முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 10



லலிதாவின் குரலைக் கேட்டதும், அதிர்ந்து போன உடலுடன் எழுந்து நின்று விட்டாள் அகதா.


அந்த இரைச்சல் நன்றாகவே மௌனாவிற்கும் கேட்டு விட, செல்பேசியை அப்படியே கையில் எடுத்துக் கொண்டு, என்னவென்று பார்க்க வெளியே சென்றாள்.


திடீரென்று மௌனா ஏன் அதைக் கவனிக்காமல் செல்கிறாள் என்ற குழப்பத்துடன் கிஷானும், மஹதனும் வீடியோ காலின் திரையில் காத்திருந்தனர்.


அடி வாங்கிய அலுப்பில் மயங்கிக் கிடந்த தீபக்கைத் தான் அவளிடம் காட்டிப் பேசிக் கொண்டு இருந்தனர் இருவரும். அவன் விழித்து இருந்தால் தான், தனக்காகப் பரிந்து பேச இவளிடம் கெஞ்சிக் கூத்தாடி இருப்பானே?


பதறிக் கொண்டு வீட்டின் வெளிப்புறம் வந்தாள் அகதா.


அவளைப் பார்த்ததும் ஆங்காரத்தில் விகாரம் கொண்டது லலிதாவின் வதனம்.


"ஹேய் இவளே! என் புள்ளை எங்கேடி?" என்று அவளிடம் உச்சஸ்தாயியில் கத்திக் கேட்டார்.


எதுவுமே புரியாதவளோ பயத்தை மறைத்தவாறு,"உங்கப் பிள்ளை எங்கே இருக்காருன்னு எனக்கு எப்படி தெரியும்?" எனக் கூறினாள்.


அவளுக்கு அருகே அணை போல வந்து நின்று கொண்டாள் மௌனா‌.


"நீயும் வந்துட்டியா? உங்களையெல்லாம் பகைச்சுக்காதடான்னு அவனுக்குப் புத்தி சொன்னேனே! கேட்கலையே! உன்னைக் கட்டுன பாவத்துக்கு இப்போ காணாமல் போய்ட்டானே!" என்று ஒப்பாரி வைக்கத் துவங்கி விட்டார் லலிதா.


தன் முன்னால் மாமியாரின் இந்த ஆற்றாமை படிந்த நிலைக்கு மூலம் எது? என்று புரியாது பாவப்பட்ட ஜீவனாக அலைக்கழிந்து போனாள் அகதா.


அவரது வருகையின் காரணம் அறிந்ததால், அதை அப்போது வெளியே சொல்ல முடியாது தவித்துக் கொண்டு நின்றிருந்தாள் மௌனா.


பேச்சினூடே அவர் சொன்னதையெல்லாம் மனதில் உருப்போட்டுப் பார்த்துக் கொண்டு அதன் உதவியுடன்,"இங்கே பாருங்க! உங்க மகனை நாங்க என்னப் பண்ணோம்? எதுக்கு இந்த ஒப்பாரி?" என்று கேட்டாள் அகதா.


"ஏன் சொல்ல மாட்ட? டைவர்ஸ் நோட்டீஸ் அனுப்பின தான? அதை நினைச்சு மனசொடிஞ்சு போயிருந்தான். அதுக்கு நியாயம் கேட்கப் போறேன்னு சொல்லிட்டு இருந்தான். அப்படி வந்தவனை ஆளை வச்சு என்னப் பண்ணீங்களோ? யாருக்குத் தெரியும்?" என்று மறுபடியும் தனது ஒப்பாரியைத் தொடர்ந்தார் லலிதா.


"கொஞ்சம் அமைதியாக இருங்க. அவருக்கும், அகதாவுக்கும் எந்த சம்பந்தமும் இருக்கக் கூடாதுன்னு தான் டிவோர்ஸ் நோட்டீஸே அனுப்பினோம். நீங்க இங்கே வந்து கத்துறது வேஸ்ட்.உங்க மகனை வேறே எங்கேயாவது போய்த் தேடுங்க" என்று அதட்டினாள் மௌனா.


"அவன் உன் சிநேகிதியைப் பார்க்கத் தான் வர்றதாகச் சொன்னான். இதோ இந்த கைகாரியைப் பார்க்க வந்திருப்பான். நீ உன் வருங்காலப் புருஷனை வச்சு அவனை ஏதாவது செஞ்சிருப்ப!" என்று அரற்றினார் தீபக்கின் அம்மா.


இவர்களது சத்தத்தில் உள்ளேயிருந்து சிவமணியும், அன்னபூரணியும் வந்து விட்டனர்.


தீபக்கின் தாய் தங்கள் இல்ல வாசலில் நின்று பெருங்குரலெடுத்து வாக்குவாதம் செய்து கொண்டிருப்பதைப் பார்த்தவர்கள், மகள்களிடம் விசாரித்தனர்.


"வாங்க! வாங்க!" என்று நக்கலாகச் சொன்னவர் அன்னபூரணியிடம்,


"ஏன்மா! அன்னைக்கு நீங்களும், இன்னொரு அம்மாவும் சேர்ந்துக்கிட்டு எங்களைத் துரத்தி விட்டீங்களே? அது போதாதா? என் பையனை என்ன செஞ்சீங்கன்னு எனக்குத் தெரிஞ்சாகனும்! சொல்லுங்க!" என்று நொடிக்கு நொடி மகனை என்ன‌ செய்தீர்கள்? என்று கேட்டுக் கொண்டே இருந்தார் லலிதா.


அவர்களைத் திட்டுவது பொறுக்க முடியாமல் அகதா,"இதோ பாருங்க. அவர் என்னைப் பார்க்க வரவே இல்லை! அப்படியே வந்திருந்தாலும்,துரத்தி விட்டிருப்பேன்.தேவையில்லாமல் வந்து சண்டை போடாதீங்க. இனிமேலாவது என்னை நிம்மதியாக இருக்க விடுங்க" என்று அவரிடம் கத்தினாள்.


இன்னும் தொடுதிரையில் இருந்தவர்களுக்கு இந்தக் காட்சியெல்லாம் இலவசமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது மௌனாவின் மூலம்.


மூர்ச்சையாகிக் கிடந்த தீபக்கோ மெல்ல கண்களைத் திறந்தான்.


அதைக் கவனித்த மஹதன் அழைப்பைத் துண்டித்து விட்டு, மீண்டும் மௌனாவிற்கு ஆடியோ கால் செய்தான்.


அனிச்சையாகத் தன் கையிலிருந்த அலைபேசியைப் பார்த்தவள், மஹதனின் அழைப்பு எனவும் பெற்றோரிடம்,"மஹதன் தான் கால் பண்றார்" என்று உரைத்தாள் மௌனா.


"ம்ம்! எடுத்துப் பேசு. என் பையனை அந்த ஆளு தான் என்னமோ பண்ணி இருக்கனும். அதான், உனக்குக் கால் பண்ணி சொல்லக் கூப்பிட்றாரு!" என்று முந்திக் கொண்டு ஆங்காரமாக கட்டளையிட்டார் லலிதா.


"எடுத்துப் பேசு மௌனா!" என்று அடிக்குரலில் கூறினார் அன்னபூரணி.


வீதியில் கூட்டம் கூடுவதற்கு முன்னர் பைசல் செய்து அனுப்பி விட நினைத்தார்கள்.


"ஹலோ" என்று உள்ளடங்கிய குரலில் பேசினாள் மஹதனிடம்.


"அவனுக்கு மயக்கம் தெளிஞ்சிடுச்சு. நீ ஃபோனை ஸ்பீக்கரில் போடு" என்றான்.


அவன் சொன்னதைச் செய்தவள்,"மஹத்!" என்று குரல் கொடுத்தாள் மௌனா.


"நல்லவரே! என் பையன் எங்கே?" என்று அவனிடமும் எகிறினார் லலிதா.


சிவமணியும், அன்னபூரணியும் மாப்பிள்ளையின் அடுத்த நகர்வு என்ன என்பதைப் பதைபதைப்புடன் கேட்க ஆரம்பித்தனர்.


தீபக்கின் அம்மாவோ அவளை ஒரு வழியாக்க முடிவெடுத்திருப்பார் போலும்!


தூண் போல் உணர்ச்சிகள் அமிழ்ந்து போய் அமைதியாகிப் போனாள் அகதா.


"உங்கப் பையன் எங்ககிட்ட பத்திரமாக இருக்கான்!" என்றதும் அங்கிருப்பவர்கள் அதிர்ச்சியில் தடுமாறிப் போயினர்.


அதுவும் அகதாவோ குற்றத்தில் ஈடுபட்டவள் போல சிலையாகிப் போயிருந்தாள்.


"கேட்டியா? இப்போ என்ன சொல்ற? ஆள் பலம் இருக்குன்னு எத்தனை நாளைக்கு உன் ஆட்டம்னுப் பாக்கிறேன்! தீபக்கை விட சொல்லுடி!" என்று அவளைப் பிடித்து உலுக்கப் போய் விட்டார் லலிதா.


அதற்குத் தடையாக வந்து நின்ற மௌனா,"அவளை விடுங்க. அகதாவுக்கு எதுவும் தெரியாது!" என்று பதிலளித்தாள்.


"அப்போ நீயும், அவனும் தான் கூட்டாளிங்களா?" என்று ஏக வசனத்தில் இரைந்தார்.


மற்றவர்கள் நம்பிக்கை உடைந்து போன ஏமாற்றத்துடன் மௌனாவை ஏறிட்டனர்.


"ஐயோ! இல்லை!" என்று அவள் சொல்லும் போது,


"இன்னும் ஒரு வார்த்தை அவளை நீங்க ஏதாவது பேசினாலும் உங்கப் பையன் தான் ஆளே அடையாளம் தெரியாமல் போயிடுவான்!" என்று கர்ஜித்தான் மஹதன்.


கப்சிப் என்று அடங்கி விட்டார் லலிதா.


அவரது மகனை வேறு கேமராவின் முன் கொண்டு வந்து காட்டினான் கிஷான்.


"ஐயோ!! தீபக்!!" என்று அலறித் துடித்தார்.


அவனைப் பார்த்த அனைவருக்கும் அதிருப்தி ஏற்பட்டது மஹதனிடம்.


"என்ன மாப்பிள்ளை இது?" என்று சிவமணி குரலை உயர்த்திக் கேட்டார்.


"இவன் எங்க ஆஃபீஸூக்கு வந்து டீல் பேசினான் மாமா" என அவனது அணுமுறையைக் கூறி முடித்தான்.


அதைக் கேட்டு மிரண்டே போய் விட்டார் லலிதா.


"இப்போ புரியுதா? உங்க மகன் ஏன் இந்த நிலையில் இருக்கான்னு?" என்றவன்,


"கிஷான்! இவனைக் கூப்பிட்டுப் போய், ஃபர்ஸ்ட் எய்ட் கொடுக்க சொல்லு!" என்று சிறிதாக மயக்கம் தெளிந்தவனைத் தன் அன்னையைப் பார்ப்பதற்குத் தடை விதித்தான் மஹதன்.


தீபக் இருந்த நிலைக்கு, லலிதாவை அவனால் தெளிவாகப் பார்க்க முடியவில்லை.


"டிவோர்ஸ் நோட்டீஸில் சைன் போட்ற வரைக்கும் உங்க மகன் இங்கே தான் இருப்பான்!" என்று அழைப்பை வைத்து விட்டான் மஹதன்.


உடனே அகதாவிடம் தஞ்சமடையப் போன லலிதாவைத் தடுத்த மௌனா,"ஏன் இவளைச் சித்திரவதை செய்றீங்க? விவாகரத்துக் கொடுத்து நிம்மதியாக வாழ நினைச்சாலும் முடியாது போலிருக்கே!" என்று அவரிடம் தன்னுடைய தோழிக்காகப் பொரிந்து தள்ளினாள்.


"மௌனா!" என்று அவளை அடக்கிய அன்னபூரணி,


"இப்படியெல்லாம் வந்து காட்டுக் கத்துக் கத்தினால், உடனே நாங்கப் பயந்துடுவோம்னு நினைக்காதீங்க!" என்று தீவிரமாக கூறினார்.


மருமகளின்‌ முகத்தில் ஏதாவது அறிய முடிகிறதா! என்று ஆராய்ந்து பார்த்து விட்டார் லலிதா.


ஒரு வார்த்தைக் கூட உதிர்க்காமல், யாரையும் எதிர்த்துப் பேசாமல் தேமேவென்று இருந்தாள் அகதா.


இனி அவளை நம்பி எதிர்பார்ப்பது வீண் என்று புரிந்து விட, 


"சரிங்க. அவன் எங்கிட்ட எப்போ திரும்பி வருவான்?" என்று பரிதாபமாக கேட்டார்.


"எங்க மாப்பிள்ளைகிட்ட சொல்லி உங்கப் பையனை வெளியே விட்றோம். ஆனால் அதுக்கு முதல், அவன் டிவோர்ஸ் நோட்டீஸில் கையெழுத்துப் போடனும்" என்று திட்டவட்டமாக தெரிவித்தார் அன்னபூரணி.


அதை முதலிலேயே செய்திருந்தால் அவனுக்கு இந்த மரண அடி , தனக்கு இப்படியான அவமானம் எல்லாம் கிடைத்திருக்குமா? 


குற்றுயிராக கிடைக்கிறானே! பார்த்த போதே நெஞ்சு பொறுக்கவில்லையே!


இது எல்லாம் தேவை தானா இவனுக்கு? என்று அவ்விடத்திலேயே ஓங்கி அடித்துக் கொண்டு, அழுக ஆரம்பத்தார் லலிதா.


"ச்சூ! சத்தம் காட்டக் கூடாது!" என்று தொண்டை வெடிக்கும் அளவிற்குக் கத்தினாள் அகதா.


அதில் அருகிலிருந்த மௌனாவிற்கே காது அதிர்ந்து போயிற்று.


லலிதாவின் நாக்கு உள்ளே சுழன்று கொண்டது.


"அதான், சொல்றாங்கள்ல! கேட்கலையா? ம்ஹ்ம்! இடத்தைக் காலி பண்ணுங்க!" என்று சீற்றம் கொண்டு அவருக்கு உத்தரவிட்டாள் அகதா.


அவ்வளவு தான்! துண்டைக் காணோம்! துணியைக் காணோம்! என்று அங்கிருந்து தழுவிக் கொண்டார் லலிதா.


மகனைப் பார்க்கக் கூட திராணி வேண்டுமே? இவள் இப்படி உறுமுவாள் என்று நினைத்தும் பார்க்கவில்லை அவர்.


அகதாவை உள்ளே அழைத்துச் சென்று குடிநீர் வழங்கினார் அன்னபூரணி.


அதைப் பருகியவள், தோழியை ஏறிட்டாள்.


"இது உங்கப் பிளானா?" என்ற கேள்வியில் தொடங்கியது அவளது வாதம்.


"ஐயோ! இல்லை அகி. அவர் கால் பண்ண அப்போ தான் எனக்கும் தெரியும். அடுத்து தான் அவங்க அம்மா வந்து கூச்சல் போட்டாங்க!" என்று பதறிக் கூறினாள் மௌனா.


"அவனை விடச் சொல்லு மௌனா! டிவோர்ஸ் நோட்டீஸ் கிடைக்கட்டும். அது நடக்கிற வரை பல்லைக் கடிச்சிட்டு இருக்கேன்" என்று சொல்லி விட்டு, அறைக்குள் போய் விட்டாள் அகதா.


மகளின் அருகில் வந்து,"அகதா ரொம்ப காயமடைஞ்சு இருக்கிறா!" என்றார் அன்னபூரணி.


"ஆமாம் மா" என்று நொடிந்துப் போனாள் மௌனா.


"நீ மாப்பிள்ளைக்குக் கால் பண்ணிப் பேசு‌‌" என்று கூறினார் சிவமணி.


"ஹலோ மஹத்" என்று கூறியவளிடம்,


"அகதாவுக்கு உன் மேல கோபமா?" என்று வினவினான்.


"அந்தம்மா வந்துட்டுப் போனதால் டிஸ்டர்ப் ஆகிட்டா. நானும் சம்பந்தப்படு இருப்பேன்னு நினைச்சா" என்று அவனிடம் சொன்னாள் மௌனா.


"தீபக்கிற்கு மறுபடியும் மயக்க மருந்து கொடுத்து இருக்கோம்" என அறிவித்தான் மஹதன்.


"அவனை வீட்டுக்கு அனுப்பச் சொல்லி, அகதா கேட்டுக்கிட்டா ங்க" என்றாள்.


"சைன் வாங்கிட்டு துரத்தி விட்றோம். நீ அங்கே பாத்துக்கோ" என்று அவளிடம் தைரியம் கூறி வைத்தவன்,


கிஷானிடம்,"மயக்கம் தெளிஞ்சதும், சைன் வாங்கி அவங்க அம்மாகிட்ட அனுப்பி விடு" என்று கூறி கிளம்பிச் சென்றான் மஹதன்.


அகதாவின் வாழ்வில் விடிவு காலம் வருவதற்கான ஆரம்பம் தான் இந்த நிகழ்வோ?


                        - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...