"உன்னோட அப்ளிகேஷன் ஃபார்மில் இருந்து எடுத்தேன்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறினான் மஹதன்.
"இது தப்புன்னு தெரியலையா சார்?" என்று அவனுக்குக் குறையாமல் கேட்டாள் மௌனா.
அவள் வெளிப்படையாக இப்படி கேட்டதும், சிறிய அமைதிக்குப் பிறகு,
"தப்பு தான் மௌனா! ஆனால் நான் உங்கிட்ட கேட்ட அப்போவே நீ பேச வந்திருக்கலாம் தான?" என்று அவளையே குற்றம் சொன்னான் மஹதன்.
"இது என்ன பேச்சு சார்? நான் ஏன் நீங்க கூப்பிட்ட உடனே வரனும்? மறுப்புத் தெரிவிச்சா, இப்படித் தான் அதிரடியாக, ஊரைக் கண்டுபிடிச்சு , வந்து முன்னாடி நிக்கிறதா?" என்று சலனம் இல்லாமல் கேட்டவளைப் பார்த்து,
" நீ கேட்கிறது சரி தான். நான் உன்னைக் கட்டுப்படுத்தி என்கிட்ட பணிய வைக்க முயற்சி செய்யலை மௌனா. என்னோட காதலைச் சொன்னேன். இந்தக் கேள்வியை நீ கேட்டதுமே உனக்கு இதில் விருப்பம் இல்லைன்னு புரிஞ்சது" என்றான்.
"உங்க காதலைச் சொன்னது தப்பில்லை சார். ஆனால், என்னோட ப்ரைவசியில் ரொம்ப தலையிட்றீங்க! நான் இங்கே வந்ததே மனசுக்கு அமைதியைத் தேடித் தான்! ஆனால் உங்க கூட நான் பேசியே ஆகனும்னு, என்னைத் தேடி இங்கே வரைக்கும் வந்துட்டீங்க! ஒரு விதத்தில் இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு. ஏன்னா, எனக்காக இவ்ளோ ட்ரை பண்ணி , என்னைப் பார்க்க வந்திருக்கீங்கன்னு ஹேப்பி ஆக இருக்கு. ஆனால், லவ் வர லேட் ஆகும். பொறுமையாக வெயிட் பண்ணுங்கன்னு எல்லாம் சொல்ல மாட்டேன். லவ் வரலைன்னா அதை அக்சப்ட் பண்ணிக்கோங்க" என்று தீவிரமாக கூறினாள்.
பிறகு, தள்ளி நின்றிருந்த அகதாவை ஒரு பார்வை பார்த்த மௌனா,
"அங்கே ஃப்ரண்ட் ரொம்ப நேரமாக வெயிட் பண்ணிட்டு இருக்கா. நான் போய்ட்டு வர்றேன் சார். இது என்னோட சொந்த ஊர், இங்கே எல்லாரும் தெரிஞ்சவங்க. சோ, இப்படி மறுபடியும் பேச வேண்டாம் ப்ளீஸ் சார்!" என கோரிக்கை விடுத்து விட்டு சென்றாள் மௌனா.
"வா அகி. வீட்டுக்குப் போய்ட்டு சொல்றேன்" என்று அவளுடன் எதுவும் பேசாமல் வீட்டை அடைந்தாள்.
கோயில் பிரசாதத்தை தன் அம்மாவிடம் கொடுத்தாள் மௌனா.
"கூட்டமாக இருந்துச்சா மா?" என்று நெற்றியில் திருநீற்றைப் பூசியபடி கேட்டார் அன்னபூரணி.
"கூட்டம் இல்லைம்மா. கோயிலே அமைதியாக இருந்தது" என்று அகதா கூறவும்,
"சரி.அப்பாவுக்கும் திருநீறு கொடுங்க" என்றார்.
"அப்பா இந்தாங்க திருநீறு, பிரசாதமும் எடுத்துக்கோங்க" என்று மௌனா தந்தையிடம் கொடுத்தாள்.
"நைட்டுக்கு ஸ்பெஷல் ஆக எதாவது சாப்பாடு செய்யலாமா? என்ன சாப்பிட்றீங்க டா?" என்று இருவரிடமும் கேட்டார் சிவமணி.
"எனக்குச் சப்பாத்தி செய்யுங்கள் அப்பா. அகதாவுக்கு வெஜ் புலாவ் பிடிக்கும்" என்று தோழியின் பிடித்தத்தை ஞாபகம் வைத்துக் கூறினாள் மௌனா.
"நான் ரெடி பண்றேன். பூரணிம்மா! நீ ரெஸ்ட் எடு" என்று தானே சமைத்து விடுவதாகக் கூறினார் சிவமணி.
அறைக்குள் போனதும், அகதா தோழியைப் பிடித்துக் கொண்டாள்.
"என்ன சொன்னார் உன்னோட எக்ஸ் எம். டி?" என்று ஆர்வமாக கேட்டாள்.
"அகி! எக்ஸ் எம். டி இப்போ லவ்வர் ஆக புரமோஷன் ஆக விரும்புறார்" என்று இப்போதும் அவனுடைய ஒவ்வொரு வார்த்தையும் அவளை உலுக்கியதை உணர்கிறாள்.
"என்னது! எப்படி மௌனா?"
அவனைப் பார்த்து மௌனா தான் ஒதுங்கிப் போய்க் கொண்டிருந்தாள். அப்படியிருக்க, மஹதனுக்கு மட்டும் இவள் மீது காதல் ஏற்பட்டது எவ்வாறு சாத்தியம்? என்று அகதாவுக்கும் ஆச்சரியம் தான்.
"அவருக்கு என் மேல் லவ் வந்தது, அதை கன்ஃபார்ம் செய்துக்க இங்கே வந்து என்னைப் பார்த்ததோ இன்னும் என்னாலேயே நம்ப முடியலை அகி! ஆனாலும் இது தான் நடந்திருக்கு. நானும் யோசிக்கிறேன்னு சொல்லியிருக்கேன். எந்த ப்ராமிஸூம் கொடுக்கலை" என்று தன் தெளிவான பதிலைக் கூறினாள்.
"மௌனா! அவர் உண்மையிலேயே உன்மேல் லவ் வந்து இங்கே வந்தாரா? இல்லைன்னா உன்னைப் பழி வாங்குறதுக்காக இப்படியெல்லாம் சொல்றாரோ?" என்று கேட்டாள் அகதா.
"பழி வாங்க கூட ப்ரபோஸ் பண்ணி இருக்கலாமோ அகி?" என மௌனாவிற்கும் ஐயம் ஏற்பட்டது.
"நல்லவேளை நீ உடனே ஓகே சொல்லலை. எதுவாக இருந்தாலும் அங்கே போய் யோசிச்சுப் பார். இங்கே அப்பா, அம்மாவுக்கு இந்த விஷயம் தெரிய வேண்டாம் மௌனா"
உள்ளூரில் எந்த பிரச்சனையும் தோன்றி விடக் கூடாது என்ற ரீதியில், அகதா அறிவுரை கூறினாள்.
"சரி அகி"
அவளும், அகதாவும் மௌனாவின் அறையில் தான் தங்கி இருக்கிறார்கள்.
"உன்னோட அப்பா, அம்மா ரொம்ப நல்லவங்க மௌனா" என்று பேச்சை ஆரம்பித்தாள்.
"யெஸ் அகி. நீயும் என்னை மாதிரி அவங்களுக்கு இன்னொரு பொண்ணுன்னு தான் பார்க்கிறாங்க"
"ஆமாம் அகி" என்றாள் மௌனா.
இவர்களது உண்மையான அன்பில் மனம் குளிர்ந்து போனாள் அகதா.
விடுதியில், கட்டிலில் மாற்று உடையை வீசி எறிந்த மஹதன், ஏமாற்றத்தில் மன இறுக்கம் கொண்டிருந்தான்.
"பழி வாங்குறேன்னு அவளுக்குத் தோணுதோ?" என்று மௌனாவின் மனநிலையைச் சரியாக கண்டறிந்திருந்தான்.
"அதை எப்படி நான் அவளுக்குத் தெளிவுபடுத்துறது?" என்று தளர்ந்து போனான்.
சந்தேகத்தை உறுதி செய்ய வந்து விட்டு, இப்போது அவளது மறுப்பை நினைத்துக் கவலைப்படுகிறான்.
"இனிமேல் போய்ப் பேசனும்னு கூப்பிட்டால், வரவே மாட்டா. அது உறுதி! என்ன செய்றது?" என்று அவளுடன் கண்ணாமூச்சி ஆட்டம் ஆட நினைத்தான் மஹதன்.
அவளிடம் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தியதால், வந்த வேலை முடிந்தது என்று, அன்றைய நாளே தன் வீட்டிற்குப் பயணத்தை மேற்கொண்டான் மஹதன்.
மகளின் முகத்தில் மாறாத தெளிவு இருப்பதைக் கண்ணுற்ற நீலகண்டன்,
"அங்கே ஒரு குறையும் இல்லை தான முகி?" என்று முக்தாவிடம் விசாரிக்கவும் செய்தார்.
"எந்த குறையும் இல்லை அப்பா. கௌசல்யா ஆன்ட்டி என்னை நல்லா பார்த்துக்கிட்டாங்க. சாப்பாடு பிரமாதமாக இருந்துச்சு. வயிறு ஃபுல் ஆயிடுச்சு" என்று புன்னகையுடன் கூறினாள் முக்தா.
அப்போது தான் நீலகண்டனுக்கும் மனதில் தெளிவு பிறந்தது.
"மஹதன்?"
"அவரை நான் பார்க்கலை அப்பா.ஹோட்டலுக்குக் கிளம்பிட்டார் போல" என்றாள் முக்தா.
மஹதனுடைய பெயர் மகளுக்குள் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை, இனிமேலும் ஏற்பட வாய்ப்பில்லை என அவருக்கு அகம் நிறைந்தது.
வேறு நல்ல வாழ்க்கை மகளுக்காக காத்திருக்கிறது அதுவும் கிஷானுடைய ரூபத்தில் என்பதை விரைவில் நீலகண்டனும் அறிந்து கொள்வார்.
"அம்மா!"
கௌசல்யாவின் மடியில் தலை சாய்த்துக் கொண்டான் மஹதன்.
"மஹதா! நீ வந்ததும் அந்த விஷயத்தைச் சொல்றேன்னு சொன்ன?" என்று அவனுடைய முகம் வாடி இருப்பதற்கான காரணத்தை மறைமுகமாக வினவினார் கௌசல்யா.
"விஷயம் பாசிட்டிவ் ஆக முடியலை அம்மா! அப்பறம் எப்படி உங்ககிட்ட சொல்வேன்?" என்று இறுக்கமான குரலில் கூறினான்.
"எப்படியும் பிஸினஸ் விஷயமாகத் தான் போய் இருக்கிற, அவங்க கன்வின்ஸ் ஆகலையா?" என்று கேட்டார்.
"நான் லைஃப் விஷயமாகப் போனேன் அம்மா"
"அதை யார் கிட்ட பேசப் போன?"
"மௌனா!" என்றதும்,
"அந்தப் பொண்ணா?"
வாழ்க்கை விஷயம் என்று கூறியது அவருக்கு வியப்பு என்றால், அதற்கு அடுத்தபடியாக மௌனாவின் பெயரைக் கூறியவனை, மின்சாரம் தாக்கியது போல பார்த்தார் கௌசல்யா.
"அவளோட வீட்டுக்குப் போய்ப் பார்த்தியா?" என்று வியப்பாக கேட்டார்.
"இல்லை ம்மா! அவ ஊருக்குப் போய்ப் பார்த்தேன்" என்று அவருக்கு இடியை இறக்கினான்.
"என்ன சொன்னா?"
"வெயிட் பண்ணுன்ற மாதிரி சொல்லி இருக்கா அம்மா!" என்றான் மகன்.
"கல்யாணத்துக்குக் கொஞ்ச நாள் போகட்டும்னு சொன்ன! இப்போ லவ் பண்றேன்னு அந்தப் பொண்ணுகிட்ட ப்ரபோஸ் பண்ணிட்டு வந்திருக்க! இது நல்லபடியாக அமைஞ்சு , அந்தப் பொண்ணையே நீ கல்யாணம் செய்துக்கனும்னு எனக்கும் ஆசை மஹதா!"
எனக்காக இதை நிறைவேற்ற மாட்டாயா? என்றெல்லாம் மஹதனை அச்சுறுத்தி, காரியம் சாதிக்க நினைக்கவில்லை அவர்.
கௌசல்யாவின் நீண்ட நாள் ஆசை தான்! ஆனாலும், மகன் முழு மனதாக அல்லவா சம்மதம் தெரிவித்து அவனது திருமணம் நிகழ வேண்டும்! அதைத் தான் அவரும் விரும்பினார். அதற்காகக் தான் காத்திருக்கிறார்.
இப்போது தான் காற்று அவர் பக்கம் வீசுகிறது, எனவே, அவன் விரும்பும் பெண் என்றாலும், மஹதனுடைய வாழ்வு சிறந்து விளங்கினால் போதும் என்ற முடிவுக்கு வந்தார் கௌசல்யா.
"முகி! ஃபாரின் போறதுக்கு முன்னாடி டிரெஸ் எதாவது எடுக்கனுமா? மத்த பொருள் வாங்கனும்னா வாங்கிக்கோ" என்று தன் கிரெடிட் கார்டைக் கொடுத்தார் நீலகண்டன்.
"தேவைக்கு ஏற்ப டிரெஸ் இருக்கு அப்பா. மத்ததை எல்லாம் போன தடவை மால் போகும் போது அங்கேயே வாங்கிட்டேன். கார்ட் உங்ககிட்டயே இருக்கட்டும். எனக்குத் தேவைப்படும் போது வாங்கிக்கிறேன் ப்பா" என்று அவருடைய பண எந்திர அட்டையைக் (credit card) கொடுத்தாள்.
"கௌசல்யா ஆன்ட்டி வீட்டில் இருந்து வரும் போது, மஹதனோட ஃப்ரண்ட் கிஷான் எங்கிட்ட பேசினார் அப்பா"
"அந்தப் பையனைப் பத்திக் கேள்விப்பட்டு இருக்கேன் முகி"
"அவர் எங்கிட்ட ஏற்கனவே கல்யாணம் பண்ணிக்கக் கேட்டார். நான் மறுத்துட்டேன். இப்பவும் அதே எண்ணம் தான் இருக்குன்னு சொன்னார்" என்றதும்,
"நீ என்னம்மா சொன்ன?" என்று ஆவலுடன் கேட்டார் நீலகண்டன்.
"நான் எதுவும் சொல்லலை அப்பா! பேசாமல் வந்துட்டேன்"
"நேரம் எடுத்துக்கோ டா" என்று மகளிடம் கூறினார்.
ஆனால், கிஷானுடைய வாழ்க்கை வரலாறு அடங்கிய கோப்பு, அவரிடம் அடுத்த வாரம் வந்து சேர்ந்து விடும் என்பது அவர் மட்டும் அறிந்த விஷயம்!
மகளின் கவனம் அவன் புறம் திரும்பினால், அவளுக்குக் கிஷான் பொருந்தினால், மனம் மேல் மாங்கல்ய பாக்கியம் முக்தாவிற்குக் கிடைப்பதில், தந்தைக்கு மகிழ்ச்சி தானே!
"அம்மாவோட ஃபோட்டோஸை ஃப்ரேம் போட்டுக் கொடுங்க அப்பா. நான் போகும் போது எடுத்துட்டுப் போகனும்"
"நிறைய ஃப்ரேம் போடலாம் டா. இன்னைக்கே மொத்தமாக கொடுத்து, ரெடி பண்ணி வாங்கிடறேன்" என்று கூறியவர்,
"அப்போ நம்ம ஃபோட்டோஸ்?" என்று பாவமாக கேட்டார் நீலகண்டன்.
"நாம உடனே கிளம்பி போய் ஃபோட்டோஸ் எடுத்து கையோட ஃப்ரேம் போட்டுட்டு வந்துடுவோம் அப்பா" என்று அவரைக் குஷிப்படுத்தினாள் முக்தா.
❤மௌனாவின் வாழ்வில் புயலென வந்த மஹதன் மற்றும் முக்தாவின் வாழ்வில் வசந்தத்தைக் கொடுக்க நினைக்கும் கிஷான் இவர்களின்
காத்திருப்புக்குப் பலன் கிடைக்குமா?❤
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக