ஆம்!
திருவாதிரன் எடுத்த முடிவு தான் இந்த இரு ஜோடிகளையும் மணவறை வரைக்கும் அழைத்து வந்திருந்தது எனலாம்!
ஏனெனில் அன்றைய சம்பவத்தின் போது,”நான் நம்மக் குடும்பத்துக்கு எந்தவித மரியாதைக் குறைவும் வந்துடக் கூடாதுன்னு தான் பூவிழியைக் கட்டிக்க முடிவு பண்ணேன்”என்றவனைப் புரியாமல் பார்த்தனர் மற்றவர்கள்.
ஆனால் பூவிழியின் விழிகளோ வலி மற்றும் அவமானத்தை வெளிப்படுத்தியது.
ஏனெனில் அவளுக்கு இந்த விஷயத்தை இவன் முன்னரே சொல்லி விட்டிருந்தானே?
அதனால் அவனை வெற்றுப் பார்வையுடன் நோக்கிக் கொண்டு இருந்தாள் பூவிழி.
ஆனால் அவன் அடுத்துச் சொல்லப் போவதை அறிந்து கொள்ள வேண்டிக் காத்திருந்தார்கள் மற்ற நால்வரும்.
“இந்தப் பொண்ணை நாம வெளியே அனுப்பிட்டால் நம்மளோட எதிரிங்க இவளை சுளுவாகப் பிடிச்சு இவகிட்டே இருந்து நம்ம வீட்டில் நடக்கிற விஷயங்களைத் தெரிஞ்சிக்க வாய்ப்பு இருக்கு! அதே மாதிரி நாம இன்னும் நம்ம வீட்டுக்கு வாரிசு வரப் போற சேதியை யாருக்குமே சொல்லலை! அப்படி இருக்கும் போது இவ மூலமாக அந்த விஷயம் ஊருக்குளளே பரவிடுச்சுன்னா நம்மக் குடும்ப மானமே போயிடும்! அதை யோசிச்சுப் பார்த்தீங்களா?”என்று அவர்களிடம் அழுத்தமாக கேட்டிருந்தான் திருவாதிரன்.
அதைக் கேட்டதும் அதைப் பற்றிய சிந்தனை உருவாகியது அனைவருக்குள்ளும்.
தங்களது குடும்ப கௌரவம் இப்போது செந்தாழையின் கையில் மட்டுமில்லாமல் அதில் பூவிழிக்கும் பங்கு இருக்கிறது என்பதை உணர்ந்து கொண்டுத் தங்களது தலையில் அடித்துக் கொண்டு,”கருமம்! நம்மளோட குடும்ப மானம் இந்தச் செல்லாக் காசு சிறுக்கிங்க கிட்டே தான் இருக்குன்னு நினைக்கும் போது என் வயிறு எரியுது!”என்று அந்தச் சகோதரிகளைப் பழித்தார்கள் நஞ்சுண்டன் மற்றும் ராஜகுமாரி.
ஆனால், தனது தம்பிப் பூவிழியைத் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்ததற்கு இது மட்டுமே காரணமாக இருக்காது என்று உறுதியாக நம்பினான் அறிவொளி.
ஏனென்றால், இந்தப் பெண்ணின் மூளையைச் சலவை செய்தோ, பயமுறுத்தியோ தங்களது வீட்டில் வேலைக்குச் சேர்த்து இருந்தாலே இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைத்து இருக்கும்!
ஆனால் அவ்வாறான முடிவைக் கைவிட்டு, விட்டுத் தற்போது இவன் சொல்லும் காரணங்களும், சமாதானங்களும் அறிவொளிக்குச் சந்தேகத்தையே வரவழைத்து இருந்தது.
அதனால் தம்பி முழுமையாகப் பேசி முடிக்கட்டும் என்று அமைதியாக இருந்தான்.
இங்குத் தனது சகோதரியின் கையை இறுக்கமாகப் பிடித்துக் கொண்டு,”நல்லவேளை நீ இந்த வீட்டை விட்டுப் போகலைக்கா! இங்கேயே இருந்து என் புள்ளையை வளர்த்து விட்ரு! அதுக்கப்புறம் நானே உனக்குக் கல்யாணம் செஞ்சி வச்சு உன்னை முறையாக உன் புகுந்த வீட்டுக்கு அனுப்பி வைக்கிறேன்!”என்று அவளிடம் நைச்சியமாகப் பேசினாள் செந்தாழை.
ஏற்கனவே தன்னிடம் திருவாதிரன் பேசிய வார்த்தைகளால் பாதி உயிரை விட்டிருந்ததைப் போன்ற உணர்வில் இருந்தப் பூவிழியோ, தங்கையின் பேச்சில் முழுவதுமாக உயிர் துறந்ததைப் போன்றதொரு நிலைக்கு ஆளாகிப் போய் விட்டவளோ,
‘இன்னும் என் வாழ்வில் எத்தனை சோதனைகளைத் தான் எதிர்கொள்ளப் போகின்றேனோ?’என்ற விரக்தியில் பேச்சற்று நின்றாள்.
“சரி. நீ சொல்வதும் நியாயம் தான்! அதுக்கு எதுக்கு நீ இவளைக் கல்யாணம் பண்ணிக்கோனும்? இங்கேயே ஏதாவது வேலை போட்டுக் கொடுத்துட்டா நம்மக் காலடியிலேயே இருப்பாள்ல?”என்று இளைய மகனிடம் வினவினார் ராஜகுமாரி.
“அதை தான் நானும் எங்க அக்கா கிட்டே சொன்னேம்த்தை!”என்று வேகமாக முன்னால் வந்து அவரிடம் வாக்குமூலம் அளித்தாள் செந்தாழை.
“அதுக்கு இந்தச் சிங்காரி மறுத்துட்டாளாக்கும்?”எனக் கேட்க,
“ஆமாங்கத்தை”என்று அவருக்குப் பதிலளித்து விட்டுத் தனது தமக்கையைப் பொருமலுடன் பார்க்கவும்,
ஆனால் தன்னுடைய கால்கள் தரையில் வேரூன்றி விட்டதைப் போன்று அசையாமல் நின்றிருந்தாள் பூவிழி.
“உங்க அப்பன் செத்துப் போறதுக்கு முன்னாடி வரைக்கும் எங்க கிட்ட தானே வேலை பார்த்துட்டு இருந்தான்? அவன் செத்ததுக்குப் பொறவு, நீங்க மூனு பேரும் கூட எங்க காட்டுல தானே வேலை பார்த்தீக? இப்போ இங்கே வேலை பார்க்க மட்டும் உனக்கு என்ன வலிக்குதா?”என்று அவளிடம் அதட்டிக் கேட்டிருந்தார் ராஜகுமாரி.
அதில் தனது சுயமரியாதை அடி வாங்கியதைப் போல் உணர்ந்தவளோ,”இல்லைங்கம்மா! இது சரி வராது! எனக்கு இங்கே இருக்க விருப்பமில்லை! இங்கே இருந்தால் என்னோட ஆத்தாவோட ஞாபகம் வந்து என்னைப் போட்டுப் படுத்தும்! அதான் சொல்றேன்!”என்றவளிடம்,
“அதுக்கு நான் ஒரே யோசனை சொல்றேன்க்கா! எனக்குப் பொறக்கப் போற குழந்தைப் பொண்ணாக இருந்தால் நம்ம அம்மாவே மறுபடியும் வந்து பொறந்தா மாதிரி தானே? அதை நீ வளர்க்க ஆரம்பிச்சிட்டா உனக்கு அவங்க கூடவே இருக்கிறா மாதிரியும் இருக்கும்! அதே மாதிரி குழந்தை முகத்தைப் பார்த்ததுக்கு அப்பறம் உனக்கு வேற எதுவும் ஞாபகத்துக்கு வராதுக்கா!”என்றவளைக் கடுமையாக முறைத்து,
“அதென்ன பொறக்கப் போறக் குழந்தை பொட்டைப் புள்ளன்னு நீயே முடிவு பண்ணிக்கிறது? இந்த வீட்டுக்கு முதல் வாரிசு ஆம்பளைப் புள்ளையாகத் தான் இருக்கனும்! நீ பாட்டுக்கு எதையாவது உளறிட்டு இருக்காதே! சும்மா இரு”என்று அவளை அதட்டி அமைதிப்படுத்தினார் ராஜகுமாரி.
உடனே தானும் தனது வாயைக் கட்டுப்படுத்திக் கொண்டு அறிவொளியின் அருகே சென்று நின்று கொண்டாள் செந்தாழை.
“கொஞ்ச நேரம் எல்லாரும் அமைதியாக இருங்க! நான் பேசனும்!”என்று அனைவரின் வாய்க்கும் பூட்டுப் போடச் செய்து விட்டு,
“நம்மக் குடும்பக் கௌரவம், அதே மாதிரி, செந்தாழை நம்ம வீட்டோட மூத்த மருமக! அவளுக்குச் சொந்தம்ன்னு சொல்லிக்க, நல்லது, கெட்டது பார்க்கன்னு இப்போ அவங்க வீட்டாளுன்னுப் பூவிழி மட்டும் தான் இருக்கா! அப்போ அவளை நம்ம வீட்டிலிருந்து எப்படி வெளியே அனுப்புறது? நம்ம வீட்டுச் சம்பந்தியை எப்படி வீட்டு வேலைக்காரியாகப் போட்றது? இதெல்லாம் வெளியே தெரிஞ்சா நம்மளைப் பத்தி என்னப் பேசுவாங்கன்னு யோசிங்க?”என்றத் திருவாதிரனிடம்,
“அதையெல்லாம் அப்பறம் யோசிச்சுக்கலாம்! நீ இந்தப் பொண்ணைக் கட்டிக்கிறதுக்கு நாங்க ஒத்துக்க மாட்டோம்!”என்று நஞ்சுண்டனும், ராஜகுமாரியும் ஒரேயடியாக மறுத்து விட்டார்கள்.
“அப்படின்னா, நான் நம்ம வீட்டுப் பொறுப்பு எல்லாத்துல இருந்தும் விலகிக்கிறேன்!”என அழுத்தம் நிறைந்த குரலில் மொழிந்து இருந்தான்!
அதில் அனைவரை விடவும் அதிகமாக அதிர்ந்து போய் விட்டிருந்தாள் பூவிழி.
“ஏய்! என்னடா பேசிட்டு இருக்கிற?”என்று தனது தம்பியை அதட்டினான் அறிவொளி.
“இதுக்கு மேலே என்னால் வேற என்னப் பண்ண முடியும்ண்ணே? நான் இந்த வீட்டுப் பொறுப்பை ஏத்துக்கிட்டதில் இருந்து இப்போ வரைக்கும் என்னோட கடமையைத் தவறாமல் தான் செஞ்சிட்டு இருக்கேன்! இப்போ நீ காத்துல பறக்க விட்ட நம்மக் குடும்ப கௌரவத்தை நான் காப்பாத்த நினைக்கிறேன்!”என்று அவனிடம் தீர்க்கமாக கூறினான் திருவாதிரன்.
அதில் பொங்கி எழுந்து விட்ட அவனது தமையனோ,”ஓஹ்! நாம் பறக்க விட்ட மானத்தை நீ காப்பாத்துறதுக்காக இதையெல்லாம் பண்ணாத மாதிரி தெரியலையே! ஏற்கனவே உனக்கும், இந்தப் பொண்ணுக்கும் பழக்கம் இருந்த மாதிரில்லத் தெரியுது”என்று வஞ்சகமாக கூறவும்,
அதைக் கேட்ட உடனேயே அழுகையில் வெடித்து விட்டாள் பூவிழி.
உடனே,”மூச்! இப்போ நீ உன் அழுகையை நிறுத்தலை! இங்கே வச்சே உங்கழுத்துல தாலியைக் கட்டிடுவேன்!”என அவளிடம் கர்ஜித்தான் திருவாதிரன்.
அதில் பெண்ணவளோ தன்னுடைய அழுகையை நிறுத்தி விட்டாள்!
“நீ இப்படி பேசுறதை எல்லாம் பார்த்தால் எங்களுக்கும் உங்கண்ணஞ் சொல்றது தான் உண்மைன்னுத் தோணுது திரு!”என்றிருந்தார் நஞ்சுண்டன்.
அதில் சில கணங்கள் அமைதியாகி விட்டவனோ, ஆழ மூச்செடுத்துக் கொண்டு,”ஓஹோ! அப்படியே வச்சுக்கோங்க! எனக்கு அதைப் பத்தி எல்லாம் கவலை இல்லை! எப்படியும் நாங்க கல்யாணம் பண்ணிக்கப் போறவுக தானே? அதுவும் இல்லாமல் நான் ஒன்னும் இவளை யாருக்கும் தெரியாமல் கட்டிக்கிட்டு, வயித்துல புள்ளையைக் கொடுத்துட்டு உங்ககிட்ட வந்து விஷயத்தைச் சொல்லலையே!”என்று தன் பெற்றோரிடம் ஏளனமாக கூறினான் திருவாதிரன்.
உடனே,”இங்காருங்க! உங்களுக்கு என் அக்காவைக் கல்யாணம் செய்துக்கனும்னா அந்த விஷயத்தைப் பத்தி மட்டும் பேசுங்க! தேவையில்லாமல் எங்களை இதுக்குள்ளே இழுக்காதீங்க! உங்கண்ணன் கேட்டதில் என்னத் தப்பிருக்கு? நீங்க இவ்வளவு உறுதியாக கட்டிக்க நினைக்கிற அளவுக்கு என் அக்கா ஒன்னும் செவப்பு நிறத்தவளோ, பட்டப் படிப்புப் படிச்சவளோ, காசு, பணம் வச்சு இருக்கவளோ கிடையாது! அதனால் தான் எல்லாரும் உங்ககிட்ட காரணத்தைக் கேட்கிறாங்க! அதுக்குப் பதில் சொல்ல முடிஞ்சா சொல்லுங்க! இல்லைன்னா ரெண்டு பேரும் எப்படியோ போங்க! அதை விட்டுட்டு எங்க விஷயத்துக்கு வந்தீங்கன்னா நானும் உங்க கிட்ட வார்த்தையை விட வேண்டியது வரும்!”என்று அவனிடம் ஒரே போடாகப் போட்டிருந்தாள் செந்தாழை.
“ஆஹ்ஹா! ஜாடிக்கேத்த மூடி தான்! நீங்கப் பண்ணதை நியாயப்படுத்த உன் அக்காவைப் பத்தித் தப்பாகப் பேசக் கூடத் தயங்க மாட்டீங்க போலவே என்னோட வருங்கால அண்ணியாரே!”என்று அவளிடம் இகழ்ச்சியாக ஆரம்பித்தவனோ,
மேலும் தொடர்ந்து,”என்னக் கேட்டீங்க? உங்க அக்காவுக்குப் பணமில்லை, படிப்பில்லை, அழகில்லை! இப்படி எதுவுமே இல்லாதப்போ அவளை நான் எப்படி கல்யாணம் செய்துக்க விருப்பப்பட்றேன்னு தானே?”என்றதுமே,
தனது கண்களில் கலவரத்துடன் அவனை ஏறிட்டுப் பார்த்தாள் செந்தாழை.
அவளைப் போலவே அவனது பதிலிற்காக காத்திருந்தார்கள் அங்கே கூடியிருந்த மற்றவர்கள்.
“நான் இந்த வீட்டோட எல்லா பொறுப்பையும் ஏத்துக்கிட்டப்போ எங்ககிட்டே வேலை பார்க்கிறவங்களை நானே நேரில் அடிக்கடி கண்காணிப்பேன்! அப்போ தானுண்டு, தன்னோட வேலை உண்டுன்னுக் காட்டில் வேலை பார்த்துட்டு இருப்பாள் உங்கக்கா! அதே மாதிரி இவ்வளவு நடந்ததுக்கு அப்பறமும் தனக்கும் இந்த வீட்டில் தங்க உரிமை இருக்குன்னுச் சட்டமாக இருக்காமல் தன்னோட தன்மானத்தையும், சுயமரியாதையையும் இப்போ வரைக்கும் காப்பாத்திக்கப் போராடிக்கிட்டு இருக்காளே! இந்த ஒரு பண்புப் போதாதா இவளைக் கல்யாணம் கட்டிக்க ஆசைப்பட்றதுக்கு?”என்றவனை மெய் மறந்து போய் நோக்கினாள் பூவிழி.
அங்கிருந்த மற்றவர்களோ அவனை வாயடைத்துப் போய்ப் பார்த்தார்கள்!
ஆனால் அவனது கேள்விக்குப் பதில் அளிக்க முடியாததால் கோப மூச்சுக்களை வெளியிட்டாள் செந்தாழை.
தனது தம்பியின் நேரடியான குற்றச்சாட்டுகளைக் கேட்டதும் எப்போதும் போல இப்போதும் தனது வாயை அடக்கிக் கொண்டான் அறிவொளி.
ஆனால் சுர்ரென்று எழுந்த கோபத்துடன்,”இவளோட புகழைப் பாடுனது போதும்! நீ இவளையே கல்யாணம் பண்ணிக்கோ! ஆனால் ஒரு நிபந்தனை!”என்று மகனிடம் சொன்னார் ராஜகுமாரி.
“ம்ஹ்ம். சொல்லுங்க!”என்றிருந்தான் திருவாதிரன்.
“நீ இந்த வீட்டோட எந்தப் பொறுப்பையும் கைவிடக் கூடாது! இங்கே என்ன நடந்தாலும் நீயும், இவளும் இந்த வீட்டை விட்டு வெளியேறக் கூடாது! அதுக்குச் சம்மதம்ன்னா நாங்களும் உங்கல்யாணத்துக்குச் சம்மதிக்கிறோம்!”என்று அவனுக்கு உறுதி அளித்து விடவும்,
அதைக் கேட்ட அவரது கணவரோ,”குமாரி! நீ என்னப் பேசிட்டு இருக்கன்னுப் புரியுதா உனக்கு?”என்று மனைவியிடம் வெடித்தார் நஞ்சுண்டன்.
“புரியுதுங்க! எனக்கு எம்பசங்களோட சந்தோஷம் தான் முக்கியம்! அதனால் தான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொன்னேன்! நீங்களும் இதுக்குச் சரின்னு சொல்லுங்க!”என்று அவரிடம் பூடகமாக கூறினார் ராஜகுமாரி.
அவரோ அதைப் புரிந்து கொண்டு,”சரி. நீ எடுக்கிற முடிவு எப்பவும் சரியாகத் தான் இருக்கும்! நானும் இதுக்குச் சம்மதிக்கிறேன்!”என்று இளைய மகனிடம் தெரிவிக்க,
“அப்போ நானும் உங்களோட நிபந்தனைக்கு ஒத்துக்கிறேன்!”என்று அவர்களுக்கு உறுதி அளித்தான் திருவாதிரன்.
“ம்ஹ்ம். கல்யாண வேலையைப் பார்ப்போம்! இன்னும் மூனு மாசத்துல இந்த ரெண்டுக் கல்யாணமும் நடந்தாகனும்!”என்று தீர்க்கமாக உரைத்தார் ராஜகுமாரி.
“இதுவும் நல்லது தான்!”என்றுரைத்து விட்டு,
“நீ வந்து உட்காரு. நானும் இன்னும் சாப்பிடலை. சேர்ந்தே சாப்பிடலாம்”என்றவனை வைத்தக் கண் வாங்காமல் பார்த்திருந்தாள் பூவிழி.
உடனே அவளிடம் சென்று,”வா”என அவளது கையைப் பிடித்து அழைத்து வந்து நாற்காலியில் அமர வைத்து அவளுக்குத் தானே உணவைப் பரிமாறி விட்டுத் தனக்கும் பரிமாறிக் கொண்டு,
பூவிழியைப் பார்த்து,”சாப்பிடு!”என்று கட்டளையிட,
அதில் அவளும் அந்த உணவை உண்பதில் கவனம் செலுத்தினாள்.
அதைக் கண்டு அனைவரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்தனர்!
ஆனால் அவர்களைக் கண்டு கொள்ளாமல் உண்டு முடித்து விட்டுப் பூவிழியும் உணவுண்டு முடிக்கும் வரைக் காத்திருந்து அவளது தட்டுக் காலியானதும்,”நம்மக் கல்யாணம் முடியிற வரைக்கும் நீ ஒன்னும் உந்தங்கச்சிக் கூட ஒரே அறையில் தங்க வேண்டாம்! உனக்குத் தனியாக அறை ஒதுக்கித் தர்றேன்! அதில் தங்கிக்கோ!”என்று பூவிழியிடம் மொழிந்து விட்டு,
அந்த வாக்குறுதியை நிறைவேற்றியும் விட்டிருந்தான் திருவாதிரன்.
மூன்று மாதங்கள் கடந்ததும் இப்போது மணமேடை வரைக்கும் வந்திருந்த செந்தாழை, அறிவொளி மற்றும் திருவாதிரன், பூவிழியின் திருமணத்திற்கான மந்திர உச்சாடனங்கள் ஆரம்பித்தது.
“நீ ஏதோ பெரியத் திட்டம் போட்டு இருக்கப் போலவே குமாரி? ஏன்னா, நீ இவ்வளவு சீக்கிரம் இவங்க கல்யாணத்துக்கு ஒத்துக்க மாட்டியே! அதான் கேட்கிறேன்!”என்று தன் மனைவியிடம் முணுமுணுத்தார் நஞ்சுண்டன்.
உடனே அவரைப் பார்த்துப் புன்னகைத்து,”ஆமாங்க! ஆனால் அதை என்னால் இப்போ சொல்ல முடியாது! இந்தக் கல்யாணம் முடிஞ்சு நாம எல்லாரும் இயல்புக்கு வந்ததுக்கு அப்பறமாக நான் உங்களுக்கு விளக்கமாகச் சொல்றேன்”என்றவரோ,
தனது புன்னகை மாறாமல் மணமேடையில் இருந்த ஜோடிகளைப் பார்த்தார் ராஜகுமாரி.
அப்போது,”கெட்டிமேளம்! கெட்டிமேளம்!”என்றதுமே,
செந்தாழையின் கழுத்தில் பூரிப்புடன் தாலியைக் கட்டினான் அறிவொளி.
ஆனால்,”என்னை நிமிர்ந்து என் கண்ணைப் பாரு விழி!”என்றவனை நிமிர்ந்து பார்த்தப் பெண்ணவளின் கண்களை அழுத்தமாகப் பார்த்தவாறே அவளது கழுத்தில் மங்கலநாணைப் பூட்டி அவளைத் தன் சரிபாதியாக்கி விட்டிருந்தான் திருவாதிரன்.
- தொடரும்

கருத்துகள்
கருத்துரையிடுக