அதில் உடனே தனது நாற்காலியில் இருந்து எழுந்து விட்டிருந்தான் அறிவொளி.
அதைச் சலிப்புடன் பார்த்து விட்டு,”இவருக்கு என்னவாம் பிரச்சினை? பொண்டாட்டி காதைக் கடிச்சிட்டாளே போதும்! பொங்கி எழுந்து வந்துருவாரு!”என்று முணுமுணுத்து விட்டு,
“என்னாச்சு அண்ணா?”என்று அவனிடம் போலிப் பவ்யத்துடன் கேட்டான் திருவாதிரன்.
“இங்காருடா! புருஷனும், பொண்டாட்டியும் சேர்ந்துக்கிட்டு எங்களுக்கு மட்டும் என்ன ஓரவஞ்சனை செய்றீயலா? எதுவாக இருந்தாலும் எல்லாத்துக்கும் சேர்த்துச் செய்யலாம்ல? அந்தப் பொண்ணே செய்ய முன்னுக்க வந்தாலும் நீ விட மாட்டே போலவே?”என்று அவனிடம் கடுகடுத்தான் அறிவொளி.
“ஓஹ்! நீ அப்படி வர்றியா?”என்றவனோ சட்டென்று தனது மனைவியின் கரங்களைப் பிடித்து இழுத்துக் கூடத்தின் நடுவில் நிறுத்தி,”இங்காரும்மா! எங்கண்ணனோட கேள்விக்கு நான் பதில் சொல்லப் போவதில்லை! ஏன்னா, அவர் கேட்டது உன்னைப் பத்தின கேள்வி! அதனால் நீயே அவருக்கு மட்டுமில்லாமல் இங்கே இருக்கிற எல்லாருக்கும் புரியும்படியாகப் பதில் சொல்லிரு!”என்று மனைவியிடம் அறிவுறுத்தினான்.
ஆனால் அவனைக் தயக்கத்துடன் பார்த்தாள் பூவிழி.
அதில் ஏமாற்றத்தில் சுருங்கிப் போயிற்று அவனது முகம்.
அதைக் காணச் சகிக்காமல்,”அதேன் இங்கே ஊருப்பட்ட வேலைக்காரவுக இருக்காவளே? அப்பறம் என்னை எதுக்கு வேலை ஏவுறீய? நான் என் புருஷனுக்காக மட்டும் தான் வேலைப் பார்ப்பேன்! மத்தவுகளுக்கு கொளுத்து வேலைச் செய்யனும்னு எனக்கு என்னத் தலைவிதியா?”என்று நச்சென்றப் பதில் ஒன்றைச் சொல்லி விட்டிருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டு திருவாதிரனின் இதழ்கள் மலர்ந்தது என்றால், மற்றவர்களோ மின்சாரம் தாக்கியதைப் போன்ற அதிர்ச்சியில் உறைந்து போயினர்!
அவர்களில் முதலில் தெளிந்தது செந்தாழை தான்!
“அக்கா! என்ன வார்த்தை எல்லாம் தடிச்சு வந்து விழுது! கொஞ்சம் பார்த்துப் பேசுத்தா! இது நம்ம வாழ வந்திருக்கிற வீடு! இங்கே எல்லாரையும் அனுசரிச்சுப் போகனும்! அப்போ தான் குடும்பத்தில் பிரச்சினை இல்லாமல் இருக்கும்! நேரத்தைப் பார்த்தியா? உனக்கு இதையெல்லாம் நான் சொல்ல வேண்டியதாக இருக்கு! இதை தான் உங்க ஆத்தா உங்களுக்குச் சொல்லிக் கொடுத்துச்சான்னுக் கேட்கிற மாதிரி வச்சுக்காதே!”என்று தமக்கைக்கு எச்சரித்தாள்.
அதைக் கேட்டு யாரும் அறியாமல் அவளைப் பார்த்து வில்லிச் சிரிப்புச் சிரித்தார் ராஜகுமாரி.
“ஆஹ்ஹா! என்ன ஒரு அருமையான அறிவுரை! அதுவும் உங்க சொந்த அக்காவுக்கு இப்படியெல்லாம் அறிவுரை சொல்றப் பாரேன்ம்மா! அங்கே நிற்கிற நீ!”என்று அவளைப் புகழ்வதைப் போல் கேலி செய்தான் திருவாதிரன்.
“டேய்! அவ சொல்றதுல என்னத் தப்பிருக்கு?”என்று எகிறிய அறிவொளியைக் கண்டு கொள்ளாமல்,
“என்னைத் தானே பதில் சொல்ல சொன்னீங்க? இப்போ நீங்கப் பேசிட்டு இருக்கீங்க? எந்தங்கச்சி கிட்டே நான் பேசிக்கிறேன்”எனத் தனது கணவனிடம் எரிந்து விழுந்தாள் பூவிழி.
அதில் ஆச்சரியம் அடைந்து தனது புருவத்தை ஏற்றி, இறக்கி விட்டுத் தனது தோள்களைக் குலுக்கிக் கொண்டு அமைதியாகி விட்டான் திருவாதிரன்.
“இங்காரு செந்தா! நேத்து தான் கல்யாணம் ஆகி இந்த வீட்டுக்கு மருமகளாகி இருக்கேன். அதனால் வேணும்னா இன்னைக்கு மட்டும் நான் எல்லாருக்கும் காபி போட்டுக் கொடுத்துச், சமைச்சு வைக்கிறேன்! ஆனால் இந்த வேலையை எல்லாம் நெதமும் செய்வது என்னால் முடியாது! ஏன்னா, இங்கே தான் இத்தனை வேலைக்காரங்க இருக்காங்களே? அப்பறம் நான் எதுக்குத் தனியாக வேற ஊழியம் பார்க்கனும்? அதே மாதிரி புருஷனோட தேவைகளை அறிஞ்சு நடந்துக்கிறவ தான் நல்ல பொண்டாட்டின்னும் கூட நம்ம ஆத்தா நமக்குச் சொல்லிக் கொடுத்தாவளே? அது உனக்கு மறந்து போச்சா? நான் ஒரு இடத்தில் காலை ஆட்டிக்கிட்டுச் சும்மா உட்கார்ந்து இருக்க முடியாது! அதனால் நான் ஒரு வாரம் கழிச்சு காட்டு வேலைக்குப் போவலாம்னு இருக்கேன்”என்று உறுதியாக உரைத்து இருந்தாள் பூவிழி.
அதைக் கேட்டதுமே கொதித்துப் போய்,”என்னப் பேசுறவ? இந்த வீட்டு மருமக காட்டு வேலைக்குப் போறதா? கூறு கெட்டச் சிறுக்கி மவளே! வாயை மூடிக்கிட்டு வீட்டோட இருந்து தொலை!”என்ற அன்னையிடம்,
“அம்மா! அதென்ன வீட்டு மருமகள்ன்ற நெனைப்பே இல்லாமல் கண்ட மேனிக்கு வார்த்தையை விட்டுட்டு இருக்கீங்க? இது ரொம்பத் தப்பும்மா!”என்று கடுமையாக அறிவுறுத்தினான் திருவாதிரன்.
ஆனால்,”அவுக என்னைப் பேசுறதுக்கு எல்லா உரிமையும் இருக்குச் சின்னவரே! நீங்க உங்கப் பொண்டாட்டிக்கு மட்டும் கொடி பிடிங்க போதும்”என்று அவனிடம் அறிவித்தாள் செந்தாழை.
“அப்போ சரிங்க அண்ணியாரே! என் பொண்டாட்டிக்கு இந்த வீட்டில் எல்லா உரிமையும், அதிகாரமும் இருக்கு! அவ காட்டு வேலைக்குப் போகனும்னு விருப்பப்பட்றாள்ன்னா அதைச் செய்ய அவளுக்கு எந்தத் தடையும் இல்லை! அவ தப்புச் செஞ்சா மட்டும் தான் அவளைக் கேள்விக் கேட்கிற உரிமை உங்களுக்கு இருக்கு! நான் அவளை எதுக்காகவும் கட்டாயப்படுத்த மாட்டேன்! அதனால் நீங்களும் அவங்க, அவங்க வேலையைப் பார்த்தால் நல்லா இருக்கும்!”எனத் தன் மனைவிக்கு ஏற்றுப் பேசிய இளைய மகனிடம்,
“உன்னோட இந்த முடிவுக்கு நாங்க கட்டுப்பட்றோம்! அதே மாதிரி நானும் இனிமேல் உன் கூட நம்ம எல்லா சொத்தையும் மேற்பார்வையிடலாம்னு நினைக்கிறேன்! என்ன வரலாம் தானே திரு?”என்று ஏளனமாக வினவினார் நஞ்சுண்டன்.
அதற்கு எந்த மறுப்பையும் தெரிவிக்காமல்,”நீங்க தாராளமாக வாங்கப்பா! எனக்கும் பாதி வேலைக் குறையும்! நீங்களாவது கொஞ்சம் கூறோட நடந்துப்பீங்கன்னு நம்புறேன்!”என்று அவருக்கும், தனது தமையனுக்கும் ஒரு குட்டு வைத்தான் திருவாதிரன்.
அதில் முகம் கருக்க,”எனக்கு ஒரு மாதிரி தலை சுத்துதுக்கா! இன்னைக்குத் தான் உன்னோட சமையலாச்சே? அதனால் காப்பிப் போட்டு எடுத்துட்டு வர்றியா?”என்று தன் சகோதரியிடம் பாவமாக கேட்டாள் செந்தாழை.
“ம்ஹ்ம். சரி”என்று சமையலறைக்குப் அங்கேயிருந்த மேடையைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் சிறிது நேரத்திலேயே அனைவருக்கும் காப்பிப் போட்டு எடுத்து வந்து விட்டிருந்தாள் பூவிழி.
முதலில் செந்தாழைக்குத் தம்ளரைக் கொடுத்து விட்டுப் பிறகுத் தனது கணவனுக்குத் தந்து விட்டு மற்றவர்களுக்கு விநியோகிக்க,
“உனக்கானதை நீ தான் எடுத்துக்கோனும்! யாரும் உனக்காகப் பார்த்துச் செய்ய மாட்டாங்க!”என்று மனைவியிடம் அழுத்தமாக அறிவுறுத்தினான் திருவாதிரன்.
அவனது வார்த்தைகளில் இருந்த உண்மைச் சுட்டாலும் அவன் கூறிய விஷயம் உண்மை தானே? என்றெண்ணியவளோ தனக்கான காப்பித் தம்ளரை எடுத்துக் கொண்டவளை,”நான் குளிச்சிட்டு வந்ததுக்கு அப்பறம் உனக்கு இந்த வீட்டைச் சுத்திக் காட்றேன்!”என்று அவளிடம் தெரிவித்து விட்டுத் தனது காப்பியை உறிஞ்ச,
அதைக் கேட்டு மனதிற்குள்ளேயே பொருமிக் கொண்ட மற்றக் குடும்ப உறுப்பினர்களோ, தங்களது காப்பியைக் குடித்து முடித்திருந்தார்கள்.
“நீங்க போய்க் குளிங்க. நான் காலைச் சாப்பாட்டைச் சமைக்கிறேன்”எனத் தன் கணவனிடம் மொழிந்து விட்டுத் தனது சேலை முந்தானையை இடையில் சொருகிக் கொண்டவளோ மீண்டும் சமையலறைக்குள் நுழையப் போனவளை,
“அப்படியே எனக்கு ஒரு சூஸைப் போட்டுக் கொண்டு வா அக்கா”என்று அவளிடம் பவ்யமாக கேட்டாள் செந்தாழை.
உடனே வேலையாளிடம் திரும்பி,”அதான் கேட்கிறாகள்ல? அவுகளுக்குச் சூஸைப் போட்டு எடுத்துட்டு வந்து கொடுங்க! இப்படி மச, மசன்னு நின்னுட்டு இருந்தால் வேலையாகாது! ம்ம்! போங்க!”என உத்தரவிட்டு விட்டு அடுக்களைக்குள் சென்று மறைந்து விட்டாள் பூவிழி.
தனது மனைவியின் அதிரடியைக் கண்டு மென்னகைப் புரிந்து விட்டு,’இனிமேல் இவளே பார்த்துக் கொள்வாள்!’என்ற நிம்மதியுடன் குளிக்கச் சென்று விட்டான் திருவாதிரன்.
ஆனால் தனது தமக்கையின் அந்த அதிகாரத் தோரணையான பேச்சில் தன் மூக்குக், காதுகளில் இருந்து புகை வராத குறையாக உர்ரென்று மாறி விட்டது செந்தாழையின் முகம்.
ஆனால்,’மூத்த மருமகளை வச்சு எல்லாத்தையும் சாதிக்கலாம்னு நான் திட்டம் போட்டு வச்சா இளைய மருமக இவளுக்கும் மேலே இருக்காளே! நாம பேசாமல் பூவிழிக்குக் கொடி பிடிக்க ஆரம்பிச்சிடலாமா?’என ராஜகுமாரியை அவரது மூளை அவரை வேறு திசையில் யோசிக்க வைத்தது.
“ஏ புள்ள பூவு! இங்கே வா”என்று தனது இளைய மருமகளை உரக்க அழைத்தார் ராஜகுமாரி.
அதைக் கேட்டவுடனே உடனே அங்கே பிரசன்னம் ஆனாள் பூவிழி.
“என்ன நீ பாட்டுக்குச் சமைக்கப் போறேன்னு உள்ளே சமையக்கட்டுக்குள்ளே நுழைஞ்சிட்டே? என்னச் சமைக்கனும்னு எங்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டியா? அப்பறம் நான் எதுக்கு மாமியார்னுக் குத்துக்கல்லு மாதிரி இங்கே நின்னுட்டு இருக்கேன்?”என்று அவளிடம் அதிகாரமாக வினவினார் ராஜகுமாரி.
“அதானே! புள்ளத்தாச்சிப் பொண்ணு வேற இருக்காள்! நீ பாட்டுக்கு எனக்கு என்னன்னு எதையாவது கிண்டிக் கொடுப்பே! அதை நாங்க சாப்பிடனுமா?”என்று மனைவிக்கு ஒத்து ஊதினார் நஞ்சுண்டன்.
அதில் சலிப்பாக,”எனக்கும் நல்லாவே சமைக்கத் தெரியும் மாமா! அதே மாதிரிப் புள்ளத்தாச்சிப் பொண்ணுக்கு என்ன செஞ்சிக் கொடுக்கனும்னும் எனக்குத் தெரியும்”என்று அவருக்குப் பதிலளித்து விட்டு,
தன் மாமியாரிடம்,”என்னச் சமைக்கனும்னு சொல்லுங்க!”என்று கேட்டாள் பூவிழி.
“ம்ஹ்ம். உங்கிட்ட எல்லாத்தையும் ஒன்னு, ஒன்னாகச் சொல்லிக் கொடுக்கோனும் போல!”என்று நொடித்துக் கொண்டவரோ,
அவள் என்னென்ன உணவுப் பதார்த்தங்களைச் சமைக்க வேண்டும் என்றக் குறிப்பைச் சொல்லி முடித்தார் ராஜகுமாரி.
அவர் கூறியது நான்குப் பதார்த்தங்கள் மட்டுமே என்பதால் நிம்மதி அடைந்து கொண்டு,”இப்போதாவது நான் சமைக்கப் போகட்டுமா? இல்லைன்னா, இங்கேயே நின்னு உங்களோட உத்தரவுக்காக காத்திருக்கவா?”என்று அவரிடம் குத்தலாக கேட்டிருந்தாள் பூவிழி.
“ம்ம். நீ போய்ச் சமைக்கலாம்”என்று அவளுக்கு உத்தரவிட்டு அனுப்பி வைத்து விட்டு,
“உங்கக்கா நல்லா சமைப்பாளா?”என்று செந்தாழையிடம் வினவினார் ராஜகுமாரி.
அவளோ,”அதெல்லாம் எல்லாம் நறுவிசாகச் சமைப்பாள்த்தை! உங்களுக்கு அதைப் பத்தின கவலையே வேண்டாம்! நானும் வகை, தொகையாக சமைப்பேன்! ஆனால் என்னப் பண்றது என்னால் இப்போ எதுவுமே செய்ய முடியாமல் போயிடுச்சே!”என்று பரிதாபமாக உரைக்க,
அதைக் கேட்டு,”அதுக்கு என்னம்மா? குழந்தை பிறந்து கொஞ்சம் மாசம் ஆனதும் நீ எங்களுக்கு உன் கையாலே விருந்தே சமைச்சிப் போட்ரு”என்று தன் கணவன் கூறியதைக் கேட்டதும்,
'தனக்குச் சமைக்கத் தெரியாது என்பதை இவர்களுக்குத் தெரிந்து விட்டால் தன்னை இவர்கள் கீழ்த்தரமாக நினைத்து விடுவார்களே!’என்று திடுக்கிட்டுப் போனாலும்,
அதை மறைத்துக் கொண்டு,”அதுக்கென்ன விருந்து வச்சிடலாம் மாமா”என்று கணவனிடம் கூறிப் புன்னகைத்தாள் செந்தாழை.
அப்போது தனது குளியலை முடித்துக் கொண்டு வந்த திருவாதிரனோ,”அண்ணா! நான் ஒரு வாரத்துக்கு நம்ம நிலபுலனைப் பார்த்துக்க வர மாட்டேன்! அந்த நாட்களப்போ நீ தான் அதையெல்லாம் பார்த்துக்கப் போற! அது உனக்கு ஞாபகம் இருக்குத் தானே?”என்று தமையனிடம் கேட்க,
அவனோ தனது எள்ளும், கொள்ளும் வெடிக்க,“ஞாபகம் இருக்குடா. காலைச் சாப்பாட்டைச் சாப்பிட்டதும் கிளம்ப வேண்டியது தான்”என்றிருந்தான் அறிவொளி.
அப்போது,“சாப்பாடு தயார்!”என்ற அறிவிப்புடன், முன்னால் வந்தப் பூவிழிக்குப் பின்னால் தங்கள் கைகளில் உணவுப் பாத்திரங்களுடன் அவளைப் பின் தொடர்ந்து வந்து பாத்திரங்களைச் சாப்பாட்டு மேசையில் அடுக்கி வைத்து விட்டு ஒதுங்கிக் கொண்டார்கள் வேலையாட்கள்.
“எல்லாரும் பேசிப், பேசி சக்தியை இழந்து இருப்பீங்க! அதனால் வெரசா வந்து உட்கார்ந்து சாப்பிடுங்க”என்று வேறு அனைவருக்கும் ஆணையிட்ட பூவிழியைப் பொறாமையுடன் நோக்கியது செந்தாழையின் விழிகள்.
அதனால் எழுந்த கோபத்தில்,”எம்புருஷன் என் பக்கத்தில் இருக்கோனும்ன்ற நெனைப்பு இருக்காதா எனக்கு? இப்படி பொட்டுல அடிச்சாப்புல என்னை விட்டுத் தூரமாகத் தொரத்தி விட்றீய? என்னா சங்கதி?”என்றாள் திருவாதிரனிடம்.
அவனோ அவளைக் கண்டு கொள்ளாமல் அனைவருக்கும் தன் கையாலேயே உணவைப் பரிமாறிய மனைவியிடம்,
“நீயும் உட்கார்ந்து சாப்பிடுத்தா!”என்று கனிவுடன் மொழிந்தான்.
உடனே தானும் அவனுக்கு அருகிலிருந்த நாற்காலியில் அமர்ந்து கொண்டுத் தனது தட்டில் உணவைப் பரிமாறி அதை உண்ணத் தொடங்கி விட்டாள் பூவிழி.
“உன் அண்ணிக் கேட்டதுக்குப் பதில் வரலைடா இன்னும்?”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
“ம்ஹ்ம். சொல்றேன்ப்பா”என்றத் திருவாதிரனோ,
“அண்ணி! உங்களுக்கும், அண்ணனுக்கும் குழந்தையே பொறக்கப் போவுது! ஆனால் எங்க ரெண்டுப் பேருக்கும் நேத்து தான் கல்யாணமே ஆச்சு! அதுவும் எங்களுக்கு ஒருத்தருக்கு, ஒருத்தர் பழக்கமே இல்லை! பழகிப் பார்க்கிறதுக்கு இந்த ஒரு வாரம் தேவைப்படுதே! என்னப் பண்ண?”என்று தங்களது பலவீனத்தையே குறி வைத்து அடித்து அதையே தனது அனைத்து செயல்களுக்கும் காரணமாக கூறும் தம்பியைக் கொடூரமாக முறைத்துப் பார்த்து,
“எங்களுக்குக் குழந்தை வரப் போறதையே எல்லாத்துக்கும் காரணமாகச் சொல்லிட்டு இருக்கிறதை இத்தோட நிப்பாட்டிக்க திரு! இதனாலேயே நமக்குள்ளே சீக்கிரம் சண்டை வந்தாலும் அது ஆச்சரியப்பட்றதுக்கு இல்லை!”என்று அவனுக்கு எச்சரிக்கை விடுத்தான் அறிவொளி.
“அப்போ நீங்களும் உங்களுக்குப் புள்ளப் பொறக்குறதைச் சாக்காக சொல்லி எந்த வேலையையும் செய்யாமல் இருக்கிறது எனக்கும் சரியாகப்படலை அண்ணா! நேத்து வரைக்கும் உன்னோட பங்கு வேலையையும் நான் தான் பார்த்துட்டு ஆனால் இப்போ நானும் குடும்பஸ்தன் ஆகிட்டேன்! இதுக்கப்புறம் நம்ம நிலபுலனே கதின்னு என்னால் அங்கேயே காவ காத்துட்டு இருக்க முடியாது! நானும் என்னோட பொண்டாட்டியைக் கவனிக்கனும்ல? அதான் சொல்றேன்!”என்று அவனிடம் உறுதியாக உரைத்தான் திருவாதிரன்.
“அதான் உம் பொண்டாட்டிக் காட்டு வேலைப் பார்க்கப் பிரியப்பட்றாளே? அதனால் அவளைக் கூட்டிட்டு எல்லா இடத்துக்கும் சுத்த வேண்டியது தானே? எதுக்கு உங்கண்ணனைச் சிரமப்படுத்துற?”என மூத்த மகன் மற்றும் மருமகளுக்காக வாதாடினார் ராஜகுமாரி.
“ம்ஹ்ம்! இதுவும் நல்ல யோசனையாக இருக்கே!”என்ற பூவிழியோ,
“இந்த வீட்டை இவுகளே கட்டி ஆளட்டும்ங்க! நான் உங்க கூட எல்லா இடத்தையும் சுத்திப் பார்க்கனும்னு ஆசைப்பட்றேன்! அதனால் நாமளே நிலபுலனைப் பார்த்துக்கலாம்!”என்று கணவனிடம் கேட்டுக் கொண்டாள்.
உடனே அவளைக் கூர்மையாக ஆராய்ந்து விட்டு,
“உன் விருப்பம் அது தான்னா அப்படியே செய்யலாம் விழி! சாப்பிட்டு முடிச்சிட்டு வா. நம்மக் குடும்பத்தோட கட்டுப்பாட்டுக்குள்ளே இருக்கிற எல்லா இடத்துக்கும் போயிட்டு வரலாம்!”என அவளுக்கு வாக்களித்து விட்டு உணவுண்ணத் தொடங்கினான் திருவாதிரன்.
அதில் தானும் நிம்மதியுற்று உணவில் கவனம் செலுத்தினாள் பூவிழி.
இதைக் கண்ணுற்று விட்டு மற்ற நால்வரும் ஒன்றும் புரியாமல் அவர்களைப் பார்த்து விழிக்கவும்,”சாப்பாடு ஆறிடப் போகுது! சூடாக இருக்கிறப்போவே சாப்பிட்ருங்க”என்று அவர்களுக்கு அறிவுறுத்தினான் திருவாதிரன்.
அதில் தங்களது தட்டிலிருந்த உணவை உண்ண ஆரம்பித்தார்கள் நஞ்சுண்டன், ராஜகுமாரி, அறிவொளி மற்றும் செந்தாழை.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக