சுற்றியிருந்த மற்றவர்களும் திருமூர்த்தியின் மேலிருந்த விசுவாசத்தில் அவர் கூறியதை நம்பி விட்டனர்.
அவரும் தன் கம்பெனியில் முக்கியப் பதவிகளில் வகிப்பவர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செயல்படவில்லை.
தரம் நன்றாக இருக்கும் பொருளைத் தான், தயாரிக்கும் யோசனையை முன் வைத்திருந்தார் திருமூர்த்தி.
அந்த மீட்டிங்கின் முதன்மைப் பேச்சே அதைப் பற்றியது தான்!
"எங்களுக்கும் சம்மதம் சார்!" என்று நீலகண்டனைச் சேர்த்து, அங்கிருந்த மற்ற உயர் பணியில் இருப்பவர்களும் ஒப்புக் கொண்டனர்.
மதிய உணவுக்கான வேளை வந்ததும், சாப்பாடு தன் இருப்பிடத்திற்கு வருவதற்கு முன்னாலேயே, தான் உணவுண்ணப் போவதைக் குறுஞ்செய்தியாக மகளுக்கு அனுப்பி வைத்து விட்டார் நீலகண்டன்.
"மூர்த்தி அங்கிள் கூட தான லன்ச்ன்னு சொன்னாரு" என்றபடி, யோசனையில் இருந்தவளுடைய செல்பேசியில் குறுஞ்செய்தி வந்தது.
மதிய உணவை எடுத்துக் கொண்டதாக தந்தை தான், அதை அனுப்பியிருந்தார். அந்த குறுஞ்செய்திக்குப் பதில் அனுப்பியவளுக்கு , வேறு என்னப் பொழுதுபோக்கு இருக்கிறது செய்வதற்கு? உறக்கத்தில் ஆழ்ந்து விட்டாள் முக்தா.
அதற்குப் பின்னர் தான், வெளி வேலைகள் முடிந்து, வீட்டிற்கு வந்து, மகளின் உறக்கத்தை உறுதி செய்து கொண்டு, தன்னறைக்குள் நுழைந்து கொண்டார் நீலகண்டன்.
தெளிவாகப் பேசியப் பிறகு ஏன் அலைப்புறுகிறாய்? முக்தா புரிந்து கொள்வாள் என்றெல்லாம் கூறிய இன்னும் கொஞ்ச நாளில் முக்தாவின் நிலைக்குத், தான் மாறப் போகிறோம் என்பது கிஷானுக்குத் தெரியவில்லை.
அவளது புறம் அல்லது அக அழகு அவனை ஈர்க்கப் போகிறது, அதற்காக, தான் வருடக்கணக்கில் காத்திருக்கப் போகிறோம் என்பதும் அவன் யோசித்துப் பார்க்காத ஒன்று.
இயல்பிலேயே கலகலப்பும், பொறுமை குணமும் பெற்றதால் தான் , இன்று வரை மஹதனுக்கு உற்றத் தோழனாக நிலைத்து இருக்கிறான் கிஷான்.
மடிக்கணினியின் விசையைத் தட்டிக் கொண்டவனுக்குள் திடீரென்று ஒரு நினைவு. அவன் வெகு விரைவில் முக்தாவை நேரில் சந்திப்பதாக இருந்தது அதன் சாராம்சம்.
"இப்படியெல்லாம் தோன்ற அளவுக்கு ரொம்ப அடிக்ட் ஆன மாதிரி இருக்கே!" என்று பெண்ணவளைப் பற்றிய யோசனையைத் தள்ளி வைத்து விட்டான் கிஷான்.
அடுத்த வந்த நாட்களில், கிஷானுக்கும், மஹதனுக்கும் தங்கும் விடுதியில் செய்த மாற்றங்களைச் சரி பார்க்கவே நேரம் போதாமல் இருந்தது.
அனைத்தையும் முடித்துப் பெருமூச்சு விட்டுக் கொண்டார்கள் நண்பர்கள்.
அலுவலகத்தில் மஹதனின் அறையில் பேசிக் கொண்டிருந்த கிஷான்,
"இங்கேயும் சேஞ்சஸ் பண்ணனும் போலயே?" என்று நண்பனின் தங்கும் விடுதியையும் மாற்றி அமைக்க வேண்டும் என வலியுறுத்திக் கொண்டிருந்தான்.
"யெஸ் கிஷான்! அதுக்கு முன்னாடி இங்கிருக்கிற ஃப்ரண்ட் ஆஃபீஸ் ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் பொறுப்பாக ஒரு ஆளைத் தேர்ந்தெடுக்கனும்" என்றான் மஹதன்.
"இதுக்கு முன்னாடி வேலை பார்த்தவங்க?"
"அந்தப் பொண்ணு சரியாக வேலைப் பார்க்கிறது இல்லைன்னுக் கம்ப்ளைன்ட்ஸ். ஃப்ரஷரைத் தான் வேலைக்கு எடுக்கனும்" என்று பதிலளித்தான்.
"ஏன் அப்படி?"
"ஆமாம். இப்போ இருக்கிறவங்க அனுபவசாலி தான். ஆனால் வேலையில் கவனம் இல்ல. விருந்தாளிகள் கிட்ட இருந்து நிறைய புகார்கள் வருதுடா"
"சரி. நியூஸ் பேப்பரில் விளம்பரம் கொடுத்துடு. இல்லைன்னா எங்கிட்ட சொல்லு, நான் பாத்துக்கிறேன்" என்று கூறினான் கிஷான்.
"விளம்பரம் கொடுத்துப் பார்ப்போம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போது, அங்கிருந்த லேண்ட்லைன் ஒலித்தது.
"சார் ! உங்களைப் பார்க்க முக்தா மேடம் வந்திருக்காங்க" என்று அறிவித்தாள் முன் அலுவலக வரவேற்பு வேலையில் இருக்கும் பெண்.
"என்ன விஷயம்னு கேளுங்க?" என்றதும்,
அங்கே, அவன் சொன்னது போல முக்தாவிடம் கேள்வியைக் கேட்டாள் அப்பெண்.
"நான் அவரோட க்ளோஸ் ஃப்ரண்ட். பர்சனல் ஆகத் தான் பேசனும். உங்கிட்ட சொல்ல முடியாத விஷயம்னு சொல்லு" என்று கட்டளையைப் பிறப்பித்து விடவும்,
அதை அப்படியே அவனுக்குக் கடத்தினாள் வரவேற்பில் இருந்தப் பெண்.
"ஓகே. வர சொல்லு" என்று அழைப்பை வைத்து விட்டான்.
அவனுடைய முகத்தில் சலிப்புத் தெரியவும்,"யார் வர்றா மஹத்?" என்று கேட்டான் கிஷான்.
"முகி தான்" என்றான்.
"அவங்களா?" என இவனுடைய ஆச்சரியத்தைக் கண்டு, குழப்பத்துடன்,
"ஆமாம். அதில், உனக்கு ஏன் இவ்ளோ ஆச்சரியம்?" என்று கேட்டான்.
"இல்லையில்லை. சும்மா தான். நானும் அவங்களைப் பார்த்து ரொம்ப நாளாச்சே! அதான்" என்று வாய்க்கு வந்ததை உளறி விட்டு அவளின் வரவிற்காக வாயிலைப் பார்த்துக் கொண்டு இருந்தான் கிஷான்.
எதையும் நொடியில் கண்டுபிடித்து விடும் மஹதனுக்கு, தோழனின் இந்த மாற்றம் மட்டும் தெரியாமல் போகுமோ? அவனே வாய் திறக்கட்டும் என்று விட்டு விட்டான்.
அதற்குள், அலுவலக அறைக் கதவைத் தட்டி விட்டு, மெத்தனமாக வந்து நின்றவளை மேலிருந்து , கீழாக ஆராய்ந்தான் கிஷான்.
"ஹாய் மஹத்!" என்ற அவளது மிகுந்த மகிழ்ச்சி இவனுக்குள் நிறைவைக் கொடுத்தது.
இந்தக் காரணத்தினால் தான், முக்தா தன்னை ஈர்க்கிறாளோ? என்று தோன்றியது கிஷானுக்கு.
ஆனால், உணர்ச்சியற்ற முகத்துடன் அவளை வரவேற்றான் மஹதன்.
"என்ன முக்தா?"
அவன் கேட்டதும், கிஷான் அங்கு இருப்பதைப் பார்த்தவள்,
"உன்கிட்டப் பேசனும்" என்று தயக்கத்துடன் கூறினாள்.
"நான் வெளியே இருக்கேன்" என்று நாகரீகமாக ஒதுங்கிச் சென்று விட்டான்.
அவன் வெளியேறியதும்,
"நானும் நீ மாறுவன்னு நினைச்சுட்டு இருக்கேன் மஹத்!"
"இதோ பாரு முகி. அதெல்லாம் நடக்காத காரியம்! நீ தான் மாறனும்" என்று திட்டவட்டமாக கூறினான்.
வெளியே காத்திருந்தவனின் மனநிலை தான் என்னவென்றே புரியாத ஒன்றாகிப் போனது.
அவளுடைய கெஞ்சலைப் பார்க்கத் தேவையிராது என்று தான் வந்து விட்டான் கிஷான்.
அந்த அளவிற்குத் தனக்கு முக்தாவின் மேல் காதலா? அவனது மூளையை யோசனைகள் சூழ்ந்து விட்டது.
"யோசிச்சு முடிவு பண்ணு மஹத்! உன் ஃப்ரண்ட் வேற வெளியே காத்திருப்பாரே.நானும் கிளம்பறேன்"
அவள் சென்றதே போதும் என நாற்காலியில் அமர்ந்து விட்டான் மஹதன்.
கதவைத் திறந்து கொண்டு வந்தவளை விழிகளை உருட்டிப் பார்த்து,
"ஹாய் முக்தா!" என்றான்.
அவனை ஏறிட்டுப் பார்த்தவளோ,"கிஷான் தான?" எனப் பேச்சுக் கொடுத்தாள்.
"யெஸ்!"
தன்னை ஞாபகம் வைத்திருக்கிறாள் என்ற நிறைவு அவனுக்கு.
"என்ன?"
வேண்டாவெறுப்பு மிகுந்த கேள்வி தான் வெளி வந்தது அவளிடமிருந்து.
"ஒரு விஷயமும் இல்லை. சும்மா ஹாய் சொன்னேன்" என்று குறும்புடன் கூறியவனிடம்,
"அப்படியா? பை!" என்று பதில் கூறி விட்டுப் புறப்பட்டாள் முக்தா.
குறுஞ்சிரிப்புடன் அறைக்குள் புகுந்தான் கிஷான்.
கடுகடுத்த முகத்துடன் அவனிடம்,
"அப்பப்போ இங்கேயும் வந்துடறா?" என்று குறைபாட்டான் மஹதன்.
அதைப் புன்னகையுடன் கேட்டுக் கொண்ட கிஷானுக்கு வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. ஆனால், அவனது மனமோ முக்தாவை நினைத்து, நொடித்துப் போயிருந்தது.
தந்தைக்கு முன்னர் வீட்டிலிருக்கும் முக்தாவை, இன்றோ நீலகண்டன் தான் வரவேற்றார்.
"இவ்ளோ சீக்கிரம் வந்துட்டீங்களே அப்பா?" என்று ஆச்சரியமாக கேட்டாள் மகள்.
"ஆமாம் முகி.மஹதனைப் பார்த்துட்டு வந்துட்டியா?" என்று தான் ஆரம்பமானது அவர்களது பேச்சு வார்த்தை.
அதில், காயப்பட்ட மனதுடன்,"ம்ஹ்ம்… பார்த்துப் பேசிட்டு வந்துட்டேன் ப்பா" என்றாள் முக்தா.
"எப்பவும் போல தான?" எனக் கேட்டார் தந்தை.
"ஆமாம் ப்பா. அதுனால என்ன இப்போ? நீங்களும் மூர்த்தி அங்கிள் கிட்ட எனக்காகப் பேசுங்க"
"நான் உனக்காகப் பேசத் தயார் முகி. ஆனால் மஹதனும், அவனோட ஃபேமிலியும் சம்மதிக்கிற வரைக்கும் நீ ஒன்னுப் பண்ணனும்" என்று கூறினார் நீலகண்டன்.
"என்னப் பண்ணனும் ப்பா?" என வேகமாக கேட்டாள்.
" கொஞ்ச நாளைக்கு ஃப்ரண்ட்ஸோட ஜாலியாக டூர் போயிட்டு வா. அதுக்குள்ளே பேசிடறேன்" என்று உறுதியாக கூறினார் அவளுடைய தந்தை.
"டூரா? நீங்க தனியாக இருப்பீங்களே ப்பா?" என்று பதறினாள் முக்தா.
"உன்னை விட்டு எப்படி பிரிஞ்சி இருப்பேன்? அது தான் கஷ்டம். மத்தபடி, புதுப்புது ஐடியாஸ் கொட்டிக் கிடக்கிறதால், வேலையில் மூழ்கிட்டாப் போச்சு" என்று பரிவாகப் பேசினார் நீலகண்டன்.
"எனக்கும் அதே ஃபீல் இருக்குமே ப்பா! அப்பறம், என் ஃப்ரண்ட்ஸ் இப்போ என் மேல் கோபமாக இருக்காங்க!" என்று சோகமாக கூறிய மகளிடம்,
"அவங்க இல்லைன்னா வேற ஃப்ரண்ட்ஸ் இல்லையா? நம்பிக்கையாக இருக்கிற ஃப்ரண்ட்ஸோட போயிட்டு வா முகி" என ஆறுதல் கூறினார்.
"சரி அப்பா"
தோழிகளும் தன்னுடன் பேசுவதைக் குறைத்துக் கொண்டனர் என்பது முக்தாவின் மனதை வெகுவாக உலுக்கியது. இன்று மஹதனும் தன்னைச் சிறப்பாக கவனித்து விட்டான். இவ்விரண்டையும் தாங்கிக் கொண்டு, மறக்க பிரயத்தனங்கள் செய்ய வேண்டும் என்பதால், அது வெளிநாட்டுக்குச் சென்றால் தான் முடியும் என்று! தந்தை சொன்னதை ஒப்புக் கொண்டாள் முக்தா.
அதற்கான ஆயத்தப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, அவ்விடயம் மஹதன் காதுக்குப் போக, யதேச்சையாகப் பேசியதில் கிஷானுக்கும் தெரிந்து விட்டது.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக