துக்கனும்" என்று புன்னகையுடன் தாய், தந்தை மற்றும் மௌனாவுடன் சேர்ந்து, தன் கல்யாணப் பத்திரிக்கையை நீட்டினான் மஹதன்.
"உங்களோட மேரேஜில் ஆல் இன் ஆல் நான் தான்! அப்பறம் வராமல் இருப்பேனா?" என்றவாறு தன் பெற்றோருடன் இணைந்து அதைப் பெற்றுக் கொண்டான் கிஷான்.
"இருந்தாலும் எல்லாம் புரொசீஜர் படி செய்யனும்ல டா" என்றான் மஹதன்.
"மாப்பிள்ளைத் தோழனும் இவர் தானே?" என்று கூறினாள் மௌனா.
"ம்ம்… எல்லா பொறுப்பையும் சிறப்பாக செஞ்சிடலாம்!" என்று குறுநகை புரிந்தான் கிஷான்.
அவனுடைய பெற்றோர்,"சாப்பாடு எல்லாம் ரெடி. வந்துட்டு சாப்பிடாமல் போகவே கூடாது" என உணவுண்ண வைத்தே அனுப்பினர்.
ஏற்கனவே, அதிகாரப்பூர்வமாக அறிவித்து, நிச்சயத்தார்த்தம் முடிந்த தருவாயில், இப்போது மஹதன் மற்றும் மௌனாவின் திருமணம், பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.
இரவு நலங்கின் போது, மௌனாவை மண்டபத்திற்கு அழைத்து வந்து அறையில் இருங்க வைத்தவர்கள், அவளுக்கான அலங்காரங்களையும் ஆரம்பிக்கச் சொல்லி விட்டு, மாப்பிள்ளையின் வருகைக்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.
திருமூர்த்தி மற்றும் கௌசல்யா இருவரும், மௌனா மற்றும் அவளது பெற்றோருடன் மண்டபத்திற்குச் சென்று விட்டனர்.
"நானும், அவரும் தான் பார்த்துக்கக் கூடாது, ஆனால், நீங்களும், கிஷானும் எதுக்கு மீட் பண்ணாமல் இருக்கீங்க முகி?" என்று வினவினாள் மௌனா.
"அங்க மஹதன் தான் அவரைப் பிடிச்சு வச்சிருக்காராம்!" என்று சொல்லிச் சிரித்தாள் முக்தா.
அவளுடன் இணைந்து நகைத்தனர் மௌனாவும், அகதாவும்.
ஆம் ! மஹதன் தான், தன் தோழன் கிஷானை அங்குமிங்கும் நகர விடாமல் தன்னுடன் வைத்துக் கொண்டான்.
மாப்பிள்ளை அழைப்பின் போது அருகில் இருப்பதாக கூறியவனை,
"முக்தாவும் பொண்ணுக் கூடத் தான் இருப்பாங்க! சோ, நீங்க இங்கேயே ரெஸ்ட் எடுங்க!" என்று கறாராக உரைத்து விட்டான் மஹதன்.
அதற்குள், அலங்காரத்தை முடித்திருந்த மௌனாவை, மேடைக்கு அழைத்து வரச் சொல்லி அமர வைத்து விட்டு, மணமகனையும் கூப்பிட்டனர்.
அப்போது தான் மூச்சு வந்தது மஹதனுக்கு.
அவனுக்கு மட்டுமில்லை, கிஷானுக்கும் கூட, நண்பனின் தவிப்பைப் பார்க்க முடியவில்லை.
எனவே,"ரிலாக்ஸ் டா!" என்று மஹதனைச் சமாதானம் செய்தான்.
மேடையில் இருந்த மௌனாவிற்கோ, அணிந்திருந்தப் புடவையும், அலங்காரங்களும், அதனுடன் கைகளில் சிவப்பேறி இருந்த மெஹந்தியும், தன் அகச்சிவப்பை வெளிப்படுத்திக் கொண்டிருப்பதை நினைத்து நாணி நின்றாள்.
அன்னபூரணியோ, மகளை, அவளது இரு தோழிகளின் கரத்தில் ஒப்படைத்து விட்டாலும், அவளின் மீது கவனம் இருக்கும் படி பார்த்துக் கொண்டார்.
மௌனாவின் வந்ததும், சிறிது நேரம் கழித்து, மஹதனுடைய பிரவேசம் நடைபெற்றது.
அடர் சிவப்பு நிற முழுக்கைச் சட்டையில், கண்கள் சுருங்க நடந்து வந்தவனைக் காண்கையில், இந்த நிமிடத்திலும், அவனிடம் காதலை உரைக்க வேண்டும் போலிருந்தது மௌனாவிற்கு.
மேடையேறியவன் மட்டும், சும்மா இராமல், பாவையவளின் நாணத்தை, தன் கடைக்கண் பார்வைக் கொண்டு அதிகப்படுத்தினான் மஹதன்.
நலங்கிற்கு வெளியாட்கள் யாரையும் அழைத்திருக்கவில்லை இரு வீட்டாரும். சொந்தங்கள் சிலரைத் தான் கூப்பிட்டு இருந்தனர்.
நிச்சயத்தின் போது, பஃபே முறையில் சாப்பாடு தயார் செய்து வைக்கப்பட்டிருந்தது போல இல்லாமல், இம்முறை, இந்தச் சடங்கிலும் சரி, திருமணத்திலும் சரி! டைனிங் டேபிளில், தலைவாழை இலை போட்டுத் தான், விருந்தினர்களுக்கு, உணவைப் பரிமாறப் போவதாக உறுதியாக இருந்தனர் இரு வீட்டாரும்.
இப்போது கூட்டம் அதிகமில்லை என்பதால், அனைவரும் திருப்தியாக உண்டனர்.
அடுத்த நாளும் ஒரு குறையும் இல்லாமல் முடித்து விட நினைத்து இருக்கின்றனர்.
"முகி!" என்று தன்னவளை அழைத்தான் கிஷான்.
விரிந்த புன்னகையுடன், அவனிடம் சென்றாள் முக்தா.
"இப்போ தான் அவன் என்னை விட்டான்!" என்று மேடையிலிருந்த மஹதனைக் காட்டினான் கிஷான்.
"ஹாஹா! நானும் அதை தான் மௌனா கிட்ட சொன்னேன்" எனச் சிரித்தாள் முக்தா.
"இனி நாளைக்குத் தாலி கட்ட மேடையேறுகிற வரைக்கும், விட மாட்டான் முகி! கூடவே கையைப் பிடிச்சிட்டுப் போவான்!" என்று பொய்யாக அலுத்துக் கொண்டான் கிஷான்.
"நாளைக்கு ஒருநாள் தான? அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க!" என்றாள் முக்தா.
"ஆமாம்… நண்பனாகப் போயிட்டான்" என்று புன்னகை செய்தான் கிஷான்.
தன் மனைவி சித்ரலேகாவிடம்,"உன் மகனைப் பாரு! நம்ம மருமகப் பக்கத்தில் கரெக்ட் ஆகப் போய் நின்னுட்டான்!" என்று கிஷானும், முக்தாவும் இருக்கும் இடத்தைச் சுட்டிக் காட்டிக் கூறினார் காஞ்சியப்பன்.
"இவ்ளோ நேரமும் அவனோட ஃப்ரண்ட் படுத்தி எடுத்துட்டானாம்! 'நான் மட்டும் பிரிஞ்சிருக்கேன்! நீ மட்டும் உன் முகியோட சேர்ந்து நிக்கனுமா?' அப்படின்னு சொல்லி, தன்னோட ரூமிலேயே இவனை அடக்கி வச்சிட்டானாம் மஹதன்! இப்போ தான் ரிலீஸ் செய்துருக்கான்ங்க!" என்று சிரித்தவாறே கூறினார் சித்ரலேகா.
"இதெல்லாம் எப்போ சொன்னான் உங்கிட்ட?" எனக் கேட்டார் காஞ்சியப்பன்.
"அங்கேயிருந்து மெசேஜ் அனுப்பினான் ங்க!" என்று பதிலளித்தார் சித்ரலேகா.
"இந்த மஹனுக்குள்ளே இப்படி ஒரு குறும்புத்தனமானப் பக்கமா?" என்றவாறு மேடையில் பார்வையைப் பதித்தார் காஞ்சியப்பன்.
தன் விழிகளை, இனி, வேறெங்கும் உலாவ விடப் போவதில்லை என்ற முடிவில் மஹதன் இருந்தான் போலும்!
அழகுப்பெண் இவள் தன்னை ஈர்க்கும் வேலையைச் செவ்வனே செய்து கொண்டிருக்க, அவளிடமிருந்து பிரிந்து செல்ல, மஹதனுடைய கண்களும் தயாராக இல்லை.
இவர்களின் காதல் பார்வைப் பரிமாற்றங்களோடு, சடங்கும் தொடங்கியது.
"இந்தா ம்மா" என தங்கள் வருங்கால மருமகளுக்கானப் புடவையை அவள் கரத்தில் தந்தார்கள் கௌசல்யாவும், திருமூர்த்தியும்.
அதை வாங்கிக் கொண்டு உடை மாற்றி வரப் போய் விட்டாள் மௌனா.
"கிஷான்!" என்று நண்பனை அழைத்து விட்டான் மஹதன்.
"அடேய்! இருடா! நான் இன்னும் முகி கிட்ட நாலு வார்த்தைப் பேசக் கூட இல்லை!" என்று பொய்க் கோபத்துடன் அலறினான் கிஷான்.
"சரி அங்கேயே இரு!" என்று பெரிய மனது வைத்தான் மஹதன்.
"எங்க அம்மா, அப்பா கூட நாம பேசுறதைக் கண்டுக்கல முகி! இவன் இருக்கானே!" என்று அவளிடம் கூறினான் கிஷான்.
மஹதன் இவனை அழைத்ததைப் பார்த்து விட்ட மௌனாவின் தந்தை சிவமணியோ,"ஏதாவது வேணுமா மாப்பிள்ளை?" என்று மருமகனிடம் பரிவுடன் கேட்டார்.
"இல்ல மாமா. அவனைச் சும்மா தான் கூப்பிட்டேன்" என்று அவரிடம் கூறி விட்டான்.
பத்திரிக்கை கொடுக்கவே தோழனுடன் சென்ற நீலகண்டனோ, இப்போதும் திருமூர்த்தியுடன் தான் சுற்றிக் கொண்டு இருந்தார்.
புடவை கட்டும் வரை, மௌனாவுடன் அவளது தோழி அகதா தான் அறைக்குள் இருந்ததால், அதில் தான் அதிகபட்சமாகத் தோன்றவே, வெளியே வந்திருந்தவள், கூடவே, கிஷானைக் கண்டதும் அப்படியே அங்கே நின்று அவனுடன் பேச ஆரம்பித்து விட்டாள் முக்தா.
"சாப்பாடு எப்போன்னு தெரியலையே?" என்றான் கிஷான்.
"ஏன் உங்களுக்குப் பசிக்குதா? நான் வேணும்னா ஏதாவது சாப்பிட எடுத்துட்டு வரவா?" என்று கேட்டாள் முக்தா.
"வேணாம் முகி. எல்லார் கூடயும் சேர்த்து சாப்பிட்டுக்குவோம். அதுவும் பத்தி செட்டப் போட்டு இருக்காங்க. நாம ரெண்டு பேரும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிடனும்" என்று தன் ஆசையை அவளிடம் தெரிவித்தான் கிஷான்.
"ஆமாம். நானும் அதுக்காகத் தான் வெயிட் பண்றேன்ங்க. ஒரு மாதிரி நல்லா இருக்கும்ல?" என்று இவர்கள் இனிக்க இனிக்கப் பேசிக் கொண்டு இருக்கும் போது, மேடைக்கு வந்திருந்தாள் மௌனா.
கிஷானுடன் பேசியபடி இருந்த முக்தாவைப் பார்த்ததும், அவளைத் தொல்லை செய்யாமல் பொறுப்பைத் தான் எடுத்துக் கொண்டாள் அகதா.
"அங்கே பாரு முகி! மௌனா வந்தாச்சு. அகதா மட்டும் மேடையில் இருக்காங்க. நீயும் போய் ஹெல்ப் பண்ணு" என்று இவளிடம் கூறினான் கிஷான்.
"சரிங்க" என்றவள், அகதாவிடம் சென்று விட்டாள் முக்தா.
தன் வருங்கால மனைவியின் சேலைக் கட்டியத் தோற்றத்தில், தலைக் குப்புற விழும் அளவிற்கு, கண்ணை விழித்துப் பார்த்தான் மஹதன்.
அந்த அலங்காரத்தில் அவளை இப்போது தான் பார்க்கிறான் அல்லவா? அதனால், மற்றவர்களே அவனது கண்களுக்குப் புலப்படவில்லை.
இங்கோ, அவனைச் சிறு குரலில் கூட, எச்சரிக்கை செய்ய இயலாமல், அந்தப் பார்வையில், நாணம் மேலோங்க நின்றாள் மௌனா.
தங்களது ஒரே மகளின், தம்பதி கோலத்தை, முதல்முறையாக காண்பதால், சிவமணி மற்றும் அன்னபூரணிக்கு உற்சாகம் பீறிட்டது.
மகனது திருமணத்தைப் பற்றி, அவனிடம் சொல்லித் துரிதப்படுத்தாமல், தாங்கள் ஒருவருக்கொருவர் மட்டுமே அதைப் பேசி ஏக்கப் பெருமூச்செறிந்து கொண்டிருந்த கௌசல்யாவிற்கும், திருமூர்த்திக்கும், இப்போது மஹதனை, மேடையில் ஜோடியுடன் பார்க்கையில், அவ்வளவு ஆனந்தக் கூச்சலிட வேண்டும் போல இருந்தது.
"கையைக் கொடுங்க சம்பந்தி" என்று சிவமணியின் கரத்தைப் பிடித்துக் குலுக்கினார் திருமூர்த்தி.
இரு குடும்பத்துக்குமான சந்தோஷமான சூழ்நிலை என்பதால், அவரது செயல் இவ்வாறாக இருந்தது.
அதில் நெகிழ்ந்த சிவமணி,"நம்மப் பிள்ளைங்களை ஆசீர்வாதம் பண்ணுவோம்… வாங்க சம்பந்தி" என்று மேடைக்குப் போனார்கள்.
"உங்க ரெண்டு பேரோட அம்மாவும், அப்பாவும் வர்றாங்க" என்று மௌனாவிடமும், மஹதனிடமும் அறிவித்தாள் அகதா.
அவர்களைக் கண்டதும், மலர்ந்து புன்னகை செய்தனர் இருவரும்.
மகனைக் கட்டித் தழுவிய திருமூர்த்தி,"வாழ்த்துகள் டா மகனே!" என்றவர்,
"உனக்கும் வாழ்த்துகள் மா" என மௌனாவிடம் உரைத்தார்.
கௌசல்யாவோ, மருமகளின் தோளை மென்மையாக அணைத்துக் கொள்ள, அவர்களுக்குப் பின்னால் வந்த, அன்னபூரணியைப் பார்த்ததும், தன் கரத்தை விலக்கிக் கொண்டு, அவருக்கு வழி விட்டார்.
ஆனந்தக் கண்ணீருடன் மௌனாவை ஆசீர்வதித்தான் அன்னபூரணி. சிவமணியோ, மகளின் கரத்தை அழுத்தித், அவளுக்குத் தன் மகிழ்வை உணர்த்தினார்.
அவர்கள் கீழிறங்கியதும்,"காங்கிராட்ஸ்!" என்று முக்தாவும், கிஷானும் ஜோடியாக வந்து வாழ்த்து தெரிவித்தனர்.
"தாங்க்யூ"
"சாரி டா கிஷான்! உன்னை ரொம்ப படுத்திட்டேன்!" என்று அவனிடம் மன்னிப்புக் கேட்டு விட்டான் மஹதன்.
"இவன் ஒருத்தன்! விடுடா" என நண்பனை ஆரத் தழுவிக் கொண்டான்.
மௌனா மற்றும் மஹதனுடன், கிஷான் மற்றும் முக்தாவும் இணைந்து நிற்க, அவர்களுடன் அகதாவும் சேர்ந்து கொண்டு, புகைப்படங்கள் எடுத்துக் கொண்டனர்.
இவர்களது ஒற்றுமையைப் பார்த்து நீலகண்டனுக்குப் பெருமை முகிழ்த்தது.
இவ்வளவு நேரமாக நண்பனுடன் அலைந்தவரோ, மணமக்கள் மேடையேறியதும், நாற்காலியில் வந்து அமர்ந்து கொண்டார் அவர்.
அவரது விழிகளோ மகளைத் தான் நொடிக்கு நொடி பார்த்துக் கொண்டு இருந்தது.
ஏனெனில், அவளிடம் தென்பட்டப் புன்னகையும், ஆனந்தமும் கடையில் வாங்கித் தரும் பொருள் அல்லவே?
கிஷானுடனான அவளது ஜோடிப் பொருத்தத்தைக் கண்களில் நிரப்பிக் கொண்டு, முகிழ்நகையுடன் அமர்ந்திருந்தார் நீலகண்டன்.
- தொடரும்
மௌனா & மஹதனோட கல்யாணத்தைச் சீக்கிரமே முடிக்க முடிவெடுத்து இருக்கேன் ஃப்ரண்ட்ஸ். முக்தாவுக்கும், கிஷானுக்கும் மேரேஜ் செய்து வைக்கும் ப்ளான் இல்லை. அவங்க இஷ்டப்படி எப்போ கல்யாணம் செஞ்சுக்க விருப்பப்பட்றாங்களோ, அப்போ பண்ணிக்கட்டுமே!

கருத்துகள்
கருத்துரையிடுக