முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நங்கையின் மறவோன் 6

 


மகள் தன்னை கடிந்து விட்டு, போன பிறகு தான் அவர் செய்த முட்டாள்தனத்தைப் புரிந்து கொண்டார் நீலகண்டன். 


ஆனால் விஷயம் கை மீறிப் போய் விட்டதே! அடுத்து எந்த முட்டாள்தனமான செயலையும் செய்யக் கூடாது என்று முடிவெடுத்தார். 


இங்கே, மஹதனோ, "ஆமாம் அப்பா. நீங்க என்கிட்ட சொல்ல நினைச்சீங்க! ஆனால் அதை அந்தப் பொண்ணு எப்பவோ செயல்படுத்திட்டா.இப்போ அவ என்கிட்ட வேலைப் பார்க்கல. என்னோட வேற ஹோட்டல்ஸில் சேர்ந்துக்கிறியா என்று கேட்டேன். அதுக்கும் முடியாதுன்னு சொல்லிட்டுப் போய்ட்டா!" என்று நிதானமாகக் கூறிய மகனை ஆச்சரியமாகப் பார்த்தனர் கௌசல்யாவும், திருமூர்த்தியும்.


"அதெப்படி மஹதா? அவளுக்கு அவ்வளவு தைரியமா?" என்று கௌசல்யா வியந்துக் கேட்டார். 


திருமூர்த்தி எதுவும் பேசவில்லையென்றாலும், மகன் அடுத்துச் சொல்லப் போவதைக் கூர்ந்து கவனிக்கும் பாவனையில் இருந்தார். 


"தைரியம் தான் அம்மா. அவ அப்படி சொல்ற அப்போ எனக்குமே ஆச்சரியம் தான். ஆனால், அதுதான் அவளுக்குச் சரியான முடிவாகத் தோணுச்சுப் போல. எப்போடா வேலையை விட்டுப் போவோம்னு, ரெசிக்னேஷன் லெட்டரைக் கொடுத்துட்டுப் போய்ட்டா" என்று முழுவதுமாக கூறி முடித்தான். 


தந்தை தன்னை அறியாமல் நிம்மதிப் பெருமூச்சு விடுவதைக் கண்ணுற்றான் தனயன்.


 அவன் நண்பன் நீலகண்டனைப் பற்றித் தான் கவலை கொண்டிருந்தார் என்றும் , இந்த விஷயம் சுமூகமாக முடிந்தது, அதனால் நண்பனைச் சமாதானம் செய்வது எளிது என்று அவரது மூளை சிந்தித்துக் கொண்டிருப்பதை

மஹதனுக்குமே தெரிந்திருக்கும் தானே! 


"இப்போ போய் உங்க நண்பனைப் பாருங்க அப்பா. அவரைக் கன்வின்ஸ் பண்றது சுலபம் ஆயிடுச்சே!" என்று சற்று கிண்டலாக கூறவும், 


அவனைத் திரும்பி முறைத்த திருமூர்த்தி, 

"நான் போய் குளிச்சிட்டு வர்றேன் கௌசி. சாப்பாடு எடுத்து வை" என்று அவரது அறையை நோக்கி காலடி எடுத்து வைத்தார். 


"ஏன் மஹதா அப்பாகிட்ட இப்படி பேசுற? அவரே செம்ம டென்ஷனில் வந்தார் தெரியுமா? நல்லவேளை அந்தப் பொண்ணு நமக்குத் தொல்லைக் கொடுக்காமல் வேலையை விட்டுட்டாள். இனி தலைவலி இல்லை" என்று மகனிடம் கூறி கணவருக்கு உணவை எடுத்து வைக்கச் சென்று விட்டார் கௌசல்யா. 


ஆனால் மஹதனுக்கோ, அவளது செயலை விட , மௌனா இறுதியாகப் பேசிய வார்த்தைகளே 

மனதினை மொத்தமாக ஆக்கிரமித்திருந்தது. 


'உங்க சம்பந்தப்பட்ட எதுவுமே எனக்கு வேண்டாம் சார்.நான் இங்க வேலைக்குச் சேரலாம்னு எடுத்த முடிவை நினைத்து வருத்தப்பட்றேன்.என்னோட முடிவு சரியாக இல்லைன்னு நினைக்கிறது இது தான் எனக்கு முதல் தடவையும் கூட சார்'


தன் பெற்றோரிடம் மௌனாவை விட்டுக் கொடுக்காமல் பேசி விட்டான் மஹதன். ஆனால், தன் மனதில் எழும் கோபத்தை என்ன சொல்லி , செய்து அமைதிப்படுத்தப் போகிறான்? என்பது அவனுக்கே புரியவில்லை. 


அவளது உதாசீனம் தனக்குள் தேவையில்லாத உரிமையைக் கிளப்பி விடும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு இருந்தானா என்ன? 


அப்படித்தான் கூடிய விரைவில் நடக்கப் போகிறதோ?


"அப்பா!!" என்று பொங்கிய கண்ணீருடன் தந்தையை அழைத்தாள் மௌனா. 


தன் மகள் இந்தளவிற்கு உணர்ச்சி வசப்பட்டு அழைப்பதைக் கேட்டு, பதறினார். 


மறுநாள் காலையில் விடிந்ததும் மகளுக்கு அழைத்துப் பேசுமாறு கூறிய மனைவியிடம் கூட, 

"இப்போ வேண்டாம் அன்னம். வேலை முடிச்சுட்டு வரட்டும். பேசறேன்" என்று காத்திருந்தார் சிவமணி. 


மாலை வரை காத்திருந்து விட்டு, மகளது வேலை முடிந்திருக்கும் என்று அழைத்திருந்தார். 


ஆனால், காலையில் நடந்தது தான் மௌனாவின் மனக்கிலேசத்திற்குக் காரணம்! 


அதை தந்தையிடம் இப்போதைக்குச் சொல்ல வேண்டாம் என்று தடுத்து அணைப் போட்டிருந்தாள் மௌனா. 


விசும்பும் ஓசை அதிகரிக்கவும், 

"மௌனா செல்லம்!" என்று பாசமாக அழைத்தார் சிவமணி. 


தான் கோடீஸ்வரனாக இல்லையென்றாலும், தன் மகள் தந்தைக்குப் பொக்கிஷமாகக் கிடைத்தவள் தானே! 


அப்பாசமிகு தந்தைக்கும் தன் செல்ல மகள் மௌனாவின் அழுகை நெஞ்சைக் கலங்கடித்தது. 


அதை அறிந்தவள் வேகமாக, 

"அப்பா! உங்களையும், அம்மாவையும் பிரிஞ்சிருக்கறது என்னவோ போல இருக்கு.அதுதான் அழுகையாக மாறிடுச்சு.வேறெதுவும் இல்லை. நீங்கள் உணர்ச்சி வசப்படாதீங்க" என்று தந்தையை சாந்தப்படுத்தினாள் மௌனா. 


"ஆமாம் மௌனா. எங்களுக்கும் பிரிஞ்சு இருக்க முடியல தான்!" என்று வருத்தப்பட்டார். 


இருவரும் வருந்திக் கொண்டே இருந்தால், ஒருவர் மற்றொருவரைப் பற்றி விசாரிக்க வேண்டாமா? என்று புத்தியில் உரைத்து விட்டது போலும்! 


"எப்படி இருக்க? அங்கே எல்லாம் சௌகரியமாக இருக்கா?" என்று சிவமணியே விசாரிப்பைத் தொடங்கினார். 


"அகதா கூட இருக்கிறதால், நல்லா இருக்கேன். எந்தக் கஷ்டமும் இல்லாமல், சௌகரியமாக இருக்கு அப்பா" என்று பதில் கொடுத்தாள் மௌனா. 


"நல்லது ம்மா. வேளா வேளைக்குச் சாப்பிடு. செலவை எல்லாம் சம்பளத்தில் செய்திடாத. அதைச் சேமித்து வை. என்ன செலவு என்றாலும் என்கிட்ட கேளு. நான் பணத்தை அனுப்பி வச்சிடறேன்" 


என்று பதினைந்து நிமிடங்கள் விசாரிப்புப் படலத்தை முடித்து, அழைப்பை வைத்தனர். 


தங்களைப் பிரிந்து இருக்கும் சோகம் மௌனாவை அதிகம் வாட்டுகிறது என்று நினைத்து விட்டார்கள் அவளது பெற்றோர். 


மௌனாவின் தொய்வு நிறைந்த முகம் அகதாவை துணுக்குறச் செய்தது. 


"என்னாச்சு மௌனா?" என்று விசாரணை நடத்தினாள் அகதா. 


இவளுடன் தங்கியிருக்கும் போது, உண்மை ஒருநாள் அகதாவிற்குத் தெரியத்தானே போகிறது? என்று உண்மையைக் கூறி விட்டாள் மௌனா. 


"முதல் நாள் உன் நெற்றிப் பிளாஸ்திரி இதைத் தான் எனக்கு மறைமுகமாக சொல்ல நினைச்சுதா?" கேள்விக் கணைகளைத் தொடுத்தவளிடம், 


"ஆமாம் அகி.எனக்கே வெறுத்துப் போச்சு. ஒவ்வொருவரும் ஒவ்வொரு மாதிரி இருக்காங்க. இதில், அந்தப் பெண்ணோட அப்பா பேசியதைச் சொன்னேன் தான? அதிகப்படியானப் பேச்சு, அது கூட இல்லை! சுத்தமான மிரட்டல்! அவங்களோட அகங்காரத்துக்கு நானோ, என் குடும்பமோ சிக்கிச் சின்னாபின்னமாகனுமா அகி?" 


தோழியைக் கட்டிக் கொண்டாள் மௌனா. 


"நீ இதுவரைக்கும் செய்ததில், எனக்கு எதுவுமே தப்பாகத் தெரியல மௌனா. இனிமேலும் அதை நினைச்சு வருத்தப்படாத. இதை விட நல்ல வேலை உனக்குக் கிடைக்காமலா போய்டும்"


 வெடித்து அழுத தோழியின் வருத்தத்தைக் களைய முயற்சித்தாள் அகதா.  


"வேலைக் கிடைச்சிருச்சு என்று சொன்னதும், அப்பா, அம்மாவுக்கு எவ்ளோ சந்தோஷம் தெரியுமா? இப்போ அதுவும் நிலைக்காமல் போயிடுச்சு அகி"


ஆற்றாமையுடன், வெம்பிப் போய் நின்றிருந்த மௌனாவிடம், 

"விடு மௌனா. அவங்களைப் பற்றி தெரிஞ்சு விலகி வந்துட்ட தான? அதுவே உனக்கு நல்லது" என்று இதன் பிறகும், மௌனாவைத் தொடர்ந்து அழுக வேண்டாம் என தன்னால் முடிந்தளவு அமைதிப்படுத்தினாள் அகதா. 


உணவு, உறக்கத்திற்குப் பிறகு, மௌனா தெளிந்து விடுவாள் என்று காத்திருந்தாள். 


முக்தா தந்தையின் மீது தீரா கோபத்தில் இருந்தாள். 


"என்னப்பா இப்படி அவசரப்பட்டுட்டீங்களே!" என்று கொதித்துப் போய் விட்டாள். 


நீலகண்டனிடமும் தன் கோப முகத்தைக் காட்டாமல், மெத்தையில் அமர்ந்து, மஹதனிடமிருந்து சிறிது நாட்கள் தள்ளி இருக்க நினைத்தாள் முக்தா. 


நீலகண்டனிற்கு நண்பன் திருமூர்த்தியிடம் இருந்து , அழைப்பு வந்தது.அதைப் பார்த்ததும் பரம திருப்தி அடைந்து விட்டார். 


இவன் இருக்கும் வரை எனக்கு என்ன கவலை? என்ற மெத்தனப் போக்குடன், அழைப்பை ஏற்றார். 


"ஹலோ மூர்த்தி!" என்று வேண்டுமென்றே குரலை உயர்த்திப் பேசினார். 


"நீலகண்டா! இன்னைக்குத் தான் ஊருக்கு வந்தேன். விஷயத்தைக் கேள்விப்பட்டேன்" என்று தடுமாறிப் பேசவும், 


"ஓஹோ! அப்படியா மூர்த்தி! உனக்கும் தெரிஞ்சிடுச்சா? மஹதனுக்கு என் பொண்ணு முக்தாவைக் கல்யாணம் செய்து வைக்கிறதைப் பற்றிப் பேசுவோமா?" 


மஹதனுக்குத் தன் பெண் முக்தாவைத் திருமணம் செய்து வைப்பது பற்றி முன்னர் ஒரு சமயத்தில், மறைமுகமாக கலந்துரையாடியதை நேரடியாகவே தோழனிடம் கேட்டிருந்தார் நீலகண்டன். 


தொடர்ந்து தான் செய்து வைத்திருந்த, மடத்தனங்களை இந்த ஒரு விஷயத்தைச் திருத்திக் கொள்ள நினைத்தார். 


"எல்லாத்தையும் ஃபோன்லயே பேசினா நல்லா இருக்குமா நீலகண்டா? நேரில் வா" என்று அவரைச் சந்தித்துப் பேசுவதற்காக வினவினார் திருமூர்த்தி. 


அதற்கு நீலகண்டனுக்கும் ஒப்புதல் தான். ஆனால் சிறிதும் இளக்கம் காட்டாமல், 


"முடிவு பண்ணிட்டுச் சொல்லு மூர்த்தி.பேச எல்லாம் ஒன்னும் இல்லை. ஏற்பாடுகளைச் செய்யத் தான் பேச்சுவார்த்தை இருக்கனும்னு நினைக்கிறேன்" என்று அசட்டையாக கூறினார். 


"மஹதன் கிட்ட நான் இதைச் சொல்லவே இல்லை. நீலகண்டா! கேட்காமல் முடிவெடுத்தா அவனுக்கு நம்ம மேல தான் கோபம் வரும். உனக்கும் அவனைப் பற்றித் தெரியும் தான?"


மகனுடைய குணத்தைப் பற்றி நன்கு அறிந்த திருமூர்த்தியோ, சட்டென்று வார்த்தையை விட்டு விடாமல், கவனமாகப் பேசினார். 


"ம்ஹ்ம்! சரி. நேரில் வா" என்று ஒப்புக் கொண்டார். 


திருமூர்த்தி, "வந்துடறேன் நீலகண்டா.நீ முக்தாவைக் கூப்பிட்டு வர்றியா?" அவளும் உடன் வந்து விடுவாளோ? என்ற ஐயத்துடன் கேட்டார். 


"பொண்ணு எதுக்கு மூர்த்தி? நான் மட்டும் தான் வருவேன்" என்றதும் தான் திருமூர்த்திக்குத் திணறல் குறைந்தது. 


 மனைவியிடம், "கௌசி! நான் நீலகண்டனைப் பார்த்துப் பேசிட்டு வர்றேன்.என்னவெல்லாம் சொல்லப் போறானோ!!" என்று முனங்கியவாறே சென்றார் திருமூர்த்தி. 


மஹதனுக்கோ, அவர்களது திட்டம் ஓரளவிற்குப் புரிந்து கொள்ளும் படியாகத் தான் இருந்தது. 


முக்தாவைத் தனக்குத் திருமணம் செய்து வைப்பதில், நீலகண்டனுக்கு இருக்கும் ஆர்வமும், அதைச் செயல்படுத்தலாமா? வேண்டாமா? என்ற தந்தையின் ஐயமும் வெகு நாட்களுக்கு முன்னரே அறிந்து கொண்டான். 


இப்போது கூட தந்தை அதனால் தான் வெளியே புறப்படுகிறார். 


விஷயம் தன்னிடம் நேரடியாக வரும் போது, பேசிக் கொள்ளலாம் என்று தயாராகத் தான் இருந்தான் மஹதன். 


அகதாவின் மடியில் உறங்கியிருந்த மௌனா மெல்ல தன் இமைகளைப் பிரித்தாள். 


"எழுந்துட்டியா?" என்று புன்னகைத்த தோழியிடம், 


"மெய் மறந்து தூங்கிட்டேன் அகி" என்று உடனே எழுந்து விட்டாள் மௌனா. 


"பரவாயில்லை மௌனா. போய் முகம் கழுவு" என அவளை அனுப்பி வைத்தாள் அகதா. 


குளியலறையில் இருந்து வந்தவளிடம், 

"அடுத்த வேலையைத் தேட தயாராகு மௌனா.நமக்காக எதுவும் காத்திருக்கப் போவதில்லை. நாம தான் கிடைக்கிற சமயத்தில்,பயன்படுத்திக்கனும்" என்று அகதா அவளுக்கு அறிவுறுத்தினாள். 


நிதர்சனங்களை எண்ணிப் பார்த்து, முழுமையாக ஏற்றுக் கொள்ள உறுதி பூண்டாள். அத்தோடு இல்லாமல், முக்தா மற்றும் மஹதன் என்ற இருவரையும் மறந்து விடும் முயற்சியில் இறங்கினாள் மௌனா. 


ஆனால், நீலகண்டன் மற்றும் திருமூர்த்தி இருவரும் இணைந்து மஹதனின் வாழ்வில் எதைக் கொண்டு வர முயற்சிக்கிறார்கள்? 


ஆனந்தத்தையா? அனர்த்தத்தையா?  


                                 - தொடரும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

எனக்குள் வந்து வீழ்ந்தவளே - 36 (பாகம் ஒன்று)

  "ஹலோ! என்னம்மா?" என்று தன் அன்னையிடம் வினவினாள். "மௌனா ம்மா! இங்கே அகதா, எங்ககிட்ட ஒன்னு சொல்றா, அதைக் கேட்டு, எனக்கும், உன் அப்பாவுக்கும் பிபி தான் ஏறுது!" என்று தனக்கு முன்னாலிருப்பவளை முறைத்துக் கொண்டு மகளிடம் பேசினார் அன்னபூரணி. "என்னது! அகதாவா? என்ன சொல்றா ம்மா?" என்றாள் மௌனா. "ம்மா! ப்ளீஸ்!" என்று அகதா, அவரை அமைதிப்படுத்த முனைவது மறுமுனையில் இருந்தவளுக்கும் கேட்டது. "நீ சும்மா இரு!" என்று அதட்டிய அன்னபூரணி, மகளிடம்,"நான் சொல்றேன்" என அவள் தங்களை விட்டு வெளியேறி, விடுதிக்குச் சென்று தங்குவதாக சொல்கிறாள் என்று தெரிவித்தார். தாய் செல்வதைக் கவனமாக கேட்டு விட்டு,"நான் நேரில் வந்து பேசிக்கிறேன் மா" என்று கூறி வைத்து விட்டாள் மௌனா. அவளது மறுமொழிகளை அகதாவிடம் கூறி,"உன்னை எங்கச் சொந்த மகளாகப் பார்த்துக்க முடியாதுன்னு எங்களுக்கு சொல்லிக் காமிச்சுட்ட ம்மா" என்று வருத்தம் தோய்ந்த வார்த்தைகளை அவளிடம் வீசி விட்டுச் சென்றார் அன்னபூரணி. அதில் மனம் உடைந்து, தலை கவிழ்ந்து போனாள் அகதா. அவளுக்குள் எழுந்தக் குற்ற உணர்வா...

நிருதனின் பூவிழியே - 2

  ஏற்கனவே தனது தம்பியின் வார்த்தைகளைக் கேட்டு அதிர்ச்சியின் உச்சியில் இருந்தவனுக்குத் தாயிடம் என்னப் பதில் சொல்வது என்று தெரியாமல் இருதலைக்கொள்ளி எறும்பாகத் துடித்துப் போயிருந்தான் அறிவொளி.  ஆனால் அடுத்த அரை மணி நேரத்தில் தன்னுடைய தம்பி வீட்டிற்கு வரும் போது நிச்சயமாக அனைத்து உண்மைகளும் தனது தாய்க்கும், தந்தைக்கும் தெரிந்து விட்டிருக்கும் என்பது அவனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து விட்டிருக்க, அதை எவ்வாறு சமாளிக்கப் போகிறோம் என்றெண்ணி உணவுத் தட்டிலேயே தன் கையைக் கழுவிக் கொண்டு அப்படியே அமர்ந்து விட்டான்.  அதைக் கண்டு,”நீ ஏன்டா சாப்பிடாமல் கையைக் கழுவிட்டே? என்னடா நடக்குது இங்கே? உன் தம்பி வரட்டும்! அவன் என்னச் சொல்லுதான்னுக் கேட்டுட்டு உன்னைப் பார்த்துக்கிறேன்”என்று தன் பங்கிற்கு அவனுக்கு மிரட்டல் விடுத்தார் ராஜகுமாரி.  இதே சமயம், அந்தச் சின்னச் சிமெண்ட் வீட்டினுள்,”உன் போக்குச் சரியில்லை செந்தா! எப்பவும் எதையாவது சாக்கைச் சொல்லிட்டு இப்படி தெனமும் தாமதமாக வீட்டுக்கு வந்துட்டுத் திரியிற! பொட்டைப் புள்ளைன்னு நெனைப்பு இருக்கா? உன் அக்காவைப் பாரு! என்கிட்ட சொல்லாமல் எ...

நிருதனின் பூவிழியே - 3

  அதைக் கேட்டதும் ஏற்கனவே அதிர்ச்சிக்குள்ளாகி இருந்த முத்துமணியோ, மேலும் நிலைகுலைந்து போய் மயங்கிச் சரிந்து விட்டார்.  அதில் தனது அன்னையின் முகத்தில் தண்ணீரைத் தெளித்து அவரது மயக்கத்தை தெளிய வைக்கும் முயற்சியில் இறங்கினாள் பூவிழி.  அவர்களது செய்யும் நாடகங்களை இறுக்கமான முகத்துடன் பார்த்துக் கொண்டிருந்தான் திருவாதிரன்.  ஆனால் அங்கேயிருந்த செந்தாழையோ தனது உடலில் எழுந்த அசௌகரியத்தால் ஒரமாக அமர்ந்து விட்டாள்.  “ம்மா! இங்கே பாருங்க! என்னைப் பாருங்க!”என்று தாயின் முகத்தில் கரத்தைக் கொண்டு மெல்ல அடித்து அவரைத் தன்னைப் பார்க்க வைத்தப் பூவிழியோ, அவருக்குக் குடிக்கத் தண்ணீர் கொடுத்து விட்டுத் தனது தங்கையை ஒரு பார்வைப் பார்த்தவளோ, திருவாதிரனிடம் திரும்பி,”ஐயா! என் தங்கச்சியோட கர்ப்பத்துக்கும், உங்களுக்கும் என்னச் சம்பந்தம் இருக்கு?”என்று அவனிடம் நடுக்கத்துடனும், கண்களில் வலியுடனும் வினவினாள்.  அவனோ,”உன் தங்கச்சியும், என் அண்ணனும் காதலிச்சு இருக்காங்க! யாருக்கும் தெரியாமல் கல்யாணமும் செஞ்சி இருக்காங்க! இப்போ உன் தங்கச்சி கர்ப்பமும் ஆகியாச்சு!”என்று நிதானமாக உண்மையை உரை...