தேன்மொழியைப் பற்றிய நினைவுகளுடன் போராடிக் கொண்டிருக்கிறாள் மகள் என்பதை உணர்ந்து கொண்டார் நீலகண்டன்.
"நீ யாரை மிஸ் பண்றன்னு எனக்குத் தெரியுதுடா" என்று உணர்ச்சி வசத்துடன் கூறினார் நீலகண்டன்.
"ப்பா" என்ற சிறிய கதறலுடன் அவரிடம் தஞ்சமடைந்தாள் முக்தா.
"நீ அப்பப்போ தேன்மொழியோட ஃபோட்டோவை ஏக்கத்தோட பார்க்கிறதை, நானும் கவனிச்சுக்கிட்டுத் தான் இருந்தேன்" என்றார் அவளுடைய தந்தை.
"அன்னைக்கு அவங்களோட சேலையைக் கட்டும் போது கூட எமோஷனல் ஆகிட்டேன் ப்பா" என்று அயர்ச்சியுடன் கூறினாள் மகள்.
"அந்தக் கோலத்தில் உன்னைப் பார்த்ததும் எனக்கும் உங்க அம்மா தான் மனசில் வந்து போனாங்க டா!" என்றவர்,
தேன்மொழியும் , தானும் ஊர் மெச்சும் தம்பதிகளாக எப்படி வாழ்ந்தோம்? என்பதை மகளிடம் பகிரத் தொடங்கினார் நீலகண்டன்.
தொழில் கற்றுக் கொண்டு இருந்த சமயத்திலேயே அவருக்கும், தேன்மொழிக்கும் திருமணம் நிகழ்ந்தது.
ஆதர்ஷ தம்பதிகள் என்று இல்லாமல் இருந்தாலும் கூட, சண்டைகள் இன்றி, சுமூகமான வாழ்க்கையை வாழ்ந்தனர் இருவரும்.
நீலகண்டனிடம் அவ்வப்போது தலை தூக்கும் பணச் செருக்கு தேன்மொழிக்கு அறவே ஆகாது.
எனவே, "இதையெல்லாம் எப்போ பாத்தாலும் பேசிக்கிட்டே இருக்கிறது நல்லா இல்லைங்க" என்றும் கூட சொல்லிப் பார்த்து விட்டார் மனைவி.
அதை அவரது கணவர் கண்டு கொள்ளவில்லை. இந்த விஷயத்தில் மட்டும் நீலகண்டன் பிடிவாதமாக இருப்பது தேன்மொழிக்கு அதிருப்தியைத் தந்தது.
தான் கருவுற்றிருந்த நாட்களில் கணவன் செய்யும் பணிவிடைகள் யாவற்றையும் மனமுவந்து ஏற்றுக் கொண்டார் மனைவி. பிரசவத்தின் போதும், பிறந்த குழந்தை பெண் என்றதும், அவர்களிருவருக்கும் கடலளவு சந்தோஷம் ஏற்பட்டது.
அதற்குப் பிறகு, நீலகண்டனின் ஜம்பம், செருக்கு சற்று குறைந்திருந்தது.
இருவரும் ஒரு மனதாகத் தேர்ந்தெடுத்து ,"முக்தா" என்று தங்களது செல்ல மகளுக்குப் பெயர் வைத்தனர்.
சிறு வயதிலிருந்தே முக்தாவிற்கும் தன்னுடைய ஒரு சில தேவையற்ற குணங்களைத் தெரிந்தோ, தெரியாமலோ புகுத்திக் கொண்டிருந்தார் நீலகண்டன்.
அதை தேன்மொழி கண்டித்தும் பலனின்றிப் போயிற்று.
தன்னளவில் மகளிற்கு நல்ல குணங்களைச் சொல்லிக் கொடுத்து வளர்த்தார் அந்த அன்னை.
அவர் உயிருடன் இருந்தவரை முக்தாவும், தாய் சொல்லிக் கொடுப்பதைக் கேட்டு வளர்ந்து வந்தாள்.
பிறகு எதிர்பாராத விதமாக தேன்மொழியின் இறப்பு நிகழ்ந்து விட்டது.
முக்தாவைத் தேற்றும் வழி தெரியாது தன்னைப் போலவே, தனக்குத் தெரிந்தவாறு வளர்க்க ஆரம்பித்து விட்டார் நீலகண்டன்.
பிறகு நடந்தவை யாவும் விதியிடம் ஒப்படைக்கப்பட்டது.
"கல்யாணம் வரைக்கும் மூர்த்தியோட வொய்ஃப் கௌசல்யாவை உன்னோட துணைக்கு இருக்கச் சொல்லிக் கேட்டுப் பார்க்கவா?" என்று கேட்டார்.
அவளிடமிருந்து வெற்றுப் பார்வை தொனித்தது.
"என்னவாக இருந்தாலும் சொந்த அம்மா மாதிரி வராதே அப்பா?" என்று நிதர்சனத்தை உரைத்தாள் முக்தா.
தாய் தேன்மொழியின் இடத்தில் எவரையும் ஒப்புக்குக் கூட வைத்துப் பார்க்க முடியவில்லை அவளால்.
அந்த அன்பையும் யாராலும் தர முடியாது என்பதும் முக்தாவிற்கு விளங்கி விட்டது.
அதைப் பிறரிடம் தேடி அவர்களுக்கும் சங்கடத்தை வரவழைக்கும் எண்ணமில்லை அவளுக்கு.
"ம்ஹம்" என்றார் நீலகண்டன்.
"கல்யாணத்தப்போ நீங்களே எனக்கு எல்லாம் செஞ்சிருங்க அப்பா. மத்ததை நானே கத்துக்கிறேன்" என்று மிக உறுதியான குரலில் கூறினாள் மகள்.
"சரி முகி"
மௌனாவின் திருமணத்தில் தான் தன்னுடைய முழுக் கவனத்தையும் வைத்திருக்க முடிவெடுத்தாள் முக்தா.
தன்னுடைய திருமணத்தில், உடைகள், அலங்காரங்கள் அனைத்தையும் தன்னால் தனியாகவே ஏற்பாடு செய்து கொள்ள முடியும் என்ற நிலைப்பாடு அவளுக்குள் உருவானது.
"நீ எனக்கு உதவி பண்ணனும்" என்று மௌனாவிடம் போய், எல்லாவற்றையும் சொன்னாள் முக்தா.
"அன்னைக்கு அகதா கூட நீங்களும் மணப்பெண் தோழியாக வாங்க முகி. பார்க்கும் போதே எல்லாமே தெரிஞ்சிடும்" என்று நம்பிக்கை அளித்தாள்.
"அப்பறம் இது மஹத் - க்குத் தெரிய வேண்டாம்" என்று கூறி விட்டாள்.
"யாருக்கும் தெரியாது. நான் ப்ராமிஸ் பண்றேன் முகி" என்றாள் மௌனா.
"டேய்! முக்தாவுக்குத் தாய் , தகப்பனாக நாம தான் கூட இருக்கனும். அதுவும் நான் கண்டிப்பாக இருந்தாகனும்" என்று கூறிக் கொண்டு இருந்தார் சித்ரலேகா.
"அம்மா! நீங்க இப்படி சொல்லலாம், ஆனால் அதை முக்தா செய்ய விட மாட்டாள்" என்று அழுத்தமாக உரைத்தான் கிஷான்.
"ஏன்டா?" எனக் கேட்டார் காஞ்சியப்பன்.
"ஆமா. நான் முகி கிட்ட கேட்கிறேன்" என்றார் சித்ரலேகா.
"அவளோட அம்மா இடத்தில் வேற ஒருத்தவங்களை நிக்க வைக்க விருப்பப்படவே மாட்டா" என்று தீவிரமாக கூறினான் கிஷான்.
"நீயா சொல்லாத! அவகிட்டயும் கேளு" என்று கூறினார் அவனுடைய அன்னை.
"அவளோட பதிலைத் தான் நான் இப்போவே சொல்லிட்டேன் ம்மா" என்று விடையளித்தான் மகன்.
"அதுக்குள்ளப் புரிஞ்சிக்கிட்டியா அவளை?" என்று கேட்டு, முக்தாவிற்கு அலைபேசியில் தொடர்பு கொண்டார் சித்ரலேகா.
அதைப் பார்த்ததும் தந்தையிடம் கம்மிய குரலில்,"என்னப்பா இவங்க?" என்றான் கிஷான்.
"உங்கம்மா எது செஞ்சாலும் சரியா இருக்கும் மகனே!" என அலுங்காமல் கூறி விட்டார் காஞ்சியப்பன்.
"அத்தை" என்ற அழைப்புடன் பேசினாள் முக்தா.
"ஆங்… முகி ம்மா! நம்ம வீட்டுக்கு வாடா" என்றார்.
"இப்போ உடனே வரனுமா அத்தை?" என்று கேட்டாள் அவரது வருங்கால மருமகள்.
"இன்னைக்கு வேணாம். ஆனால் நாளைக்கு வந்துரு" என்று கூறினார் சித்ரலேகா.
அதற்கு முக்தா,"சரிங்க அத்தை. ஆனால் இதைப் பத்திக் கிஷான் எதுவும் சொல்லலை" என்று பதில் சொன்னாள்.
"நானே அவன்கிட்ட இன்னும் சொல்லலைடா ம்மா" என்றதும் சம்மதித்து விட்டாள்.
அந்த அழைப்பைத் துண்டித்தவுடனேயே,"என்னம்மா நீங்க இப்படி பண்ணிட்டீங்க?" என்று குறைபட்டான் கிஷான்.
"என்னடா? என் மருமகளுக்கு நான் கால் செய்து பேசினேன்! இதில் என்ன?" என்றார் சித்ரலேகா.
"நான் அவளுக்குக் கால் பண்ணிப் பேசப் போறேன். போங்க!" என்று தன் கைப்பேசியை எடுத்தான்.
"ப்ச்! நாளைக்கு வருவா, பேசிக்கோ. இப்போ கால் பண்ணுன கொன்றுவேன்!" என்று மகனை எச்சரித்தார்.
"ஃபோனை உள்ளேயே வை" என்றார் காஞ்சியப்பன்.
"அதெப்படி தாயில்லாதப் பொண்ணை அம்போன்னு விட முடியும் டா?" என்று வெகுண்டு எழுந்து கேட்டார் சித்ரலேகா.
"சரி தான்டா" என்று கூறினார் அவனது தந்தை.
"அப்படிங்களா அப்பா!" எனப் பல்லைக் கடித்தான் கிஷான்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக