சிறிது நேரத்திற்குப் பின்னர், அனைவரும் உணவருந்தி முடித்ததும்,”நாங்க ரெண்டு பேரும் கிளம்புறோம்”எனப் பொதுவாக அறிவித்து விட்டுத் தன் மனைவியின் கையைப் பற்றினான் திருவாதிரன்.
“நானும் இனிமேல் நம்மளோட நிலபுலனை மேற்பார்வைப் பார்க்க வர்றேன்னுச் சொன்னதாக ஞாபகம்டா”என அவனுக்கு நினைவுபடுத்தினார் நஞ்சுண்டன்.
“ம்ஹ்ம். அது எனக்கும் ஞாபகம் இருக்குப்பா. நாங்க முன்னாடி போறோம். நீங்கப் பொறுமையாக வாங்க”எனக் கூறி விட்டு,
“போயிட்டு வர்றோம்”என்றவனோ, தனது மனைவியை அழைத்துக் கொண்டு ஜீப்பின் அருகில் வந்தான் திருவாதிரன்.
ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து விட்டவனோ,
தனது மனலவியைப் பார்த்து,“ஏறு விழி”என்றதுமே,
தானும் ஜீப்பில் ஏறி அவனுக்குப் பக்கத்து இருக்கையிலேயே அமர்ந்து விட்டிருந்தாள் பூவிழி.
அதில் அவளைப் பார்த்து மென்மையாகப் புன்னகைத்து விட்டு,”நான் உங்கிட்ட இவ்வளவு மாற்றங்களை எதிர்பார்க்கலை. இது ரொம்ப நல்லா இருக்கு! இனிமேல் இப்படியே எல்லார் கிட்டேயும் நடந்துக்கோ”என்று அவளைப் பாராட்டும் விதமாகவும், அவளுக்கு அறிவுரை அளிக்கும் வகையிலும் பேச்சை ஆரம்பித்தான் திருவாதிரன்.
அதில் அவனைத் திரும்பிப் பார்த்து, விரக்திப் புன்னகையை உதிர்த்து விட்டு,”மாறித் தானே ஆகனும்ங்க? இல்லைன்னா, இந்த உலகத்துல உயிர் வாழ முடிஞ்சிடுமா என்ன? அப்படி என்னை எல்லாரும் வாழ விட்ருவாங்களா என்ன? நானும் எங்க ஆத்தா மாதிரி வெவரங்கெட்டுப் போய் இருந்தால் இன்னும் இல்ல ஏறி மிதிப்பாங்க? அதேன், நான் என்னை மாத்திக்கிட்டேன்! அதே மாதிரி, எனக்கு உங்களோட பொண்டாட்டிங்குற கடமையையும், பொறுப்பையும் கொடுத்து இருக்கீய! நான் எப்பவுமே என்னோட கடமைப், பொறுப்பைத் தட்டிக் கழிச்சிட்டுப் போற ஆள் கிடையாது! அதனால் தான், நமக்குக் கல்யாணம் ஆன மறுநாளே அதுக்கான கடமை, பொறுப்பை எல்லாம் கையில் எடுத்துக்கிட்டேன்!”என்று வெறுமையான குரலில் மொழியவும்,
“ஓஹ்! அப்போ என் பொண்டாட்டிங்குற கடைமையையும், பொறுப்பையும் கூடத் தவறாமல் செய்வன்னு சொல்ற! அப்படித் தானே?”என்றவனிடம்,
அதற்கு,“ஆமாங்க!”என்று படக்கென்று பதிலளித்தாள் பூவிழி.
“ப்ச்! நீ சொல்வதும் சரி தான்! நாமப் பல வருஷமாக காதலிச்சுக் கல்யாணம் பண்ணிக்கிட்டவங்களா என்ன? ஒரு ஒப்பந்தத்தில் தானே கல்யாணம் செய்துக்கிட்டோம்! அப்பறம் இந்தக் காதல், மோதல், ஊடலை எல்லாம் எதிர்பார்க்க முடியுமா?”என அவளிடம் பொருமலுடன் கூறிக் கொண்டான் திருவாதிரன்.
அதில் அவனை முறைக்க மட்டுமே முடிந்தது அவளால்.
சிறிது நேரப் பயணத்திற்குப் பிறகுத் தங்களது காட்டை அடைந்தனர் இருவரும்.
“கண்ணுக்கு எட்டுன தூரம் வரைக்கும் இருக்கிற எல்லாமே நம்மளோட காடு தான்!”என அவளுக்குத் தெரியாததைப் பற்றிக் கூறுவதைப் போல் இருந்தது அதற்குப் பிறகான அவனது பேச்சுக்கள் முழுவதும்.
அதையெல்லாம் கேட்டு முடித்து விட்டு,”எனக்கு இந்த தகவல்கள் எல்லாம் முன்னாடியே தெரியும்!”என்றவளோ,
காட்டிற்குள் நுழையவும், அவளுக்குச் சற்று இடைவெளி விட்டுப் பின் தொடர்ந்து சென்றான் திருவாதிரன்.
காட்டில் வேலை செய்து கொண்டிருந்த ஆண்களும், பெண்களும் பூவிழியைப் பார்த்ததுமே,”நம்மக் கூடச் சேர்ந்து இங்கே வேலை செய்துக் கூலியை வாங்கிட்டு இருந்தவ! இப்போ சின்னவரோட பொண்டாட்டியாகி அவரையே தனக்குப் பாதுகாவலராக ஆக்கிட்டுச் சிலுப்பிட்டு வர்றதைப் பாரேன்!”எனத் தங்களுக்குள் பெருமூச்சுடன் முணுமுணுத்துக் கொண்டார்கள்.
“நீயும் இவங்க கூடக் கொஞ்ச நேரம் வேலை பார்க்கிறியா? நீ தான் வீட்டிலேயே ஆசைப்பட்டியே?”என்று மனைவியிடம் வினவ,
“ம்ம். கண்டிப்பாகப் பார்க்கிறேன்ங்க!”என்றவளிடம்,
“சரி. அப்போ இங்கே உனக்குப் பிடிச்ச வேலையைப் பாரு! மதியச் சாப்பிட்டு நேரம் வந்ததும் நான் வந்து உன்னை வீட்டுக்குக் கூட்டிட்டுப் போறேன்”எனக் கூறி விட்டு, அங்கேயிருந்த மேற்பார்வை ஆட்களிடம் அவளைப் பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தி விட்டுத் தனது அலுவலக அறைக்குள் சென்று விட்டிருந்தான் திருவாதிரன்.
அவன் போனவுடன் அங்கிருந்த காட்டு நெல்லிக்காய்களைச் சேகரித்து அவற்றிற்குரிய கூடையில் போட ஆரம்பித்தாள் பூவிழி.
அவளது கைப் பாட்டிற்கு வேலையைச் செய்து கொண்டிருந்தது.
ஆனால் அவளது மனமோ மிகவும் சோர்ந்து போயிருந்தது.
ஏனெனில் இங்கே தனது பேச்சுத் துணைக்காக கூட இவ்வளவு வருடங்களாக ஒரு தோழமையை ஏற்படுத்திக் கொள்ளாமல் போய் விட்டோமே என்று வருந்தினாள் பூவிழி.
அப்படி யாரையாவது தனது தோழியாக ஏற்றுக் கொண்டு இருந்து இருந்தால் இப்போது தனது மனதில் அமிழ்ந்து தன்னை வாட்டி எடுத்துக் கொண்டிருக்கும் கவலைகளை அவளிடம் கொட்டித் தீர்த்து ஆறுதல் அடைந்து இருக்கலாம்!
ஆனால் அந்தக் கொடுப்பினையும் தனக்கு இல்லை என்பதை எண்ணி
நொடிந்து போய் விட்டாள் பெண்ணவள்.
அங்கே வேலை பார்த்துக் கொண்டிருந்த மற்றப் பெண்கள் யாவரும் தன்னை அடிக்கடி பிரம்மிப்புடன் பார்ப்பதையும், பெருமூச்சு விட்டுக் கொள்வதையும் தானும் கவனிக்கத் தான் செய்தாள் பூவிழி.
ஆனால் அதையெல்லாம் கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் தனது வேலையில் மும்முரமாக இருக்கலானாள்.
இங்கு வீட்டிலோ தனது மனைவியிடம் சொல்லி விட்டுத் தனது தாயையும், தந்தையையும் சமாதானம் செய்யப் போயிருந்தான் அறிவொளி.
அவர்கள் இருவருக்கும் முதலிரவு நடக்கவில்லை என்பது அவளுக்கு நன்றாகத் தெரியும்!
முந்தைய நாள் இரவு தனது அக்காவிடம் அவளது கணவனைக் கைக்குள் போட்டுக் கொள்ளுமாறு அறிவுரை அளித்தவளுக்கு இப்போது அவர்கள் இருவருக்குள்ளும் எதுவுமே நடக்காதது இந்த வீட்டில் தன்னுடைய இடத்தை இன்னும் ஸ்திரமாக மாற்றிக் கொள்வதற்குத் தனக்குச் சாதகமாக இருக்கும் என்றெண்ணி வெற்றிச் சிரிப்பை உதிர்த்தாள்.
அதே நேரத்தில், தனது தமக்கையும், கொழுந்தனும் இப்படி திருமணம் ஆகிய அடுத்த நாளே ஊர் சுற்றக் கிளம்பி விட்டதை எண்ணிப் புகைச்சல் உண்டாகியது செந்தாழைக்கு.
“இவர் வேற அம்மாவை, அப்பாவைச் சமாதானப்படுத்தப் போறேன்னு என்னைத் தனியாக விட்டுட்டுப் போயிட்டாரு! திரும்ப வரட்டும் அப்போ வச்சுக்கிறேன் சங்கதியை!”என்று கடுப்புடன் கூறிக் கொண்டாள்.
அதே சமயத்தில் தன் தாய் மற்றும் தந்தையுடன் சமாதானப் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டு இருந்தான் அறிவொளி.
“நான் செஞ்சது மிகப் பெரியத் தப்பு தான்! அதுக்காக நீங்க ரெண்டு பேரும் என்னையும், எம்பொண்ட்டியையும் இப்படி எத்தனை நாளைக்குக் கரிச்சுக் கொட்டிட்டே இருக்கப் போறீங்க? திருவைப் பார்த்தீங்களா? அவன் வச்சது தான் சட்டம்ன்ற மாதிரி தனக்குத் தேவையானதைச் சாமர்த்தியமாகச் செய்துக்கிறான்! ஆனால் எனக்குத் தான் அந்தக் கூறு இல்லை போல! நாம எல்லாரும் அவங்கிட்டே காலம் முழுக்க கையேந்திட்டுத் தான் இருக்கப் போறோம் போல! எனக்கு இப்போ குழந்தைப் பொறக்கப் போகுது! அது நம்ம வீட்டு வாரிசுன்ற எண்ணம் இருக்கா? இல்லையா? அதைப் பத்தி உங்க ரெண்டு பேருக்குமே நெனைப்பு இல்லையே! அப்போ என்னிய மாதிரியே திருவோட குழந்தையைத் தலையில் தூக்கி வச்சுக் கொண்டாடிட்டு எம்புள்ளைய அப்படியே விட்டுடப் போறீங்களா?”எனத் தங்களிடம் உணர்வுப்பூர்வமாகப் பேசிய மகனைக் கண்டு அவனது பெற்றோருக்குச் சங்கடமாகிப் போனது.
“நம்ம வீட்டுக்கு வாரிசு வரப் போறதை நினைச்சு எங்களுக்குச் சந்தோஷமாகத் தான் இருக்கு! ஆனால் நீ ஆரம்பிச்சு வச்சது தான் இந்த வீட்டுக்குக் கொஞ்சமும் சமதை இல்லாதவங்க மருமகள்களாக வந்திருக்காங்க! அந்தக் கோபமும், ஆத்தாமையும் எங்களுக்கு இருக்காதாடா?”என்று ஆதங்கத்துடன் கேட்டார் ராஜகுமாரி.
“செந்தா நம்ம சாதிக்கும், ஆஸ்திக்கும் சமதை இல்லாதவ தான்ம்மா! ஆனால் அவ ரொம்ப நல்லப் பொண்ணும்மா! அவளுக்கு வெவரம் பத்தாது! நானே உலகம்னு நினைச்சுக்கிட்டு என் மேல் முழு நம்பிக்கை வச்சு இருக்காள்! அவளை என்னால் கை விட முடியாதும்மா! அதனால் தான் தாலியைக் கட்டி அவளோட வாழ்ந்துட்டேன்!”என்று குற்ற உணர்வுடன் கூறினான் அறிவொளி.
அதைக் கேட்டதுமே,’அவளா வெவரம் தெரியாதவ? என்னம்மா சொம்புத் தூக்குறியான் பாரு!’என மனதிற்குள் பொருமி விட்டு,
“அது எங்களுக்குப் புரியுதுடா! ஆனால் உங்க கல்யாணத்தப்போ நம்மச் சாதி, சனம் எல்லாம் என்னையும், உங்கப்பாவையும் எம்புட்டு எகத்தாளப் பேச்சுப் பேசினாங்கன்னுத் தெரியுமா? அந்த ஆதங்கத்துல கொஞ்சம் அதிகமாக வாரத்தையை விட்டுட்டோம்! அதுக்காக நாங்க உன்னையும், மருமகளையும் அப்படியே ஒதுக்கி வச்சுட மாட்டோம்! இதோ நீ கூட வந்து எங்க கிட்ட சமாதானமாகப் பேசிட்டு இருக்கிற! ஆனால் திருவைப் பாரு! அவனுக்குப் பிடிச்சதை மட்டும் செஞ்சிட்டு எங்களை மதிக்க மாட்டேங்கிறான்! நீயாவது எங்களுக்கு எப்பவும் ஆதரவாக இருப்பியா? இல்லை, நீயும் அவனை மாதிரியே ஆகிடுவியோன்னு எங்க மனசுக் கெடந்து தவிக்குதுய்யா!”என்று அவனிடம் தனது பேச்சாற்றலை வெளிப்படுத்தினார் ராஜகுமாரி.
“ஆமாம் அறிவு! எங்களோட கடைசி காலத்தில் உங்க ரெண்டு பேரில் யாராவது ஒருத்தர் எங்க கூட இருப்பீங்கன்னு நம்புனோம்! ஆனால் இப்போ அது நடக்காதோன்னுத் தோனிடுச்சுப்பா!”என்று தானும் மனைவிக்கு நிகராக மகனை மூளைச்சலவை செய்யத் தொடங்கினார் நஞ்சுண்டன்.
“ம்ஹூம்! ஒருவேளை திருவுக்குக் கட்டம் சரியில்லை போல! உங்க ரெண்டு பேரோட சாதகத்தை ரொம்ப வருஷமாக எடுத்து சோசியர் கிட்டே பார்க்கவே இல்லை! இப்போ கூட உங்களுக்குக் கல்யாணம் ஆனதுக்கு அப்பறம் மறு வீட்டுச் சம்பிரதாயம் இருக்கு! அதைக் கூட நடத்த நாதி இல்லாமல் போயிடுச்சே!”என்று துக்கத் தொண்டையை அடைப்பதைப் போல் கூறிய தாயிடம்,
“அதுக்கென்னம்மா? நம்ம வீட்டில் காசு, பணத்துக்குக் குறைச்சலா என்ன? நீங்க உங்க விருப்பம் போல எங்களுக்குதஅ தடபுடலாக விருந்து சமைச்சுப் போடுங்க! நானும், எம்பொண்டாட்டியும் நீங்க எங்க கல்யாண விஷயத்தில் என்ன சம்பிரதாயம் செய்யனும்னு நினைச்சாலும் அதை நாங்க கண்டிப்பாக ஏத்துக்குவோம்!”என்றவனைக் கொலைவெறியுடன் ஏறிட்டுப் பார்த்தவரோ,
அவனது விழிகள் தன்னை நோக்கியதும் முகத்தைப் பாவமாக வைத்துக் கொண்டு,”அப்படின்னா சரிப்பா. இந்த வாரக் கடைசியில் உங்க ரெண்டு ஜோடிக்கும் மறு வீட்டு விருந்து போட்றோம்! அதே மாதிரி, நீ எப்பவும் எங்களுக்கு ஆதரவாக இருப்பா தானே?”என அவனிடம் கெஞ்சலாக கேட்டார் ராஜகுமாரி.
“செந்தா கர்ப்பமாக இருக்கிறாள்! அவளுக்குப் பக்குவம் பார்த்துச் சமைச்சுப் போடனும்மா”என்றவனை மனதிற்குள் அர்ச்சித்து விட்டு,
“அது எனக்குத் தெரியாதா அறிவு? அவளுக்கு மட்டும் தனியாகப் பக்குவமாகச் சாப்பாடு செஞ்சித் தர வேண்டியது எம்பொறுப்பு! நீ கவலையேபடாதே! எம்மருமகளை இனிமேல் நான் பார்த்துக்கிறேன்!”என்று அவனுக்கு உறுதி அளிக்க,
“சரிம்மா”எனக் கூறிப் புன்னகைத்தான் அறிவொளி.
“திருவும், அவம்பொண்டாட்டியும் காட்டுக்குப் போய் ரொம்ப நேரமாச்சு! நானும் இப்போ கிளம்பி அங்கே போறேன். மதியச் சாப்பாட்டுக்கு மூனு பேரும் வந்துட்றோம்”என்று அவர்கள் இருவரிடமும் தெரிவித்த கணவரை வழியனுப்பி விட்டு,
“நீ போய் மருமகளைப் பாருப்பா”என மகனை அனுப்பியவரோ வெற்றிக் களிப்பில் புன்னகைத்துக் கொண்டு மதிய உணவைத் தயாரிக்குமாறு வேலையாட்களிடம் கட்டளையிட்டு விட்டு அறைக்குச் சென்றார் ராஜகுமாரி.
இதே சமயம், தங்களது காட்டை வந்தடைந்து, அங்கே வேலை செய்து கொண்டிருந்த தனது இளைய மருமகளை ஒரு பார்வைப் பார்த்து விட்டு அலுவலக அறைக்குள் நுழைந்தார் நஞ்சுண்டன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக