"முக்தா ம்மா! நீ ஃபாரீனுக்குப் போகிறது உறுதி பண்ணிட்டியா?" என்று வாங்கிய புகைப்படங்களை பிரித்து வைத்துக் கொண்டே கேட்டார் நீலகண்டன்.
"ஆமாம் அப்பா.என்னோட முடிவு இப்பவும் மாறலை" என்று தெளிவாக கூறினாள் முக்தா.
இது தனக்கென்று தானே கொடுக்கும் கால அவகாசம்.கிஷானுக்குத் தான் பொருத்தமான பெண்ணாக மாற வேண்டும் என்பது அவளுடைய விருப்பம்.
அவனுடைய எண் தன்னுடைய செல்பேசியில் கேட்பாரற்றுக் கிடக்கிறது என்பதை அறிந்து கொண்டவள், உடனே அதை சேமித்தாள் முக்தா.
கிஷான் தன்னுடைய முகத்தையே முகப்புப் படமாக வைத்திருந்தான்.முதல் முறையாக அவனை ரசிக்கத் தொடங்கினாள் முக்தா.
அவன் தனக்காக இரண்டு வருடங்கள் காத்திருப்பானா? என்ற நினைப்பு வேறு உள்ளுக்குள் குறுகுறுப்பை உண்டாக்கியது.
"இரண்டு வருஷம் கழிச்சு உனக்காக திரும்பி வருவேன் கிஷான்! அப்பவும் இதே கிஷானாக என்கிட்ட வந்து புரபோஸ் பண்ணுவியா?" என்று அவனது புகைப்படத்திடம் கேட்டாள் முக்தா.
அதே சமயம், ஏதோ தகவலைப் பார்ப்பதற்காக புலனத்தைப் பார்வையிட்ட கிஷான், எதேச்சையாக முக்தாவின் அக்கவுண்ட்டை ஆராய்ந்தான்.
அவளது முகப்புப் படத்தில், அழகாக சிரித்துக் கொண்டு இருந்த முக்தாவைப் பார்த்து,
"அடடே! நம்பரை சேவ் பண்ணிட்டாளே!" என்று ஆனந்தக் கூத்தாடினான் கிஷான்.
அடக்கி வாசிக்க வேண்டும் என்ற காரணத்தால், அவளுக்கு குறுந்தகவல் எதுவும் அனுப்பி விடவில்லை அவன்.ஜாக்கிரதையாக இருந்தான்.
"ப்ரொஃபைல் பிக்சரை மட்டுமே பார்த்துட்டு வாழ்க்கை முழுசும் இருந்துடுவேன்" என்று ரசனையாகப் புகைப்படத்தையே கண்ணெடுக்காமல் பார்த்தான் கிஷான்.
"ஹாய் கிஷான்!" என்ற முக்தாவின் குறுஞ்செய்தி வந்தது.
"ஆஹா!!" என்று ஆனந்தமாகப் பார்த்தான்.
"ஹேய் முக்தா!" என்று அவளைப் போலவே செய்தி அனுப்பினான்.
"நீங்க கேட்டதுக்கு என்னால் நேரில் பதில் சொல்ல முடியலை. வாட்ஸப்பில் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க" என்று ஆரம்பித்தாள் முக்தா.
'இல்லவே இல்லைன்னு சொல்லப் போறாளோ?' தறி கெட்டு ஓடியது அவனுடைய எண்ணம்.
"சொல்லுங்க முக்தா" என்று ஆவலை அடக்கிக் கொண்டு கேட்டான்.
"இரண்டு வருஷம் நான் ஃபாரீன் போகிறதை தவிர்க்க முடியாது கிஷான். அதுக்கப்புறம் தான் இந்தியா வருவேன். அப்பவும் உங்களுக்கு என் மேல் விருப்பம் இருந்தால், உங்களைத் தான் கல்யாணம் செய்துப்பேன்" என்று தன் எண்ணத்தை வெளிப்படையாக குறுஞ்செய்தி மூலம் அனுப்பி வைத்தாள் முக்தா.
'என்னைத் தான் கல்யாணம் செய்து கொள்வாள்! பிறகு என்ன கவலை? இரு வருடங்களை அவளது நினைவுகளுடன், குறுஞ்செய்திகளுடன் நெட்டித் தள்ளி விடலாம்' என்று முடிவெடுத்து விட்டான் கிஷான்.
அவன் காத்திருக்க மாட்டேன் என்று மறுத்து விடுவானோ? என செல்பேசியையே வெறித்துப் பார்த்தாள்.
"வெயிட் பண்றேன் மா" என்று அவனது குறுஞ்செய்தி வந்ததும், விரல் நடுங்க, அதைப் படித்தாள் முக்தா.
தனக்கானவன் இவன் தான்! என்பதை அந்த நிமிடத்தில் இருந்து, மனதில் பதிய வைத்துக் கொண்டாள்.
இப்போது தயக்கமின்றி, அவனுடைய புகைப்படத்தில் தன்னைத் தொலைக்கலானாள் முக்தா.
தற்போது கௌசல்யாவிற்கு ஆசையே மௌனாவைப் பார்க்க வேண்டும் என்பதே!
அதை மகனிடம் மறைக்காமல் தெரிவித்தார்.
"ஆமாம் மஹதா! நான் மௌனாவைப் பார்க்கனும்" என்ற ஆவலுடன் கேட்டார் கௌசல்யா.
"பார்த்து கன்வின்ஸ் பண்ணலாம்னு நினைக்கிறீங்களா அம்மா?" என்று சிரித்தான் மஹதன்.
"அப்படி கன்வின்ஸ் பண்ணா உடனே ஓகே சொல்ல மாட்டா - ன்னு எனக்குத் தெரியும் மஹதா!"
அவளைப் பற்றி மகன் சொன்ன போதே, மௌனாவைக் கணித்திருந்தார்.
அவரை மெச்சிக் கொண்டு,
"மௌனாவோட ஃபோட்டோ எதுவும் எங்கிட்ட இல்லை ம்மா?" என்று உதட்டைப் பிதுக்கினான் மகன்.
"இல்லையா?" என்ற ஏமாற்றம் அவரிடம் தோன்றியதும்,
கிஷானைப் பார்க்கப் போகிற மாதிரி அவனோட ஹோட்டலுக்கு வாங்க. அப்படியே மௌனாவைப் பார்த்துடுங்க அம்மா" என்று யோசனை கூறினான்.
"அப்படிங்குற?"
"யெஸ் மா"
பிறகு, கிஷானிடம் பேசினான்.
"அம்மா வரணும்னு சொல்றாங்க கிஷான்" எனவும்,
"என்ன திடீர்னு?" என்றான்.
"அவங்க மௌனாவைப் பார்க்கனும்னு ஆசைப்பட்றாங்க. நான் ஏற்கனவே அவளோட ஊரைக் கண்டுபிடிச்சுப் போனதுக்கே சங்கடப்பட்டுட்டா! இதையும் சொன்னா, உடனே ரிஜக்ட் பண்ணிடுவா" என்றான் மஹதன்.
"அதுக்கு!! அம்மா இங்கே வந்தா அந்தப் பொண்ணு மிரண்டு போயிடுவாங்கடா"
ஏற்கனவே அவனுடைய விடுதியில் நடந்த களேபரங்கள் அனைத்தும் கிஷானுக்குத் தெரியும். அதனால் யோசித்து முடிவெடுக்குமாறு கூறினான்.
"கேஷூவல் விசிட் மாதிரி, அம்மாவை முன்னாடியே வர சொல்றேன் கிஷான். நான் அவங்க வந்து, கால் மணி நேரம் கழிச்சு வர்றேன்" என்றான் மஹதன்.
"ஃபர்ஸ்ட் முக்தா, அப்பறம் அவளோட அப்பா வந்து மிரட்டிட்டுப் போனார். இப்போ கௌசல்யா அம்மா! எதுக்கும் நான் அவங்களோட ரெசிக்னேஷன் லெட்டரை வாங்குறதுக்கு ரெடியாக இருக்கேன்"
"இந்த தடவை எதுவும் ஆகாது டா. நீ அன்னைக்கு மட்டும் சீக்கிரம் ஹோட்டலுக்கு வந்துடு" என்றான்.
"மௌனா! இங்கே பாரேன்" என்று தன் செல்பேசியை அவளிடம் காட்டினாள் அகதா.
"தீபக் அண்ணா கிட்ட இருந்து அமௌண்ட் வந்துடுச்சா அகி? சூப்பர்! எப்படி இவ்ளோ சீக்கிரம் அனுப்பினார்?"
"நான் அன்னைக்கு விட்ட டோஸ் அப்படி மௌனா! உங்கிட்ட தான் எல்லாமே சொன்னேனே!" என்று அந்தப் பணத்தை தன் இன்னொரு வங்கிக் கணக்கிற்கு மாற்றிக் கொண்டாள் அகதா.
"இன்னும் கண்டிப்பாகப் பேசு அகி. விட்டுக் கொடுத்துடாத" என்று அறிவுரை கூறினாள்.
"அப்பா, அம்மாவுக்கு ட்ரெஸ் எடுத்துட்டு, கிஃப்ட்ஸ் வாங்கி அனுப்பனும் அகி.நாம சண்டே போகனும்" என்று அறிவித்தாள் மௌனா.
'அவர் எங்கிட்ட புரபோஸ் பண்ணியது முக்தா மேடம் கிட்ட சொன்னாரான்னு தெரியலையே? அவங்க கிட்ட இருந்து தானே ஆரம்பிச்சது! விஷயம் தெரிஞ்சா அவங்க என்ன நினைப்பாங்க? அப்போவே சொன்னேன்னு, நக்கல் பண்ணுவாங்களோ?' என்று பல விதமான யோசனைகள் அவளது மூளைக்குள் படையெடுத்தது.
முக்தா வெளிநாடு செல்வது மௌனாவிற்குத் தெரியாததால், எதேச்சையாக அவளைப் பார்த்தால் கூட, மௌனாவிற்குக் குற்றக் குறுகுறுப்பாக இருக்கும்.அதை எவ்வாறு எதிர் கொள்வது? என்று தயங்கி இருந்தவளுக்காக காத்திருந்தது மஹதனின் இரண்டாவது சர்ப்ரைஸ்!
அன்றைய தினம் கிஷான் விரைவாக விடுதிக்கு வந்திருந்தான்.எதாவது முக்கியமான அலுவல் இருக்கும் என்று நினைத்தாள் மௌனா.
"நான் ஹோட்டலுக்கு வந்துட்டேன் மஹத்!" என்று நண்பனுக்கு அழைத்துச் சொன்னான்.
"அம்மா! கிஷான் ஹோட்டலில் தான் இருக்கான். நீங்க போய்ப் பாருங்க" என்று கௌசல்யாவைத் துரிதப்படுத்தினான் மஹதன்.
அவரும் மௌனாவைப் பார்க்கும் ஆர்வத்தில் வேகமாக கிளம்பினார்.
முன் வரவேற்பறையில், வேலைக்கான, பிரத்தியேகமான சீருடை அணிந்து, சாந்தமான பார்வையுடன் தன்னை வரவேற்றவளைப் பார்த்து, மென்மையாக முறுவலித்தார் கௌசல்யா.
"குட் மார்னிங் மேம்! ஹவ் கேன் ஐ ஹெல்ப் யூ?" என்றாள் மௌனா.
"உங்க எம். டி யைப் பார்க்கனும் மா" என்று அவர் கூறவும்,
"யுவர் ஸ்வீட் நேம் மேம்?"
"மிசஸ்.கௌசல்யா" என்று பதிலளித்தார்.
"இதோ இன்ஃபார்ம் பண்றேன் மேம்" என அவர் முன்னிலையில் கிஷானுக்கு லேண்ட் லைனில் அழைத்தாள்.
"ஹலோ சார்! உங்களைப் பார்க்க ஒரு மேடம் வந்துருக்காங்க. பேர் மிசஸ்.கௌசல்யா" என்று கூறினாள்.
"உள்ளே வர சொல்லுங்க மிஸ். மௌனா" என்றான்.
அதற்குள் கௌசல்யா தன் வருங்கால மருமகளை கண் குளிரப் பார்த்துக் கொண்டார்.
"சார்! உங்களை வர சொன்னார் மேம்! ஹேவ் அ ஹேப்பி டே!" என்று வாழ்த்தி அனுப்பினாள் மௌனா.
"தாங்க்யூ மா" என்று நன்றி தெரிவித்து விட்டு, கிஷானைப் பார்க்கப் போனார்.
"வாங்க அம்மா! வருங்கால மருமகளைப் பார்த்தாச்சா?" என்று புன்னகைத்தான் கிஷான்.
"பார்த்துட்டேன் ப்பா!" என்று பூரிப்புடன் கூறினார் கௌசல்யா.
"எப்படி இருக்காங்க?"
"அமைதியாக, அழகாக இருக்கா" என்றார்.
"ஏன் அவங்க கலகலப்பாக இருந்தால், உங்களுக்குப் பிடிக்காதா அம்மா?" என்று கேட்டான் கிஷான்.
"எல்லாரும் ஒரே மாதிரி இருக்க மாட்டாங்கள்ல கிஷான்? அவங்க அவங்களுக்குன்னு ஒரு தனித்தன்மை இருக்கும்." என்று தெளிவுபடுத்தினார் கௌசல்யா.
"சூப்பர்மா!" அவரைப் பாராட்டினான்.
"இப்போ மஹதன் வந்தால் கரெக்டா இருக்கும்" என்று அவன் நினைத்ததும்,
விடுதியின் முன்னால் தன் காரிலிருந்து வெளிப்பட்டான் மஹதன்.
அவனது வரவைக் கண்டதும், அன்று ஊரில் காதல் சொல்லிய நிகழ்வு, அவளது மனதில் எழுந்தது. அதற்குப் பின் இப்போது தான் மஹதனைப் பார்க்கிறாள்.
"ஹாய்! கிஷான் உள்ளே இருக்காரா?" என்று வழக்கமான பாணியில் வினவினான் மஹதன்.
அவனிடம் எந்த மாற்றமும் தெரியவில்லை.ஆனால் உற்சாகமாக காணப்பட்டான்.
"இருக்கார் சார். ஆனால் ஏற்கனவே ஒரு மேடம் அவரைப் பார்க்கப் போயிருக்காங்க. எதுக்கும் நான்
சார் - க்குக் கால் செய்றேன்" என்று துரிதமாக கிஷானுக்கு அழைப்பு விடுத்தாள் மௌனா.
"சார்! சாரி ஃபார் டிஸ்டர்பிங் யூ! உங்களைப் பார்க்க மிஸ்டர். மஹதன் வந்திருக்கார்" என்று அறிவித்தாள்.
"நோ பிராப்ளம். அவரை என் ரூமுக்கு அனுப்புங்க" எனவும்,
"நீங்க உள்ளே போகலாம் சார்" என்று அனுப்பினாள்.
அந்தப் பெண்மணி மஹதனுக்கும் தெரிந்தவர் போல! என்று தான் நினைத்துக் கொண்டாள் மௌனா.
"ஹாய் அம்மா! ஹாய் டா!" என்று ஆர்ப்பாட்டமாக உள்ளே வந்தான் மஹதன்.
"வாடா! அம்மாவுக்கும் மௌனாவைப் பிடிச்சுப் போச்சு" என்று குதூகலித்தான் கிஷான்.
"ஆமாம் மஹதா!" என்று ஆனந்தமாக கூறினார் கௌசல்யா.
"அவங்க வீட்டில் இருக்கிறவங்களுக்கு என்னைப் பிடிக்கனுமே அம்மா?" என்றான் மஹதன்.
"அதெல்லாம் அவங்களுக்கு உன்னைப் பிடிக்கும் மஹதா!" என்று மகனுக்கு தைரியம் சொன்னார் கௌசல்யா.
"நீங்க வந்து இவ்ளோ நேரமாச்சு. இருங்க ஜூஸ் சொல்றேன்" என்று அவர்களுக்காகப் பழச்சாற்றை வரவழைத்தான் கிஷான்.
குளிர்ந்த பழச்சாற்றை பருகிக் கொண்டே,
"இனிமேல் மௌனாகிட்ட தான் சொல்யூஷன் இருக்கு மஹதா! அவ மனசை நீ நம்பிக்கையால் நிரப்பனும். உன் மேல் அவளுக்கு நம்பிக்கை வரனும். அப்போ தான் காதல் வரும். அந்த நம்பிக்கையை எப்பவும் உடைச்சுடக் கூடாது" என்று உபதேசித்தார் கௌசல்யா.
அதை அமைதியாக கேட்டுக் கொண்டான் மகன்.
"நான் உன்னோட அம்மான்னு கண்டுபிடிச்சு இருப்பாளா?" என்று கேட்டார்.
"இல்லை ம்மா. அவ வேலைப் பார்க்கிற பரபரப்பில் இருக்கிறதால், அதையெல்லாம் கண்டுக்க மாட்டா" என்று பதிலளித்தான்.
"ஓஹோ! அப்போ நாம கிளம்பும் போது, இதைச் சொல்லிட்டுப் போய்டுவோமா?" என்று குறும்பாக கேட்டார் கௌசல்யா.
"குட் ஐடியா அம்மா!" என்று ஆமோதித்தான் கிஷான்.
"மௌனாகிட்ட எனக்கு அடி வாங்கிக் கொடுக்க ப்ளான் போட்டுட்டீங்க போல?" என கேட்டவாறே வெளியேறினான் மஹதன்.
அவனுடன் மௌனாவிடம் வந்தார் கௌசல்யா.
"மௌனா! நான் மஹதனோட அம்மா!" என்று அவர் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அவரைப் பார்த்து, திடுக்கிட்டு விழித்தவள், அவர் பின்னாலிருந்த மஹதனை தீயாக முறைத்தாள் மௌனா.
"போய்ட்டு வர்றேன் ம்மா" என்று மஹதனுக்குத் தலையசைத்து விட்டு, கௌசல்யா அங்கிருந்து சென்றார்.
இங்கே மௌனாவோ, "உங்க அப்பா வரலையா சார்?" என்று அழுத்தமாக கேட்டாள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக