போர்வையை முகத்திற்கு ஏற்றி, வசதியாகப் படுத்துக் கொண்டாள் முக்தா.
தன் தாயகத்தை விட்டு விட்டு, தூர தேசத்திற்கு வந்த போதும், எதையும் மறந்து விடவில்லை அவள்.
தந்தைக்கு அடிக்கடி செல்பேசியில் அழைத்துப் பேசிக் கொள்வாள் முக்தா.
தன்னுடைய நடை , உடை பாவனைகள் எவற்றையும் மாற்றிக் கொள்ளவில்லை, ஆனால், மாற்றப்பட வேண்டியவை எல்லாம் தானாகவே சரியாகி விட்டது அவளிடம்.
காலை நேரத்து காபியை மட்டும் தனக்காகத் தயாரித்துக் கொண்டிருந்தவளோ, சமையலையும் தானே செய்து கொண்டாள் முக்தா.
இந்தியாவில் இருக்கும் போது, எப்போதாவது சமைப்பவள், இங்கோ, தினமும் தன் கை வண்ணத்திலேயே உணவருந்த ஆரம்பித்து இருந்தாள்.
"ஹலோ ப்பா! குட்மார்னிங்" என்று உற்சாகம் பொங்கப் பேசினாள் மகள்.
"முகி! வேலையா இருக்கியாடா?" என்று வினவினார் நீலகண்டன்.
அதிகாலையிலேயே அழைத்து விட்ட தந்தையிடம், உணவு சமைத்தபடியே அளவளாவிக் கொண்டிருந்தவள்,
"குக்கிங் தான் நடக்குது அப்பா! ஒன்னும் இல்லை நீங்கப் பேசுங்க" என்று காய்களை நறுக்கியவாறு கூறினாள் முக்தா.
"என்னம்மா சமைக்கிற?" என்றதும்,
"ஃப்ரைட் ரைஸ் ப்பா. நீங்க சாப்பிட்டீங்களா?" என்று கேட்டாள்.
"நான் சாப்பிட்டேன் ம்மா. இந்த வருஷம் ஊருக்கு வர்ற தான?"
முன்பெல்லாம் தந்தை இப்படி கேட்டால், தயக்கம் கொள்வாள். ஆனால் இப்போதோ, அதையெல்லாம் துறந்து,
"நான் டிக்கெட் புக் பண்ணிட்டு சொல்றேன் அப்பா. டேட் முன்னப் பின்னே ஆகும்ல? கம்பெனியிலும் லீவ் சொல்லனும்" என்றாள் முக்தா.
"சரி ம்மா. உடம்பை பாத்துக்கோ"
இப்போதும் தன் தோழிகள் மற்றும் மஹதனிடம் கூட இயல்பாகப் பேசிக் கொண்டு இருக்கிறாள் முக்தா.
இவனைப் போல ஒருவனைத் தனக்கானவனாகத் தேர்ந்தெடுத்ததில், தவறே இல்லை என்று எண்ணும் அளவிற்கு அவளது எண்ணங்களில் நிறைந்திருந்தான் கிஷான்.
புலனத்தில் குறுஞ்செய்திகள் வரும் தான். ஆனால், எப்போதும் போல கண்ணியமானப் பேச்சுக்களுடன் முடித்துக் கொள்வான்.
முகப்புப் படங்களை மாற்றிக் கொண்டே இருப்பான். ஸ்டேட்டஸ் வைக்கும் பழக்கம் அவ்வளவாக இல்லை போலும். அரிதாக ஏதாவது பதிவு செய்வான் கிஷான்.
இவள் தான் வெளிநாட்டில் எடுத்தப் புகைப்படங்களை வைத்திருந்தால், அவை தன்னை ஈர்க்கப்பட்டால் மட்டுமே அது சம்பந்தமாக கேட்பான்.
பேச்சுக்கள் நீளாமல் இருந்தாலும், உணர்வுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கின்றன அவர்களுக்குள்.
அலுவலகத்தில் தனக்கான விடுப்பை எடுத்துக் கொண்டவள், ஊருக்குச் செல்வதற்கு முன்னர், தனக்காகவும், தன்னைச் சேர்ந்தவர்களுக்காகவும் பரிசுப் பொதிகளை வாங்கிக் குவித்தாள்.
விமான நிலையத்திற்குச் சென்று, தந்தையையும், மற்றவர்களையும் பார்க்கும் ஆவலில், தனக்கான விமானத்திற்காக காத்திருந்தாள் முக்தா.
"நானும் ஏர்போர்ட்டுக்குப் போகலாம்னு இருக்கேன் மஹத்" என்றான் கிஷான்.
"ம்ம். போயேன் டா"
விமான நிலையத்திற்கு வருவதாக அடுத்த கணமே, தன்னவளுக்குச் செய்தி அனுப்பி விட்டான்.
"வேண்டாம் கிஷான். அப்பாவும் வருவார்" என்று மெசேஜ் செய்திருந்தாள் முக்தா.
"அதனால் என்ன? அங்கேயே அவர்கிட்ட பேசிடறேன்" என்று கூறவும்,
"வேற வினையே வேணாம். நான் அவர் கூட வீட்டுக்குப் போயிட்டு, அடுத்த நாள் உங்களைப் பார்க்க வர்றேன்" என்றிருந்தாள்.
"ஓகே" என்று பதில் அனுப்பினான் கிஷான்.
அவளுக்கான விமானத்தைப் பற்றிய அறிவிப்பு வரவும், உடமைகளை எடுத்துக் கொண்டு, செக்கிங் செய்து விட்டு, அதில் ஏறினாள் முக்தா.
இன்னும் சில மணி நேரங்களில் சொந்த மண்ணில் காலடி பதிக்கப் போகிறாள், காலம் மற்றும் மாற்றம் இவையெல்லாம் கொடுக்கப் போவதை ஆழ்ந்து அனுபவிக்க வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறாள்.
நீலகண்டன் தன் மகளின் வரவை அனைவரிடமும் கூறியிருந்ததால், திருமூர்த்தியின் மூலமாக கௌசல்யாவிற்கும் செய்தி அறிவிக்கப்பட்டது.
"கடைசியாக வீட்டுக்குக் கூப்பிட்டு, சாப்பிட வச்சு அனுப்பினேன். பெண் குழந்தை இல்லாத குறையை நிவர்த்தி பண்ண வந்தவ முக்தா" என்றார் கௌசல்யா.
அதற்காக மஹதனுக்கு உடன்பிறவாத தங்கை முறை என்றெல்லாம் அவர் நினைக்கவில்லை. அவனுக்குத் தோழியாகவே அவள் இருக்கட்டும் என்று எண்ணினார்.
"ராத்திரியில் தூக்கம் கூட வராதுடா" எனக் குதூகலித்தவரைப் புன்னகையுடன் ஏறிட்டு,
"உன் பொண்ணு வர்றதால், ஆஃபீஸில் இருக்கிற ஸ்டாஃப்ஸூக்குக் கிஃப்ட்ஸ், சேலரின்னு ஜமாய்ச்சுட்ட போல!" என்று கூறினார் திருமூர்த்தி.
"ஆமாம் டா" என்று உற்சாகமாக இருந்தவரைப் பார்த்து,
"முக்தா வந்ததும், கிஷான் வீட்டுக்குப் போய் பேசிட்டு வந்துடு?" என்று வினவினார்.
"நான் மட்டும் போனால் நல்லா இருக்காதுடா.என் மனைவி தான் இல்லை. எனக்காகவும், பொண்ணுக்காகவும் நீயும், தங்கச்சியும் கூட வர்றீங்களா?" என்று தயங்கியவாறே கேட்டார் நீலகண்டன்.
"கௌசி கிட்டயும் கேட்டுட்டு சொல்றேன்"
"கல்யாணம் முடிஞ்சதும் வந்து வேலை பாருன்னு சொல்றதில் என்னத் தப்பிருக்கு மௌனா?" என்று காட்டமாக கேட்டான் மஹதன்.
அவர்களிருவருக்கும் திருமணப் பேச்சு முடிந்த தருவாயில் இருந்தே, தொடர்ந்து அந்த தங்கும் விடுதியில் வேலை செய்து கொண்டிருந்தாள் அல்லவா? ஆனால் இப்போதும் வேலையைத் தொடர்வதை மஹதன் விரும்பவில்லை.
"நீங்களே நியாயத்தைச் சொல்லுங்க கிஷான்! நான் என்னோட சம்பளத்தை வீட்டுக்குக் குடுக்கனும்ல? அப்படின்னா, வேலையில் இருந்து தானே ஆகனும்?" என்று அவனைத் தனக்காகப் பேச அழைத்தாள் மௌனா.
"ப்ச்!" என்று சலித்துக் கொண்ட மஹதனிடம்,
"நீங்க என்னை டீமோடிவேட் பண்றீங்க!" என வருத்தமாக கூறினாள்.
"சத்தியமா இல்லை ம்மா! நீ இந்த ஜாப்ல இருந்தாலும், வேற கம்பெனியில் வேலைக்கு அப்ளை பண்ணாலும், எனக்குப் பிராப்ளமே இல்லை. உன்னோட சுதந்திரத்தில் நான் தலையிடலை. கொஞ்ச நாளைக்கு இதெல்லாம் ஹோல்ட் பண்ணி வைக்கலாமேன்னு தான் கேட்டேன்" என்று புரிய வைக்க முயற்சி செய்தான்.
"அடேய்! என்னை உட்கார வச்சிட்டு நீங்க ஆர்கியூ பண்ணிட்டு இருக்கீங்க? என்னோட முகி டார்லிங் வேற வரப் போறா! அதுக்கு ஏதாவது முக்கியத்துவம் கொடுத்துப் பேசறீங்களா?" என்று நொடித்துக் கொண்டான் கிஷான்.
"ஆமால்ல! அண்ணா! முக்தா வந்ததும் என் கூட வர சொல்றீங்களா?"
"என் கூட வருவாளான்னே டவுட் தான் ம்மா!" என்றான்.
"ஓகே அண்ணா. நான் அவங்களை தாஜா பண்ணிக்கிறேன்" என்று குறும்புடன் கூறினாள் மௌனா.
"நீ டாபிக்கை மாத்தாதே! நான் சொன்னதைக் கேட்கிறியா?" என்று அதே விஷயத்திற்கு வந்து நின்றான் மஹதன்.
"யோசிக்கிறேன் மஹி" என்று பதிலளித்தாள்.
"என்னமோ போ!" என்று அவளது விருப்பத்திற்கே விட்டு விட்டான்.
"உங்க டாபிக் முடிஞ்சிதா? என் விஷயத்துக்கு வருவோமா?" என்று பரிதாபமாக கேட்டான் கிஷான்.
"சாரி டா. சொல்லு" என்றான் மஹதன்.
"முக்தா இன்னைக்கு நைட் வந்துடுவா. எப்படியும் ஜெட் லாக் சரி ஆகி, வர்றதுக்கு டைம் எடுத்துப்பா. நான் எப்படி அப்ரோச் பண்றதுன்னு தெரியல" என்று கேட்டான்.
"இப்போ வரப் போற முக்தா, உனக்குச் சொந்தமான ஒருத்தி, உன்னோட மனைவியாகப் போகிறவள் தான்! அப்படியிருக்க, நீ அவளை எந்தக் காரணம் கொண்டும் கடந்த காலத்தைப் பத்திப் பேசாமல் இருந்தாலே போதும்!" என அறிவுறுத்தினான் நண்பன்.
"ஆமாம் அண்ணா. அவங்க அதை தான் எதிர்பார்ப்பாங்க. என் கூட சகஜமாகப் பேசுறாங்க. இருந்தாலும் ஒரு ஒதுக்கம் இருக்கத் தானே செய்யும்" என்று முக்தாவின் பக்கம் இருந்து யோசித்துப் பேசினாள் மௌனா.
"நான் எதுக்கு அதைப் பண்ணப் போறேன்டா ம்மா! அவ எனக்கு ஓகே சொன்னதே போதும். என்னோட காதலி அப்பறம் மனைவி ஆகப் போறா. அது மட்டும் தான் எனக்கு நினைவில் இருக்கு" என்று உறுதியாக கூறினான் கிஷான்.
"அப்பறம் என்ன? ஏதாவது கிஃப்ட் வாங்கி வச்சுட்டீங்களா?" என்றாள் மௌனா.
"இல்லை ம்மா"
"ஏன் அண்ணா?"
"நாங்க முதல் டேட்டிங் போகிறப்போ வாங்கிக் கொடுத்துக்கலாம்னு தான்" என்று வெட்கத்துடன் கூறினான்.
"ஹூம்" என அருகில் இருப்பவளைப் பார்த்தான் மஹதன்.
"உங்களுக்கு என்னாச்சு?" என்று முறைப்புடன் கேட்டாள்.
"டேட்டிங்!" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டான்.
"கொஞ்சம் கருணை காட்டு ம்மா" என்று நண்பனுக்கு ஏற்றுப் பேசினான்.
"கருணை தானே அண்ணா! காட்டிடலாம்!" என்று மஹதனுடன் வெளியேறினாள் மௌனா.
அவர்களைச் சிரிப்புடன் அனுப்பி வைத்து விட்டு, முக்தாவின் வருகையினால் குதூகலம் அடைந்தான் கிஷான்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக