மதியம் ஆகாரம் வயிறை நிறைத்திருக்க, முக்தாவோ,
"ரொம்ப தாங்க்ஸ் ஆன்ட்டி. சோ ஸ்வீட் நீங்க!" என்று கௌசல்யாவின் கையைப் பற்றி நன்றி தெரிவித்தாள்.
"இருக்கட்டும் முக்தா. நான் கேட்டதும் நீ இங்கே வந்து சாப்பிட, சம்மதிச்சதுக்கு தாங்க்ஸ்" என்று பரிசாக சிலவற்றைக் கொடுத்து அவளை வழியனுப்பினார் கௌசல்யா.
அதற்குப் பிறகு தான் தன் செல்பேசியையே பார்வையிட்டார்.
அதில் மஹதனின் பயணத்தைப் பற்றி தெரிந்ததும்,
'அப்படியென்ன முக்கியமான வேலை? ட்ரெஸ்ஸைக் கூட வீட்டுக்கு வந்து எடுத்துட்டுப் போகாமல், கிளம்பி இருக்கான்!' என்று அவனுடைய அலுவலக காரியதரிசிக்குக் கால் செய்து கேட்டார்.
"ரொம்ப முக்கியமான வேலைன்னு மட்டும் தான் சொன்னார் மேடம். அதையும் ஃபோன் செய்து தான் இன்ஃபார்ம் பண்ணினார்" என்று கூறவும், அழைப்பைத் துண்டித்தவர்,
"இது ஆஃபீஸ் விஷயமாகப் போன மாதிரி தெரியலையே? மஹதன் அம்மாகிட்ட எதை மறைக்கிற?"
என்று யோசித்துக் கொண்டே , மகனுக்கு அழைத்தார் கௌசல்யா.
"ஹலோ அம்மா!" என்று எப்போதும் போல பேசிய மகனிடம்,
"மஹதா! மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு, எங்கே போயிருக்க? என்ன வேலை?" என்று விசாரித்தார்.
"அம்மா! வேலையை முடிச்சுட்டு வந்து சொல்றேன். நீங்க என்னை நினைச்சுப் பயப்படாதீங்க. நான் எந்தப் பிரச்சினையிலும் மாட்டிக்கலை. இப்போதைக்கு இவ்ளோ தான் சொல்ல முடியும். சாரி அம்மா" என்று மன்னிப்பு வேண்டினான் மஹதன்.
"அப்போ இங்கே வந்தவுடனே எல்லாத்தையும் எங்கிட்ட சொல்லனும்" என்று கூறினார் கௌசல்யா.
"உங்ககிட்ட தான் முதலில் சொல்லுவேன். ப்ராமிஸ்" என சத்தியம் செய்தான்.
போன வேலையை முடித்து விட்டு வந்தவுடன், அதைப் பற்றி மகனிடம் உரையாட காத்திருந்தார் கௌசல்யா. ஆனால், மகன் போனது அவனுடைய காதல் மற்றும் திருமண விஷயம் என்று கௌசல்யாவிற்குத் தெரிய வந்தால்?!
தானே கார் ஓட்டிக் கொண்டு போன முக்தாவை வழிமறித்து நின்றது கிஷானுடைய கார்.
சாய்ந்து நின்றிருந்தவனை யோசனையாகப் பார்த்தாள் முக்தா.
அவளுக்குச் சற்று தள்ளி நின்று கொண்ட கிஷான்,
"ஃபாரின் போகப் போறன்னு கேள்விப்பட்டேன் முக்தா!" அவளது வதனத்தை மென்மையாக கண்களால் வருடியபடி கேட்டான்.
அவனைப் பார்த்தது எதிர்பாராத விஷயம், அதே போல் இப்படி பட்டென்று கேட்பான் என்பதையும் அவள் எதிர்பார்க்கவில்லை.
"ஆமாம் கிஷான். கொஞ்ச நாளில் கிளம்பிடுவேன்" என்று தன்மையாக பதில் சொன்னாள்.
"நான் உங்கிட்ட லவ் சொல்லி ரொம்ப வருஷம் ஆயிடுச்சு முக்தா. இன்னும் அதே கிஷான் தான் உனக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். இப்பவும் யோசிச்சுப் பார். நான் காத்துட்டு இருக்கேன்" என்று அவளது விழிகளை நேராகப் பார்த்து மறுமுறை தன் காதலைச் சொன்னான்.
இப்போதும் மாறாத காதல் தன் மேல் இவனுக்கு எப்படி இருக்கிறது? தான் மஹதனைக் காதலித்த விஷயம் தெரியும் தானே? அப்படியிருந்தும் இவனால் மட்டும் இந்த நிமிடம் வரை, தன் மேல் காதல் என்று எப்படி கூற முடிகிறது?
முதல் தடவை அவன் காதலை வெளிப்படுத்திய போது, இருந்த முக்தா இப்போது இல்லையே?
எதையும் நிதானமாக கையாண்டு பார்க்க முயற்சி செய்து கொண்டிருப்பவள்.
ஆதலால், அவனைப் பற்றி யோசிக்க முடிவெடுத்தாள்.
"நான் ஃபாரின் போற வரைக்கும் டைம் இருக்கு கிஷான். யோசிச்சு சொல்றேன்" என்று கூறியவளிடம்,
"ஷ்யூர் முக்தா. நல்லா யோசி. உன் முடிவு எதுவாக இருந்தாலும் நான் ஏத்துக்கிறேன்" என அங்கிருந்து கிளம்பினான் கிஷான்.
முக்தாவும் காரை ஓட்டிச் கொண்டு இல்லம் வந்தடைந்தாள்.
அவளது எண்ணங்களில் கிஷானும், அவன் கேட்ட விஷயமும் முழுமையாக வியாபித்து இருந்தது.
ஊரிலிருக்கும் இந்த மூன்று நாட்களும் சொர்க்கமாக இருக்கப் போகிறது என்று மௌனா நினைத்திருந்தாள்.
ஆனால், மறுநாளே அங்கே வந்து சேர்ந்திருந்த மஹதனை அவள் மறந்திருந்தாள்.
மௌனாவிடம் தன் காதலை வெளிப்படுத்தும் தருணத்தை எதிர்பார்த்துக் கொண்டு இருந்த மஹதன் விடுதி அறையில், தயாராகிக் கொண்டிருந்தான்.
மௌனாவின் வீட்டு விலாசத்தை மஹதன் கண்டுபிடிக்கப் போவதில்லை என்று முன்னரே உறுதி கொண்டிருந்தான்.
அவள் ஊரைப் பற்றி தெரிந்து கொண்டதே தவறு. ஏனெனில், அந்தப் பெண்ணிற்குத் தெரியாமல் அவளைப் பற்றிய தகவல்களை அறிந்து கொள்வது நல்ல காரியம் இல்லை.
ஊரை மட்டும் தெரிந்து கொண்டால் மற்றதெல்லாம் தாமாகவே நடக்கும் இல்லையென்றால், நாமாக கண்டுபிடிப்போம் என்று நினைத்திருந்தான் மஹதன்.
வேறு எந்த வழியும் இல்லையென்றால் மட்டுமே மேற்கொண்டு யோசிக்க வேண்டும் என முடிந்தளவு அவ்வூரில் தங்கியிருந்து அடுத்த இரண்டு நாட்களுக்குள் மௌனாவைச் சந்தித்து தன் மனதிலிருப்பதை வெளிப்படுத்த வேண்டும் என நினைத்தான்.
அவனுக்குக் காத்திருப்பதற்குப் பொறுமையில்லை.அதேபோல், மௌனாவிற்குக் காதலில் நம்பிக்கை உள்ளதா? என்பதும் தெரியவில்லை.
அசட்டுதனமான செயல்களால் , நிச்சயம் துன்பம் ஏற்படும் என்பது அவனுக்குத் தெரியாமல் போய் விட்டது.
மௌனாவைச் சந்திக்கும் நேரமும் வெகு விரைவில் அதன் போக்கில் நடந்தேறியது.
"இங்கேயும் வந்து லேப்டாப் பார்த்துட்டு இருக்கியா அகி?" என்று கடிந்து கொண்டாள் மௌனா.
" எதாவது பெண்டிங் வொர்க் வச்சுட்டு வந்துட்டேனா என்று பார்த்தேன் மௌனா" என்றாள் அகதா.
"சீக்கிரம் முடி.கோவிலுக்குப் போய்ட்டு, ஊரைச் சுத்திப் பார்ப்போம்" என்று மலர்ச்சியுடன் கூறினாள்.
"முடிஞ்சது மௌனா. வா!" என்று மடிக்கணினியை வைத்து விட்டு எழுந்தாள்.
"அம்மா! நாங்க கோயிலுக்குப் போய்ட்டு வர்றோம். இங்கே வந்ததில் இருந்து, சாமியை தரிசிக்கவே இல்லை. அப்பாகிட்ட சொல்லிடுங்க. அப்படியே ஊரையும் ஒரு ரவுண்ட் சுத்திப் பாத்துட்டு வந்திடறோம்" என்று அகதாவை அழைத்துக் கொண்டு, கோயிலுக்குச் சென்றாள் மௌனா.
சுடிதார் அணிந்து, கூந்தலை எப்போதும் தனக்குப் பிடித்தமான வகையில், பின்னிக் கொண்டு, தோழியையும் அழகாக தயார் செய்திருந்தாள் மௌனா.
சொந்த ஊரில், தன் பாதத்தைப் பதித்து, நடை பயின்று, காற்றை சுவாசித்துக் கொண்டிருப்பது மௌனாவிற்கு அதிகமாக புத்துணர்வு கிடைத்தது.அதனால் அவளது முகமும் பொலிவு கொண்டிருந்தது.
பிள்ளையார் கோயிலை ரசித்துக் கொண்டு, சூழலை அனுபவித்துக் கொண்டு, சாமி தரிசனம் செய்தனர் இருவரும்.
அகதாவின் வாழ்வில் நல்லது நடக்கட்டும் என்று விண்ணப்பித்தாள் மௌனா.
அதேபோல, மௌனா என்றும் மங்காத புன்னகையுடன் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று வேண்டிக் கொண்டாள் அகதா.
மெல்லிய கீற்றுப் புன்னகையுடன் கோயிலில் இருந்து அகதாவுடன் பேசிக் கொண்டு வெளியே வந்தவளுக்கு உள்ளுணர்வு உந்துதல் செய்ய, சற்று தொலைவில் நின்றிருந்த ஆடவனின் புறம் விழிகளைச் சுழற்றிப் பார்த்தாள் மௌனா.
அங்கே எதிரே இருந்த கட்டிடத்தின் சுவற்றில் சாய்ந்து கொண்டு, இவளைப் பார்த்துக் குறுஞ்சிரிப்பு ஒன்றை உதிர்த்தான் மஹதன்.
அவனைக் கண்டதும் அதிர்ச்சியில் அலங்க, மலங்க விழித்தாள் மௌனா.
'யாருங்க நீங்க? என்னங்க இப்படியெல்லாம் பண்றீங்க?' என்று தன் முன்னால், ஸ்டைலாக நின்றிருந்த மஹதனை அச்சத்துடன் ஏறிட்டாள் மௌனா.
அகதாவின் புறம் திரும்ப, அவளோ அவனைப் பார்த்து விட்டு, மௌனாவைப் புருவம் உயர்த்திப் பார்த்தாள்.
'நீ தான் வர சொன்னியா?' என்றெல்லாம் அவள் கேட்கவில்லை. இப்படி வருமளவிற்கு வைத்து விட்டாயே! என்ற கண்டிப்புப் பார்வை தான் அவளிடமிருந்து வந்தது.
"உன் எக்ஸ் - எம். டி தான மௌனா?" எனக் கேட்டாள்.
"யெஸ் அகி. இவர் என்ன திடுதிப்புனு வந்து பயமுறுத்துறார்?" என்று முணுமுணுத்தாள் மௌனா.
"உன்னைப் பார்க்கத் தான் வந்திருக்கார் போல" என அவளும் சரியாக கணித்தாள்.
"ஆமாம்.ஆனா ஏன்?" என குழம்பினாள் மௌனா.
"அதை ஸ்ட்ரைட் ஆக அவர்கிட்டயே கேளு" என்று இன்னும் தன் நிலையை மாற்றாமல், அதே குறுநகையுடன் நின்றிருந்த மஹதனைக் கண்களால் காட்டிக் கூறினாள் அகதா.
"போய்ப் பேசிட்டு வர்றேன் அகி" என்று கண்களில் மிரட்சியுடன் மஹதனிடம் சென்றாள்.
'நானே சூழ்நிலைய உருவாக்குவேன்னு அன்னைக்கு சொன்னதைக் கொஞ்சம் சீரியஸாக எடுத்திருந்து இருக்கலாமோ மௌனா! சொன்ன மாதிரியே செஞ்சுட்டான். அதே மௌனாவா , கெத்தா பேச ட்ரை பண்ணு!' என்று பதட்டத்தை முடிந்தளவு மறைத்துக் கொண்டாள் மௌனா.
"ஹாய் சார்! இந்த ஊருக்கு வேலை விஷயமாக வந்தீங்களா?" என்று சகஜமாகப் பேச முயன்றாள்.
"நாட் பேட்! இல்லையே! உன்னைப் பார்த்துப் பேசிட்டுப் போகலாம்ன்னு வந்தேன் மௌனா" அலுங்காமல் உண்மையைக் கூறினான் மஹதன்.
"என்னைப் பார்க்கவா? அன்னைக்கு ஹோட்டலிலேயே மீட் பண்ணோமே சார்? அங்கேயே பேசினோமே?" என்று பதிலளித்தாள்.
"அங்கே நீ என்னைப் பேசவே விடல. அதே மாதிரி ரொம்ப பர்சனல் விஷயத்தை எல்லாம் அப்படி அவசரமாக நின்னுப் பேசக் கூடாது. பொறுமையாகப் பேசனும்.அதுனால தான் இப்போ, இங்கே உன்னை மீட் பண்றேன்" என்று தடாலடியாக கூறினான்.
அகதாவின் புறம் அவ்வப்போது, விழியின் கருமணிகளைச் சுற்றிக் கொண்டு, மஹதனிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
"என்னப் பேசனும் சார்? நாங்க சீக்கிரம் வீட்டுக்குப் போகனும்" என்று விஷயத்தைக் கேட்டாள் மௌனா.
"ம்ஹ்ம்! அவசரப்படுத்தினேனா வேற இடத்தில் உன்னை மீட் பண்ண வேண்டி இருக்கும்" என்றான்.
"இல்லையில்லை! அவசரப்படுத்தலை. சொல்லுங்க"
"இவ்ளோ நாளாக
உன்னோட நிமிர்வு , பிரச்சனையை தைரியமாக ஹேண்டில் பண்ற ஆட்டிட்யூட் இதையெல்லாம் பார்த்து, ரசிச்சேன். அப்போ எனக்குள்ளே நீ வந்ததை நான் உணரலை.முதல்ல, நான் உங்கிட்ட லவ் சொன்னால் உன்னோட ரியாக்ஷன் என்னவா இருக்கும்னு தான் ப்ரபோஸ் பண்ண நினைச்சேன். ஆனால் இப்போ, உண்மையிலேயே நான் உன்னை லவ் பண்றேன்னு கன்ஃபார்ம் ஆக எனக்குத் தெரிஞ்சது. அதுனால தான் இவ்ளோ லேட். உன்னோட மனசில் நான் இருக்கேனான்னு நீ தான் பதில் சொல்லனும்?" என்று கேட்டு நின்றவனை மலைத்துப் போய்ப் பார்த்தாள் மௌனா.
அவள் நிச்சயமாக இதை எதிர்பார்க்கவில்லை. அதுவும் மஹதன் இப்படி காதலைத் தெரிவிக்கக் கூடும் என்று கனவிலும் நினைக்கவில்லை. ஆனால் அது தான் நடந்துள்ளது!
மஹதனுக்குப் பதிலளிப்பதற்கு முன்னர், அவனிடம் சில கேள்விகளைக் கேட்க நினைத்தாள்.
"பதில்! அதைச் சொல்றதுக்கு முன்னாடி, நான் கேள்விகளைக் கேட்டுத் தெரிஞ்சுக்க நினைக்கிறேன் சார்! "
அவளது நிதானமான தோற்றமும், உறுதியான பார்வையும் மற்றும் மறுமொழியும் மஹதனைக் கவர்ந்தது.
"நீங்க எப்படி என்னோட ஊரைக் கண்டுபிடிச்சீங்க?" என்று முதல் கேள்வியைக் கேட்டாள் மௌனா.
அதற்கடுத்து சரமாரியாக தன்னை நோக்கிக் கேள்விக் கணைகளைத் தொடுக்கப் போகிறாள் என்பதை அவளது விழிகளிலிருந்த தீவிரத்தில் கண்டு கொண்டு, அதற்கான பதிலையும் சொல்லத் தயாரானான் மஹதன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக