"இப்போ நம்மளை தாண்டிப் போனாரோ அகி? அவர் தான் மஹதன்" என்று வியப்பும், திகைப்பும் விலகாமல் கூறினாள் மௌனா.
"ஓஹோ! உன்னைப் பார்த்தும், பேசாமல் போறாரே?" என்று வினவினாள் அகதா.
"அதுதான் எனக்கும் புரியல அகி.கொஞ்ச நேரம் முன்னாடி முக்தாவைப் பார்த்தோமே? இரண்டு பேரும் ஒன்றாக வந்து இருப்பாங்க போல. அதனால் தான் என்னைத் தொந்தரவு பண்ண மாட்டேன்னு முக்தா சொல்லிட்டுப் போனாங்க போல" என்று காரணத்தைக் கண்டறிந்து கொண்டாள் மௌனா.
ஆனால் அவள் அனுமானித்தது தவறு. இவர்களுக்கு நிகழ்ந்த சந்திப்பு எதேச்சையானது என்பது அவளுக்குத் தெரியாது.
அவர்கள் வெளியேறியதும், மஹதன் மாலின் உரிமையாளரின் அறைக்குப் போவதற்காக நடந்தான்.
அந்த சமயம் முக்தாவைச் சந்திப்பான் என்று எதிர்பார்க்கவில்லை.
தனது ஏக்கத்தை மறைத்துக் கொண்டு,
"ஹாய் மஹத்!" என்று அவனைப் பார்த்துப் புன்னகைக்க முயற்சிகள் மேற்கொண்டாள்.
"ஹாய் முக்தா. ஹவ் ஆர் யூ?" என்று இயல்பாக விசாரித்தான் மஹதன்.
"ஃபைன் மஹத் " என்று இப்போது நிஜமாகவே புன்னகைத்தாள்.
"டேக் கேர்" என்று கடந்து சென்றான்.
அவனைப் பார்த்ததும் மன்னிப்புக் கேட்க துடித்துக் கொண்டிருந்தாள் முக்தா.
அதற்குள் அவன் இரண்டு வார்த்தைகளை மொழிந்து விட்டு விடைபெற்று விட்டதால், பின்னாலேயே செல்ல முக்தாவிற்குச் சரியாகப் படவில்லை.
அதனால் கடந்து சென்று விட்டாள் அனைத்தையும்!!
மௌனாவையும், முக்தாவையும் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் பார்த்தான் அல்லவா? மஹதனுக்கு முக்தாவின் முகத்தில் இருந்ததைப் படிக்க முடிந்திருந்தது.
"இவ என்ன ஒரே நாளில் இப்படி மாறிட்டா?" என்ற யோசனையும்,
"மௌனாவுக்கு நம்மளைப் பார்த்து கொஞ்சம் பயம் தான் போல?" என்றும் தோன்றியது.
வீட்டை அடைந்த நேரத்தில் , மௌனாவின் செல்பேசியில் அழைப்பு வந்து கொண்டிருந்தது.
"அப்பா தான் கால் பண்றாங்க அகி" என்று அழைப்பை ஏற்றாள்.
"அப்பா!" என்று மகள் குதூகலமாக அழைத்ததும் தான் உயிர் வந்தது போலிருந்தது சிவமணிக்கு.
"மௌனா! என்னம்மா அப்பாவுக்கு அடிக்கடி கால் பண்ணச் சொன்னேன்ல?" என்று குறைபட்டார்.
"சாரி அப்பா. வேலை அதிகம் "
இவளது மனப் போராட்டங்களை தாயும், தந்தையும் அறிந்தால், அங்கே நிம்மதியாக இருக்க மாட்டார்கள் என்று பொய் கூறினாள்.
"பரவாயில்லைடா.நீ நல்லா இருக்க தான?" என்று மகளின் நலனைக் கேட்டார்.
"நல்லா இருக்கேன் அப்பா.உங்களுக்கும் , அம்மாவுக்கும் கிஃப்ட்ஸ் வாங்கி அனுப்பப் போறேன்.என்னென்ன வேணும்னு மறக்காமல் லிஸ்ட் அனுப்புங்க" என்றதும்,
"எதுக்குடா சம்பளத்தை வீணாக்குற? எங்களுக்கு எதுவும் வேண்டாம். நீ சேமித்து வை" என்று மறுத்தார் சிவமணி.
"இப்படித்தான் சொல்வீங்கன்னு எனக்கு அப்போதே தெரியும் ப்பா. ஆனால் , உங்களுக்கும், அப்பாவுக்கும் என் சுய சம்பாத்தியத்தில் எதாவது வாங்கிக் கொடுக்கனும்னு ஆசை இருக்கும் தான?" என்று கெஞ்சி கேட்டுக் கொண்டதால், அவர் எப்படியோ சம்மதித்து விட்டார்.
"அம்மா கிட்ட ஃபோன் கொடுங்க அப்பா" என்றதும் அன்னபூரணியிடம் மொபைல் வழங்கப்பட்டது.
"அம்மா! எப்படி இருக்கீங்க?" என்ற மௌனா கேட்டதும்,
"நான் நல்லா இருக்கேன்டா.நீ போன தடவை அப்பா கிட்ட பேசினதே உனக்கு ஏதோ மனசளவுல கஷ்டமாகி இருக்கு. என்னாச்சுன்னு தெரிலன்னு புலம்பினார்.எதுவும் பிரச்சினையாடா?" என்று ஆறுதலாக கேட்டார் அன்னபூரணி.
"அச்சோ! இல்லை அம்மா. அப்போவே சொன்னேன். உங்களைப் பிரிஞ்சு இருக்கிறது தான் எனக்குக் கஷ்டம். இனிமேல் நான் அடிக்கடி கால் பண்ணிப் பேசிடுவேனே! சோ, யாரும் ஃபீல் பண்ண வேண்டாம். பத்து நாட்கள் கழிச்சு ஊருக்கு வர்றேன் அம்மா"
"முதல் மாசமே லீவ் கொடுப்பாங்களான்னு தெரில. இருந்தாலும் கேட்டுப் பார் மௌனா. ஒரு மூனு நாட்கள் லீவ் எடுத்து தங்குற மாதிரி வா"
" கண்டிப்பாக கேட்டுப் பார்க்கிறேன் அம்மா.அப்பா கிட்ட ஒரு விஷயம் சொல்லியிருக்கேன். மறக்காமல் பண்ணிடுங்க" என்று பேசி விட்டு வைத்தாள் மௌனா.
"சரி டா" என்று ஃபோனை வைத்தார்.
"ஈவ்னிங் சாப்பிட்டதால், எனக்கு டின்னர் வேண்டாம் அகி" என்றாள் தோழியிடம்.
"எனக்கும் தான் வயிறு ஃபுல் மௌனா. பால் மட்டும் குடிப்போம்" என்று தனது மடிக்கணினியில் வேலையைப் பார்க்க,
மௌனாவோ , முக்தாவின் இயல்பு மாறிய நடவடிக்கையும், மஹதனுடைய கண்டு கொள்ளாத தனமும் வித்தியாசமாகத் தெரிந்ததை யோசித்துப் பார்த்தாள்.
இருவரும் ஒன்றாகத் தான் மாலிற்கு வந்தார்கள் என்றால், தனித்தனியாக ஏன் செல்ல வேண்டும்?
ஒருவேளை இவன் காரை நிறுத்தி விட்டு வர தாமதம் ஆகிறது இருக்குமோ? அப்படியே இருந்தாலும், முக்தாவின் இறுக்கமான, வெறுமையான பார்வை எதையோ உணர்த்தியதே?
ஒரு வித எகத்தாளமான, அலட்சியமான பார்வையைத் தான் முக்தாவிடம் இருந்து எதிர்பார்த்தாள் மௌனா.
அதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட முக்தாவை இன்று பார்த்திருக்கிறாள்.
இதெல்லாம் மௌனாவிற்குத் தேவையில்லாதவை தான். ஆனாலும், தன்னால் இருவருக்கும் ஏற்கனவே பிரச்சினை ஏற்பட்டிருந்த நிலையில், தான் அங்கிருந்து வெளியேறிய பிறகு, எல்லாம் சரியாகி இருக்கும் என்று தான் மௌனா எண்ணியிருந்தாள்.
தலைகீழாக மாறிப் போனது எதனால் என்று மௌனாவிற்கும் புரியவில்லை.
"மௌனா! எனக்கு வீட்டில் இருந்து கால் வருது. பேசி முடிக்க லேட் ஆகும். நீ பால் காய்ச்சி வச்சிட்டு, குடிச்சிடு" என்றாள் அகதா.
அகதா செல்பேசியில் ஐக்கியமாகி விட்டாள்.
அவள் வரும் வரை தொலைக்காட்சியில் , படம் பார்த்துக் கொண்டே பாலைக் குடித்து முடித்தாள் மௌனா.
அடுத்த இருக்கையில் அமர்ந்த அகதா,
"வீட்டில் எப்போ வர்றேன்னு கேட்டாங்க? என்ன சொல்றது? வெறுப்பா இருக்கு மௌனா" என்று அயற்சியுடன் கூறினாள்.
"அண்ணா ஊருக்குக் கிளம்பலையா?"
"இல்லை.அவர் அங்கே தான் இருக்கார். என்னை வர சொல்றதே அவர் அங்கே இருக்கிறதால் தான். நானும் போக வேண்டாம்னு தள்ளிப் போட்டுட்டு இருக்கேன் மௌனா"
"எதுக்கு திடீர்னு அண்ணாவும் வந்து, உன்னையும் வர சொல்றார்?"
"பணம் பத்தாம போயிருக்கும். அதனால் என்னை நேரில் வந்து எவ்ளோ பணம் இருக்கோ அதை வாங்கிக்க நினைக்கிறார் போல" என்று அட்டையாக கூறியவளின் வேதனைப் படிந்த முகத்தை ஒரு பெருமூச்சுடன் ஏறிட்டாள் மௌனா.
"அப்போ நீ கிளம்பறியா அகி?" என்று கேட்டாள்.
"ம்ஹ்ம்! போகனும் மௌனா. ஆனால் உனக்கே நான் என்ன நிலைமையில் இருக்கேன்னு தெரியுமே! போய்ட்டு உடனே வந்துடறேன்" என்று சுரத்தே இல்லாமல் கூறியவளிடம்,
"எப்போ கிளம்பற?"
"நாளைக்கு லீவ் எடுத்துட்டு போகனும். நைட் வர பாக்கிறேன். இல்லைன்னா விடியற்காலையில் வந்துட்றேன். நீ தனியாக நாளைக்கு மேனேஜ் செய்ய முடியும் தான?"
"முடியும் அகி.நீ பத்திரமாகப் போய்ட்டு வா. உனக்காக வெய்ட் பண்ணிட்டு இருப்பேன்" என்று கூளியவளுக்குத் தோழியின் நலன் மீது தான் கவனம் இருந்தது.
கணவன் என்ற பெயரில் பல தடவைகள் அகதாவின் மனதைச் சுக்குநூறாக உடைத்திருந்தான் தீபக்.
இன்னும் இருவருக்கும் குழந்தை இல்லாததால், அதுவும் உடன் சேர்ந்து கொண்டது அவனது மிருகத்தனமான செயல்களில்.
அதனால் தான் வேலையை வேறு ஊருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு, வீடு எடுத்து தங்கியிருக்கிறாள்.
தீபக்கும் வேறு ஊரில் வேலை செய்வதால், இதை அவன் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அகதா ஊருக்கு வரும் போதெல்லாம் குத்திக் காட்டிப் பேசுவதையும் தவிர்க்க மாட்டான்.
என்ன தான் நன்றாகப் படித்தவள் , மென் பொறியாளர் என்றாலும், அவளுக்கு இருக்கும் ஒரே உறவு என்றால் அகதாவின் கணவன் மற்றும் மாமியார் வீடு தான். அதனாலேயே அவள் அங்கு எல்லாவற்றையும் சகித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
மறுநாள் அலுவலகத்திற்கு நேரடியாக சென்று விடுப்பு எடுத்துக் கொண்டு, தன் ஊருக்குச் செல்ல ஆயத்தமானாள் அகதா.
"பஸ் ஸ்டாண்ட் வரைக்கும் நான் கூட வர்றேன் அகி. பர்மிஷன் எடுத்துட்டேன். உன்னைப் பஸ் ஏற்றி விட்டுட்டு வொர்க் போய்க்கிறேன்"
அகதாவோ, "சரி. நான் லீவ் சொல்லிட்டு வர்றேன்" என அலுவலகம் விரைந்தாள்.
மௌனாவின் ஆற்றாமை எல்லாம் அகதாவின் வாழ்வை நினைத்து தான். தீபக்கின் மனம் மாற வேண்டும் என ஒவ்வொரு முறையும் தோழிக்காக வேண்டிக் கொள்வாள்.
விடுப்பு எடுத்துக் கொண்டு வந்த தோழியிடம்,
"ஆட்டோ அண்ணாவுக்குக் கால் பண்றேன் அகி. கொஞ்ச நேரம் உட்கார்" என கால் செய்து ஆட்டோவை வரவழைத்தாள் மௌனா.
ஆட்டோவில் பேருந்து நிலையத்தை அடைந்தனர்.
"பத்திரமாகப் போய்ட்டு வா அகி" என்று வழியனுப்பி வைத்தாள் மௌனா.
தனியே வீட்டிற்கு வந்தவள், தனக்குக் 'குறுஞ்செய்தி அனுப்பிக் கொண்டே இரு' என்று அகதாவிற்கு உத்தரவிட்டிருந்தாள்.
"நான் மறுபடியும் வெளிநாட்டுக்கே போயிடறேன் அப்பா"
முக்தாவின் முகத்தை ஆராய்ந்து கொண்டே,
"ஏன் முகி? மஹதனை மறக்க முடியலையா?அவனுக்காக இந்த அப்பாவை விட்டுப் போகப் போறியா?" என்று வேதனையுடன் கேட்டார் மகளிடம்.
தன்னை விட அந்த மஹதன் அத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவனா? என்று வருத்தம் ஏற்பட்டது நீலகண்டனுக்கு.
"இல்லை அப்பா. அவனை நான் கண்டிப்பாக மறந்துருவேன். ஆனால் எனக்கான அடையாளத்தைத் தேடிப் போறேன் அப்பா. அந்த மௌனா மாதிரி, நானும் என்னோட படிப்பு மூலமாக ஒரு வேலையைத் தேடப் போறேன். நான் உழைச்சு சம்பாதிக்கப் போகிற பணத்தை உங்களுக்கு அனுப்பி வைக்கனும்னு ஆசையாக இருக்கு அப்பா"
நீலகண்டன், "அந்தப் பொண்ணு உன்னை அப்படி, இப்படி சொல்லி அசிங்கப்படுத்திட்டாளா?" என்று வினவினார்.
"மௌனா ரொம்ப நல்ல பொண்ணு அப்பா. அவளுக்கும், மஹதனுக்கும் இடையில் எதுவுமே இல்லை. நான் தான் தப்பா புரிஞ்சிக்கிட்டேன். இப்போ நான் கேட்கிறது எனக்காக அப்பா?"
"நீ வேலைக்குப் போய் தான் என்னைப் பெருமைப்படுத்தனும்னு இல்லை முகி" என்றார் நீலகண்டன்.
"அப்பா பணக்காரராகவோ, ஏழையாகவோ இருந்தாலும், குழந்தைங்களுக்கு கஷ்டம் தெரியாமல் வளர்க்கனும்னு தான் நினைப்பாங்க. நீங்களும் அப்படித்தான் நினைக்கிறீங்க.ஆனால் இப்போ நான் கேட்கிறது பிடிவாதத்தால் வந்தது இல்லை அப்பா. புரிஞ்சுக்கோங்க"
"அதுக்கு வெளிநாடு போகனுமா முகி? இங்கேயே வேலை பார்க்கலாமே?"
மகளைப் பிரிவதில் சிறிதும் அவருக்கு விருப்பமில்லை.
"இங்கே இருந்தா நான் உங்க பொண்ணுன்னு எல்லாருக்கும் தெரியுமே? ஒரு இரண்டு வருஷம் அப்பா? இடையில் நான் இங்கே வந்துருவேன். எனக்கு இருக்கிற உறவு நீங்க மட்டும் தானே அப்பா?"
தாவிச் சென்று தந்தையைக் கட்டிக் கொண்டாள் முக்தா.
மகளுக்குத் தன் மேல் பாசம் இருக்கிறது என்று நீலகண்டனுக்குத் தெரியும் . ஆனால், அவர் தான் முக்தாவிற்குச் சகலம் என்பதை இப்போது தெளிவாகப் புரிந்து கொண்டார்.
இது போதாதா தந்தைக்கு? நெஞ்சம் உருகிப் போனவர், முக்தாவின் தலையை வருடிக் கொடுத்தார்.
கணங்கள் கடந்ததும்,
மகளிடம்,
"மஹதன் கிடைக்கலன்னு சூசைட் அட்டெம்ப்ட் பண்ணிடுவியோன்னு தினமும் துடிச்சிட்டு இருந்தேன் முகி. இப்போ என் பொண்ணு எவ்ளோ தைரியமாக , என் முகத்துக்கு நேராக பேசுறான்னு பெருமையாக இருக்கு. நீ ஃபாரினுக்குப் போய்ட்டு வாடா. அப்பா எப்பவும் உன் கூட இருப்பேன்"
வழி மாறாமல், தெளிவாக முடிவெடுத்த முக்தாவை நினைத்துப் பெருமிதம் கொண்டார் நீலகண்டன். அவள் வெளிநாடு செல்வதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார்.
தன் மகள் கூடிய விரைவில் வெளிநாடு செல்ல இருப்பதால், அலுவலகப் பணிகளை தனக்காக சிறிது நாட்கள் பார்த்துக் கொள்ளுமாறு திருமூர்த்தியிடம் கேட்டுக் கொண்டார் நீலகண்டன்.
அதன் மூலம், கொசல்யாவிற்கும், மஹதனுக்கும் விஷயம் தெரிவிக்கப்பட்டது.
"எதனால் முக்தா இப்படி முடிவெடுத்து இருப்பா?"
கௌசல்யா தான் கேட்டாரே தவிர, மஹதன் எதையும் கண்டு கொள்ளவில்லை. அது அவளது தனிப்பட்ட முடிவு என ஒதுக்கி விட்டான்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக