"நீ வேலைப் பார்க்கிற இடத்தில் இருந்து பேசுறது முறை இல்லை. அதனால், வேலை முடிஞ்சு, வீட்டுக்குப் போய், ரெடி ஆகிட்டு வா. உன் கூட பேச வேண்டியது இருக்கு" என்று ஒரு உணவகத்தின் பெயரையும் கூறினான் மஹதன்.
சுதாரித்த மௌனா, "எங்கிட்ட நீங்க பேச என்ன இருக்கு சார்?" என்று அவன் தன்னிடம் தனியாக சந்தித்துப் பேச என்ன இருக்கப் போகிறது? அதை ஏன் இப்பொழுதே பேச மறுக்கிறான்? என்று நினைத்தாள்.
"இது ரொம்பவே பர்சனல் மௌனா. இங்கே பேசினால், உன் வேலை பாதிக்கும். அதான்" என்று அலட்டிக் கொள்ளாமல் கூறியவனைப் பிரம்மிப்பாகப் பார்த்தாள்.
"பர்சனலா? முக்தா மேடம் விஷயமா சார்?"
"ஏன் அதை தவிர வேறெதுவும் பேச எனக்கு வராதுன்னு நினைச்சுட்டியா?"
விழிகள் இடுங்க அவளிடம் கேட்டான் மஹதன்.
"வேற என்ன பேசப் போறீங்க?" என்று தவித்துப் போய்க் கேட்டாள் மௌனா.
"கண்டிப்பாக இருக்கு. அதுக்குத் தான் கேட்கிறேன்" என்று விடுவதாக இல்லை என்பது போல, பார்த்தான்.
"சார்! விஷயத்தை இங்கேயே சொல்லுங்க. இல்லைன்னா என்னை வேலையைப் பார்க்க விடுங்க. இப்படி வந்து நின்னுட்டு, பேசிட்டு இருந்தால், எனக்கு வேலை பாதிக்குது"
அவளிடமிருந்த பயத்தை வலுக்கட்டாயமாக விரட்டி விட்டு, கறாராகப் பேச ஆரம்பித்தாள்.
"அப்போ நீ வர மாட்ட?"
உள்ளுக்குள் குளிர்ச்சி பரவியது அவளுக்கு.
"வர மாட்டேன் சார். சாரி" என்று மென்மையாக மறுத்தாள்.
கண்கள் கோவைப்பழங்களாக சிவப்பேறியது மஹதனுக்கு.
"ப்ச்! உங்கிட்ட ரொம்ப இறங்கி வந்து பேசினால், ஈசியாக போய்ட்டேனா நான்?" என்றான்.
"அப்படி நினைக்கலை சார். ஆனால் , நீங்க என்கிட்ட இறங்கி வாங்கன்னு நான் கேட்கவும் இல்லை" என்று தடுமாறாமல் பதிலுரைத்தாள் மௌனா.
இவர்கள் அதிக நேரம் பேசிக் கொண்டிருப்பது சரியில்லை என்று எண்ணிய கிஷான் அங்கே பிரவேசித்தான்.
"மஹத்!" என வந்து நின்ற நண்பனை ஏறிட்டான்.
"சார்!"
மரியாதை நிமித்தமாக அவனுக்குப் பணிந்து வணக்கம் செலுத்தினாள் மௌனா.
இவன் உனக்கு முதலாளி என்பதால் மரியாதை அளிக்கிறாயோ? என்று கண்களில் வினவுவது போல, மௌனாவைப் பார்த்தான் மஹதன்.
மரியாதைக் கொடுக்கும் விதமாக நடந்து கொண்டாலே போதும் என்று அவள் பதிலுக்குப் பார்த்தாள்.
"என்னடா இங்கேயே நின்னுட்டு இருக்கிற? உள்ளே வா" என கைப்பற்றி இழுத்துச் சென்று விட்டான் கிஷான்.
அவனுக்கு மௌனாவின் படபடப்பும், மஹதனின் கூர் பார்வையும் எதையோ உணர்த்தியது. இதற்கு மேல் மௌனா சமாளிக்க முடியாதது போல் இருந்ததால், நண்பனை இழுத்துச் சென்றான்.
"என்னடா நீ! அவங்களை பயமுறுத்திக்கிட்டு இருக்கிற?" என்றதும்,
"டேய்!! நான் ஒன்னும் உன் ஸ்டாஃபை முறைக்கலை. வெளியே போய் தனியாக பேசனும்னு நினைச்சேன். அதைக் கேட்டதுக்குத் தான் அவங்க வியர்த்து வழிஞ்சாங்க" என்று நக்கலாக கூறினான்.
"அப்படி பயமுறுத்தி வச்சிருக்கிற! எதுக்கு தனியாகப் பேச கூப்பிட்ட?" என்று குறும்பாக கேட்டான் கிஷான்.
"சும்மா லவ்வை சொல்லிப் பார்த்தால், என்ன ரியாக்ஷன் கொடுக்கிறான்னு பார்க்க கியூரியஸ் ஆக இருக்கு" என்று கூறியவனை மலைத்துப் போய்ப் பார்த்தான் நண்பன்.
"அடேய்! நீ அதை இந்த இடத்தில் கேட்கலை!! அப்பறம் என் மேல கம்ப்ளைண்ட் கொடுத்து இருப்பாங்க" என்று தான் தப்பித்து விட்டதாக உணர்ந்தான்.
"ஏண்டா இப்படி பயப்பட்ற?"
"அவங்க தானே எனக்கு வருங்கால அண்ணியாக வரப் போறாங்க.பயம் இருக்கத் தான் செய்யும்" என்று கிஷான் நண்பனிடம் ஆழம் பார்த்தான்.
"அண்ணியா?! நீ என்னை விட ஸ்பீட் ஆக இருக்கிற கிஷான்! இது ஜஸ்ட் ஒரு டெஸ்ட்" என்றான்.
"மஹத்! இது தப்புடா. டெஸ்ட் பண்ணிப் பார்க்கிறது என்ன மாதிரியான விஷயம்! எனக்கு உன் மேல இருக்கிற மரியாதையை இதனால் போக வச்சுடாத" என்று கண்டிப்புடன் கூறினான்.
"அப்போ உண்மையிலேயே லவ் - ன்னு வச்சுக்கோ" என்று மஹதன் அலட்சியமாக கூறவும்,
"நீ அவங்களை உண்மையிலேயே லவ் பண்ற நாளும் வரும் மஹத். அதுக்கு வெய்ட் பண்ணனுமே தவிர, டெஸ்ட் பண்ணக் கூடாது" என்று தீவிரமாக அறிவுரை சொன்னான்.
" எனக்கு அவ மேல் லவ் இருக்கான்னு நான் டெஸ்ட் பண்றேன் கிஷான். அப்படி இருந்தால், டைம் வேஸ்ட் ஆகாது. உடனே கல்யாணம் பண்ணிப்பேன்" என கூறவும்,
"உளறாதே மஹத்! நீ அப்படி செஞ்சா, அவங்களை ஹர்ட் தான் பண்ணுவியே தவிர, அவங்களை உன்னை லவ் பண்ண வைக்க மாட்ட! நான் உன்னை ட்ரிக்கர் பண்ணிட்டேனோ என்று தோணுது!"
தன் தவறை நினைத்துக் குமைந்தான் கிஷான்.
நண்பனைத் தவறான பாதைக்கு அனுப்பி வைக்கிறோமோ? என்று அவனது முடிவைத் தகர்க்க முயற்சித்தான்.
"இல்லை கிஷான். எனக்கே என் மேல் டவுட் வர ஆரம்பிச்சிருச்சு. ஒருவேளை அவளை நான் லவ் பண்றேனோ என்று! அதனால் தான் இந்த யோசனை"
"அப்படின்னா நான் கேட்கும் போது, நீ உன்னோட மறுப்பைத் தெளிவாக சொல்லியிருக்க மாட்ட. லவ் இல்லைன்னு தான் அர்த்தம்"
"ப்ளீஸ் கிஷான்! நானே அவ என் கூட பேச வரலையேன்னு கடுப்பில் இருக்கேன்.விடு" என்று தன் திட்டத்தை அவனிடம் இன்னும் விரிவாக கூறாமல், சாமர்த்தியமாக
மறைத்து விட்டான் மஹதன்.
"டெஸ்ட் பண்றதை விட்டு விடு மஹத்" என்று சொல்லியே அவனை அனுப்பி வைத்தான் கிஷான்.
முதலாளி வந்து தன்னை மஹதனிடம் இருந்து விடுவித்து விட்டதால், பெருமூச்சு விட்ட மௌனா, மீண்டும் அவன் வெளியேறும் சமயம் இதையே தொடர்வானோ? என்று பதறினாள்.
திடீரென்று இவன் எப்படி பேச அழைப்பான்? என்று தோன்றிக் கொண்டிருந்தது.
"எக்ஸ்க்யூஸ்மீ" என்று அவள் முன்னால் சொடுக்கிட்டவன்,
"நான் கூப்பிட்டதும் மரியாதைக்கு ஆவது வந்திருந்தால், நல்லா இருந்திருக்கும். ஆனால் நானே உன்கிட்ட பேசுவதற்கான சூழ்நிலையை உருவாக்கப் போறேன். அப்போ நீ என்னப் பண்ணுவ?" என்ற கேள்வியைக் கேட்டு சென்றவனைப் பார்த்து அயர்ந்து போனாள் மௌனா.
'வர்றார்! கேள்வியைக் கேட்கிறார்! பதில் வாங்காமலேயே போறார்! ரிபீட்' என்று புலம்பித் தீர்த்துக் கொண்டாள் மௌனா.
அகதா உணவுண்டாளா? உறங்குகிறாளா? என்று விசாரித்துக் கொண்டாள்.
தான் மனம் தளரும் பொழுது தாங்கிப் பிடித்தவளை, இப்போது பார்த்துக் கொள்வது தன் முறை என இதெல்லாம் செய்கிறாள் மௌனா.
முக்தா வெளிநாடு செல்கிறாள் என்பதை அறிந்து கொண்டதில் இருந்து , கிஷானுக்கு இருப்புக் கொள்ளவில்லை.
மஹதனின் மூலம் தான் கிஷானுக்கு அவளைத் தெரியும்.
பார்த்தவுடன் காதல் இல்லை. ஆனால் ஏதோ ஒரு விதத்தில் தன் மனதை அசைத்துப் பார்த்தவளை இன்னும் மனதினுள் பூட்டி வைத்துள்ளான் கிஷான்.
ஒருமுறை தன் காதலைக் கூட அவளிடம் தெரிவித்துக் பார்த்தான். ஆனால் முக்தாவோ பாரபட்சம் பார்க்காமல் மறுத்து விட்டாள்.
ஒரு வருடம் ஆகி இருந்தாலும், அவனது காதல் இன்னும் துளிர் விட்டுக் கொண்டு தான் இருக்கிறது. முக்தாவோ தன் மனதை மஹதனிடம் பறி கொடுத்து விட்டாள்.
மஹதனும் மறுத்து விட்டான். இப்போது முக்தாவின் நிலையை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள நினைக்கவில்லை கிஷான்.
அவளுக்காக ஒரு வருடம் காத்திருந்தவன், இரண்டு வருடங்கள் காத்திருக்க முடியாதா என்ன?
ஆனாலும் அவளது வெளிநாடு பயணம் ரத்து ஆகாதா? என்ற நப்பாசையும் அவனுக்கு உண்டு.
தனக்காக இப்படி யோசிக்கும், ஏங்கும் ஒருவனை முக்தா கரம் பிடிக்கும் நாளும் விரைவில் வருமோ?
"அகி! நான் ஊருக்கு வர்றேன்னு அப்பா, அம்மாகிட்ட சொல்லியிருந்தேன். உன்னையும் கூப்பிட்டு வர சொல்றாங்க. போவோமா?" என்று தோழியிடம் வினவினாள்.
அவள் இப்படி இடிந்து போய், எதிலும் பற்றில்லாமல் அமர்ந்திருப்பது மௌனாவிற்கு மனம் கனத்ததுப் போனது.
அவளை மீட்க முயற்சி செய்து கொண்டிருக்கிறாள்.
"நான் இந்த சுவிட்சுவேஷன்ல?" என்று தயங்கினாள்.
"இந்த சுவிட்சுவேஷனுக்கு என்ன அகி? நீ வர்றதால் அவங்க சந்தோஷப்படுவாங்க.அதே மாதிரி உனக்கும் மைண்ட் ரிலாக்ஸ் ஆகும். எனக்கு அது தான் வேணும்" என்று அவளைச் சம்மதிக்க வைத்து விட்டாள் மௌனா.
"ஏற்கனவே ரெண்டு நாள் லீவ் எடுத்துட்டேன் மௌனா. ஒன் வீக் கழிச்சு கேட்டுப் பார்க்கிறேன்" என்று மனமிரங்கி வந்தாள் அகதா.
மௌனாவும் தற்போது தான் வேலைக்குச் சேர்ந்துள்ளாள். எனவே அவளாலும் உடனே விடுப்பு எடுக்க முடியாது.அதனால் ஒரு வாரம் கழித்து , விடுப்பு கேட்போம் என்று நினைத்தாள்.
"காலப்போக்கில் எல்லாமே மாறிடுமா மௌனா?" என்று விரக்தியாக கேட்டாள்.
"மாறாது அகி. நாம தான் நமக்கு என்ன வேணும்னு தெரிஞ்சுக்கிட்டு மாத்தனும்.காலம் காயங்களை ஆற்றும்னு சொல்லுவாங்க. ஆனால், அது காயங்களை மறைத்து மட்டும் தான் வைக்கும். அது எப்போ வேணும்னாலும், நம்மளை காயப்படுத்திப் பார்க்கும். அழுக வைக்கும். அதை வெளியே காட்டிக்காமல், சாமர்த்தியமாக மறைச்சுடறாங்க என்பதற்காக அவங்களுக்கு எதுவும் கஷ்டம் இல்லைன்னு ஆகிடாது அகி"
கருத்துக் கூறும் தோழியை மௌனமாய்ப் பார்த்தாள் அகதா.
"கொஞ்ச நாள் முன்னாடி நான் உன் நிலையில் இருந்தேன். அப்போ எனக்காக நீ இருந்த. இப்போ உனக்காக நான் இருக்கேன். உன்னோட காயத்தை மறைக்க ட்ரை பண்றேன்.இப்படி உறவுகள் தான் ஒருத்தருக்கு ஒருத்தர் துணையாக இருக்கிறதால் தான் நாம் ஓரளவுக்கு எல்லா காயத்தையும் , கஷ்டத்தையும் முழுங்கிட்டு சாதாரணமாக இருக்கிறா மாதிரி காட்டிக்கிறோம் அகி"
தனக்குத் தோழி ஒருமுறை கொடுத்த அறிவுரையை அவளுக்குத் திருப்பிப் படித்துக் காட்டினாள் மௌனா.
"நான் தான் மாத்தனும்! இல்லையா மௌனா?" என்று கேட்டாள் அகதா.
"யெஸ் அகி. நீ தான் சேஞ்ச் பண்ணனும்" என்று மௌனா அவளுக்குச் சரியான இலக்கைக் காட்டினாள் மௌனா.
சிறிது சிறிதாக தெளிய ஆரம்பித்தவளது மனம், மௌனாவின் ஊருக்குச் சென்றால், முற்றிலும் தெளிந்து விடும் என்று பயணத்திற்காக காத்திருந்தாள் அகதா.
"அடுத்த வாரமே ஊருக்குப் போகலாம் மௌனா. நான் லீவ் கேட்க தயார்" என்று தெளிந்த மனதுடன் கூறினாள் அகதா.
அவளுக்காகவே சீக்கிரம் விடுப்பு எடுக்க வேண்டும் என்று நினைத்த மௌனா,
"கண்டிப்பாக அகி. நான் முன்னாடியே எம். டி கிட்ட கேட்டு வைக்கிறேன்" என்றாள்.
நீலகண்டனும், திருமூர்த்தியும் இப்போது எல்லாம் தங்கள் அலுவலகம் பற்றிய பேச்சுடன் நிறுத்திக் கொண்டனர்.
அதுவே அவர்களுக்குப் போதுமானதாக இருந்தது. முக்தாவின் மாற்றம் அவர்களுக்கும் வர வேண்டும் என்றெல்லாம் இருவருமே நினைக்கவில்லை. தானாகவே நட்பு மறுபடியும் மலரட்டும் என விட்டு விட்டனர்.
கௌசல்யா முக்தாவை வீட்டிற்கு உணவுண்ண அழைத்தது இருவருக்கும் தெரிந்திருந்தது.
அதில் தவறு என்றும் இல்லை, ஆதலால், நீலகண்டன் மகளுக்கு அனுமதி அளித்திருந்தார். திருமூர்த்தியும் மனைவியிடம் இதற்காக கடிந்து கொள்ளவில்லை.
மௌனா தன் ஊருக்குப் போவதற்காக விடுப்பு கேட்க வேண்டிய நாளும் வந்தது!
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக