பெற்றோருடன் வீட்டிற்குள் நுழைந்தனர்.
அவர்களுக்கு ஜூஸ் எடுத்து வந்து கொடுத்தாள் மௌனா.
" அப்பா, அம்மா! சாப்பாடு ரெடி பண்ணிடறோம்" என்று
"மாப்பிள்ளை கிட்ட சொல்லிட்டியா மௌனா?" என்றார் சிவமணி.
"சொல்லனும் அப்பா. அவர் வொர்க்ல இருப்பார். கிஷான் வீட்டுக்கு வேற போகனும்னு சொல்லிட்டு இருந்தார்" என்று கூறினாள் மகள்.
"ஆமாம். எப்போ கல்யாணமாம்?" என்று விசாரிக்க ஆரம்பித்தார் அன்னபூரணி.
அவர்களுடன் இணைந்து பேசியபடி உணவைத் தயாரித்தனர் தோழிகள் இருவரும்.
புடவை உடுத்தி ஆயத்தமாகி இருந்தாள் முக்தா.
திருமூர்த்தியையும், கௌசல்யாவையும் தங்கள் காரில் வர, நீலகண்டனும், முக்தாவும் அவர்களது காரில் பயணம் ஆனார்கள்.
அவர்களுக்கானச் சிற்றுண்டியுடன் காத்திருந்தனர் கிஷான் குடும்பத்தினர்.
மகிழுந்தின் சத்தம் கேட்டு வந்தவர்களை அடையாளம் தெரிந்து கொண்டு, அவர்களது கார் உள்ளே நுழைவதற்காக, இரும்புக் கதவைத் திறந்து விட்டு, காவல் நாய்களையும் அதட்டி, அடக்கி விட்டு, வழி விட்டு நின்றான் வாயிற்காவலன்.
காரிலிருந்து இறங்கிய நால்வரையும், வரவேற்றனர் கிஷானின் பெற்றோர்.
"முகி!" என்று மகிழ்ச்சிக் கடலில் மூழ்கியவன், அவளது புடவை உடுத்திய அழகிய தோற்றத்தை விழிகளால் பருகினான் கிஷான்.
நீலகண்டனைப் பார்த்து,"வாங்க மாமா!" என்று வரவேற்று,
"அப்பா,அம்மா!" எனத் தன் நண்பன் மஹதனின் பெற்றோரையும் வரவேற்று அழைத்துப் போனான்.
காஞ்சியப்பனும், சித்ரலேகாவும்,"ரெண்டு பெஸ்ட் ஃப்ரண்ட்ஸூம் குடும்பத்தோட வந்திருக்கீங்க! முறையாக ரிசீவ் பண்ணனுமே!" என்று திருமூர்த்தியையும், நீலகண்டனையும் பார்த்துச் சொன்னார் காஞ்சியப்பன்.
"இப்போ மூனு பேராக மாறிட்டா போச்சு சம்பந்தி!" என்றார் நீலகண்டன்.
"வாங்க! வா ம்மா!" என்று அவர்களை சோஃபாவில் உட்காரச் சொன்னவர்,
முக்தாவைத் தன் கை வளைவில் வைத்துக் கொண்டார் சித்ரலேகா.
அந்த அன்பான செயலில் அடங்கிப் போய் விட்டாள் அவரது கரங்களுக்குள்.
அதைக் கண்ட நீலகண்டனுக்குள் இருந்த அங்கலாய்ப்பு மறைந்து விட்டது.
சிற்றுண்டி பரிமாறப்பட்டதும், "மஹதன் வரலையா?" என்றார் காஞ்சியப்பன்.
கௌசல்யா, "வர்றேன்னு தான் சொன்னான் அண்ணா" என்று கிஷானைப் பார்த்தார்.
அவனோ, "வர்றதுக்கு டைம் இருக்காதுன்னு நினைக்கிறேன்" என மறுப்பாக கூறினான்.
"காணக் கிடைக்க மாட்டேங்குறான் ங்க.அந்தப் பொண்ணு மௌனாவோட அப்பா,அம்மா ஊரில் இருந்து வந்துட்டாங்க.
அவங்களையும் பார்க்கவும் போகனும்!" என்று பொரிந்தார் திருமூர்த்தி.
"அச்சோ! நீங்க கிளம்புங்க மூர்த்தி. சம்பந்திங்களைப் பாருங்க" என்று நண்பனுக்கு உரைத்தார் நீலகண்டன்.
"அப்போவே மௌனா சொல்லிட்டா அண்ணா. முக்தாவுக்காக நீங்கப் போயிட்டு வாங்கன்னு, சிவமணி அண்ணாவும், அன்னபூரணி அண்ணியும் கூட அதே தான் சொன்னாங்க" என்று பெருமையுடன் கூறினார் கௌசல்யா.
அதைக் கேட்ட கிஷானும்,"எங்க கூட முக்தாவையும் அழைச்சுட்டுப் போகவா அங்கிள்?" என்று நீலகண்டனிடம் அனுமதி வேண்டினான்.
"சரிப்பா" என்று அவரும் இசைவு கொடுத்தார்.
தன் வருங்கால மாமனார், மாமியாரின் கால் பணிந்து எழுந்தாள் முக்தா.
மஹதனின் பெற்றோரிடம் தங்களது நன்றி நவிழ்தலை முடித்துக் கொண்டு நீலகண்டனும், முக்தாவும் வெளியேறினர்.
தாயிடமும் தந்தையிடமும் விடைபெற்று, கிஷானும் அவர்களுடன் சென்றான் மௌனாவின் பெற்றோரைச் சந்திக்க.
"ஆங்… மௌனா! நாங்க வந்துட்டு இருக்கோம். முக்தாவும் , கிஷானும் கூட வர்றாங்க" என்று தகவல் தெரிவித்தார் கௌசல்யா.
கிஷான் வண்டியை இயக்க, அருகே அவனது தோளில் முகம் புதைந்திருந்தாள் முக்தா.
அவளைப் புடவையில் பார்த்த போதே விழுந்து விட்டவன், இதமாய் தன்னைத் தழுவிக் கொண்ட பாங்கில், முழுதாகத் தொலைந்து போனான்.
மௌனாவின் வீடு தென்பட்டதும், "முகி" என்று அவளது தோளை அழுத்தி அழைத்தான் கிஷான்.
"ஹாங்!" என்றதொரு முனகலில் நிமிர்ந்தவளிடம்,
"இறங்கு ம்மா" என வெளியே சுட்டிக் காட்டினான்.
அவளும் குறுநகையுடன் இறங்கவும், திருமூர்த்தியின் காரும் வந்து விட்டது. கடைசியில் மஹதன் மட்டும் வரவேயில்லை.
உள்ளறையில் இருந்த சிவமணியும், அன்னபூரணியும் விரைந்து வந்தனர்.
"வாங்க சம்பந்தி" என்று உபசாரம் நிகழ்ந்தது.
மஹதனுக்குக் குறுஞ்செய்தியில் சொல்லி விட்டான் கிஷான்.
அவன் வராததால் சிலவற்றை மட்டும் கலந்துரையாடி முடித்திருந்தனர்.
தேனாய் இனித்தது அங்கிருந்த ஒவ்வொரு நொடியும்!
மறுபடியும் தன்னவனது தோள் கொடுத்த சுகத்தில் பரிமளம் கொண்டு, அவனுடன் பயணம் செய்தாள் முக்தா.
கிஷானிற்குப் பிரியாவிடை கொடுத்து விட்டு வந்தாள் வீட்டினுள்.
"நான் எங்கே இருக்கேன்னு உனக்குத் தெரியனுமா?" என மௌனாவிடம் கேட்டவன், அவளுக்குத் தன் கைப்பிடியில் இருந்த ஒருவனது தலையை உயர்த்திக் காண்பித்தான் மஹதன்.
அவனைப் பார்த்தது அதிர்ச்சி என்றால், மஹதனுடன் இருந்த கிஷானும் தென்பட்டது பயங்கர அதிர்ச்சியைக் கொடுத்தது மௌனாவிற்கு.
அவளது வீட்டிலிருந்து நேரடியாக அங்கு தான் வந்திருக்கிறான் கிஷான்.
அவள் அதிர்ச்சியுறக் காரணம் தான் என்ன?
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக