உடலிலிருந்த வெளி மற்றும் உள் காயங்கள் மட்டுமில்லாமல் ஊமைக் காயங்களும் சேர்ந்து தீபக்கை நிலை தடுமாறி விழச் செய்தது.
அவனைத் தாங்கிப் பிடித்துக் கொண்டு, வெளியே அழைத்து வந்தனர் மஹதனுடைய ஆட்கள்.
"நேராகப் பார்த்து நட!" என்ற அதிகாரக் குரலில் திடுக்கிட்டுக் கீழே விழப் போனான் தீபக்.
அதற்கும் கொலைவெறியோடு முறைத்துக் கொண்டே,
வெளியே கூட்டி வந்தனர்.
அவர்களைப் பரிதாபமாகப் பார்த்தான்.
"இது வரைக்கும் தான் உன்னைக் கொண்டு வந்து விடனுமாம். நிற்காமல் கிளம்பு, கிளம்பு!" என்ற அதட்டலில் சர்வமும் ஒடுங்கிப் போய் இருந்தவனுக்குத் துணையாக யாரும் கூட வரவில்லை.
நொண்டி நடந்தவனைத் தோள் பற்றிக் கொண்டு, நடத்திப் போக ஆளில்லை.
தனது சட்டைப் பாக்கெட்டில் அவர்கள் வைத்திருந்த செல்பேசியின் இருப்பு உணர்ந்து, அதை எடுத்து அன்னைக்குக் கால் செய்தான் தீபக்.
ஒரு திட்டில் உட்கார்ந்து கொண்டவன், தாய் மறுமுனையில் அழைப்பை ஏற்கும் வரை பொறுமையின்றி மூச்சு வாங்கினான்.
"ஹலோ! தீபக்" என்ற அலறல் காதில் ஏறியதும்,
"அம்மா" எனச் சேய் போல தேம்பி அழ ஆரம்பித்து விட்டான் அவரது மகன்.
"டேய்! உனக்கு என்னடா ஆச்சு? அகதாகிட்ட கெஞ்சிறா மாதிரி ஆகிடுச்சு நம்ம கதி! அதுக்கும் அவ மசியல. கடைசியில் உன்னை ஃபோனில் காமிக்கவும், உயிரே போயிடுச்சு டா! ஆளாளுக்கு அம்மாவை அதட்டிப் பேசி, அசிங்கப்படுத்திட்டாங்க தீபு!" என்று
அவனது நிலை அறிந்தும், முன்னால் மருமகளைப் பற்றி, மகனிடம் கோள் மூட்டிக் கொண்டிருந்தார் லலிதா.
அவரது ஆதங்க வார்த்தைகளை அதற்கு மேலும் கேட்கும் சக்தி அவனுக்கு இல்லையென்பதால்,
"ம்மா!! நிறுத்துங்க! நானே செத்துப் பிழைச்சு வந்திருக்கேன். நம்ம வீட்டுக்குக் கூட வர முடியாமல் நடுத்தெருவில் நின்னுட்டு இருக்கேன். நான் இருக்கிற இடத்தைச் சொல்றேன், ஒரு ஆட்டோவோ, டாக்ஸியோ பிடிச்சிட்டு வாங்க சீக்கிரம்! ஹாஸ்பிடலுக்கு வேறப் போகனும்!" என்று உடனே கிளம்பி வருமாறு கத்தி விட்டு, அங்கேயே கிடந்தான் தீபக்.
தனக்கு இருக்கும் ஒரே உறவான மகனைக் காப்பாற்ற வேண்டி, தன்னிடமிருந்த பணத்தைப் பர்ஸில் அள்ளிப் போட்டுக் கொண்டு, ஒரு டாக்சியில் அவன் சொன்ன இடத்திற்கு விரைந்தார் லலிதா.
தன்னுடைய பையில் சொருகியிருந்த பணத்தைக் கையில் வைத்துக் கொண்டு, வெறித்திருந்தான் தீபக்.
மருத்துவச் செலவிற்காக அடித்தவர்களே கொடுத்தப் பணம் அது!
மஹதன் மற்றும் கிஷான் தன்னிடம் பேசியது, விடுதலைப் பத்திரத்தில் கையொப்பமிட வலியுறுத்தியது எல்லாம் தடையில்லாமல் கிலியை ஆழ்த்தியது அவனை.
அந்த நேரம் தனக்கு முன்னால் வந்த டாக்ஸியைப் பார்த்தான்.
மகனுடைய கோலத்தை ஜன்னல் வழியாகவே கண்ணுற்றவருக்கு, முகம் வெளுத்தது.
"என்னடா தீபு!" என்று சாலை என்றும் பாராமல் அப்படியே தரையில் இடிந்து அமர்ந்தார் லலிதா.
அவனுடைய உடலின் காயங்கள் இவரை வெகுவாக அச்சுறுத்தியது.
"அவனுங்களைச் சும்மாவே விட்டுடக் கூடாது ம்மா!" என வார்த்தைகளைக் கடித்துத் துப்பினான் தீபக்.
"இன்னும் ஏன்டா? உனக்கும், எனக்கும் வாங்கியது போதும்! அவங்களை அழிக்கப் போய் நாம் அழிஞ்சிடுவோம் போல இருக்கு!" என்று படபடத்தார் அவனது அன்னை.
"முதல்ல எனக்கு ட்ரீட்மெண்ட் பார்க்கனும் மா!"
டாக்ஸி டிரைவர் ஹாரன் அடிக்கவும்,
"எழுந்திருப்பா! ஹாஸ்பிடலுக்குப் போவோம்!" என மெதுவாக மகனை எழுப்பி டாக்ஸியில் உட்கார வைத்தார் லலிதா.
முகத்தை முழுமையாக மறைத்துக் கொண்டு இருந்த காயங்களைத் தொட்டுப் பார்த்தவன், ஆங்காங்கே ரத்தம் கட்டி , சுண்டிக் கிடந்தது. அலங்கோலமாக இருந்த முகத்தை ஆத்திரத்துடன் பார்த்தான் தீபக்.
மருத்துவமனையில் கட்டுக்கள் பல போட்டு விட்டார்கள் மருத்துவர்கள்.
தையல்கள் அனைத்தும் பிரிந்து விடக் கூடாது என்ற அறிவுரையுடன் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டான்.
தீபக்கிற்கு வெந்நீர் ஒத்தடம் கொடுத்து உறங்க வைத்தார் லலிதா.
திருமணத்திற்கான டிசைனர் துணிகள் யாவும் அணி வகுத்திருக்க, அவற்றையெல்லாம் தொட்டுப் பார்த்துக் கொண்டு இருந்தாள் மௌனா.
"இந்த டிசைன்ஸ் பிடிக்கலைன்னா வேற மாடல்ஸ் பாருங்க மேம்" என்று நகரிலேயே பிரசித்திப் பெற்ற துணிக் கடையிலிருந்து வந்திருந்த ஆடை வடிவமைப்பாளர் அவளிடம் மென்மையாக கூறினார்.
"வேண்டாம் மேம். இது நல்லா இருக்கு" எனத் தனக்கானதை விரைவாகவே தெரிவு செய்திருந்தாள்.
அதை வாங்கிப் பார்த்து, டேமேஜ் எதுவும் இருக்கிறதா? எனச் சரி பார்த்தாள் அந்த உடை வடிவமைப்பாளர்.
"ஒன்னு தான் சூஸ் பண்ணியிருக்கீங்க மேம். இன்னும் நாலு செலக்ட் செய்து வைங்க" என்று பணிவுடன் கூறினாள்.
"நாலு எதுக்கு?" எனக் கேட்டாள் மௌனா.
"கௌசல்யா மேம் தான் சொன்னாங்க" என்று பதிலளித்தாள்.
அத்தையின் பெயர் வந்ததும், "ஓகே" என்றவாறு ஆடைகளில் கவனம் பதித்தாள்.
மற்ற மூன்று உடைகளையும் தன் மேல் பொருத்திப் பார்த்து விட்டு, ஒப்புதல் சொன்னாள் மௌனா.
கௌசல்யா முதற்கொண்டு, மௌனாவின் பெற்றோர் கூட அவளது அறைக்குள் நுழையவில்லை.
ஆடை வடிவமைப்பாளருக்குமே போதிய சோதனைகளுக்குப் பிறகு தான் அனுமதி வழங்கப்பட்டு இருந்தது.
நான்கு உடைகளும் வெவ்வேறு மாடல்களில் இருந்தது.
வருங்கால மாமியாரின் அன்புக் கட்டளைகளில் இது முதலாவது என்பதால், அதிலிருந்து பிறழத் தோன்றவில்லை மௌனாவிற்கு.
உடைகளின் விலையை எக்காரணம் கொண்டும் அவளுக்குத் தெரியப்படுத்தக் கூடாது எனவும் உத்தரவிட்டு இருந்தான் மஹதன்.
அவனது விருப்பத்தையும் கேட்டு விட ஆசைப்பட்டாள் மௌனா.
ஆனால், "உனக்கும் பிடிச்சதாகத் தான் இருக்கனும். வேற யாரும் உள்ளே தலையிடக் கூடாதுன்னு தான் யாரையும் வர விடலை" என்று அன்பாக கூறி விட்டான்.
"என்னங்க சம்பந்தி?" என்று தங்கள் பெண்ணின் திருமண உடைகளைத் தேர்வு செய்ய ஆசையாக இருந்த சிவமணியும்,அன்னபூரணியும் கூட சங்கடத்தைத் தெரிவித்தனர்.
அகதா தான் இருவரையும் சமாதானம் செய்தாள்.
அவளையும் மௌனாவின் அறைக்கு உள்ளே விடவில்லை.
அதற்குப் பிறகு தான் மணப் பெண்ணுக்கான உடைகளைப் பார்த்தனர் மற்றவர்கள்.
நகைகள் விஷயத்தில் கூட இதையே கடைபிடித்து இருந்தான் மஹதன்.
தங்கள் பங்கிற்கு மகளுக்காக கடைகளில் துழாவி, சிறுகச் சிறுக சேமித்து வைத்தப் பணத்தில் தங்க நகைகளை வாங்கி வைத்து விட்டனர் சிவமணியும், அன்னபூரணியும்.
அடுத்து வந்த நாட்களில் மகளுடைய சுபாவத்தில் ஏற்படும் மாறுபாடுகளை அவதானித்துக் கொண்டு தான் இருந்தார் நீலகண்டன்.
அவளை அழைத்து உட்கார வைத்தவர்,"என்னாச்சு முகி?
கிஷான் ஏதாவது பேசி கஷ்டப்படுத்திட்டானா?" என்று முக்தாவிடம் கேட்டார்.
"இல்லை அப்பா" என்றவள், தன் நிலையின் உண்மைக் காரணத்தை அவரிடம் விளக்கினாள் மகள்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக