முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 15

 


அகதாவுடன் அமர்ந்திருந்த முக்தாவிற்கு, யாரும் பாராமல் தன்னை ரசிக்கும் கிஷானின் விழி வீச்சை எதிர்கொள்ளவே, பிரயத்தனமாக இருந்தது.


கண்களால் போதும் என்று கெஞ்சினாலும் பலனில்லை‌.


ஒருவாறு சாப்பாடு முடிந்து, மீண்டும் மேடை ஏற்றப்பட்டார்கள் ஜோடிகள்.


அந்த நேரம், தற்காலிகமாக அகதா கீழே சென்றிருந்ததால், முக்தாவை ஒட்டி வந்து நின்று கொண்டான் கிஷான்.


அவனை அவளருகில் பார்த்தவர்கள் எல்லாரும்,"இந்தப் பையன் அப்போதிலிருந்தே நீலகண்டனோட பொண்ணைத் தான் பாத்துட்டு இருந்தான். இப்போ பக்கத்திலேயே போய் நின்னுட்டான்" என்று பேசிக் கொண்டனர்.


அவையெல்லாம் கௌசல்யாவின் செவிகளையும் அடைந்தது.


"சித்ரலேகாவோட பையன் தான? ஆனால், அந்தப் பொண்ணு கௌசல்யாவோட பையன் பின்னாடியே தான் சுத்திட்டு இருந்தாள், இப்போ இவனைப் பிடிச்சிட்டாளா?" என்று அவர்களை நோட்டம் விட்டுக் கொண்டே பேசினர்.


இதைக் கேட்டுக் கொண்டு இன்னும் அமைதியாக இருக்கலாகாது என்ற வண்ணம், அவர்களை நோக்கிய கௌசல்யா,"ஹலோ மிசஸ்.கரீஷ்மா! நீங்கப் பேசினதை எல்லாம் கேட்டுக்கிட்டு தான் இருந்தேன்.முக்தாவுக்கு அந்தப் பையனைத் தான் கல்யாணத்துக்குப் பேசி இருக்கோம். மஹதனோட மேரேஜ் முடிஞ்சு, அடுத்து இவங்களுக்குத் தான்" என்று புன்னகைக்கவும்,


அந்தக் கரீஷ்மா என்பவர், அவருக்குத் திகைப்பு ஏற்படாமல், "ம்ம். சந்தோஷம் மிசஸ்.கௌசல்யா! ஆனால், சித்ரலேகாவுக்கு இதில் இஷ்டமா?" என்று அப்போதும் ஏளனத்துடன் தான் கேட்டார்.


"இஷ்டம் தான் ங்க‌‌. முதலில் இப்போ நடக்கிற சுப நிகழ்ச்சியைப் பாருங்க. மத்ததை அஃபிஷியல் ஆக நியூஸ் வெளியிடுவோம்" என்று பேச்சைக் கத்தரித்து விட்டார் மஹதனுடைய அன்னை.


ஒரு வழியாக, மாதர் சங்கத்தில் தன்னைப் போன்ற ஒரு உறுப்பினராக இருக்கும் பெண்மணியிடம் விஷயம் சேர்ந்து விட்டது. இனி, அவரே இதை மற்றவர்களுக்குப் பரப்பி விடுவார். தன் வேலைப் பாதியாகி விட்டது என்ற மமதையில் குறுஞ்சிரிப்புடன் மேடையை நோக்கித் திரும்பிக் கொண்டார் கௌசல்யா.


அதைக் கணவனிடமும், நீலகண்டனிடமும் கூட சொல்லி விட்டார்.


அவரது சாமர்த்தியத்தை எண்ணிப் பெருமிதம் அடைந்தார் திருமூர்த்தி.


தன்னுடைய பெண்ணிற்காக யோசித்து இப்படியொரு விஷயத்தைச் செய்துள்ளார் என்ற பூரிப்பில், கௌசல்யாவிற்குத் தன் நெஞ்சார்ந்த நன்றியைப் பறை சாற்றினார் நீலகண்டன்.


"இருக்கட்டும் அண்ணா" எனக் கூறி விட்டார்.


உணவுண்டுத் தாமதமாக வந்தார்கள் சித்ரலேகாவும்,காஞ்சியப்பனும்.


கௌசல்யாவிடம் மூக்கு உடைப்பட்டக் காரணத்தால், கொதிநிலையில் இருந்த அந்தப் பெண்மணியின் அடுத்த இலக்கு சித்ரலேகாவாக இருந்தார்.


மடை திறந்த வெள்ளம் போல், கௌசல்யா கூறியதை அவரிடம் சொல்லியவர்,"இது உண்மையா மேடம்?" என்று வேறு அதிசயித்துக் கேட்டார் அப்பெண்.


"எங்கப் பையனோட விருப்பத்தைத் தவிர, வேறெதுவும் எங்களுக்குத் தேவையில்லை மிசஸ்.கரீஷ்மா" என்று பதிலளித்தார் சித்ரலேகா.


"ஆனால், அந்தப் பொண்ணு மேலேயா, உங்கப் பையன் விருப்பத்தை வைக்கனும்?" என்று ஏதோ தன்னுடைய மகனே இந்தக் காரியத்தைச் செய்தது போலப் படம் காட்டினார்.


"ப்ச்! அதனால் உங்களுக்கு ஏன் கவலை? மேடையைப் பாருங்க. இப்போவே இவ்ளோ பொருத்தமாக இருக்காங்களே! கல்யாண நாள் அன்னைக்கு இன்னும் கண்ணுக்குக் குளிர்ச்சியாக இருப்பாங்களே!" என்று மெச்சிக் கொண்டு இருந்தார் சித்ரலேகா.


தன் பேச்சு அவரையும் அசைக்கவோ,தாக்கவோ இல்லையென்பதை உணர்ந்த கரீஷ்மாவிற்கு முகத்தில் ஈயாடவில்லை.


அதைப் பார்த்து, சித்ரலேகாவிற்கு 'ஹைஃபை' கொடுத்துக் கொண்டார் கௌசல்யா.


அதனாலும், அந்த அம்மையாருக்கு முகமெல்லாம் கோவைப் பழமாகச் சிவந்து வெளிறிப் போயிற்று.


"ம்ஹூம்!" என்ற சீற்றத்துடன் இருக்கையில் இருந்து எழுந்து சென்று விட்டார் கரீஷ்மா.


கால் வலிப்பது போலிருந்ததால் அவ்வப்போது, அலங்கரிக்கப்பட்ட சோஃபாவில் உட்கார்ந்தும், வலியைச் சமாளித்துச், மலர்ச்சியுடன் தங்களைக் காட்டிக் கொண்டார்கள் மஹதனும்,மௌனாவும்.


அவர்களுக்குக் குடிக்கவென்று பழச்சாறுகளைக் கொடுத்து சோர்வைப் போக்கிக் கொண்டு இருந்தனர் முக்தா மற்றும் கிஷான்.


இடையிலும், "முகி! கொஞ்ச நேரமாவது உங்க அப்பா கூட போய் உட்காரும்மா‌. அவர் ஏதாவது நினைச்சுக்கப் போறாரு!" என்று அவளிடம் விண்ணப்பமிட்டார் அன்னபூரணி.


"நீங்க சொன்னதுக்காக வேணும்னா போறேன். ஆனால், இங்கே நின்னு வேலைப் பாக்குறதுக்குத் தடைச் சொல்ல மாட்டார் என்னோட அப்பா" என்று தன் தந்தையைப் பற்றி அவரிடம் பெருமிதமாகக் கூறி விட்டு, மேடையிலிருந்து இறங்கி நீலகண்டனிடம் வந்தாள் முக்தா.


"என்னாச்சு டா? ஏன் வந்துட்ட?" என்றார் அவளது தந்தை.


அவரிடம் அன்னபூரணியின் வேண்டுகோளைச் சொன்னாள் மகள்.


"ஓஹ்! சரி. கால் வலிக்கும். கொஞ்ச நேரம் உட்கார்ந்துட்டுப் போடா" எனத் தன்னுடன் அவளை அமர வைத்துக் கொண்டார் நீலகண்டன்.


"அவங்களை விட உன்னையும், கிஷானையும் தான், எல்லாரும் நோட் பண்ணிட்டு இருக்கிறாங்கடா" என்று கூறினார் சித்ரலேகா.


"லேடீஸ் கிளப் ஆளுங்களுக்குத் தீயாக விஷயம் கசிஞ்சிருச்சு லேகா" என்று தன் செல்பேசியில் இருந்தப் புலனத்தில், குறிப்பிட்ட ஒரு குழுவில் வந்து குவிந்திருந்த குறுஞ்செய்திகளை அவருக்குக் காட்டினார் கௌசல்யா.


"இப்போவே படிக்க வேண்டாம் கௌசி. வீட்டுக்குப் போய், எல்ல மெசேஜ்ஜையும் வாசிப்போம்" என்று சொல்லிச் சிரித்தார் சித்ரலேகா.


அதற்குள், அன்றைய விழாவின் நாயகன், நாயகியும் சோர்வுடன் இருந்தாலும், முகப்பொலிவுடன் காணப்பட்டனர்.


நிச்சயத்தர்த்தம் முடிவடையும் நேரமும் கூடி வந்திருந்ததாலும், மண்டபத்தில் இருந்தவர்கள், ஒவ்வொருவராக மணமக்களின் பெற்றோர்களிடம் விடைபெற்றுக் கிளம்பி விட்டனர்.


"நீங்க தான் அவங்களை ஒரு நிமிஷம் கூட தனியாக விடலை" என்று முக்தாவிற்கும், கிஷானிற்கும் நன்றி கூறினார்கள்.


"ஆமாம். முகி! நீங்க பண்ணியதை மறக்கவே மாட்டேன். ரொம்ப ரொம்ப தாங்க்ஸ்" என்று அவளது கரம் பற்றி நெகிழ்ச்சியுடன் உரைத்தாள் மௌனா.


"அதில் என் சுயநலமும் அடங்கி இருக்குல்ல மௌனா? சோ, தாங்க்ஸ் வேணாம்" என்று மறுத்து விட்டாள் முக்தா.


அதைக் கேட்ட மஹதனுக்கு ஒன்றும் புரியவில்லை. அதனால்,


"என்ன சுயநலம்? எங்க கல்யாணத்தில் உனக்கு என்ன லாபம் கிடைக்கப் போகுது?" என்று அவளிடம் தன் சந்தேகத்தைக் கேட்டான் மஹதன்.


அவளை முழுமையாக நம்பினாலும், முன்னெச்சரிக்கையாக இருக்க நினைக்கும், அவனது மனம் அதற்கு இடமளிக்கவில்லை.


அங்கே நிலவிய சிறு சங்கடமும் அனைவரின் நிறைவான நெஞ்சத்தையும் சுனங்க வைத்தது.


உடல் இறுக நின்றிருந்தான் கிஷான்.முதலில் தெளிந்ததும் அவன் தான்.


"எல்லாரையும் சந்தேகப்பட்றது நல்லது தான். ஆனால், என் வருங்கால மனைவியை இப்படி பேசியது எனக்குக் கஷ்டமாக இருக்கு. இது உன்னோட நாள்! அதனால், பிரச்சினை செய்யாமல் விலகிப் போறேன். இன்னொரு தடவை இப்படி பேசாத!" என்று நண்பனை எச்சரிக்கை செய்தான் கிஷான்.


"மஹத்!!!" என்று மகனை அதட்டியவர், அவனின் சொல்லம்புகளுக்காக, நண்பனின் முகத்தைப் பார்த்து சங்கடத்துடன் மன்னிப்புக் கேட்டார் திருமூர்த்தி.


முக்தாவின் வெற்றுப் பார்வையும் இவரைத் தாக்கிற்று.


"விடு மூர்த்தி" என்று கூறி அமைதியாகி விட்டார் நீலகண்டன்.


"மஹி! ப்ளீஸ்" என்று அவனிடம் வேண்டிய மௌனா,"சாரி முகி" என மன்னிப்பும் கேட்டுக் கொண்டாள்.


"ம்ஹூம்…இட்ஸ் ஓகே" என்றவள்,


"நீங்க நினைக்கிறா மாதிரி உங்களோட ஃபியான்சிக்கு நான் எந்தக் கெடுதலும் செய்து விட மாட்டேன் மிஸ்டர்.மஹதன்!" என்று அழுத்தமாக கூறி , அவனுக்கு உறுதி அளித்தாள் முக்தா.


பின்பு,"அதை நீ இவர் கிட்ட சொல்லிடு மௌனா" என்று கூறி விட்டு,


தந்தையிடமும், தன்னவனிடமும்,"நான் போய்க் கார் கிட்ட நிற்கிறேன். வந்துடுங்க" என்று சொல்லி, வாயிலை நோக்கிச் சென்றாள் முக்தா.


யாரையும் ஏறிட்டுப் பார்க்காமல், வெளியேறி விட்டார் நீலகண்டன்.


"அப்பா! அம்மா! நான் முக்தா கூட வெயிட் பண்றேன்" எனக் கிளம்பினான் கிஷான்.


மஹதனின் ஐயம் அடங்கிய கேள்வியும், முக்தாவின் இறுக்கமானப் பதிலும் அங்கிருப்பவர்களுக்கு அதிருப்தியைக் கொடுத்தது.


ஆனால், விழாவே மஹதன் மற்றும் மௌனாவிற்கானது என்பதால், சித்ரலேகாவும், காஞ்சியப்பனும் மஹதனைப் பார்க்காமலேயே மௌனாவிடம் மட்டும்,


"பார்த்து இரும்மா. வாழ்த்துகள்!" என்று வாழ்த்தி விட்டு,


அவளது பெற்றோரிடமும், திருமூர்த்தி மற்றும் கௌசல்யாவிடமும் விடைபெற்றுச் சென்றனர்.


'சந்தோஷமே இல்லாமல் போறாங்களோ! என் பொண்ணோட வாழ்க்கை இதில் பாதிக்கப்பட்டு விடக் கூடாது!!' என்று மனதில் தங்களது இஷ்ட தெய்வத்தை நினைத்து வழிபட்டார் அன்னபூரணி.


சிவமணிக்கும் வருங்கால மருமகனின் செயலில் பிடித்தமில்லை என்பது அவரது முகமே பறை சாற்றியது.


வருந்தி வரவழைத்துக் கொண்ட புன்னகையுடன், 


"சம்பந்தி! நீங்கப் பொண்ணை அழைச்சுட்டுப் போங்க. நாங்களும் கிளம்பறோம்" எனக் கூறினார் கௌசல்யா.


உடனே மகளைப் பார்த்தார் அன்னபூரணி.


மாமியார், மாமனாரிடம் ஆசி வாங்கி விட்டு, மஹதனிடம் வந்து,


"வீட்டுக்குப் போயிட்டு, நைட் கால் பண்றேன். வேலையாக இருக்கேன்னு சொல்லாமல் அட்டெண்ட் பண்ணனும்" எனக் கறாராகச் சொல்லி விட்டு பெற்றோருடன் சென்றாள் மௌனா.


திருமூர்த்தி,"உன் பையனை வீட்டுக்கு வர சொல்லு" என்று கூறி விட்டு, அவரும் கிளம்பினார்.


கணவனைப் பின் தொடர்ந்து செல்லாமல், தனக்காக காத்திருக்கும் தாயிடம்,"வாங்கம்மா போகலாம்" என்று அவரை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்தான் மஹதன்.


"முக்தாவைப் பேசிய‌ விதம் உனக்கே தப்பாகத் தெரியலையா?" என்று கர்ஜித்தார் திருமூர்த்தி.


"அப்பா! நான் தப்பான அர்த்தத்தில் முக்தாகிட்ட அப்படி கேட்கலையே? அப்பறம் எப்படி என்னோட பேச்சு தவறானதாக இருக்கும்?" என்று நிமிர்ந்த பார்வையுடன் தந்தையிடம் கேட்டான் மஹதன்.


"அவ மௌனாவைக் கொலை பண்ண டிரை பண்ணிட்டு இருக்கிறா மாதிரியான டவுட் - ல தான் கேள்வி கேட்ட மஹத்!" என்று கௌசல்யாவும் அவனிடம் வினா எழுப்பினார்.


அப்போது வீட்டிற்குச் சென்று, உடையைக் கூட மாற்றாமல் மஹதனுக்கு அழைப்பு விடுத்தாள் மௌனா.


 - தொடரும்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...