"நான் சொல்வதைப் பொறுமையாக கேளு ம்மா" என்ற தொடக்கத்துடன் பேசினார் சித்ரலேகா.
"உங்களோட கல்யாணத்தில் நான் உனக்கு எல்லாமா இருந்து என் மகன் கூட மேரேஜ் பண்ணி வைக்கிறதுல சம்மதம் தான?" என்று மகனுடைய மறுப்பையும் மீறி மருமகளிடம் கேட்டு விட்டார் சித்ரலேகா.
"அத்தை! அம்மா இருந்த இடத்தில்…" என்று அவள் தன் நிலையைச் சொல்ல முயல,
அதற்குள் காஞ்சியப்பன்,"உன் பையன் சொன்னதை தான் மருமகளும் சொல்லப் போறா லேகா" என்றார் மனைவியிடம்.
அவர்களிருவருடைய புரிதலைக் கண்டு, கணவனுக்கும், மனைவிக்கும் நிறைந்து தான் போனது மனம்.
ஆனால் முக்தா மறுத்தது தான் வருத்தத்தை அதிகப்படுத்தியது சித்ரலேகாவிற்கு.
"ஏன் டா ம்மா?" எனச் சோகமான முகத்துடன் மருமகளிடம் வினவினார்.
"அது வந்து அத்தை, என்னோட அம்மாவை நான் யாருடைய பிரதிபிம்பத்திலேயும் பார்க்க விரும்பலை.அவங்க எப்பவும் அவங்க மட்டும் தான்! அதை மறுக்க முடியாது என்னால்! அப்பாகிட்ட இதை எப்பவோ சொல்லிட்டேன். உங்ககிட்ட மறுக்கிறதுக்கு மன்னிச்சிருங்க" என்று ஏற்ற , இறக்கத்துடன் கூறி முடித்தாள் முக்தா.
அம்மாவின் இடத்தை நீங்களும் முழுமையடையச் செய்யவே முடியாது என்று மறுத்தவளிடம்,"ஓகே டா ம்மா" என்றார் சித்ரலேகா.
கிஷானுக்குத் தன்னவளது தயக்கம் புரிந்து விட, அவளது மென் கரங்களைப் பற்றிக் கொண்டான்.
"அந்தச் சடங்கு, சம்பிரதாயம் எல்லாம் சொல்லிக் கொடுக்க எனக்கு அனுமதி உண்டா முகி ம்மா?" என்று மருமகளிடம் விண்ணப்பம் வைத்தார்.
"அத்தை!" என்று அவரை அணைத்துக் கொண்டு,
"நான் உங்ககிட்ட எல்லா உரிமையையும் ஒப்படைக்கிறேன்" என்று உணர்ச்சிப் பொங்க கூறினாள் முக்தா.
"இல்லைடா. வேண்டாம். உன்னோட அம்மா மேல நீ வச்சிருக்கிற பாசத்தை நான் கலைக்க மாட்டேன்" என்று மென்மையாக கூறினார் சித்ரலேகா.
"சாரி அத்தை" என்றதும்,
"என்ன தான் இருந்தாலும் அவங்க இடத்தை நான் எடுத்துக்க நினைக்கிறது தப்பு தான் டா!" என்று பரிவுடன் சொன்னார்.
"அச்சோ!!" என முக்தா அதிர்ந்த போது,
"அம்மா … கொஞ்சம் பொரியல் வைங்க " என்று வேகமாகத் தாயிடம் தன் தட்டைக் காட்டினான் கிஷான்.
அவனை முறைத்தச் சித்ரலேகா,"நமக்குள்ளே சண்டை வரப் போகுதுன்னு முன்னெச்சரிக்கையாக இருக்கானாம்!" என்று கிண்டல் செய்தார்.
"இல்லைம்மா. உண்மையிலே எனக்குப் பொரியல் வேணும்" என்று சமாளித்தான் மகன்.
"இரு. நான் பரிமாறுறேன்" என அவனுடைய தட்டில் பொரியலை வைத்தார் காஞ்சியப்பன்.
"தாங்க்யூ அப்பா" என அவருக்கு நன்றி சொல்லி விட்டு,
"பார்த்தீங்களா? அப்பா தான் என்னை நம்புறார்!" என்று அம்மாவிடம் பெருமிதமாகச் சொன்னான் கிஷான்.
"நம்பட்டும்" என்றவர்,
முக்தாவிடம்,"நீ எதுவாக இருந்தாலும் எங்கிட்ட கேளுடா" என்று மருமகளைத் தாஜா செய்தார் சித்ரலேகா.
அவருக்கு எந்த வித தவறான அனுமானமும் இல்லை என்ற நிறைவில் அதிகமாகவே உணவை உட்கொண்டாள் முக்தா.
அதன் பிறகு,
"மௌனாவுக்கு மணப்பெண் தோழி நான் தான். சோ, அகதா மாதிரியே நானும் அவ கூடயே இருக்கனும்" என்று அவள் சொல்லவும், பொறி தட்டியது சித்ரலேகாவிற்கு.
"அப்படியா முகி? போயிட்டு வாடா" என அவளை ஆசீர்வதித்து அனுப்பி விட்டார்கள்.
"மகனே! மருமகளோட பிளான் எல்லாம், எனக்கு இப்போ தெரிஞ்சிருச்சு" என்று கிஷானிடம் கூறிக் கொண்டே கணவனின் அருகே உட்கார்ந்தார் அவனுடைய தாய்.
"பிளானா? அது என்னதும்மா?" என்று புரியாமல் கேட்டான்.
"உங்களுக்குப் புரிஞ்சிடுச்சு தான ங்க?" என்று காஞ்சியப்பனிடம் கேட்கவும்,
"ரொம்ப நல்லாவே!" என அவரும் சம்மதமாகத் தலையை ஆட்டினார்.
"சொல்லுங்க அம்மா" என அவசரப்படுத்தினான் கிஷான்.
"மௌனாவுக்குத் துணையாக கல்யாணத்தில் நிற்கப் போகிறதா சொன்னாளே? அதுக்கு என்ன அர்த்தம்ன்னா! அவளுக்கு நடக்கிற கல்யாணச் சடங்கு எல்லாத்தையும் இவளும் ரொம்ப பக்கத்தில் இருந்து பாக்கலாம். அதே மாதிரி இவகிட்டயும் பொறுப்பு கொடுப்பாங்க. அப்போ, தன்னோடு மேரேஜில் என்னென்னப் பண்ணனும்னு ஆட்டோமேட்டிக் ஆக முக்தாவுக்கு ஒரு கிளாரிட்டிக் கிடைக்கும் தான? அதுக்குத் தான்!" என்று புரிய வைத்தார் சித்ரலேகா.
"நம்மளை ஒதுக்குறாளா? இல்லேன்னா, நமக்கானது இது மட்டும் தான். மருமகளாக வேணும்னா வருவேன். மகளாக வேண்டாம்னு சொல்றாளா?" என்று தன் ஐயத்தைக் கேட்டார் காஞ்சியப்பன்.
"அந்தப் பெருந்தன்மை வேணாம்னு சொல்றா - ங்க. இப்போ எடுத்துக்காட்டுக்கு, மஹதனைக் காதலிச்சக் கடந்த காலமே வேண்டாம்னு சொல்லி இருக்கா, அதே மாதிரி அவங்க அம்மாவையும் யார்கிட்டயும் தேடக் கூடாதுன்ற வைராக்கியம் போல ங்க" என்று கணவனிடம் கூறினார்.
"நம்மகிட்ட எதுக்கு இவ்ளோ வைராக்கியம் அவளுக்கு?" என்று சோகத்துடன் வினா எழுப்பினான் கிஷான்.
"வைராக்கியம்ன்றது அவளோட இஷ்டம்டா. அது யார்கிட்ட வேணும்னாலும் நியாயமான விஷயங்களுக்குக் காமிக்கலாம்" என்று பதிலளித்தார் சித்ரலேகா.
"நாம அவகிட்ட நடிக்கவா போறோம் மா? உண்மையாகத் தானே நீங்கப் பாசத்தைக் காட்டப் போறீங்க?"
"ப்ச்! டேய்! அது அவளுக்கும் புரியுதுடா. அவங்க அம்மாவுக்கு இணையாக யாரும் இருக்கக் கூடாதுன்னு நினைக்கிறா!" எனப் பொறுமையை இழந்தார்.
"உங்களை மாமியார்ன்ற லிமிட்டோட நின்னுக்கச் சொல்றா! அப்படித் தான அம்மா?" என்று கேட்டான் கிஷான்.
"அது தப்பு இல்லையே? எல்லாரும் நான் உன் மாமியார் மட்டுமில்லை, அம்மாவாகவும் பார்த்துப்பேன்னு சொல்லனும்னு, அவசியம் இல்லையே? அவளுக்குத் தேவையான அன்பை, மாமியார் ஸ்தானத்தில் இருந்து கொடுத்துட்டுப் போறேன்" என்று எடுத்துக் கூறினார் அவனுடைய அன்னை.
"கரெக்ட் லேகா ம்மா" என்று மனைவியின் கருத்தை ஒப்புக் கொண்டார் காஞ்சியப்பன்.
"நீங்க தான முக்தாகிட்ட இந்த விஷயத்தை ஆரம்பிச்சீங்க? இப்போ நீங்களே கன்வின்ஸ் ஆகிட்டீங்க! அதெப்படி ம்மா?" என்று ஆர்வத்தை அடக்க முடியாமல் கேட்டு விட்டான் கிஷான்.
"எனக்குக் கேட்க உரிமை இருந்துச்சு கேட்டேன். அவளுக்கு மறுக்க உரிமை இருந்துச்சு, நியாயமான காரணம் இருந்துச்சு மறுத்துட்டா! அதை நான் அக்சப்ட் செய்துக்க தான வேணும்? சண்டை போடவா முடியும்?" என்று நிதர்சனத்தைக் கூறினார் சித்ரலேகா.
"சண்டை எல்லாம் போட்றாதீங்க ம்மா" எனப் பதட்டமானான்.
"கண்டிப்பாக நடக்காது விடுடா" என்றார் காஞ்சியப்பன்.
மௌனாவின் இல்லத்தில் தான் இருந்து கொண்டு, ஒவ்வொரு சடங்கைப் பற்றியும் அன்னபூரணியிடம் கேட்டுக் குறிப்பெடுத்துக் கொண்டிருக்கிறாள் முக்தா.
"ப்ரக்னென்ட் ஆக இருந்தால் தான் வளையல் போட்டு வளைகாப்பு நடக்கும்னுப் பார்த்துருக்கேன். கல்யாணத்துக்கும் அதெல்லாம் நடைமுறையில் இருக்கா என்ன?"
"இருக்கு ம்மா" என அதற்கான விளக்கங்களைத் தெரிவித்தார் மௌனாவின் தாய் அன்னபூரணி.
தீபக் மற்றும் அவனது தாய் லலிதா செய்த அட்டகாசங்களால் தனக்குள் சுருங்கிப் போயிருந்தாள் அகதா.
மௌனாவைப் போல , அவளை வலுக்கட்டாயமாகத் தங்களது பேச்சில் இழுத்துக் கொண்டாள் முக்தா.
"பொண்ணு வீட்டு சைட் சொந்தக்காரங்களே இல்லாமல் இருந்தால் என்னப் பண்றது ம்மா?"
"முக்கியமான சடங்குகளைச் செய்றதுக்கு மட்டும் தூரத்து உறவினர்கள் கிட்ட கேட்டு அனுமதி வாங்கிப்பாங்க டா. ஆனால், ஒரு சிலர், தன்னோட சொந்தப் பிள்ளைங்களுக்குத் தான் முதலில் இதெல்லாம் பண்ணனும்னு முடிவாக இருப்பாங்க. அவங்களை டிஸ்டர்ப் பண்ணி விடக் கூடாது" என்று விடையளித்தார் அன்னபூரணி.
"ஓகே ம்மா" என்றாள் முக்தா.
ஒரு சில குடும்பங்களில் தாயோ, தந்தையோ அவர்களது இணையை இழந்திருந்தால், அவர்களுக்கு மூத்தவர்களோ, இளையவர்களோ தங்கள் உடன்பிறந்தவர்களுடைய பிள்ளைகளைக் கன்னியாதானம் செய்து கொடுக்கும் பொறுப்பை முன் வந்து ஏற்றுக் கொள்வர்.
ஆனால், ஒரு சிலர் தங்களது சொந்தப் பிள்ளைகளுக்குத் தான் முதல் உரிமை என்று நினைத்திருப்பர். அதையும் குற்றம் சொல்வதற்கில்லை.
இவற்றையெல்லாம் செய்வதற்குத் தனக்கு இப்படியான சொந்தங்கள் இருக்கிறார்களா? என்று யோசித்தாள் முக்தா.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக