முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 8

 


திடுக்கிட்டு அங்குமிங்கும் அலைபாயும் மௌனாவின் கருவிழிகளைப் பார்த்துக் கொண்டே மெத்தனமாக நாற்காலியில் அமர்ந்திருந்தான் மஹதன். 


'இவரா!! இவருக்கு இங்கே என்ன வேலை?' என்று உள்ளம் துடிக்க, அவனையே பார்த்துக் கொண்டு இருந்தவளை மஹதனுக்கு அருகிலிருந்தவன், 


"மிஸ்.மௌனா!" என்று கூவி அழைத்தான். 


அதில் சுயநினைவு அடைந்தவள், 

"சார்… சாரி!" என்று மஹதனைத் தவிர்த்தவள், இவன் புறம் பார்வையை வைத்துக் கொண்டாள். 


அவளிடம் பேச்சுக் கொடுத்தவன் தான் கிஷான். மஹதனின் நெருங்கிய நண்பன். முக்கியமாக மஹதனுடன் இந்த கம்பெனியைச் சேர்ந்து நடத்துகிறான். இதை மட்டும் மௌனா அறிந்தால், நிச்சயம் இங்கு வேலை பார்க்கலாம் என்ற எண்ணத்தைத் தலை முழுகி விடுவாள். 


"உங்க சர்டிஃபிகேட்ஸ்?" என்று அவளிடம் கேட்டுப் பெற்றுக் கொண்டவன், அதை ஆராயத் தொடங்கி விட்டான். 


"கடைசியாக எங்கே வேலைப் பார்த்தீங்க?" என்று எப்போதும் இன்டர்வியூ செய்யும் போது கேட்கப்படும் கேள்வியைக் கேட்டான் கிஷான். 


ஆனால் மௌனாவிற்கோ தூக்கி வாரிப் போட்டது. 


கிஷானுக்கு அருகிலேயே இருப்பவனது பெயரை உச்சரிக்கத் தன்னால் இயலுமா? என்று அலை பாய்ந்தது அவளது விழிகள். 


அதையெல்லாம் கிஞ்சித்தும் கண்டு கொள்ளாதவாறு, கால் மேல் கால் போட்டு , அமர்ந்து கொண்டு இருந்தான் மஹதன். 


வேறு வழியில்லை! 

"மஹதன் குரூப்ஸ்ஸோட ஹோட்டலில் வேலை பார்த்தேன் சார்" என்றதும், 


கிஷான் அதிர்ந்தவாறே அருகிலிருந்தவனை 'அவள் சொல்வது உண்மையா ?' என்பது போல் திரும்பிப் பார்த்தான். 


"யெஸ் கிஷான்! இவங்களே வேலை வேண்டாம்ன்னு சேர்ந்த இரண்டாம் நாளே ரிசைன் பண்ணிட்டு போய்ட்டாங்க" என்று குத்தலாக அவளைப் பற்றி நண்பனிடம் மறைக்காமல் கூறினான் மஹதன். 


சந்தேகக் கண் கொண்டு அவளைத் துளைத்தெடுத்த கிஷானோ, "ஏன் மிஸ். மௌனா! இவரோட ஹோட்டலில் அப்படி என்ன அசௌகரியம் நடந்துச்சு?" என்று நிஜமாகவே எதுவும் தெரியாத கிஷான் வினா எழுப்பினான். 


உதவிக்கு வருவானா மஹதன்? வருவான் என்றும் எதிர்பார்த்திட முடியுமா? இதுவரை நிகழ்ந்த அனைத்திலும் தன்னைத் தானே காப்பாற்றிக் கொண்ட மௌனாவிற்கு நடந்த உண்மையைக் கூறுவதில் தயக்கமேது! 


நேர் பார்வை சகிதம் அவனை எதிர் கொண்டவள், 

"அங்கே எனக்குப் பிடிக்காத, சுய மரியாதையைச் சீண்டிற மாதிரியான விஷயங்கள் நடந்தது சார். அதுதான் ரிசைன் செய்துட்டேன்" என்று பட்டென்று கூறியவளைப் பிரம்மித்துப் பார்த்தான் கிஷான். 


அப்படியே மஹதனையும் ஒரு பார்வை பார்க்க, 

அவனோ,'இது உனக்கு மட்டுமே ஆச்சரியம் தரும்' என்பதைப் போல, சலனமின்றி அமர்ந்திருந்தான். 


"சரி.அங்கே உங்களுக்கு எந்த ப்ளாக் மார்க்கும் கொடுக்கலை. அதே போல, மஹதன் என்னோட பெஸ்ட் ஃப்ரண்ட். அவரோட கம்பெனியில் இருந்து ரிலீவ் ஆகிட்டு இங்கே வேலை பார்க்கிறதுல உங்களுக்கு எதாவது அப்ஜெக்ஷன் இருக்கா?" என்று மொழிந்தான் கிஷான். 


வெளிப்படையாக அவன் கேட்கவும், இவளும், 

"எனக்கு எந்த அப்ஜெக்ஷனும் இல்லை சார். ஆனால் இவரும் இந்த கம்பெனியோட எம். டி யா?" என்று தயக்கத்துடன் வினவினாள் மௌனா. 


நொடியில் முறைக்கத் துவங்கி விட்டான் அவளை.இன்னும் வேறென்ன வேண்டுமாம் அவளுக்கு? 

கேட்கத் துடித்த வாயைத் திறவாமல், எந்த எல்லை வரை செல்லப் போகிறாள்? என்று பார்க்க ஆரம்பித்தான் மஹதன். 


"இல்லை.இவன் என் கூட ஜஸ்ட் பேச வந்தான். இந்தக் கம்பெனிக்கும், இவனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இது என்னோட கம்பெனி மட்டுமே" என்று தேவைக்கு அதிகமான தகவல்களை அவன் கொடுத்த பொழுதே பெண்ணவளுக்குத் தெரிந்திருக்க வேண்டும் இதில் மஹதனுடைய கைங்கர்யம் இருக்கிறது என்று! 


பாவையவள் எப்போதும் விழி திறந்து, ஒவ்வொன்றையும் கூறு போட்டு பிரித்தறிந்துப் பார்த்துக் கொண்டு இருக்க முடியாதல்லவா! 


இருந்தாலும் இதை விட்டால் வேறு வேலை தேடுவதற்குள் வீட்டிற்கு விஷயம் தெரிந்து விடக்கூடும் என்ற ஐயத்திலேயே அவ்வேலையில் சேர முடிவெடுத்தாள் மௌனா. 


"எனக்கு ஓகே சார். நீங்க தான் என்னை வேலைக்குச் சேர்த்துக்கலாமா என்று முடிவெடுக்கனும்?" என தடுமாற்றம் கொண்டவள், மஹதனை இடையிடையே பார்வையிட்டாள். 


அவனோ அவள் கண்டுபிடிக்க முடியாதது போல், செல்பேசியில் எதையோ ஆர்வத்துடன் பார்வையிடுவதைப் போல் பாசாங்கு செய்தான். 


"எனக்கும் எந்த அப்ஜெக்ஷனும் இல்லை மிஸ். மௌனா. நீங்க இன்னைக்கு, இல்லைன்னா நாளைக்கு வேலையில் சேர்ந்திடுங்க.ஆனால் எந்த அப்ஜெக்ஷனோ, அன்கம்ஃபர்டபிளோ நேர்ந்தால் உடனே சொல்லிடுங்க" எனவும், 


நம்பிக்கை துளிர்ந்த முகத்துடன் தன் இன்றைய முதலாளியை ஏறிட்டவளது கண்களில் தெரிந்த மகிழ்ச்சிப் புன்னகையில் ஆட்டம் கண்டது மஹதனின் மனம். 


அத்துடன், தன் நண்பனின் தங்கும் விடுதியில் மட்டும் உடனே வேலையில் சேர உடனே சம்மதம் சொன்ன மௌனாவைப் பார்க்கையில் கோபமும் அளவுக்கதிகமாகவே ஏற்பட்டது. 


அவனது முறைப்பில் எரிந்து சாம்பலாகி விடுவோமோ? என்ற பயத்தில் வேகமாக கிஷானிடம், 

"தாங்க்யூ சார்!" என்று கூறி வெளியேறினாள் மௌனா. 


"இப்போ சந்தோஷமா மஹத்?" என்று கிஷான் நண்பனிடம் கேட்டான். 


ஏனெனில், மௌனாவை இங்கே வேலைக்கு அமர்த்திக் கொள்ளுமாறு சொல்லியதே மஹதன் தான்! 


அது மட்டுமின்றி, இந்த தங்கும் விடுதிக்கு இவர்கள் இருவருமே சரி சமமானப் பங்குதாரர்கள் தான். 


கிஷானுக்கும், மஹதனுக்கும் யார் வேலைக்குச் சேர்க்கலாம், சேர்க்கக் கூடாது என்ற முடிவெடுக்கச் சமமான உரிமை உண்டு. 


மௌனாவின் அப்ளிகேஷனைப் பார்த்தவுடனேயே கிஷானிடம் செய்ய வேண்டியவற்றைக் கூறி விட்டான் மஹதன். 


அவனுமே ஏன்? எதற்கு? என்றெல்லாம் கேள்விகளைத் தொடுக்காமல், அவளை வேலைக்குச் சேர்த்துக் கொண்டான். 


கிஷான், "இப்போ சொல்லு? லவ் பண்றியா?" என்றதும், 


மஹதன், "சேச்சே! கில்ட்டி ஃபீல் மச்சான்!" என்று கூறவும் அவனை நம்பாமல் பார்த்தான் தோழன். 


" அப்படியே லவ் ஆக இருந்தாலும், அவள் அவ்ளோ சீக்கிரம் ஓகே சொல்லவும் மாட்டா" என்றான். 


"எங்கே! உன்னைப் பார்த்தாலே மிரண்டு போறாங்க! அவங்களாவது உன்னை லவ் பண்றதாவது?" என்று கலாய்த்தான் கிஷான். 


மஹதன் அவளைக் காதலிக்கத் தொடங்கி விட்டான் என்ற எண்ணத்தில் மௌனாவை மரியாதையுடன் விளிக்க ஆரம்பித்து விட்டிருந்தான் கிஷான். அதையும் கண்டு கொண்டான் மஹதன். 


சிறிது நேரம் கழித்து, மஹதன் கிளம்பி விட்டான். 


தனக்கு வேலை கிடைத்ததை முதலில் அகதாவிடமே சொல்ல ஆசைப்பட்டாள் மௌனா. 


அதனால், அவளுக்கான மாலைச் சிற்றுண்டியைச் செய்து வைத்து விட்டு, தோழியின் வரவிற்காக ஆவலாக காத்திருந்தாள். 


அகதா வந்ததும், தேநீர் கலந்து கொள்ளலாம் என்று இருந்தவளுக்கு 

தன் வாழ்வில் நிகழ்ந்த இந்த மாற்றங்களை ஏற்க மனம் இல்லாமல், தவித்துப் போனாள். 


திடமான பெண்ணவள் என்று பலர் கூறக் கேட்டும், தன்னால் அந்த திடத்தைத் தொடர்ந்து கையகப்படுத்திக் கொள்ள இயலவில்லையோ? என்று பல நேரங்களில் துன்பப்பட்டாள் மௌனா. 


இப்போதிருக்கும் வேலை கூட நிரந்தரமாக இருந்தால் சரி என்று தான் தோன்றியது.


 அழைப்பு மணி ஒலிக்க, அகதா தான் என்ற உறுதியுடன் கதவைத் திறந்தாள். 


தோழியும் அவளது உறுதியைப் பொய்யாக்காமல், 

"ஹேய் மௌனா!" என்ற உற்சாகம் பொங்க உள்ளே வந்தாள். 


"அகி!!" என்று அவளைக் கட்டிக் கொண்டு விழிநீரைத் துடைத்துக் கொண்டாள் மௌனா. 


"என்னாச்சு? மறுபடியும் எதாவது ப்ராப்ளமா?" என்று அக்கறையாக கேட்டாள். 


"இது ஆனந்தக் கண்ணீர் அகி!" என்று தனக்கு வேலைக் கிடைத்த விவரத்தைக் கூறினாள் தோழியிடம். 


"சூப்பர் மௌனா!" என்று தன் அன்பைப் பகிர்ந்து கொண்டாள் அகதா. 


"ஆனால் அங்கேயும் எனக்கு ஒரு ஆப்பு இருந்துச்சு அகி" என்று மஹதனைப் பார்த்ததைக் கூறினாள் மௌனா. 


"இதென்ன மௌனா! அவரும், நீயும் இப்படி எதேச்சையாக மீட் பண்ணிக்கிற மாதிரியே இருக்கு?அவர் ஃப்ரண்டோட ஆஃபீஸ் வேற! நல்லா யோசிச்சியா?" என்று தோழியின் நலன் கருதி வினாக்கள் தொடுத்தாள் அகதா. 


"டீ குடிச்சிக்கிட்டே பொறுமையாக கேளு அகி" என்று அவளுக்குத் தேநீர் தயாரித்துக் கொடுத்தாள் மௌனா. 


"இவ்ளோ நடந்திருக்கு. மஹதன் உங்கிட்ட ஒரு வார்த்தைக் கூட பேசலையா? கிஷானும் அறிமுகப்படுத்தி வைக்கலையா?" என்று முக்கியமான வினாவைக் கேட்டாள் அகதா. 


"இல்லையே அகி! அவர் ஒருத்தர் அங்கே இருக்கிறார்னு கிஷானுமே முக்கியத்துவம் கொடுத்தா மாதிரி தெரியல. வாலன்டியராக இன்ட்ரொடியூஸ் பண்ணலைனாலும், நான் அவர் ஹோட்டலில் இருந்து ரிலீவ் ஆனதைப் பற்றி விசாரிச்சார். அப்போ, எதேச்சையாக மஹதனை இன்ட்ரோ பண்ணினார். அவ்ளோ தான் அகி! மத்தபடி அவருக்கும், அந்த ஹோட்டலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு கிஷான் சொன்னார்" என்று விவரித்தாள் மௌனா. 


"ஃப்ரண்ட் ஆக இருக்கும் போது அடிக்கடி மீட் பண்ணிக்கிற வாய்ப்பு இருக்கே? மஹதனும் ஆஃபீஸ் வரவும் வாய்ப்பு இருக்கு மௌனா" 


நாலாபுறமும் யோசித்துப் பார்த்துக் கூறினாள் அகதா. 


"ம்ஹ்ம் அகி. ஆனால் வேற வழியில்லையே? இன்னும் எனக்கு வேலை கிடைக்காமல் இருந்தால், என்னால் நீங்க எல்லாரும் தான் பாதிக்கப்படுவீங்க!" என்று கூறினாள். 


"எங்களுக்கு என்னப் பாதிப்பு வரப் போகுது?" என்று வினவினாள் தோழி. 


"அப்பா, அம்மாகிட்ட விஷயத்தைச் சொல்லலை அகி. உன்னோட சம்பளம் உன் ஃபேமிலிக்குத் தான். அதை எனக்கு நீ செலவழிக்கிறது எனக்கு விருப்பம் இல்லை" என்றதும், 


முகம் சுருங்கலானது அகதாவிற்கு. 


"இதை உங்கிட்ட இருந்து எக்ஸ்பெக்ட் செய்யலை மௌனா" என்றவாறே, மெல்ல நடந்து, சோஃபாவில் அமர்ந்தாள் அகதா. 


தான் செய்ததைச் சொல்லிக் காட்டினோமா? அல்லது செய்ததைக் கேட்டோமா? எதனால் இவளுக்கு இத்தனை அவசரம்? என்று பரிதவித்தது அகதாவிற்கு. 


மௌனா, "நான் அப்படி சொல்லலை அகி. ஆனால் எனக்கு மனசு உறுத்துது. முடியலை. எந்த தப்பும் பண்ணாமல், இப்படி நடந்து, வேலைப் பார்க்கத் தானே இங்கே வந்தேன். அதுக்கு ட்ரை பண்ணனும்ல. ப்ளீஸ் புரிஞ்சுக்கோ" என்று அகதாவைச் சமாதானம் செய்தாள் மௌனா. 


வேறு வழியில்லாமல், சமாதானம் ஆகி விட்டாள் அகதா. 


வீடு திரும்பிய மஹதனுக்கோ, தன்னை அவமதித்தவளின் மீது ஈர்ப்பு உண்டாயிற்றோ? என்ற குழப்பமே தலையெடுத்து இருந்தது. 


நண்பனுடைய பேச்சில் வந்த மாயையா? என்பது போல, பலவிதமான சிந்தனைகள் ஆக்கிரமித்திருந்த சமயம் அவனருகில் வந்தமர்ந்தார் தந்தை திருமூர்த்தி. 


அவர்களைப் பதட்டத்துடன் கவனித்துக் கொண்டிருந்தார் கௌசல்யா. 


மறுபடியும் முயற்சித்துப் பார்க்க வந்தவர், மஹதனின் தலையை மெல்லமாக கோதி விடவும், 

"என்னாச்சு அப்பா?" தலைக் கோதலில் நெகிழ்ந்து போகாமல் , கேட்டவனை ஆயாசமாகப் பார்த்தார் தந்தை. 


"முக்தா விஷயம்…" என்று இழுத்தார். 


"அப்போவே சொல்லிட்டேனே அப்பா. எல்லாருக்கும் நேரடியாகவே பதில் சொல்லிட்டேன். ஆனாலும் இப்படி வந்து மறுபடியும் கேட்கிறது எந்த விதத்தில் சரி?" அவனும் தான் எந்தளவிற்குப் பொறுப்பான்?


அதுவும் இன்றோ, மௌனாவின் நடவடிக்கை அவனுக்குள் சோர்வை ஏற்படுத்தி இருந்தது. இந்த நேரத்தில் தந்தையின் முயற்சியும், பேச்சும் உவப்பானதாய் இல்லை. 


மகனின் குரலில் தெரிந்த மாற்றத்தைப் புரிந்துணர்ந்த கௌசல்யா, "மஹதா! ப்ளீஸ்! பொறுமையாக பேசு"என்றார்.


அவனுக்கே அனைவரும் வகுப்பு எடுப்பது போலவே தோன்றியதால், 

" அம்மா! எல்லாரும் எனக்கே அட்வைஸ் பண்றீங்க! அந்த முக்தாவை நான் கல்யாணம் பண்ணிக்கனும்னு நீலகண்டன் இவரை எதையாவது சொல்லி ப்ளாக் மெயில் பண்ணி இருப்பார் அதனால் தான் இப்படி என்கிட்ட சாஃப்ட் ஆக பேசிட்டு இருக்கார்" 


தந்தையிடம் திரும்பியவன், 

"முக்தா சேப்ட்டர் முடிஞ்சுருச்சு அப்பா. அவளைத் தவிர வேறெந்த விஷயத்தைப் பத்தி என்றாலும் பேசுங்கள். நான் பொறுமையாக கேட்கிறேன் " என்று அறைக்குச் சென்று அடைந்து கொண்டான். 


மகனுடைய துல்லியமான கணிப்பைப் பாராட்டும் நிலையிலா அவர் இருக்கிறார்? 


                                  - தொடரும்

   

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...